Saturday, April 1, 2017

நெடுஞ்சாலையோர மதுக்கடைகளை மூட உச்சநீதிமன்றம் ஆணை - வைகோ வரவேற்பு!

‘சாலை விபத்துகளில் எண்ணற்ற மக்கள் உயிர் இழக்கும் அவலத்திற்குக் காரணமான மதுவின் கொடுமையில் இருந்து மக்களைக் காக்க, நெடுஞ்சாலை ஓரங்களில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்கு உள்ளே இருக்கின்ற மதுக்கடைகளை அகற்ற வேண்டும்’ என்று உச்சநீதிமன்றம் 2016 டிசம்பர் 15 ஆம் நாள் தந்த தீர்ப்பை எதிர்த்து, தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநில அரசுகள் மேல் முறையீடு செய்தன.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கே.எஸ். கேகர் தலைமையில், நீதியரசர்கள் நாகேஸ்வரராவ், நீதியரசர் சந்திரசூட் உள்ளிட்ட அமர்வில், 68 முறையீடுகளை இரண்டு நாள்கள் விசாரித்து, 32 பக்கத் தீர்ப்பில் ஆணை பிறப்பித்துள்ளது.

டிசம்பர் 15 ஆம் தேதி தீர்ப்பில், ‘அனைத்து மாநில அரசுகள், மத்திய அரசின் நேரடி ஆட்சிப்பகுதிகளும் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்கு மதுக்கடைகளுக்கு லைசென்ஸ் கொடுக்கக்கூடாது’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்து இருந்தது. 2017 ஏப்ரல் 1 ஆம் தேதியோடு, தற்போதுள்ள மதுக்கடைகளின் உரிமம் கhலாவதி ஆகும் என்றும் கூறி இருந்தது.

இந்தச் சூழ்நிலையில், மத்திய அரசின் அட்டர்னி-ஜெனரல் முகுல் ரோகத்கி, கேரள அரசுக்குக் கொடுத்த சட்ட ஆலோசனையில், ‘சிறு கடை, சிறிய மதுக்கடைகளுக்குத்தான் இது பொருந்தும்; பெரிய அளவிலான மது நிறுவனங்கள், ஒயின், பீர், மதுக்கடைகளுக்குப் பொருந்தாது என்று குறிப்பிட்டு இருந்தார்.

அதனைச் சுட்டிக்காட்டி, கேரளச் சட்டப்பேரவையின் முன்னாள் தலைவர் வி.எம். சுதீரன், உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.

இப்போது உச்சநீதிமன்றம், 2000 மக்கள் தொகைக்குக் குறைவாக உள்ள இடங்களில், 500 மீட்டர் என்பதை 220 மீட்டராகக் குறைத்துள்ளது; மற்ற இடங்கள் அனைத்திலும் 500 மீட்டர் தொலைவுக்குள் எந்த மதுக்கடையும் இருக்கக் கூடாது என்று கூறி உள்ளது.

‘நெடுஞ்சாலைகளில் 500 மீட்டர் என்பதைக் குறைத்து, 100 மீட்டர் என வரையறுக்க வேண்டும்’ என்று தமிழ்நாடு அரசுமுன்வைத்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை.

சில மாநிலங்களில் மதுக்கடைகளுக்கு ஏப்ரல் மாதத்தையும் தாண்டி உரிமம் கொடுக்கப்பட்டு இருப்பதால், அனைத்துமே இந்த ஆண்டு செப்டெம்பர் 30 ஆம் தேதிக்குள் அகற்றப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பு அளித்து இருக்கின்றது.

‘கலிங்கப்பட்டி ஊராட்சி மன்றம் நிறைவேற்றிய தீர்மானத்தின்படி, கலிங்கப்பட்டியில் உள்ள மதுக்கடையை அகற்ற வேண்டும்’ என்று, அன்றைய ஊராட்சித்தலைவர் வை.ரவிச்சந்திரன், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடுத்த வழக்கில், தமிழக அரசு எவ்வளவோ எதிர்த்தும், உயர்நீதிமன்ற நீதிபதி நாகமுத்து அவர்கள், தமிழக அரசின் வாதத்தை ஏற்காமல், ஊராட்சி மன்றத் தீர்மானத்தின்படி கலிங்கப்பட்டியில் மூடப்பட்ட மதுக்கடையைத் திறக்க அனுமதி கிடையாது என்று தீர்ப்பு அளித்தார்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்துத் தமிழ்நாடு அரசு, உச்சநீதிமன்றத்திற்குச் சென்றது.

தலைமை நீதிபதி கே.எஸ்.கேகர் அவர்கள் தலைமையில் நீதியரசர்கள் சந்திரசூட், சஞ்சய் கிஷண் கவுல் அமர்வு, ‘கலிங்கப்பட்டி ஊராட்சி மன்றத் தீர்மானத்தின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு செல்லும்’ என்று கூறி அறிமுக நிலையிலேயே தமிழக அரசின் கோரிக்கை மனுவை நிராகரித்தது.

இந்தத் தீர்ப்பு, இந்திய வரலாற்றில் ஊராட்சி அமைப்புக்கு உள்ள அதிகாரத்தை நிலைநாட்டி உள்ளது.

எனவே, உள்ளாட்சி மன்றத் தேர்தல் எப்போது நடந்தாலும், உண்மையிலேயே மதுக்கடைகளை ஒழிப்பார்கள் என்று யார் மீது நம்பிக்கை இருக்கின்றதோ, அவர்களுக்குத்தான் மக்கள், குறிப்பாகத் தாய்மார்கள் வாக்கு அளிக்கும் நிலை ஏற்பட்டால், மாநில அரசு தடுத்தாலும் அதை மீறி, மதுக்கடைகளை ஒழித்து விட முடியும். தமிழகத்தில் மது அரக்கனின் கொடுமை ஒழியும்.

தமிழ்நாட்டில், மதுபான உற்பத்தி நிறுவனங்களின் மூலம் கோடிகோடியாகக் கொள்ளையடித்த ஆண்ட கட்சியும், ஆளுங்கட்சியும், எதிர்காலத்தில் இந்தக் கொள்ளையை நடத்த முடியாத அளவிற்கு, மதுக்கடைகளை முற்றாக ஒழிக்கின்ற நிலைமையை ஏற்படுத்தியே தீருவோம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment