Saturday, November 7, 2020

மதுவிலக்கு போராளிக்கு தாயகத்தில் மலர் அஞ்சலி!

இன்று 6-11-2020 சென்னை, மதிமுக  தலைமைக் கழகம் தாயகத்தில் திராவிட ரத்னா தமிழினக் காவலர் தலைவர் திரு வைகோ எம்பி அவர்களை ஈன்றெடுத்த புறநானூற்று வீரத்தாய் நினைவில் வாழும் அன்னை மாரியம்மாள் அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு நாளில் அவரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்கப்பட்டது. அப்போது மாசெ ஜீவன்,ராஜேந்திரன் சுப்பிரமணி கழக குமார் மற்றும் முராத் புகாரி மனிவேந்தன்  மல்லிகா தயாளன் தென்றல் நிசார் செல்லப்பாண்டியன் உள்ளிட்ட தலைவரின் கண்ணின் மணிகள் பலர் பங்கேற்றனர்்

Friday, November 6, 2020

நெய்வேலி காவல் நிலையத்தில், செல்வமுருகன் அடித்துக் கொலை;காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும். வைகோ அறிக்கை!

கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம் காடாம்புலியூர் செல்வமுருகன், முந்திரி வணிகம் செய்து வருகின்றார். அக்டோபர் 28 அன்று காலையில், வடலூர் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது மனைவி பிரேமா, அலைபேசியில் தொடர்பு கொண்டபோது அவர் எடுக்கவில்லை. எனவே பிரேமா, வடலூருக்கு வந்து தேடிப்பார்த்துவிட்டு, காவல் நிலையம் சென்று, புகார் கொடுத்தார். ஆனால், அவர்கள் வாங்கவில்லை; நெய்வேலி காவல் நிலையத்தில் புகார் கொடுக்குமாறு கூறினார்கள். 

இரவு 8 மணி அளவில் பிரேமா அங்கே சென்றபோது, அவர்கள் மறுநாள் காலையில் வருமாறு கூறினார்கள். அப்போது, பிரேமாவையும், அவரது குழந்தைகளையும் காவலர்கள் அலைபேசியில் படம் பிடித்துக் கொண்டார்கள். அங்கிருந்து பிரேமா வீடு திரும்புகின்ற வழியில், ஆய்வாளர் ஆறுமுகம், காவலர்கள் சுதாகர், அறிவழகன் மற்றும் அடையாளம் தெரிந்து பெயர் தெரியாத ஒரு காவலர் ஆகியோர் பிரேமாவை வழிமறித்து விசாரித்தனர். உன் கணவர் மீது பல வழக்குகள் உள்ளன என்று கூறினார்கள். 

மறுநாள் காலையில் காவலர்கள் தொடர்பு கொண்டு, இந்திரா நகரில் உள்ள ராணி & ராணி என்ற தங்கும் விடுதிக்கு வரச் சொன்னார்கள். குழந்தைகளுடன் பிரேமா அங்கே சென்றார். உன் கணவர் செல்வமுருகன் மீது திருட்டு வழக்கு போடப் போகின்றோம்; 10 பவுன் செயின் கொடுத்துவிட்டால், வழக்குப் பதியாமல் விட்டு விடுகின்றோம் என்று மிரட்டி, அவரை வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். 

அக்டோபர் 30 அன்று, நெய்வேலி நகர காவல் நிலையத்திற்கு வருமாறு அழைத்தார்கள். பிரேமா அங்கே சென்றபோது, செல்வமுருகனை, காவல் நிலையத்தில் இருந்து வெளியே அழைத்து வந்தார்கள். அவர், தன் மனைவி பிள்ளைகளைப் பார்த்துக் கதறி அழுதார். தன்னை அடித்துச் சித்திரவதை செய்து, திருட்டுக் குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி மிரட்டியதாகச் சொன்னார்.  அவரால் நடக்க முடியவில்லை. இந்த நிலையில், காவலர்கள் பிரேமாவையும் அடித்து மிரட்டி, அவரிடம் சில காகிதங்களில் கையெழுத்து வாங்கினார்கள்; இங்கே நடந்ததை வெளியே சொல்லக்கூடாது என மிரட்டி அனுப்பினார்கள்.  

அன்று இரவு மீண்டும் பிரேமாவைத் தொடர்பு கொண்டு, 5000 ரூபாய் கொண்டு வர வேண்டும் என்றார்கள். பிரேமா, தன் உறவினர் மூலமாக 5000 ரூபாய் கொடுத்து அனுப்பினார். அதன்பிறகு, செல்வமுருகனைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. அவர் விருத்தாசலம் கிளைச் சிறையில் இருப்பதாகக் கேள்விப்பட்டு, நவம்பர் 2 ஆம் நாள் பகல் 12 மணி அளவில், பிரேமா, தன் குழந்தைகளுடன் அங்கே சென்றார். அப்போது செல்வமுருகனை, காவலர்கள் கைத்தாங்கலாக அழைத்து வந்தார்கள். அவரால் நடக்க முடியவில்லை. விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கேயே அவரைச் சேர்த்து மருத்துவம் செய்யுமாறு கேட்டபோது மறுத்து, 2 மணி நேரம் கழித்து, மீண்டும் சிறைக்கு அனுப்பி விட்டார்கள். 

மீண்டும் 4 ஆம் தேதி இரவு 11 மணி அளவில் அழைத்து, செல்வமுருகன் விருத்தாசலம் மருத்துவமனையில் இருப்பதாகக் கூறி, அங்கே சென்று பார்க்கும்படிக் கூறினார்கள். பிரேமா அங்கே சென்றபோது, அவர் இறந்து விட்டதாகக் கூறினார்கள். 

நெய்வேலி காவல் நிலையத்தில் அவரை அடைத்து வைத்து அடித்துச் சித்திரவதை செய்ததால்தான், அவர் இறந்து உள்ளார். 

செல்வமுருகன் உடலை, வெவ்வேறு மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த இரண்டு மருத்துவர்கள் உடல்கூறு ஆய்வு செய்ய வேண்டும்; அப்போது, செல்வமுருகன் உறவினர் ஒருவர் உடன் இருக்க வேண்டும்; உடல்கூறு சோதனைகளை காணொளிப் பதிவு செய்ய வேண்டும்; அந்தக் காணொளிப் பதிவின் ஒரு படியை, பிரேமாவிடம் வழங்க வேண்டும்; நெய்வேலி காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவலர்கள் மீது, கொலை வழக்கு பதிவு செய்து, சிபிசிஐடி விசாரணை செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
06.11.2020

பா.ஜ.க. அரசின் இந்தி ஆதிக்க மொழித் திமிரை அடக்குவோம். வைகோ அறிக்கை!

திராவிடர் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் குமாரதேவன் அவர்கள், நடுவண் நல்வாழ்வு  மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகத்திற்கு, கடந்த ஆகஸ்டு 26 ஆம் தேதி, தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி, “ஆயுர்வேத மருத்துவ மையங்களின் வளர்ச்சிக்காக கடந்த 2014-15 ஆம் ஆண்டு முதல் 2020-21 ஆம் ஆண்டு வரையில் ஒதுக்கீடு செய்த நிதி எவ்வளவு? அதே போன்று மேற்கண்ட ஆண்டுகளில், சித்தா மற்றும் யுனானி மருத்துவ மையங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது?” என விளக்கங்கள் கேட்டுக் கடிதம் அனுப்பி இருந்தார்.

இந்தியா முழுவதும் இயங்கி வரும் ஆயுர்வேதம், சித்தா மற்றும் யுனானி மருத்துவ மையங்கள் பற்றிய முழு விபரங்கள் மற்றும் அவற்றில் பணிபுரியும் ஊழியர்கள் பற்றிய விபரங்கள் வேண்டும் என்றும் கேட்டு இருந்தார்.

மேற்கண்ட வினாக்களுக்கு மத்திய ஆயுஷ் அமைச்சகம் முழுக்க முழுக்க இந்தியிலேயே பதில் அளித்து இருக்கின்றது. பதில் கடிதத்தின் உறையில்கூட முகவரியை இந்தியில் எழுதி அனுப்பி இருக்கின்றார்கள்.

தமிழ்நாட்டில் இருந்து ஆங்கிலத்தில் கேட்கப்பட்ட வினாக்களுக்கு, ஆயுஷ் அமைச்சகம் இந்தியில் விடை அளித்து இருப்பது பா.ஜ.க. அரசின் இந்தி ஆதிக்கத் திமிரைக் காட்டுகின்றது. இதை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது.

இதே ஆயுஷ் அமைச்சகம் சார்பில், ஆகஸ்டு 18 ஆம் தேதி காணொளியில் நடத்திய பயிற்சி முகாமில் தமிழகம், கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களைச் சேர்ந்த இயற்கை யோகா மருத்துவம் பயின்ற மருத்துவர்கள் பங்கு பெற்றனர். அப்போது தமிழ்நாட்டில் இருந்து கலந்துகொண்ட மருத்துவர் சௌந்திர பாண்டியன் ஆங்கிலத்தில் சில விளக்கங்களைக் கேட்டபோது, அவரை ஆயுஷ் அமைச்சகச் செயலாளர் வைத்யா ராஜேஷ், இந்தியில் கேட்குமாறு கூறியுள்ளார். இந்தி மொழி தெரியாது என்று மருத்துவர் கூறியவுடன், இந்தி தெரியாவிட்டால் வெளியேறுங்கள் என்று கொக்கரித்தார். அதற்குக் கடும் எதிர்ப்புகள் எழுந்த பின்னரும், மத்திய ஆயுஷ் அமைச்சகம் தனது போக்கை மாற்றிக்கொள்ளவில்லை.

காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் திரு. பெ.மணியரசன் அவர்கள் கடந்த ஜூலை 16, 2020 அன்று, காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைமையகத்தின் அலுவலகம் செயல்படுகின்றதா? காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் இப்பணியில் முழுநேர அதிகாரியாக இருக்கின்றாரா? கூடுதல் பொறுப்பாகக் கவனிக்கின்றாரா?காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக் குழுவுக்கு அமர்த்தப்பட்ட முழு நேர அதிகாரிகள் எத்தனை பேர்? நடப்பு ஆண்டில் ஜூன், ஜூலை மாதங்களுக்குரிய சாகுபடிக்கு உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி கர்நாடகா மாநிலம் தமிழகத்திற்கு காவிரி நீரை  திறந்து விட்டுள்ளதா? உள்ளிட்ட, 8 வினாக்களை தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திடம் தகவல் கேட்டு இருந்தார்.

இதற்கு மத்திய நீர்வளத்துறை இந்தியில் பதில் அனுப்பி இருந்தது.

இவையெல்லாம் தற்செயலான நிகழ்வுகள் என்று கருத முடியாது. மத்திய பா.ஜ.க. அரசு திட்டமிட்டு இந்தி ஆதிக்கத்தை நிலைநாட்ட வலிந்து இந்தி மொழியைத் திணித்து வருகின்றது.

இந்தி பேசாத மாநிலங்களின் அலுவல் மொழியாக இந்திய அரசியல் சட்டத்தின் 343(2) பிரிவின்படி, ஆங்கில மொழி தொடருகின்றது. இதில் 1963 இல் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின்படி, சட்டப் பிரிவு 343(3) இன் கீழ் ஆங்கிலம் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான தொடர்பு மொழியாக நீடிக்கின்றது.

இதையெல்லாம் பொருட்படுத்தாமல், இந்தி எதேச்சாதிகாரத்தை நிலைநாட்டத் துடிக்கும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்துத்துவ சனாதனக் கூட்டத்தின் இந்தி, சமஸ்கிருத ஆதிக்க மொழித் திமிரை தமிழக மக்கள் அடக்கியே தீருவார்கள்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
06.11.2020

அன்னை மாரியம்மாளுக்குவைகோ புகழ் அஞ்சலி!

மது ஒழிப்பு போராளியும், கழகப் பொதுச்செயலாளர் மக்கள் தலைவர்  வைகோ அவர்களின் தாயாருமான வீரத்தாய் வை.மாரியம்மாள் அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளான இன்று (06.11.2020), அண்ணாநகர் இல்லத்தில், அன்னையின் திருவுருவப் படத்திற்கு, தமிழினக் காவலர் வைகோ எம்பி அவர்கள் குடும்பத்தினருடன் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினார்.

விவசாயிகள் வாழ்க்கையோடு விளையாட வேண்டாம். வைகோ அறிக்கை!

பாரத் பெட்ரோலியம் நிறுவனம், கோவை இருகூரில் இருந்து பெங்களூர் தேவனகொந்தி வரை எண்ணெய்க்குழாய் பதிக்கும் திட்டத்தைச் (IDPL) செயல்படுத்தி வருகின்றது. இதனால், திருப்பூர், ஈரோடு, நாமக்கல் ,சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய ஆறு மாவட்டங்களில் வேளாண் விளை நிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும்;          பல்லாயிரக்கணக்கான விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படும்.

எனவே, இது குறித்து விவசாயிகள் தமிழக முதல்வரிடம் நேரில் முறையிட்டனர்.

தமிழக முதல்வர் வழிகாட்டுதலின்படி, தொழில்துறை அமைச்சரைச் சந்தித்து, விவசாயிகள் விரிவாகப் பேசினர். ‘இது மத்திய அரசு திட்டம்; நாங்கள் எதுவும் செய்ய இயலாது’ என  தொழில்துறை அமைச்சர், 2020 பிப்ரவரி மாதம் தெரிவித்தார்.

அதன்பிறகு, பல்வேறு விவசாயிகள் சங்கங்களின் பொறுப்பாளர்கள் தில்லிக்கு வந்தனர். அவர்களை, பெட்ரோலியத்துறை அமைச்சரிடம் நான் அழைத்துச் சென்றேன். அவரிடம் முறையிட்டனர். அதன்பிறகு, பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தினார்கள். அனைத்து இந்திய விவசாய சங்கங்கள் ஆதரவு அளித்தனர். 

இந்நிலையில் தற்போது, தருமபுரி மாவட்டத்தில் நல்லாம்பள்ளி,பாலக்கோடு ஆகிய இரு தாலூக்காக்களில், இந்தத் திட்டத்திற்கான நிலங்களை, நடுவண் அரசே கையகப்படுத்தி, பாரத்பெட்ரோலிய நிறுவனத்திற்கு ஒப்படைத்து அரசு இதழில் ஆணை பிறப்பித்து உள்ளது. விவசாயிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி இந்திய அரசு நிலம் கையகப்படுத்தி இருப்பது, கடும் கண்டனத்திற்குரியதாகும். இந்த நடவடிக்கையால் விவசாயிகள்  அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கொங்கு மண்டல விவசாயிகளுக்கு எதிரான, பாஜக மோடி அரசின் நடவடிக்கைக்கு, தமிழகத்தில் ஆளும் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அரசு  முழு ஒத்துழைப்புக் கொடுத்து வருகின்றது.

விளைநிலங்களில் எண்ணெய்க் குழாய் பதிப்பதைக் கைவிட்டு, வீண் பிடிவாதம் செய்யாமல், மாற்று வழிகளில் திட்டத்தைச் செயல்படுத்தலாம் என்ற கருத்தை, இரண்டு அரசுகளும் ஆய்வு செய்ய வேண்டும்; விவசாயிகளின் வாழ்க்கையோடு விளையாடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
05.11.2020

Wednesday, November 4, 2020

வடசென்ன அவைத் தலைவருக்கு வைகோ எம்பி, மல்லை சத்யா ஆகியோர் அஞ்சலி!

மறைந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினரும், வட சென்னை கிழக்கு மாவட்ட கழகத்தின் அவைத் தலைவருமான சு.நவநீதகிருஷ்ணன் அவர்கள் இன்று காலை 7 மணி அளவில் காலமானார்.  அவரது உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார் கழகப் பொதுச் செயலாளர் வைகோ எம்பி அவர்கள்.

உடன் கழக முன்னணி தலைவர்கள் இருந்தனர்.

பின்னர் கழக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா அவர்களும் கழக முன்னணி தலைவர்களுடன் சென்று அஞ்சலி செலுத்தினார்.

வடசென்னை கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் சு.நவநீதகிருஷ்ணன் மறைவு! வைகோ இரங்கல்!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கைக்குழு உறுப்பினரும், வடசென்னை கிழக்கு மாவட்ட அவைத் தலைவருமான சு.நவநீதகிருஷ்ணன் அவர்கள் புற்று நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இன்று 04.11.2020 காலை 7 மணி அளவில் இயற்கை எய்தினார்.

தூத்துக்குடி மாவட்டம், புதூர் ஒன்றியம், செங்கோட்டை கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், சென்னையில் வணிகம் நடத்தி வந்தார். கழகம் தொடங்கிய நாளிலிருந்து கடந்த 27 ஆண்டு காலமாக இயக்கத்திற்குப் பெரும் துணையாகப் பணியாற்றினார். வில்லிவாக்கம் பகுதிச் செயலாளராகப் பணியாற்றினார். வடசென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் சு.ஜீவன் அவர்களுக்கு பெரிதும் பக்கபலமாகச் செயல்பட்டார்.

கழகம் அறிவித்த அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்றார். தலைமைக் கழகம் வெளியிடும் ஆணைகளைச் செயல்படுத்துவதில் உறுதியாக இருந்தார். எந்த நேரத்திலும் மாறாத புன்னகையுடன் தொண்டர்களை அரவணைத்துச் செல்வதில் அவருக்கு நிகர் அவர்தான்.

என்னை உயிரினும் மேலாக நேசித்தார். இப்படி ஒரு துயர முடிவு ஏற்படும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. யாருக்கு யார் ஆறுதல் சொல்ல? அவரது குடும்பத்தின் கண்ணீரைத் துடைக்க யாரால் முடியும்?

அவரது மறைவினால் கண்ணீரில் துடி துடிக்கும் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், கழகக் கண்மணிகளுக்கும் எனது கண்ணீர் அஞ்சலியை வேதனையோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
04.11.2020

Tuesday, November 3, 2020

பொழிலன் உள்ளிட்ட தோழர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும். வைகோ அறிக்கை!

