Thursday, February 6, 2020

தாய்லாந்து நாட்டில் இறந்த இளைஞரின் உடல் ஓரிரு நாள்களில் கரூர் வந்து சேரும் வைகோவுக்கு, வெளியுறவுத்துறை அமைச்சர் தகவல்!

கரூர் மாவட்டம் கருப்பூர் மாயனூர் சங்கரன்மலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் பிரகாஷ் நடராஜன், ஒரு பொறியாளர். 2017 ஆம் ஆண்டு, தாய்லாந்து நாட்டில் வேலைக்குச் சென்றார். 2018 ஆம் ஆண்டு ஒரு கொலை வழக்கில் சிக்கி, கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். அங்கே அவர் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் வந்தது.
இது தொடர்பாக கரூர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் கபினி சிதம்பரம், ம.தி.மு.க. மாணவர் அணிச் செயலாளர் பால சசிகுமார் ஆகியோர், மறுமலர்ச்சி தி.மு,க. பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.
கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், வெளிஉறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு மின்அஞ்சல் வழியாகத் தொடர்பு கொண்டார். அமைச்சகத்தில் இருந்து தாய்லாந்து தூதரகத்தைத் தொடர்பு கொண்டனர்.
அதற்கு விளக்கம் அளித்து, பாங்காங்கில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரி அனுப்பி உள்ள தகவல்:
இறந்தவருடைய குடும்பத்தினர், கரூர் மாவட்ட ஆட்சியர், காவல்துறைக் கண்காணிப்பாளருடன் நாங்கள் தொடர்பு கொண்டுள்ளோம். உடலை இந்தியாவுக்கு அனுப்புவதற்கான ஆவணங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. ஏசியா ஒன் என்ற பொருள் போக்குவரத்துத் துறையினர், அதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளனர். அதற்கான செலவுகளைக் குடும்பத்தினர் ஏற்க இயலாத நிலையைக் கருதி, இந்திய சமூக நல நிதியில் இருந்து ஈடுகட்ட, தூதர் ஒப்புதல் தந்துள்ளார். அடுத்த 3 அல்லது 4 நாள்களில் உடல் சென்னைக்கு வந்து சேரும். அங்கிருந்து, கரூருக்குக் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளோம் எனக் குறிப்பிட்டு உள்ளார்.
இந்தத் தகவலை வெளிஉறவு அமைச்சர் வைகோ அவர்களுக்குத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment