Saturday, December 5, 2020

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!


மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று 05.12.2020 காலை, கழக அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமையில் காணொளிக் காட்சி மூலம் நடைபெற்றது. கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
தீர்மானம் எண். 1
மத்திய பா.ஜ.க. அரசு 2020, செப்டம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களான வேளாண் விளைபொருள் வர்த்தகச் சட்டம், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் சட்டம், அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் போன்றவற்றையும், மின்சார சட்டம் 2020-ஐயும் திரும்பப் பெற வலியுறுத்தி வட இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இந்த வேளாண் சட்டங்களால் வேளாண்மைத் தொழில் முழுக்க முழுக்க அரசின் கட்டுப்பாட்டிலிருந்து கார்ப்பரேட் நிறுவனங்களின் பிடிக்குள் சென்று விடும்; விவசாய விளைப்பொருட்களுக்கு விலையைத் தீர்மானிப்பது பெரு நிறுவனங்களாக இருக்கும்; ஒப்பந்த விவசாயத்தால் விவசாயிகள் பல வகையிலும் சுரண்டலுக்கு உள்ளாவார்கள். மின்சாரச் சட்டம், தனியார் துறைக்கு மின் உற்பத்தி - மின் பகிர்மானம் ஆகியவற்றைத் தாரைவார்த்துக் கொடுக்க வகை செய்வதால் இலவச மின்சாரம் பெற்று வரும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். ஒட்டுமொத்தமாக வேளாண் தொழிலையே நெருக்கடிக்கு உள்ளாக்கும் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்திதான் விவசாயிகள் போராடுகின்றனர்.
கடந்த நவம்பர் 26, 27 தேதிகளில் உத்திரப்பிரதேசம், பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து இலட்சக்கணக்கான விவசாயிகள் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் டெல்லியை நோக்கி அணிவகுத்து சென்றவண்ணம் உள்ளனர்.
இந்திய வரலாறு காணாத மாபெரும் விவசாயிகள் எழுச்சியை மத்திய பா.ஜ.க. அரசு அலட்சியமாக நினைப்பது கண்டனத்துக்கு உரியது. கடந்த 10 நாட்களாக டெல்லியை முற்றுகையிட்டு அமைதியான அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் மீது காவல்துறை அடக்குமுறை ஏவுவதும் தடியடி நடத்துவதும் கண்டிக்கத் தக்கது. “ஆறு மாதங்கள் ஆனாலும் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும்வரை போராடுவோம்,” என்று விவசாயிகள் பிரகடனம் செய்துள்ளனர்.
எனவே, மத்திய பா.ஜ.க. அரசு இந்திய விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மூன்று வேளாண் சட்டங்களையும், மின்சாரச் சட்டத்தையும் திரும்பப் பெற வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண். 2
காவிரியின் குறுக்கே ‘மேகேதாட்டு’ என்ற இடத்தில் தடுப்பு அணை கட்டுவதற்கு ரூ. 9 ஆயிரம் கோடியை ஒதுக்கி உள்ள கர்நாடக அரசு, இத்திட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெறுவதற்குத் தீவிரமாக உள்ளது.
மேகேதாட்டு அணையின் மூலம் 67.16 டி.எம்.சி. நீரைத் தேக்கி வைத்துக் கொண்டு பெங்களூரு நகரக் குடிநீர்த் தேவைக்கும், 400 மெகா வாட் நீர் மின் உற்பத்தித் திட்டத்தைச் செயல்படுத்தவும் கர்நாடக அரசு திட்டமிட்டு உள்ளது.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றம் 2018, பிப்ரவரியில் அளித்த தீர்ப்பு ஆகியவற்றுக்கு எதிராக காவிரியின் குறுக்கே தடுப்பு அணை அமைப்பதற்கு கர்நாடக மாநிலம் அடாவடியாகச் செயல்பட்டு வருவதை ஏற்கவே முடியாது.