தமிழ்நாட்டின் அடையாளமாக தனிக்கொடி பறக்க விட்டதற்காக,  பொழிலன் உள்ளிட்ட சிலரைக் கைது செய்து, நாட்டுக்கு எதிரி என்ற பிரிவுகளின் கீழ் வழக்குகள் புனைந்து, சிறையில் அடைத்து இருப்பது, இந்திய அரசு அமைப்புச் சட்ட நெறிமுறைகளுக்கு எதிரானது. இதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்தியா என்பது ஒரு நாடு அல்ல; இது பல நாடுகள் சேர்ந்த ஒன்றியம். எனவேதான் அரசு அமைப்புச் சட்டம் யூனியன் ஆப் இந்தியா என்று குறிப்பிடுகின்றது. அதன் பொருள் நாடுகளின் ஒன்றியம் என்பதுதான்.

இந்தக் கருத்தை இந்திய நாடாளுமன்றத்தில் நான் பலமுறை வலியுறுத்திப் பேசி இருக்கின்றேன். புத்தகமாகவும் அச்சிட்டு வெளியிட்டு இருக்கின்றேன்.

அமெரிக்கா என்பது ஒரு நாடு அல்ல. அது 50 மாநிலங்கள் சேர்ந்த ஒரு ஒன்றியம். அங்கே ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனிக்கொடி, தனி அரசு முத்திரை இருக்கின்றது. தனித்தனிச் சட்டங்களும் உள்ளன.

தமிழ்நாட்டில் பாதி அளவு கூட இல்லாத சுவிட்சர்லாந்து நாட்டில், கேண்டன்கள் எனப்படும் 26 தனித்தனி ஒன்றியங்கள் உள்ளன. அந்த நாட்டின் அரசு அமைப்புச் சட்டத்தைத் திருத்துவதாக இருந்தால், அந்த 26 ஒன்றியச் சட்டமன்றங்களும் ஒப்புதல் தர வேண்டும்.

இது போல இன்னும் எண்ணற்ற எத்தனையோ நாடுகள் கூட்டு ஆட்சி அமைப்பைக் கொண்டு இருக்கின்றன. இந்தியாவும் அத்தகைய கூட்டு ஆட்சி அமைப்பு ஒன்றியம்தான்.

இந்திய அரசு அமைப்புச் சட்டம் காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கி இருந்த, தனிக் கொடி ஏற்றும் உரிமையை, பாரதிய ஜனதா கட்சி அரசு பறித்து விட்டது.

ஐரோப்பாவில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனி முத்திரை உள்ளது; ஒவ்வொரு கிராமத்திற்கும் தனிக்கொடி உள்ளது. கல்லறைகளில்கூட தனித் தனி முத்திரைகள் பதிக்கப்படுகின்றன.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக மாநிலம் தனக்கென ஒரு தனிக் கொடியை உருவாக்கியது. அதற்கு சட்டமன்றம் ஒப்புதல் அளித்து இருக்கின்றது.

இன்று கர்நாடக மாநிலத்தில் அரசு நிகழ்ச்சிகள் அனைத்திலும் கன்னடக் கொடி ஏற்றப்படுகின்றது.

அதுபோல, தமிழ்நாட்டிற்கு என தனிக்கொடி அமைப்பதில் எந்தத் தவறும் இல்லை; அதைத் தடுக்கும் அதிகாரம் இந்திய ஒன்றிய அரசுக்கு இல்லை. நாகாலாந்து மாநிலம் தனிக்கொடி கேட்கின்றது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் தனித் தனி முத்திரை இருக்கின்றது. அதுபோல தனிக்கொடியும் வேண்டும்.

கருத்து உரிமையை நசுக்குகின்ற வகையில் அடக்கு முறையைக் கையாள்வதை மத்திய - மாநில அரசுகள் கைவிட வேண்டும். பொழிலன் உள்ளிட்ட தோழர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
03.11.2020

தொண்டனை தேற்றிய வைகோ எம்பி!

Sunday, November 1, 2020

அமைச்சர் துரைக்கண்ணு மறைவுக்கு வைகோ இரங்கல்!

தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு அவர்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிர் நீத்தார் என்ற செய்தி மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் தருகிறது.


பாபநாசம் தொகுதியில் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட துரைக்கண்ணு அவர்கள், தமிழ்நாடு அமைச்சரவையில் வேளாண்மைத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். மிகவும் எளிமையானவர், தன்னடக்கம் மிக்கவர், அனைவரையும் மதிக்கின்ற பண்பாளர். அவரது மறைவினால் துயரத்தில் பரிதவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினருக்கும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.


வைகோ

பொதுச் செயலாளர்,

மறுமலர்ச்சி தி.மு.க.,

‘தாயகம்’

சென்னை - 8

01.11.2020

Saturday, October 31, 2020

தமிழ் இன, மொழி, பண்பாட்டு உரிமை காத்திட உறுதி கொள்வோம். வைகோ அறிக்கை!


நவம்பர் 1 ஆம் நாள் தமிழக மக்கள் கொண்டாடி மகிழ வேண்டிய ‘தமிழ்நாடு நாள்’. 1956 நவம்பர் முதல் நாள் மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, தமிழ் பேசும் மக்களைக் கொண்ட தமிழர் தாயகமாக சென்னை மாகாணம் மறு சீரமைப்புச் செய்யப்பட்டது.


நாடு விடுதலை பெற்றதற்குப் பின்னர் மொழிவாரி மாநில சீரமைப்புப் பற்றி ஆய்வதற்காக 1948 ஜூன் 17 இல் ‘தார்’ ஆணையம், அமைக்கப்பட்டது. மொழிவாரி மாநில சீரமைப்பு தற்போது அவசியமில்லை என அந்த ஆணையம் பரிந்துரை செய்தது.


இந்தப் பரிந்துரை அறிக்கையை காங்கிரஸ் கட்சி சார்பில் வல்லபாய் படேல், பண்டித நேரு, பட்டாபி சீதாராமையா ஆகியோரைக் கொண்ட ‘ஜே.வி.பி’ குழு ஆய்வு செய்து, மொழிவாரி மாநிலங்கள் அமைப்பதைக் கிடப்பில் போட்டுவிட்டது.


ஆந்திர மாநிலம் மொழி அடிப்படையில் பிரிக்கப்படும் வரை உண்ணா நோன்பு மேற்கொள்வேன் என்று பொட்டி ஸ்ரீராமுலு  அறிவித்து, 1952 அக்டோபரில் போராட்டத்தைத் தொடங்கி, 58 நாட்கள் உண்ணா நோன்பு இருந்து, 1952 டிசம்பர் 16 இல் உயிர் துறந்தார். இதனால் பற்றி எரிந்த மொழிக் கனல் பிரதமர் பண்டித நேரு அவர்களை உலுக்கியதால், ஆந்திரா எனும் தெலுங்கு மாநிலம் 1.10.1953 இல் மலர்ந்தது.


ஆந்திராவைப் போலவே பிற தேசிய இனங்களும் மொழிவாரி மாநிலங்களாக உருவாகக் குரல் எழுப்பியவுடன், பசல் அலி தலைமையில் மாநில சீரமைப்புக் குழுவை இந்திய அரசு அமைத்தது. இக்குழு 1955, செப்டம்பரில் தனது பரிந்துரையை வழங்கியது. அதன் அடிப்படையில்தான் 1956 நவம்பர் 1ஆம் நாள் முதன் முதலில் 14 மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன.


சென்னை மாகாணத்தில் இடம் பெற்றிருந்த தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அந்தந்த மொழி மாநிலங்களுடன்  இணைக்கப்பட்டன. சென்னை மாகாணம் தமிழ்மொழி பேசும் மக்கள் கொண்டதாக சீரமைக்கப்பட்டது.


மொழிவாரி மாநிலப் பிரிவினையின் போதே தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டது. தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளான சித்தூர், திருப்பதி ஆந்திராவுடன் இணைக்கப்பட்டது.


கேரளாவிடம் தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றங்கரை, நெடுமங்காடு மற்றும் பாலக்காடு போன்ற பகுதிகளையும், கர்நாடகாவிடம் ‘வெங்காலூர்’ என்னும் பெங்களூரு, கோலார் தங்கவயல் போன்றவற்றையும் இழந்தோம்.


தமிழர்களின் பகுதிகளை அண்டை மாநிலங்களோடு மத்திய அரசு இணைத்துவிட்டதால், நதிநீர் சிக்கல்கள் அரைநூற்றாண்டு காலத்திற்கும் மேலாகத் தொடருகின்றன.


தென்மாநிலங்களை இணைத்து தட்சிணப் பிரதேசம் அமைப்பதை எதிர்த்துக் குரல் எழுப்பியவர் தந்தை பெரியார். பெருந்தலைவர் காமராஜர் அவர்களும் பெரியாரின் கோரிக்கையை ஆதரித்தார்.


மொழிவாரி மாநிலப் பிரிவினையின்போது தெற்கு எல்லையில் குமரியும், வடக்கு எல்லையில் திருத்தணியும் தமிழகத்தோடு இணைப்பதற்குப் போராடிய தலைவர்கள் முறையே மார்ஷல் நேசமணி, சிலம்புச் செல்வர் ம.பொ.சி., சென்னை மாகாண பெயரை மாற்றி, ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டிய பேரறிஞர் அண்ணா உள்ளிட்ட தலைவர்களை தமிழ்நாடு நாளில் நன்றியுடன் நினைவுகூர்வோம்.


1956 இல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோதே ஆர்.எஸ்.எஸ். தலைவர் குருஜி கோல்வால்கர் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தார். இந்து ராஷ்டிரா எனும் ஒற்றை தேசமாக இந்த நாடு உருவாக வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். சங் பரிவாரங்கள் தொடக்கம் முதலே கூப்பாடு போட்டு வந்தன.


மத்தியில் பா.ஜ.க. அரசு பெரும்பான்மை பலத்துடன் அமைந்தவுடன் இந்தியாவை ஒரே நாடு; ஒரே மொழி; ஒரே மதம்; ஒரே பண்பாடு என்று ஒரே குடையின் கீழ் கொண்டுவருவதற்கு முனைந்துள்ளது.


பல்வேறு மொழி, பண்பாடு கொண்ட தேசிய இனங்களின் தனித்துவ அடையாளத்தைச் சிதைத்து, வடமொழி, இந்தி ஆதிக்கத்தைத் திணித்து, மாநில அதிகாரங்களைப் பறித்து, இந்து ராஷ்டிரம் எனும் கனவை நனவாக்கத் துடிக்கும் இந்துத்துவ சனாதன சக்திகளை வீழ்த்துவோம்.


நாட்டின் பன்முகத்தன்மையை அழிக்கும் முயற்சியில் இறங்கி உள்ள பா.ஜ.க. அரசின் சதித் திட்டங்களை வேரோடு சாய்ப்பதற்கு தமிழ்நாடு நாளில் உறுதி ஏற்போம்.


தமிழ்நாட்டின் மரபு உரிமையையும், மொழி, இன உரிமை மற்றும் மாநில உரிமைகளையும் நிலைநாட்டுவோம்.


வைகோ

பொதுச் செயலாளர்,

மறுமலர்ச்சி தி.மு.க.,

‘தாயகம்’

சென்னை - 8

31.10.2020

Friday, October 30, 2020

ஒப்பந்தத் துப்புரவுத் தொழிலாளர்களை ரயில்வே ஊழியர்களாக அறிவித்திடுக! ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயலுக்கு வைகோ கடிதம்!

மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் வைகோ அவர்கள், தொடரித்துறை அமைச்சர் பியுஷ் கோயலுக்கு எழுதி இருக்கின்ற கடிதம்:


ரயில்வே வேலை வாய்ப்பு வாரியம் (சுயடைறயல சுநஉசரவைஅநவே க்ஷடியசன) 2018 ஆம் ஆண்டு, இணையவழியில் தேர்வு நடத்தி, துப்புரவுத் தொழிலாளர்களைத் தேர்வு செய்து, ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தியது. குறிப்பிட்ட கால இடைவெளி விட்டு, தொடர்ந்து அவர்கள் வேலை செய்து வருகின்றார்கள். 


கொரோனா தொற்றுக் காலத்தில், அவர்கள் பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில், முழுநேரம் பணி ஆற்றி இருக்கின்றார்கள். மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் உதவியாக இயங்கினார்கள். கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு உடை மாற்றுவது, கழிப்பு அறைகளுக்கு அழைத்துச் செல்வது, இறந்தவர்களின் உடல்களை வீடு கொண்டு சேர்ப்பது என அனைத்து வேலைகளையும் செய்தார்கள். ரயில்வே ஊழியர்கள் குடியிருப்புகள், அலுவலகங்களிலும் துப்புரவுப் பணி செய்து இருக்கின்றார்கள். மனைவி, பிள்ளைகளுக்குத் தொற்று பரவக்கூடும் என்ற அச்சம் நிலவிய சூழலில், தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது பணி ஆற்றி இருக்கின்றார்கள். அவர்களுடைய குடும்பங்கள், தொடரித்துறையை நம்பித்தான் இருக்கின்றனர். அவர்களுடைய பணி, தொடரித்துறைக்கு முழுநேரமும் தேவைப்படுகின்றது.


எனவே, அவர்களை தொடரித்துறையின் முழுநேரப் பணியாளர்களாக அறிவித்திடுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.


தலைமை நிலையம்

மறுமலர்ச்சி தி.மு.க.,

‘தாயகம்’

சென்னை - 8

30.10.2020

Thursday, October 29, 2020

மீலாது விழா - வைகோ வாழ்த்து!

மனித குல வாழ்க்கை சீர்படுவதற்காகவும், சகோதரத்துவத்தை நிலைநாட்டிடவும் எண்ணில் அடங்காத துன்பங்களைத் தாங்கி, யுத்தகளத்திலும் வாள் ஏந்தி,  போற்றுதலுக்குரிய இஸ்லாமிய மார்க்கத்தை உலகத்தில் நிலைநாட்டிய, நானிலம் போற்றும் அண்ணலார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த தின விழாவை, உலகெங்கும் வாழும் முஸ்லிம்கள் உவகையுடன் கொண்டாடும் திருநாள்தான் மீலாது நாள் ஆகும். 


அண்ணலார் அவர்கள் ஏற்றுக்கொண்ட ஏக இறைக் கொள்கையைக் கைவிடக் கூறிய குறைஷிகள், நபிகளாரிடம் எது வேண்டுமானாலும் தருகிறோம்; அள்ளக் குறையாத செல்வங்கள், திராட்சைத் தோட்டங்கள், ஓங்கிய மலைகள், எண்ணற்ற ஒட்டகங்கள் அத்தனையும் தருகிறோம் என்றார்கள். 


எனது வலது கரத்தில் சூரியனையும், இடது கரத்தில் சந்திரனையும் தந்தாலும் என் கொள்கையில் இருந்து துளி அளவும் மாற மாட்டேன்  என்ற இலட்சிய உறுதியுடன் போராடி, அறியாமை இருளில் மூழ்கிக் கிடந்த அரபிகளின் வாழ்வில் மகத்தான மறுமலர்ச்சி கண்ட மாமனிதர் நபிகள் நாயகம், மண்ணின் வரமாய், பொன்னின் மணியாய் உலகோருக்கு உன்னத மார்க்கத்தைப் போதித்தார். 


நாம் அனைவருமே சகோதரர்கள், ஏற்றத்தாழ்வு அற்றவர்கள் என்று அரபாத் பெருவெளியில் முழங்கி, அழகிய முன்மாதிரி என அவனியோர் போற்றும் அண்ணலார் நபிகள் நாயகம் அவர்களின் பிறந்த நாளாம் இப்பொன்னாளில், தமிழகத்தில் சமய நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் பாதுகாக்க உறுதி கொள்வதோடு, இஸ்லாமியப் பெருமக்களுக்கு மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் நெஞ்சினிக்கும் வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.


வைகோ

பொதுச் செயலாளர்,

மறுமலர்ச்சி தி.மு.க.,

‘தாயகம்’

சென்னை – 8

29.10.2020

Wednesday, October 28, 2020

எய்ம்ஸ் இயக்குநர் குழுவில் இருந்து சுப்பையா சண்முகத்தை நீக்குக. வைகோ வேண்டுகோள்!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் குழுவில், சுப்பையா சண்முகம் என்பவரை உறுப்பினராக, நடுவண் அரசு அறிவித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கின்றது. 


இவர், கார் நிறுத்த இடப் பிரச்சினைக்காக, அண்டை வீட்டுச் சுவரில் மூத்திரம் பெய்து அடாவடி செய்ததாக, சமூக வலைதளங்களில் காணொளிகள் வெளியாகின; 62 வயதுப் பெண்ணுக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்ததாக, இவர் மீது, காவல்துறையில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.


இவ்வாறு பண்பாடு அற்ற முறையில் நடந்துகொண்ட இவரை, இயக்குநர் குழுவில் இடம் பெறச் செய்து இருப்பது, எய்ம்ஸ் என்ற உயர்ந்த மருத்துவ நிறுவனத்தின் மதிப்பைக் குறைக்கின்ற செயல் ஆகும்.


இவர், ஆர்எஸ்எஸ் பயிற்சி பெற்றவர்; பாரதிய ஜனதா கட்சியின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பில் பொறுப்பு வகித்தவர். பாரதிய ஜனதா கட்சி ஆட்சிப் பொறுப்பு ஏற்ற நாள் முதல், நடுநிலையாக இயங்க வேண்டிய அனைத்து நிறுவனங்களிலும், சங் பரிவார் அமைப்புகளைச் சார்ந்தவர்களைக் கொண்டு வந்து திணித்து வருகின்றது. அவர்களும், முடிந்த அளவுக்கு அந்த அமைப்புகளைச் சீர்குலைத்து வருகின்றார்கள்.


மதுரை எய்ம்ஸ் இயக்குநர்கள் குழுவில் இருந்து சுப்பையா சண்முகத்தை நீக்க வேண்டும் என நடுவண் அரசை வலியுறுத்துகின்றேன்.


வைகோ

பொதுச் செயலாளர்,

மறுமலர்ச்சி தி.மு.க.,

‘தாயகம்’

சென்னை - 8

28.10.2020

Tuesday, October 27, 2020

இலங்கைக் கடற்படைத் தாக்குதல் வைகோ கண்டனம்!

