Wednesday, April 26, 2017

உச்சநீதிமன்றத்தையும் மக்கள் மன்றத்தையும் அலட்சியப்படுத்தும் தமிழக அரசு-வைகோ கண்டனம்!

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் ஓரத்தில் இயங்கி வரும் மதுக்கடைகளை மார்ச்31 ஆம் தேதிக்குள் மூட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடுமையான உத்தரவை பிறப்பித்தது. இதனால் தமிழ்நாட்டில் 3321 டாஸ்மாக் மதுக்கடைகளும், ஆயிரக்கணக்கான தனியார் மதுபானக் குடிப்பகங்களும் மூடப்பட்டன.

ஆனால்,மீண்டும் அக்கடைகளை வேறு மாற்று இடங்களில் திறப்பதற்குத் தீவிர நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கியுள்ளது.

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்கள் குறிப்பாகப் பெண்கள் மாற்று இடங்களில் மதுக்கடைகளைத் திறப்பதை எதிர்த்து ஆங்காங்கே முற்றுகைப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள தகவல்கள் நாள்தோறும் வந்தவண்ணம் இருக்கின்றன.

சென்னையில் திருப்பெரும்புதூர் - குன்றத்தூர் நெடுஞ்சாலையில் உள்ள பூந்தண்டலம் சக்தி நகரில் மூடப்பட்ட மதுக்கடையை மீண்டும் திறப்பதற்கு மாவட்ட நிர்வாகம் முயற்சி செய்தபோது, அப்பகுதிப் பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மண்வெட்டி, கடப்பாறை, சுத்தியல் போன்றவற்றைக் கொண்டு புதிதாக திறக்க இருந்த டாஸ்மாக் மதுக் கடையை அடித்து நொறுக்கி இருக்கின்றனர்.

இந்தச் செய்தி ஏப்ரல் 21 ஆம் தேதி நாளேடுகளில் வந்துள்ளது. தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகளை மூடக்கோரி மக்கள் புரட்சி வெடித்து உள்ளதற்கு மேற்கண்ட நிகழ்வு சான்று ஆகும்.

இந்நிலையில், தமிழக நகராட்சி நிர்வாக ஆணையர் மூலம் மாநகராட்சி ஆணையாளர்கள், நகராட்சி ஆணையாளர்களுக்கு ஓர் ஆணை அனுப்பப்பட்டு இருக்கின்றது. அதில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட முக்கியச் சாலைகள், ஊராட்சிச் சாலைகள் உள்ளிட்டவற்றை மாநகராட்சி, நகராட்சிகள் வசம் எடுத்துக்கொள்ள உரிய மன்றத் தீர்மானத்தை இயற்றி ஏப்ரல் 25 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருக்கின்றது.

உள்ளாட்சிகளில் மக்கள் பிரதிநிதிகளின் பதவிகள் முடிந்து மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள் தனி அலுவலர்களாகப் பொறுப்பு வகிக்கும் நிலையில், இதுபோன்ற தீர்மானத்தை எப்படி நிறைவேற்ற முடியும்?

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை மாநகராட்சி, நகராட்சிச் சாலைகளாக மாற்றிவிட்டால் பாதாளச் சாக்கடைத் திட்டங்கள், குடிநீர் திட்டங்களைச் செய்யும்போது தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை நிர்வாகங்களிடம் அனுமதிக்காகக் காத்திருக்க வேண்டியது இல்லை. செலவினங்களும் குறையும் என்று கவைக்கு உதவாத ஒரு காரணத்தை நகராட்சி நிர்வாக ஆணையர் தமது உத்தரவில் கூறி இருப்பது வியப்பு அளிக்கின்றது.

அரசின் வருவாய் இழப்பை ஈடுகட்டுவதற்கு, நாட்டை நாசப்படுத்தும் மதுக்கடைகளைத் திறக்க வேண்டும் என்று தமிழக அரசு முயற்சிப்பது கடும் கண்டனத்துக்கு உரியது ஆகும். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை காலில் போட்டு மிதிப்பது மட்டும் அன்றி, மக்கள் மன்றத்தின் எதிர்ப்பையும் புறந்தள்ளும் வகையில் ஆணவத் தர்பார் நடத்த முயலும் தமிழக அரசு அதற்கான விலையைக் கொடுக்க வேண்டியது இருக்கும் என்று எச்சரிக்கின்றேன்.

நகராட்சி நிர்வாக ஆணையர் மூலம் அனுப்பப்பட்டுள்ள ஆணையைத் திரும்பப் பெறுவதுடன், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை மாநகராட்சி, நகராட்சி நிர்வாத்தின் வசம் ஒப்படைக்கும் முடிவையும் தமிழக அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.

புழல் சிறையில் தம்மை சந்திக்க வந்த வழக்கறிஞர் கோ.நன்மாறன் அவர்களிடம் வைகோ அவர்கள் கூறிய இந்தக் கருத்துக்கள் இந்த அறிக்கையாக வெளியிடப்படுகின்றது.

ஓமன் மதிமுக இணையதள அணி


No comments:

Post a Comment