Friday, April 1, 2022

மாநிலங்கள் அவையில் ஓய்வு பெறுகின்ற உறுப்பினர்களுக்கு வைகோ எம்பி பாராட்டு!

நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில், ஒரு உறுப்பினர், ஆறு ஆண்டுகள் பொறுப்பு வகிப்பார். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்களின், பொறுப்புக் காலம் நிறைவு பெறும். அவ்வாறு இந்த ஆண்டு, 72 உறுப்பினர்கள் விடைபெறுகின்றார்கள். அவர்களுக்கு, பாராட்டு மற்றும் வழி அனுப்பு விழா நேற்று (31.03.2022) நடைபெற்றது. அனைவரும் சேர்ந்து குழு படம் எடுத்துக் கொண்டனர்.

மாநிலங்கள் அவையின் தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான வெங்கையா நாயுடு அவர்கள், அவர்களுடைய பணிகளைப் பாராட்டினார். அதன்பிறகு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்தினார். கட்சிகளின் தலைவர்கள் பேசினார்கள். அப்பொழுது, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ ஆற்றிய உரை:

இந்த நிகழ்வில் பேசுவதற்கு, எனக்கு வாய்ப்பு அளித்தமைக்கு, அவைத் தலைவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.

போராட்டங்களும், இன்னல்களும், மகிழ்ச்சியும் கலந்தது மனித வாழ்க்கை. வெற்றிகளும்,  தோல்விகளும் மாறி மாறி வரும். அந்த வகையில், பொது வாழ்வில் எத்தனையோ போராட்டங்களை எதிர்கொண்டு, இந்த அவைக்குத் தேர்ந்து எடுக்கப்பட்டு வந்து, சிறப்பாகப் பணி ஆற்றிய 72 உறுப்பினர்களுடைய பதவிக்காலம், அடுத்த நான்கு மாதங்களுக்குள் நிறைவு பெறுகின்றது. அவர்களுள் சிலர், மீண்டும் தேர்ந்து எடுக்கப்பட்டு வரலாம்; வாய்ப்பு கிடைக்காமலும் போகலாம். ஆனாலும்  அவர்கள், பொதுவாழ்வில் தொடர்ந்து நீடிப்பார்கள். எந்த இடத்தில், என்ன பொறுப்பில் இருந்தாலும், அந்தப் பணியில் அவர்கள் வெற்றி பெற வேண்டும்; நல்ல உடல்நலத்தோடு, மகிழ்ச்சியோடு, அவர்களின் எதிர்காலம் அமைய வேண்டும் என்று நான் வாழ்த்துகின்றேன்.

இந்த அவையில், நான் நான்காவது முறையாகப் பொறுப்பு வகித்து வருகின்றேன். 1978 ஆம் ஆண்டு, முதன்முறையாகத் தேர்வு பெற்று வந்தபோது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புபேஷ் குப்தா அவர்களுடைய சிம்ம கர்ஜனை நாள்தோறும் ஒலித்தது. மூத்த தலைவர் என்.ஜி.ரங்கா, ஒரு நாள், ஒரு மணி நேரம் கூட  அவைக்கு வராமல் இருந்தது இல்லை; விருப்பு வெறுப்பு இன்றிப் பேசுவார்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் இந்த அவையை அலங்கரித்தார்கள்; இந்தியாவின் கவனத்தை ஈர்த்தார்கள். பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள், முத்திரை பதிக்கின்ற உரைகளை ஆற்றி இருக்கின்றார்.

இந்த உறுப்பினர்கள் பிரிந்து செல்வது, கவலையாக இருக்கின்றது. உங்களில் பலரை நான் மீண்டும் சந்திக்க முடியாமல் போகலாம். ஆனால், இங்கே உங்களுடன் பழகிய நட்பும், நேசமும், என் மனதை விட்டு என்றைக்கும் அகலாது. ஆனந்த் சர்மா, ஜெய்ராம் ரமேஷ், ப.சிதம்பரம், நிர்மலா சீதாராமன், ஆர்.எஸ்.பாரதி போன்றோர், அருமையான வாதங்களை எழுப்பி, அற்புதமாக உரை ஆற்றியதை எல்லாம் மறக்க முடியாது.

பதவிக் காலம் முடிந்து விடைபெற்றுச் செல்கின்ற மாநிலங்கள் அவை உறுப்பினர்கள் அனைவரும், நீடிய வாழ்நாளும், நிறைந்த உடல்நலமும் பெற்று, அவர்கள் எந்தத் துறையில் இருந்தாலும், அந்தப் பொறுப்பில் வெற்றி பெற வேண்டும் என நெஞ்சார வாழ்த்துகின்றேன்.