மன்னார் வளைகுடாவில் மீன்பிடிக்கச் சென்ற இராமேÞவரம் மீனவர்கள் மீது, இலங்கைக் கடற்படைப் படகுகளில் இருந்து கற்களை வீசித் தாக்கி இருக்கின்றனர். ஒரு மீனவர் மண்டை உடைந்தது; பலர் இரத்தக் காயம் அடைந்துள்ளனர். மீன்பிடிப்பதற்காகத் தமிழக மீனவர்கள் விரித்து இருந்த நூற்றுக்கணக்கான மீன் வலைகளையும், இலங்கைக் கடற்படையினர் அறுத்து எறிந்து உள்ளனர்.


இன்று நேற்று அல்ல; கடந்த 40 ஆண்டுகளாகவே, தமிழக மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுகின்றார்கள். கிட்டத்தட்ட 600 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை, இலங்கைக் கடற்படை சுட்டுக் கொன்று இருக்கின்றது. ஆயிரக்கணக்கான மீனவர்களைப் பிடித்துக்கொண்டு போய், பல மாதங்கள் சிறையில் அடைத்துத் துன்புறுத்தினர்; படகுகளைப் பறிமுதல் செய்தனர்;  பெருந்தொகையை தண்டமாக வாங்கிக்கொண்டு விடுவித்தனர்.


அமெரிக்கக் குடிமகன் ஒருவரைத் தாக்கினால்கூட, உடனே அந்த நாட்டின் மீது அமெரிக்கா எதிர்த்தாக்குதல் தொடுத்து விடும். ஆனால், தமிழக மீனவர்கள் ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட பிறகும்கூட, இலங்கைத் தூதரை அழைத்து இந்தியா எச்சரிக்கை கூடச் செய்தது இல்லை என்பது வேதனைக்கு உரியது. இழப்பு ஈடு எதுவும் பெற்றுத் தந்ததும் இல்லை.


இந்தப் பிரச்சினைக்கு அடிப்படைக் காரணம், கச்சத்தீவை இலங்கையிடம் ஒப்படைத்ததுதான். அதை மீட்கக் கோரி, தமிழக மக்கள் எழுப்புகின்ற குரலை, இந்திய அரசு கண்டு கொள்வது இல்லை.  தமிழக மீனவர்களைப் பாதுகாப்பதற்கு, கச்சத்தீவை மீட்பதற்கு உரிய நடவடிக்கைகளை, நடுவண் அரசு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.


 வைகோ

 பொதுச் செயலாளர்,

 மறுமலர்ச்சி தி.மு.க.,

‘தாயகம்’

சென்னை - 8

27.10.2020

Monday, October 26, 2020

இடஒதுக்கீடு பறிப்புக்கு வைகோ கண்டனம்!

மருத்துவக் கல்வியில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு தருமாறு உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் வழங்கி இருக்கின்ற தீர்ப்பு, சமூக நீதிக்கும் இட ஒதுக்கீட்டுக்கும் எதிரான, பெரும் அதிர்ச்சி அளிக்கின்ற தீர்ப்பு ஆகும். 


இந்தப் பிரச்சினையில். மத்திய அரசு தொடக்கத்தில் இருந்தே இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிரான வஞ்சகப் போக்கை மேற்கொண்டு வந்ததற்கு, மறுமலர்ச்சி திராவிடமுன்னேற்றக் கழகத்தின் சார்பில் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.


வைகோ

பொதுச் செயலாளர்,

மறுமலர்ச்சி தி.மு.க.,

‘தாயகம்’

சென்னை - 8

26.10.2020

Saturday, October 24, 2020

மருது சகோதரர்கள் 219 நினைவுநாள் - வைகோ வீரவணக்கம்!

24.10.2020 மருது சகோதரர்களின் 219 ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு, தலைமைக் கழகம் தாயகத்தில், கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மருது சகோதரர்களின் திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினார்.


துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, செய்தித் தொடர்பாளர் கோ.நன்மாறன், மாவட்டச் செயலாளர்கள் சு.ஜீவன், கே.கழககுமார், சைதை ப.சுப்பிரமணி, டி.சி.இராசேந்திரன், மா.வை.மகேந்திரன், சிறுபான்மைப் பிரிவுச் செயலாளர் முராத் புகாரி, தீர்மானக்குழுச் செயலாளர் கவிஞர் மா.மணிவேந்தன், இலக்கிய அணி மாநிலப் பொருளாளர் கண்ணன், பகுதிச் செயலாளர்கள் தென்றல் நிசார், சு.செல்வபாண்டியன், ஜி.ஆர்.பி. ஞானம், வேலு, அழகேசன், ஜெகன், கிரி, சின்னவன், அ.சுரேஷ், இளவழகன், பீடா ரவி, காட்வின் அஜூ, முகவை இரா.சங்கர், ஜானகிராமன், வேதநாயகம் உள்ளிட்ட ஏராளமான கழகத்தினர் புகழ் வணக்கம் செலுத்தினர்.

திருமா வளவன் மீது வழக்கு; திரும்பப் பெறுங்கள்! வைகோ வலியுறுத்தல்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் அருமைச் சகோதரர் திருமா வளவன் அவர்கள், பெண்கள் மீது மிகுந்த மரியாதை கொண்டவர். அவர் யாரையும் புண்படுத்தும் நோக்கில் ஒருபோதும் பேசியது இல்லை. மனுநீதி நூல்களில் உள்ள, தவறான கருத்துகளைத்தான் அவர் சுட்டிக்காட்டி இருக்கின்றார் அதை வேறுவிதமாகத் திரித்து, அவர் மீது, சங் பரிவார் அமைப்புகளின் ஆதரவாளர்கள், குற்றச்சாட்டு கொடுத்து உள்ளனர். 

உண்மையில், புகார் கொடுத்தவர்கள்தான் குற்றவாளிகள். ஆனால், தமிழ்நாட்டில் நடைபெறுகின்ற எடப்பாடி ஆட்சி, இந்துத்துவ சக்திகளைத் திருப்தி செய்யவும், அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றவுமே தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது. 


அதன்படி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் மீது, ஆறு பிரிவுகளில் தமிழ்நாடு காவல்துறை வழக்குப் பதிவு செய்து இருப்பதற்குக் கண்டனம் தெரிவித்துக் கொள்கின்றேன். 


திருமா வளவன் மீது பதிவு செய்த வழக்குகளை, காவல்துறை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.


வைகோ

பொதுச் செயலாளர்,

மறுமலர்ச்சி தி.மு.க.,

‘தாயகம்’

சென்னை - 8

24.10.2020

இந்தி தெரியாவிட்டால் வேலை இல்லை பாஜக அரசு திட்டவட்ட அறிவிப்பு - வைகோ கடும் கண்டனம்!

நடுவண் அரசின் நல்வாழ்வுத்துறையின் கீழ் ஸ்வஸ்த ஏவம் ஜன் கல்யாண் சன்ஸ்தான் (SAJKS) என்ற கிளை அமைப்பு  (Undertaking Institute) இயங்கி வருகின்றது. இந்த அமைப்பு, இந்தியா முழுதும் கிராமப்புறங்களில் நல்வாழ்வுப் பணிகளை மேற்கொள்கின்றது; அடிப்படை வசதிகளைச் செய்கின்றது.


இதில், கணக்கர்கள், எழுத்தர்கள், கணிணிப் பதிவர்கள், ஆய்வக உதவியாளர்கள், ஓட்டுநர்கள், செவிலியர்கள் 13000 பணியாளர்களைத் தேர்வு செய்வதற்கான அறிவிக்கையை, கடந்த அக்டோபர் 7 ஆம் நாள் அறிவிப்பு வெளியிட்டு இருக்கின்றது.


விண்ணப்பம் தருவதற்கான கடைசி நாள் அக்டோபர் 8 முதல் அக்டோபர் 24 வரை என்று குறிப்பிட்டு இருக்கின்றார்கள். ஒரு தேதியைக் குறிப்பிட்டு வரையறுக்காத இந்த நடவடிக்கை, அப்பட்டமான முறைகேடு ஆகும்.


இந்தப் பணி இடங்களுக்குத் தேர்வு செய்யப்படுகின்றவர்கள், இந்தியாவின் எந்தப் பகுதியிலும் வேலை செய்தாக வேண்டும் எனக் குறிப்பிட்டு இருக்கின்றார்கள். வழக்கமாக நடுவண் அரசுத் துறைகள் நடத்துகின்ற தேர்வுகளில், கேள்வித்தாள்கள் அனைத்தும், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் இருக்கும். ஆனால், இந்த அறிவிப்பில், முதன்முறையாக, 25 மதிப்பெண்களுக்கான கேள்விகள் இந்தியில் மட்டுமே இருக்கும். அதற்கு இந்தியில்தான் விடைகள் எழுத வேண்டும் என வெளிப்படையாகவே அறிவித்து இருக்கின்றார்கள்.


இந்தித் தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என, வெளிப்படையாகவே அறிவித்து இருக்கின்றார்கள்.


இந்த அறிவிப்பின் பத்தாம் பக்கத்தில், பாரா 18 இல் குறிப்பிட்டுள்ளதாவது.