இந்நிலையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா கடந்த செப்டம்பர் 18-ஆம் தேதி டெல்லியில் பிரதமர் மோடி அவர்களைச் சந்தித்து மேகேதாட்டு அணைத் திட்டத்திற்கு மத்திய அரசின் அனுமதியைக் கோரி உள்ளார். இதனைத் தொடர்ந்து 2020, நவம்பர் 18-ஆம் நாள் கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ரமேஷ்ஜர்கி ஹோலி, டெல்லியில் மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்களைச் சந்தித்து மேகேதாட்டு அணை கட்டுமானத் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி தர வலியுறுத்தினார். அவரோடு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியும் சென்று மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சரிடம் மேகேதாட்டு அணைத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வற்புறுத்தி உள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடைபெறுவதால், எடியூரப்பா மற்றும் கர்நாடக மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், “கர்நாடக மாநில நீர்த் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு அளிப்போம்,” என்று கூறியுள்ளார். இதன் மூலம் காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டுமானத் திட்டத்திற்கு மத்திய பா.ஜ.க. அரசு இசைவு அளித்திட முன்வந்து இருப்பது தெரிகிறது.
காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு மத்திய பா.ஜ.க. அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்றும், இத்திட்டத்தையே இரத்து செய்ய வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண். 3
காவிரிப் படுகை மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எரிவாயு அகழ்ந்தெடுக்கும் திட்டங்களுக்கு எதிராகத் தொடர்ந்து விவசாயிகளும், பொது மக்களும் போராடி வருகின்றனர். காவிரிப் பாசனப் பகுதிகளில் சுமார் 6 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களைச் செயல்படுத்த 2018, அக்டோபரில் மத்திய அரசு வேதாந்தா குழுமம் மற்றும் ஓ.என்.ஜி.சி., நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டது. இத்திட்டங்களுக்காக வேதாந்தா குழுமம் ரூ. 13,500 கோடியும், மத்திய அரசின் ஓ.என்.ஜி.சி., நிறுவனம் ரூ. 5,150 கோடியும் முதலீடு செய்ய இருப்பதாகத் தெரிவித்தன.
காவிரிப் படுகையில் மொத்தம் 341 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க மேற்கண்ட நிறுவனங்கள் மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பித்தன.
“தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி வடிநிலப் பகுதிகளில் செயல்படுத்த உள்ள ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டங்களால் வேளாண் தொழிலே கேள்விக்குறி ஆகி விடும்; உணவு உற்பத்தியும் பாதிக்கப்படும்,” என்று நாடாளுமன்றத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் 26.07.2019 மற்றும் 05.12.2019 ஆகிய தேதிகளில் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டங்களை இரத்து செய்ய வேண்டும் என்று கோரினார்.
ஆனால் மத்திய அரசோ 2020 ஜனவரியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த பொது மக்களிடமும் விவசாயிகளிடமும் கருத்து கேட்கத் தேவை இல்லை என்று உத்தரவு பிறப்பித்தது. இதனால் காவிரிப் பாசனப் பகுதிகளில் விவசாயிகளிடையே ஏற்பட்ட கொந்தளிப்பால், தமிழக அரசு 2020, பிப்ரவரி 20-ஆம் நாள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் காவிரிப் பாசன மாவட்டங்களைப் ‘பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல’மாக அறிவித்து சட்ட முன்வரைவு ஒன்றை நிறைவேற்றியது.
அப்போதும் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், “பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஏற்கனவே செயல்பட்டு வரும் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களின் நிலை என்ன? கடலூர், நாகை மாவட்டங்களில் 45 கிராமங்களில் 57 ஆயிரத்து 500 ஏக்கர் விளைநிலங்களைக் கையகப்படுத்தி ரூ. 92 ஆயிரம் கோடி முதலீட்டில் பெட்ரோலிய இரசாயனம் மற்றும் பெட்ரோலிய இரசாயனப் பொருட்கள் முதலீட்டு மண்டலம் அமைப்பதற்கு 2017, ஜூலை 19-ஆம் தேதி தமிழக அரசு பிறப்பித்த குறிப்பு ஆணை எண். 29 ஏன் இரத்து செய்யப்படவில்லை?” என்று கேள்வி எழுப்பினார்.
கழகப் பொதுச் செயலாளர் வைகோவின் அறிக்கையைக் கண்ட பிறகே தமிழக அரசு கடலூர், நாகை மாவட்டங்களில் பெட்ரோலிய இரசாயன முதலீட்டு மண்டலம் அமைக்கும் முடிவைக் கைவிட்டது. ஆனால், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் பற்றி உறுதியான அறிவிப்பை வெளியிடவில்லை.
இந்நிலையில்தான் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று தமிழக அரசு அறிவித்து சட்டம் இயற்றிய பின்னர், 2020, நவம்பர் மாதம் மத்திய அரசு, காவிரிப் படுகையை ஒட்டிய ஆழ்கடல் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்குப் புதிதாக மீண்டும் உரிமம் வழங்கி இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக விளைநிலப் பகுதிகளிலும் உரிமங்கள் அளிக்கப்படும்.
இதனால் காவிரிப் பாசனப் பகுதி மாவட்டங்களை தமிழக அரசு வெறும் பெயருக்கு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று அறிவித்து சட்டம் இயற்றி இருக்கிறதா? என்று கேள்வி எழுகிறது.
எக்காரணத்தை முன்னிட்டும் காவிரி வடிநிலப் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எந்த எரிவாயுத் திட்டங்களுக்கும் தமிழக அரசு அனுமதி அளிக்கமாட்டோம் என்று திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண். 4
தமிழ்நாட்டில் கடந்த 2020, நவம்பர் 25-ஆம் தேதி வீசிய ‘நிவர்’ புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பயிர்கள் சேதம் மற்றும் வீடுகள், கால்நடைகள் சேதம் குறித்து முழு வீச்சில் ஆய்வு நடத்தி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் மக்களுக்கும் இழப்பீட்டுத் தொகையை உடனே வழங்க வேண்டும்.
அதேபோன்று டிசம்பர் 1-ஆம் தேதி உருவான ‘புரேவி’ புயலாலும் கனமழையாலும் பாதிக்கப்பட்ட தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் கணக்கெடுப்பு நடத்தி விவசாயிகளுக்கு இழப்புத் தொகை அளிக்க வேண்டும். பயிர்க் காப்பீடு செய்ய முடியாமல், கொரோனா பேரிடர் காலத்தில் துயரப்படும் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். வாழ்வாதாரங்களைப் பறிகொடுத்துள்ள மீனவ மக்களுக்கும் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் எண். 5
இராஜீவ் காந்தி கொலைவழக்கில் சேர்க்கப்பட்டு கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்வதற்கு உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல் வழங்கியபடி, தமிழக அரசு 2018, செப்டம்பர் 9-ஆம் தேதி அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியதை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முடிவு எடுக்காமல் இரண்டு ஆண்டுகளாகக் கிடப்பில் போட்டுள்ளார். தமிழக ஆளுநரின் அலட்சியப் போக்கை உச்ச நீதிமன்றமும் நவம்பர் 23-ஆம் தேதி கண்டனம் செய்திருக்கிறது.
தமிழக ஆளுநர், மத்திய பா.ஜ.க. அரசின் கண் அசைவில் செயல்படுவதால் ஏழு தமிழர்கள் விடுதலை பற்றி முடிவு எடுக்காமல் இருப்பதற்கு மத்திய பா.ஜ.க. அரசு முட்டுக்கட்டை போடுகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. மத்திய பா.ஜ.க. அரசுடன் ஒட்டி உறவாடும் எடப்பாடி பழனிசாமி அரசு, ஏழு தமிழர் விடுதலையில் நடத்தும் நாடகத்தைத் தமிழக மக்கள் புரிந்து கொண்டு உள்ளனர்.