இவ்வாறு வைகோ பேசினார்.

முன்னதாக, நேற்று காலை 9 மணி அளவில், நாடாளுமன்ற இணைப்புக் கட்டடத்தில் நடைபெற்ற ஒன்றிய நல்வாழ்வுத்துறை அமைச்சகத்தின் ஆலோசனைக் குழுக்  (Consultative Committe) கூட்டத்தில் வைகோ பங்கேற்றார். அமைச்சர் மன்சுக்பாய் மாண்டவியா தலைமை வகித்தார்.

அந்தக் கூட்டத்தில், வைகோ ஆற்றிய உரை:

மிகச்சிறந்த பொருளாதார அறிஞர்களுள் ஒருவரான மால்தஸ், உலகின் மக்கள் தொகை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டேதான் இருக்கும்; ஆனால் இயற்கை அதைக் கட்டுப்படுத்தும்; நில அதிர்வுகள், எரிமலைகளின் சீற்றம், புயல் வெள்ளத்தால் நிறையப் பேர் மடிவார்கள்; அத்துடன், கொடிய நோய்களின் தாக்குதல்களால், கோடிக்கணக்கான மக்களை இறப்பதையும் தடுக்க முடியாது என்று சொன்னார். அதை நாம் இப்போது கண்கூடாகப் பார்க்கின்றோம்.

இதுவரை 22 கொள்ளை நோய்கள், கொடிய தாக்குதல்களை நடத்தி இருக்கின்றன; கோடிக்கணக்கான மக்களின் உயிர்களைச் சூறையாடி இருக்கின்றன.

2019 ஆம் ஆண்டு, கொவிட் 19 கொரோனா தீ நுண்மி சீனாவில் தோன்றியது; அது, உலகம் முழுமையும் மின்னல் வேகத்தில் பரவியது.

உலக நல்வாழ்வு நிறுவனம், 2022 மார்ச் 23 ஆம் நாள் கொடுத்த அறிக்கையில், 47 கோடியே 28 இலட்சம் பேருக்குக் கொரோனா தொற்று தாக்கியது; 69 இலட்சம் பேர் இறந்து விட்டனர் என்ற புள்ளிவிவரத்தை வெளியிட்டு இருக்கின்றது.

மார்ச் 24 ஆம் நாள் கணக்குப்படி, அதற்கு முந்தைய நான்கு வாரங்களில், தென்கொரியா, வியட்நாம், ஜெர்மனி, ஃபிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன், நெதர்லாந்து, ஜப்பான், இத்தாலி, பிரேசில் ஆகிய நாடுகளில், அதிகமான உயிர் இழப்புகள் ஏற்பட்டு உள்ளன. இந்தியாவில், 4 கோடியே 30 இலட்சத்து 14 ஆயிரத்து 687 பேர், கொரோனா தீ நுண்மியால் பாதிக்கப்பட்னர். இந்தியாவில், 5 இலட்சத்து 14 ஆயிரத்து 672 பேர் இறந்தனர்.

மருத்துவ அறிஞர்கள் குறுகிய காலத்தில் தடுப்பு ஊசியை ஆக்கினார்கள். உலகத்தின் மற்ற நாடுகளை விட, கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதில், அரசு தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு, வெற்றி பெற்று இருக்கின்றது.

கொரோனா பாதிப்புகள் குறித்து, மாநில வாரியான புள்ளி விவரங்களை, இந்தக் கூட்டத்தில், அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும். கொரோனா நான்காம் அலை தாக்குதல் ஏற்படக்கூடும் என, மருத்துவ அறிஞர்கள் எச்சரித்து இருக்கின்றனர். அதை எதிர்கொள்ளத்தக்க நடவடிக்கைகளை, அரசு மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

இவ்வாறு வைகோ பேசினார்.

அதன்பிறகு, நேற்று மாலை 7 மணி அளவில், புது தில்லி தமிழ்நாடு இல்லத்தில், முதல் அமைச்சர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்களை வைகோ, கணேசமூர்த்தி சந்தித்தனர். ஈழத்தமிழர்கள் பிரச்சினை, தமிழக மீனவர்கள் பிரச்சினை, நியூட்ரினோ திட்டத்தின் கேடுகள் குறித்துப் பேசினர்.

தலைமை நிலையம்

மறுமலர்ச்சி தி.மு.க.,

‘தாயகம்’

சென்னை - 8

01.04.2022

No comments:

Post a Comment