கணக்காளர், எழுத்தர்கள், கணினிப் பதிவர்கள், ஆய்வகப் பணியாளர்கள் 40 மதிப்பு பெண்கள் இந்தித் தேர்வு எழுத வேண்டும். பன்னோக்குப் பணியாளர்கள், ஆம்புலன்ஸ் மற்றும் கார் ஓட்டுநர்கள் இந்தித் தேர்வில் 25 மதிப்பு எண்கள் பெற வேண்டும். செவிலியர்கள் 10 மதிப்பு எண் பெற்றாக வேண்டும்.


அதாவது, எனவே, இந்தி தெரியாத மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு, விண்ணப்பிக்கும் தகுதியும் இல்லை; வேலைவாய்ப்பும் கிடையாது. இந்தி பேசாத மாநிலங்களில் பணிபுரியவும், இந்திக்காரர்கள் மட்டுமே தேர்ந்து எடுக்கப்படுவார்கள் என்ற நிலையை உருவாக்கி இருக்கின்றார்கள். இது இந்தியக் கூட்டு ஆட்சித் தத்துவத்தின் மீது வெடிகுண்டு வீசும் தேர்வு.


இத்தகைய கேடுகெட்ட அறிவிப்பை, நடுவண் அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். இந்தி பேசாத மக்களை, இரண்டாந்தரக் குடிமக்களாக ஆக்கும் முயற்சிகளை, பாரதிய ஜனதா அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்.


வைகோ

பொதுச் செயலாளர்,

மறுமலர்ச்சி தி.மு.க.,

‘தாயகம்’

சென்னை - 8

24.10.2020

Thursday, October 22, 2020

தலைமைக் கழகச் செய்திக் குறிப்பு!

தென்காசி மாவட்டம், மலையடிக்குறிச்சி மற்றும் களப்பாகுளம் கிராமங்களைச் சேர்ந்த கே.வீரபாண்டியன், பி.கருத்தப்பாண்டி, வி.முருகன் மற்றொரு கருத்தப்பாண்டி ஆகிய நான்கு பேரும் குடும்ப வறுமை காரணமாக பொருள் ஈட்டுவதற்காக கடந்த பிப்ரவரி 2020 இல் சௌதி அரேபியா நாட்டிற்குச் சென்றனர். 


தங்களைப் பணி அமர்த்திய நிறுவனம் முதல் இரண்டு மாதங்கள் மட்டுமே ஊதியம் கொடுத்தது; அடுத்த ஐந்தாறு மாதங்களாக ஊதியம் தரவில்லை; கொரோனா தொற்று காரணமாக ஊதியமோ, வேலைவாய்ப்போ, உணவு மற்றும் தங்கும் இட வசதியோ ஏற்படுத்தித் தர இயலாது என கைவிரித்து விட்டது; எனவே, தாங்கள் நாடு திரும்ப உதவுமாறு, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., அவர்களுக்கு, கோரிக்கை மனு அனுப்பி இருந்தனர்.


வைகோ எம்.பி., அவர்கள், வளைகுடா கழகப் பொறுப்பாளர் ஸ்டாலின் பீட்டர் பாபுவைத் தொடர்புகொண்டு, நால்வரையும் பத்திரமாகப் பாதுகாத்து, அவர்கள் தாயகம் திரும்ப தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்கள். 


வைகோ அவர்களின் வேண்டுகோளை ஏற்று, சௌதியில் இயங்கும் ஜெத்தா தமிழ்ச் சங்கத் தலைவர் ஆர்.எஸ். ஜாகீர் உசேன், சௌதி அல்-கோ பார் ஜெத்தா முத்தமிழ்ச் சங்கத்தின் பொறுப்பாளர் ரஹமத்துல்லா ஆகியோர் விரைந்து செயல்பட்டு, அவர்கள் வேலை செய்த நிறுவனத்திற்கு இடைவிடாது கொடுத்த அழுத்தம் காரணமாக, வெளியேற்ற அனுமதி ஆணையை (நுஒவை ஏளைய) பெற்றுத் தந்தனர்.


அதைத் தொடர்ந்து, நான்கு பேரும் 19.10.2020 அன்று, திருவனந்தபுரம் வழியாக தங்கள் ஊருக்குப் பாதுகாப்பாக வந்து சேர்ந்தனர். தங்களை மீட்க உதவிய ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கும், தென்காசி மாவட்ட ம.தி.மு.க. பொறுப்பாளர் தி.மு.இராசேந்திரன் மற்றும் உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.


தலைமை நிலையம்

மறுமலர்ச்சி தி.மு.க.,

‘தாயகம்’

சென்னை - 8

22.10.2020

Wednesday, October 21, 2020

திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி பாலம் இடிந்து விழுந்த வழக்கு; மதிமுக வெற்றி! தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வைகோ அறிக்கை!

திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி பேரூராட்சி ஆவரந்தலை செல்லும் சாலையில் நம்பி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் 01.12.2017 நள்ளிரவு இடிந்து விழுந்தது.

இப்பாலம் முறையாகக் கட்டப்படவில்லை என்றும், நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்கு முன்பாகவே கட்டி முடிக்கப்பட்டுவிட்டது என்றும் எழுந்த புகாரின் பேரில் அன்றைய திருநெல்வேலி புறநகர் மாவட்ட மறுமலர்ச்சி தி.மு.க. பொறுப்பாளர் தி.மு.இராசேந்திரன் 02.12.2017 காலை பாலத்தைப் பார்வையிட்டார்.

ஏராளமான பொதுமக்கள் முறையிட்டதன் பேரில் அன்று மாலையே திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து, இப்பாலம் இடிந்து விழுந்ததற்குக் காரணமான அனைவர் மீதும் நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தினார்.

*05.12.2017* அன்று சென்னையில் உள்ள தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறை மன்ற நடுவத்தில் வழக்கு தாக்கல் செய்து, நடுவத்தின் ஆணைக்கு இணங்க 26.03.2018 அன்று நேரில் ஆஜராகி, பாலம் இடிந்ததற்கான காரணங்களை விளக்கி வாக்குமூலம் அளித்தார். பேரூராட்சி நிர்வாகத்தின் பல அலுவலர்கள் ஆணையத்தில் ஆஜராகி, அப்போது குமரி மாவட்டத்தை தாக்கிய ஒக்கி புயலால், நம்பி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதன் காரணமாகத்தான் பாலம் இடிந்து விழுந்தது என்று பதிலுரை தந்தனர்.

குமரி மாவட்டத்தைத் தாக்கிய புயல், நெல்லை மாவட்டத்தின் எந்தப் பகுதியையும் தாக்கவில்லை என்றும், நம்பி ஆற்றில் பெருவெள்ளம் ஏற்படவில்லை என்றும், தரம் குறைவாகக் கட்டப்பட்டதன் விளைவாகவே இந்தப் பாலம் உடைந்து விழுந்தது என்றும், உண்மை நிலையை அறிய நேர்மையான உயர் தொழில்நுட்ப அலுவலர்கள் கொண்ட குழுவை அமைக்குமாறும் மனுதாரர் (தி.மு.இராசேந்திரன்) வலியுறுத்தினார். அதை ஏற்றுக் கொண்ட நடுவம், இது போன்ற நிகழ்வில் முதல் முறையாக கிண்டி அண்ணா பல்கலைக் கழகத்தின் கட்டிடவியல் மற்றும் வடிவமைப்பு துறைத் தலைவர் டாக்டர் ஆர்.செந்தில், அதே துறையின் மண் வளம் மற்றும் அடித்தளம் கட்டுமானம் குறித்த பிரிவின் பேராசிரியர் டாக்டர் வி.கே.ஸ்டாலின் ஆகியோர் கொண்ட குழுவை நியமித்தது.

இக்குழுவினர் 21.09.2019 அன்று பாலம் இடிந்த பகுதியை நேரடியாகப் பார்வையிட்டு, ஆய்வு செய்து, 30.09.2019 அன்று தங்கள் ஆய்வு அறிக்கையை நடுவத்திற்கு வழங்கினார்கள்.

அந்த ஆய்வறிக்கையில், பாலத்தின் அடித்தள விபரமே தங்களிடம் இல்லை என்று பேரூராட்சி நிர்வாகம் மறைத்துவிட்டதாகவும், பாலத்தின் கட்டமைப்பு, வடிவமைப்பு விபரங்களை பேரூராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது தரவில்லை என்றும், கிடைக்கப்பெற்ற தொழில்நுட்ப ஆவணங்களின்படி பாலக் கண் அளவுகள் (Span) மாற்றி அமைக்கப்பட்டு உள்ளதும், பாலத்தைக் கட்டும்போது பக்கவாட்டில் ஏற்படும் உதைப்பு (Lateral thrust) கணக்கிடப்பட்டதாகத் தெரியவில்லை என்றும், பாலம் கட்டப்பட்ட இடமே சரியில்லை  என்றும், குறுகிய காலத்தில் சரியான முறையில் நனைப்பு (curing) செய்யப்படவில்லை என்றும், அதன் காரணமாக கான்கிரீட் சரியான உறுதித் தன்மையைப் பெற வாய்ப்பு இல்லை எனவும், இதுவே பாலம் இடிந்து விழுந்ததற்குக் காரணம் எனவும் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டது.