எனவே, இனியும் தாமதிக்காமல் தமிழக ஆளுநர் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியவாறு ஏழு தமிழர்களை விடுதலை செய்வதற்கு உடனடியாக ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண். 6
தமிழ்நாட்டில் பத்து ஆண்டுகளாக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அ.இ.அ.தி.மு.க., அரசு அந்திமக் காலத்தை நெருங்கிக் கொண்டிருப்பதால் அதன் எல்லாத் துறைகளிலும் எங்கும் ஊழல்; எதிலும் ஊழல் கொடிகட்டிப் பறக்கிறது.
பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை போன்ற முக்கியத் துறைகளில் ஒப்பந்தப் பணிகள் வழங்குவதில் வெளிப்படைத் தன்மை இல்லாமல் ஒட்டுமொத்த வேலைகளும் குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு மட்டுமே “பேக்கேஜ்” முறையில் வழங்கப்பட்டு ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. உள்ளாட்சித் துறையில் நடைபெறும் ஊழல் நீதிமன்றம் வரையில் சென்றிருக்கிறது.
போக்குவரத்துத் துறையில் அடுக்கடுக்காக நடைபெறும் ஊழல்கள் சந்தி சிரிக்கின்றன.
தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அதிவேக வாகனங்களின் பதிவு எண்களைக் கண்காணிக்க கேமரா பொருத்துவதற்கு விடப்பட்ட டெண்டரில் ஊழல், முறைகேடுகள் அரங்கேறி இருப்பதால் ரூ. 900 கோடி ஊழல் டெண்டரை இரத்து செய்ய வேண்டும் என்று கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கடந்த நவம்பர் 20-ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தி இருந்தார்.
தற்போது போக்குவரத்துத் துறையின் கீழ் இயங்கும் ‘ஆர்.டி.ஓ.’ அலுவலகங்களுக்கு ‘எஃப்.சி’-க்குச் செல்லும் வாகனங்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட தனியார் நிறுவனத்திடமிருந்துதான் ‘ஒளிரும் பட்டை’, ‘வேகக்கட்டுப்பாட்டுக் கருவி’, ‘ஜி.பி.எஸ். கருவி’ போன்றவற்றை வாங்கிப் பொருத்த வேண்டும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் அறிவுறுத்தலின்பேரில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது. இது குறிப்பிட்ட நிறுவனத்தின் வளர்ச்சிக்காக செய்யப்பட்டுள்ள முறைகேடு, ஊழல் என்று அப்பட்டமாகத் தெரிகிறது.
மோட்டார் வாகனச் சட்டப்படி வாகனத்திற்கு ‘எஃப்.சி.’ செய்வதை ஆய்வு செய்து தகுதிச் சான்று வழங்குவது மோட்டார் வாகன அதிகாரியின் கடமையாகும். இதிலும் குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களின் மூலம் தான் ‘எ~ப்.சி.’ செய்து வாகனங்களுக்குச் சான்று அளிக்க வேண்டும் என போக்குவரத்துத் துறை உத்தரவிட்டு உள்ளது. அதுமட்டுமின்றி அத்தனியார் நிறுவனங்களிடம் ‘எஃப்.சி.’ செய்து அவர்கள் தரும் சான்றிதழை அடிப்படையாகக் கொண்டுதான் மோட்டார் வாகன அதிகாரி வாகனங்களுக்கு ‘எஃப்.சி.’ சான்றிதழ் அளிக்க வேண்டும் என்று போக்குவரத்துத் துறை சுற்றறிக்கை விடுத்துள்ளது.