அந்த ஆய்வு அறிக்கையின் மீது, மனுதாரர் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தின் கருத்துகளை ஆணையம் மீண்டும் கோரியது. வல்லுனர் குழு ஆய்வு அறிக்கையின்படி நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று 22.11.2019 அன்று தமது வாக்குமூலத்தில் மனுதாரர் கேட்டுக்கொண்டார். பேரூராட்சி நிர்வாகம், சொன்னதையே திரும்பச் சொன்னதே தவிர,  பாலம் இடிந்து விழுந்ததற்கு வல்லுனர் குழு சுட்டிக்காட்டிய குறைபாடுகளுக்கு தொழில்நுட்ப ரீதியாக ஏற்கத்தக்க பதிலைத் தெரிவிக்கத் தவறிவிட்டதாக முறைமன்ற நடுவம் முடிவு செய்து, அண்ணா பல்கலைக் கழக தொழில்நுட்பக் குழு தந்த அறிக்கையில் தெரிவித்துள்ள குறைபாடுகளே பாலம் இடிந்ததற்கான காரணமாகும் என்பதை உறுதி செய்ததோடு, இந்தக் குறைபாடுகளுக்குக் காரணமான அலுவலர்கள் மீது தக்க ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பேரூராட்சிகளின் இயக்குநருக்கு உத்தரவிட்டுள்ளது.

இடிந்து விழுந்த பாலத்திற்குப் பதிலாக மாற்றுப் பாலம் கட்டுவதாக அரசுத் தரப்புச் சொன்னதே தவிர, 55 இலட்ச ரூபாய் செலவில் மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட பாலம் 10 மாத காலத்தில் எப்படி இடிந்து விழுந்தது என்பதற்கு பதில் ஏதும் இல்லை. இது பாலம் முறையாகக் கட்டப்படவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.

அரசு கட்டுமானத் துறைகளில் பணியாற்றுவோர் விழிப்பாக இருந்து, கவனமாகக் கடமையாற்றிடவில்லை எனில் பாதிக்கப்பட நேரிடும் என்கிற எச்சரிக்கையையும் இத்தீர்ப்பு உணர்த்துகிறது.

பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் நடைபெறும் முறைகேடுகளை விசாரிதது தீர்ப்பு அளிக்க அரசியல் அமைப்புச் சட்டப்படி உருவாக்கப்பட்ட மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு இணையான அதிகாரம் கொண்ட தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளின் முறைமன்ற நடுவம், நடுநிலை தவறாமல் நியாயத்தின் பக்கம் நின்று வழங்கிய தீர்ப்பை வரவேற்கிறேன்.

55 இலட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்து, பொதுச் சொத்துக்கு நாசம் விளைவித்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்திட மறுமலர்ச்சி திமுக சார்பில் வலியுறுத்துகின்றேன்.

எவ்வித அழுத்தங்களுக்கும் அடிபணியாமல், பொதுநல நோக்கோடு வழக்குத் தொடுத்து வெற்றி பெற்ற இன்றைய தென்காசி மாவட்டக் கழகப் பொறுப்பாளர் தி.மு.இராசேந்திரன் மற்றும் அவருடன் அறவழிப் போராட்டங்களில் ஈடுபட்ட கழகக் கண்மணிகள் உள்ளிட்ட அனைவருக்கும் மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
21.10.2020

தலைமைக் கழக செய்திக் குறிப்பு!

கோவில்பட்டி சிந்தலக்கரையைச் சேர்ந்த சுரேஷ் (த/பெ வேலப்பன்) சிங்கப்பூரில் இயற்கை எய்தினார். அவரது உடலை விரைவில் இந்தியா கொண்டு வந்து சேர்க்கக் கோரி, மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், இந்திய அயல்உறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு மின் அஞ்சல் எழுதியதுடன், அமைச்சரின் செயலகத்தைத் தொடர்பு கொண்டு பேசினார்.

இன்று அமைச்சம் அனுப்பி உள்ள விளக்க மின் அஞ்சலில், சுரேஷ் உடல் தற்போது சிங்கப்பூர் மருத்துவமனையில் இருக்கின்றது; சிங்கப்பூரில் உள்ள அவரது உறவினர்களுடன் தொடர்புகொண்டு பேசினோம்; சுரேஷ் வேலை பார்த்து வந்த நிறுவனத்திடம் அவரது உடல் நாளை (21.10.2020) அளிக்கப்படும்; அதன்பிறகு, இந்தியா கொண்டு வருவதற்கான தடை இல்லாச் சான்றிதழ் வழங்கப்படும் எனத் தெரிவித்து உள்ளனர்.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
20.10.2020

தமிழக ஆளுநருக்கு வைகோ கடிதம்!

மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கும் சட்ட முன்வடிவுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி, தமிழக ஆளுநருக்கு மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் எழுதிய கடிதம் வருமாறு:-

மேதகு ஆளுநர் திரு பன்வாரிலால் புரோகித் அவர்களுக்கு,

வணக்கம்.

தமிழக அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவர்கள் சமூகப் பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கியவர்கள் என்பதால், அவர்களை பிற மாணவர்களுடன் ஒரே நிலையில் ஒப்பிட்டு தேர்வில் வகைப்படுத்துவது என்பது சமநீதிக்கு முரணானது என்பதால் மருத்துவப் படிப்புகளில் உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் பி.கலையரசன் அவர்கள் தலைமையில் 21.03.2020 அன்று ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது.

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நீட் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றிருந்தாலும் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காமல் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். மருத்துவப் படிப்பில் சேரும் அரசு பள்ளி மாணவர்கள் வெறும் 0.15 விழுக்காடு என்பது வேதனை அளிக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு நீதியரசர் கலையரசன் ஆணையம் கடந்த 08.06.2020 அன்று தனது பரிந்துரையை தமிழ்நாடு அரசுக்கு அளித்தது. இதனையடுத்து தமிழக அரசு அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதித்து, நடப்பு ஆண்டு முதல் மருத்துவப் படிப்பில் உள் ஒதுக்கீடாக 7.5 விழுக்காடு அரசு பள்ளி மாணவர்களுக்கு அளித்திட முடிவு எடுத்தது. அதனைச் செயல்படுத்தும் வகையில் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி ஒரு சட்ட முன்வடிவு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, தங்கள் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாடு அரசு பள்ளி மாணாக்கர்கள், அதாவது ஊராட்சி ஒன்றிய ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உட்பட நகராட்சி, மாநகராட்சி, ஆதி திராவிடர் நலன், பழங்குடியினர் நலன், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட, கள்ளர் சீர்மரபினர், மாற்றுத் திறனாளிகள் நலன், வனம், சமூகப் பாதுகாப்பு (சிறார் சீர்திருத்தப் பள்ளிகள்) ஆகிய துறைகளின் கீழ் செயல்படும் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் மற்றும் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் -2009 இன் கீழ் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயின்று, பின்னர் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் இந்திய மருத்துவப் பட்டப் படிப்பு சேர்க்கையின்போது மாநில ஒதுக்கீட்டில் 7.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கவும்,

மேற்படி இடஒதுக்கீட்டு முறையினை நீட் தகுதியின் அடிப்படையில் உள்ள அனைத்துப் பிரிவுகளுக்கும் விரிவாக்கம் செய்யவும்,

மேலும் மேற்படி இடஒதுக்கீட்டு முறையினை அனைத்து மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி உள்ளடக்கிய அனைத்து அரசு கல்லூரிகளுக்கும், சுயநிதிக் கல்லூரிகளுக்கும் அரசால் ஒதுக்கப்பட்ட அனைத்துப் பிரிவு இடங்களுக்கும் இச்சட்ட முன்வடிவில் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் பனிரெண்டாம் வகுப்பு பயிலும் 8,41,251 மாணவர்களில் சுமார் 41 விழுக்காடு மாணவர்கள் அரசு பள்ளிகளில்தான் பயில்கின்றனர். தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் 5,550 மொத்த மருத்துவ இடங்களில், மாநில அரசின் ஒதுக்கீடாக 4,043 இடங்கள் உள்ளன. இவற்றில் தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவர்களில் 0.15 விழுக்காடு மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவப் பட்டப் படிப்பில் சேர இடம் கிடைக்கிறது. இது சமூக சமநீதி கோட்பாட்டிற்கு எதிரானதாகும்.

தமிழக அரசு நிறைவேற்றி உள்ள சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், நடப்பு ஆண்டிலேயே அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு ஒதுக்கீட்டில் சுமார் 300 இடங்கள் கிடைக்கும். தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு முடிவுகள் அக்டோபர் 16 ஆம் தேதி வெளியிடப்பட்டு, மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு கலந்தாய்வு நடத்த தமிழக அரசு காத்திருக்கிறது.

இதனைக் கவனத்தில் கொண்டு காலம் தாழ்த்தாமல், உடனடியாக தமிழக அரசு நிறைவேற்றி உள்ள சட்ட முன்வடிவுக்கு தமிழக ஆளுநராகிய தாங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.

அன்புள்ள

(வைகோ)
ஒப்பம்
இந்திய நாடாளுமன்ற
மாநிலங்கள் அவை உறுப்பினர்

Tuesday, October 20, 2020

முதல்வர் பழனிசாமிக்கு ஆறுதல் கூறிய வைகோ எம்பி!

தமிழக முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் சில தினங்களுக்கு முன் மறைந்தார்.