சுற்றறிக்கை விடுத்து, வெளிப்படையாகவே ஊழலில் ஈடுபட்டு வரும் போக்குவரத்துத் துறை அமைச்சருக்கும், ஊழலில் ஊறித் திளைக்கும் எடப்பாடி பழனிசாமி அரசுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் எண். 7
பிரேசிலைத் தாயகமாகக் கொண்ட மரவள்ளிக் கிழங்கு 17-ஆம் நூற்றாண்டில் போர்ச்சுக்கீசியர்களால் இந்தியாவுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. உலகின் மொத்த உற்பத்தியில் 20 விழுக்காடு நைஜீரியாவில் உற்பத்தியாகிறது. இந்தியாவின் தென் மாநிலங்களில் குறிப்பாக கேரளம், தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களில் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. கேரளாவில் அதிகப் பரப்பளவில் பயிரிடப்பட்டாலும் மரவள்ளிக் கிழங்கு உற்பத்தியில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. இதற்குக் காரணம் தமிழகத்தில் மரவள்ளியின் உற்பத்தித் திறன் அதிகமாகும்.
தமிழ்நாட்டில் சுமார் 5 இலட்சம் ஏக்கரில் மரவள்ளிக் கிழங்கு சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. கரூர், சேலம், தருமபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் பெருமளவு பயிரிடப்பட்டு வருகிறது. வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய பயிர் என்பதால் இந்த மாவட்டங்களில் மரவள்ளிக் கிழங்கு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வமாக உள்ளனர்.
மரவள்ளிக் கிழங்கிலிருந்து ஜவ்வரிசி போன்ற உணவுப் பொருள்களும், கால்நடைகளுக்குத் தேவையான தீவனங்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதனால் நாமக்கல், சேலம், ஈரோடு பகுதிகளில், ஜவ்வரிசி, ஸ்டார்ச் உற்பத்தி ஆலைகள் 400-க்கும் மேற்பட்டவை இயங்கி வந்தன. தற்போது மரவள்ளிக் கிழங்குக்கு கட்டுப்படியான விலை கிடைக்காததால் விவசாயிகள் உற்பத்தியைக் குறைத்து விட்டனர். இதனால் மேற்கண்ட ஆலைகள் இயங்க முடியாமல் 200-ஆகக் குறைந்து விட்டன.
கடந்த வாரத்தில் மரவள்ளிக் கிழங்கின் விலை ஒரு டன் ரூ. 7 ஆயிரத்து 500-க்கு விற்பனை ஆனது. ஆனால், இந்த வாரம் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் முகவர்கள் ரூ. 4 ஆயிரத்து 500 மட்டுமே தீர்மானித்துள்ளனர். இதனால் உரிய விலை கிடைக்காமல் மரவள்ளிக் கிழங்கை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தமிழக அரசே குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்து மரவள்ளிக் கிழங்கை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
இதைப் போலவே விவசாயிகள் உற்பத்தி செய்கிற வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு உள்ளிட்ட பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்காததால் உற்பத்தி அதிகமாகும்போது ஏஜெண்டுகள் அடிமாட்டு விலைக்கு கொள்முதல் செய்கின்றனர். இதனால் விவசாயிகள் வியர்வை சிந்தி, கடன்பட்டு, இயற்கைப் பேரிடரை எதிர்கொண்டு சாகுபடி செய்த உணவுப் பயிர்களை சாலைகளில் கொட்டும் அவலம் தொடர்கின்றது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல், கரும்பு உள்ளிட்ட விளைபொருட்கள் அனைத்துக்கும் உற்பத்திச் செலவை ஈடுகட்டும் வகையில் குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரைத்தபடி உற்பத்திச் செலவோடு மேலும் 50 விழுக்காடு சேர்த்து விளைபொருட்களுக்கு கொள்முதல் விலையைத் தீர்மானிக்க வேண்டும் என்று இக்கூட்டம் தமிழக அரசை வலியுறுத்துகிறது.
தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
05.12.2020

No comments:

Post a Comment