இன்று 20-10-2020 சென்னை ராஜ அண்ணாமலைப் புரம் கிரின்வேஷ் சாலையில் அமைந்துள்ள முதல்வரின் அரசு இல்லத்தில்  முதல்வரின் தாயார் நினைவில் வாழும் திருமதி தவுசயம்மாள் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார், திராவிட ரத்னா தமிழினக் காவலர் தலைவர் திரு வைகோ எம்பி அவர்கள்.
முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு ஆறுதல் கூறினார். அப்போது கழக மாவட்ட செயலாளர்கள், மூத்த நிர்வாகிகள் இருந்தனர்.

Saturday, October 17, 2020

மா.சுப்பிரமணியன் அவர்களின் மகன் அன்பழகன் மறைவு! வைகோ இரங்கல்!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சென்னை தெற்கு மாவட்டச் செயலாளரும், சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்பிரமணியன் அவர்களின் மகன் அன்பழகன் மறைவுச் செய்தி அறிந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், மா.சுப்பிரமணியன் அவர்களிடம் அலைபேசியில் தொடர்புகொண்டு, தனது துக்கத்தையும், வேதனையையும் தெரிவித்து இரங்கல் கூறினார்.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
17.10.2020

Friday, October 16, 2020

அருணகிரி ‌அவர்களின் தாயார் மங்கையர்கரசி பழநிசாமி மறைவிற்கு மதிமுகவினர் மலர் மாலை மரியாதை!

1965 களில் திராவிட முன்னேற்ற கழகத்தை தென் பாண்டி மண்டலத்தில் வேரூன்ற வைத்த தலைவர் வைகோ அவர்களுக்கு நம்பிக்கையாகவும் வலது கரமாகவும்  சங்கரன்கோவில் நகர மன்றத்தின் தந்தையாகவும் இருந்து வந்த திரு பழனிச்சாமி பி.காம், அவர்களின் மனைவியும், எம் லட்சிய தலைவர், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ M.P அவர்களுடைய தனி செயலர் அருணகிரி அவர்களின் தாயாரும் ஆகிய பெருவாழ்வு வாழ்ந்த திருமதி
மங்கையர்கரசி பழநிசாமி (86) அவர்கள் 15-10-2020 அன்று இயற்கை எய்தினார்.

அவரது இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகள் சங்கரன்கோவில் நகரம், வடகாசி அம்மன் கோவில் தெருவில் உள்ள அன்னார் இல்லத்தில் வைத்து  15-10-2020 நடைபெற்றது.

மறைவு செய்தி கேட்டு தலைவர் வைகோ அவர்களுடைய சகோதரர் ரவிச்சந்திரன் அவர்கள் மாலை வைத்து மரியாதை செலுத்தினார்கள். 

உடன் மாநகர் மாவட்ட செயலாளர் கே எம் ஏ நிஜாம், நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் அண்ணாச்சி உவரி டைமண்ட் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் ஆர்.எஸ்.ரமேஷ், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் ப.கல்லத்தியான் தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் விநாயகா ரமேஷ், தலைவரின் டெல்லி உதவியாளர் செந்தூர்பாண்டியன், தேர்தல் பணிக்குழு துணை செயலாளர் சுதாபாலசுப்ரமணியன், உள்ளிட்ட நிர்வாகிகளும் மாலை வைத்து மரியாதை செலுத்தினார்கள்.

மாநில மாணவர் அணி துணை செயலாளர் முகவை.இரா.சங்கர், தலைவர் வைகோ அவர்களின் நிழற்படக் கலைஞர் போட்டோ ராஜா, கழகத்தின் வெளியீட்டு மாநில துணைச்செயலாளர் விக்டர் எபினேசர், கழகத்தின் குறுந்தட்டு விற்பனையாளர் அக்பர் அலி, மற்றும் நடுவை சொ. முருகன் ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினார்கள்.

நேற்று, தென்காசி மாவட்ட மறுமலர்ச்சி
 திமுக சார்பில் தி.மு.இராசேந்திரன்  அவர்கள் மாலை சூட்டி புகழ் வணக்கம் செலுத்தினார். அவருடன் நகரச்செயலாளர் ச.ஆறுமுகச்சாமி, இரத்னகுமார், அரங்கநாதன், பூக்கடை பொன்னுசாமி, ஆட்டோ தொழிற்சங்க தலைவர் நைனார் முகம்மது, ச.இலட்சுமி நாராயணன், முப்பிடாதி ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினார்கள்.

ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் 221-வது நினைவு நாளில் மதிமுகவினர் புகழஞ்சலி!

16.10.2020 இன்று வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் 221-வது நினைவு நாளை முன்னிட்டு, கயத்தாறில் உள்ள   மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவிடத்தில், வாழும் கட்டபொம்மன் மதிப்புமிகு மக்கள் தலைவர் வைகோ எம்பி  அவர்கள் சார்பில் தூத்துக்குடி வடக்கு தெற்கு மாவட்ட செயலாளர்கள் ஆர்.எஸ்.இரமேஷ், புதுக்கோட்டை செல்வம், நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் கே.எம்.ஏ.நிஜாம், நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் உவரி ரைமண்ட் ஆகியோர் தலைமையில் மறுமலர்ச்சி தி.மு.கவினர் கலந்து கொண்டு புகழ் அஞ்சலி செலுத்தினர்.

மேலும் மாநில, மாவட்ட, ஒன்றிய அணிகளின் நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பேரூர், கிளை கழக நிருவாகிகள் உள்ளிட்ட மதிமுகவினர் நூற்றுக்கணக்கில் சீரான சமூக இடைவெளியுடன் கலந்துகொண்டு புகழ் அஞ்சலி செலுத்தினார்கள்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை தூத்துக்குடி வடக்கு மாவட்ட மதிமுக இளைஞரணி செயலாளர் விநாயக ராமேஷ் சிறப்பாக செய்திருந்தார்.

Thursday, October 15, 2020

தமிழினத் துரோகி முத்தையா முரளிதரனாக நடிப்பதை விஜய்சேதுபதி தவிர்த்துக் கொள்க. வைகோ அறிக்கை!

தமிழ் ஈழத்தில் இலட்சோப இலட்சம் ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்துவிட்டு, ஈழப்போர் முடிவடைந்துவிட்டது என்று கொலைகாரன் ராஜபக்சே அறிவித்தபோது, இந்த நாள் ‘இனிய நாள்’ என்று கூறியவர் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன்.

ஆயிரக்கணக்கான பிள்ளைகளைப் பறிகொடுத்துவிட்டு, காணாமல் போன எங்கள் இரத்த உறவுகளைத் தேடிக் கண்டுபிடித்துத் தாருங்கள் என்று தமிழ் ஈழத் தாய்மார்கள் பட்டினிப் போராட்டம் நடத்தியபோது, அதை நாடகம் என்று இகழ்ந்து பேசியவர்தான் முரளிதரன். பிறப்பால் தமிழனாகவும், வளர்ப்பால் சிங்களவன் எடுப்பார் கைப்பிள்ளையாகவும் மாறிப்போன முத்தையா முரளிதரன் வாழ்க்கையைத் திரைப்படமாக்க சிங்கள திரைப்பட தயாரிப்பு நிறுவனம் முயற்சி எடுத்து, அந்தப் படத்திற்கு ‘800’ என்று பெயர் சூட்டி இருக்கின்றது.

தமிழினத்தின் துரோகி என்று உலகத் தமிழர்களால் அடையாளம் காணப்பட்டுள்ள முத்தையா முரளிதரன் வாழ்க்கையைச் சித்தரிக்கும் 800 திரைப்படத்தில் முரளிதரனாக, தமிழ்நாட்டின் தலைசிறந்த திரைக் கலைஞர் என்ற பெயரை எடுத்துள்ள விஜய்சேதுபதி நடிக்கப் போகிறார் என்ற செய்தி தமிழர்தம் நெஞ்சில் நெருப்பை அள்ளிக் கொட்டுகிறது.

ஒன்றரை இலட்சம் தமிழர்கள் இரத்தத் தடாகத்தில் மூழ்கடிக்கப்பட்டு, கொல்லப்பட்டபோது 90 ஆயிரம் தமிழ் பெண்கள் விதவைகளாகி கதறி அழுதபோது பரிகாசம் செய்த இனத் துரோகி முத்தையா முரளிதரனாக திரைப்படத்தில் விஜய்சேதுபதி நடித்தார் என்கிற தீராத அவப்பழிக்கு ஆளாகிவிடக்கூடாது. எனவே ‘800’ திரைப்படத்தில் நடிப்பதை நடிகர் விஜய்சேதுபதி தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை – 8
15.10.2020

மருத்துவப் படிப்புகளில் ஓ.பி.சி. இடஒதுக்கீடு: நடப்பு ஆண்டில் வழங்க மத்திய அரசு மறுப்பு! வைகோ கண்டனம்!

மருத்துவப் படிப்புக்கான இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகள், பல் மருத்துவ இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளில் மாநிலங்களிலிருந்து மத்திய தொகுப்புக்குக் கடந்த 4 ஆண்டுகளில் மொத்தம் 42842 இடங்கள் அளிக்கப்பட்டு இருக்கின்றன. இதில் ஒரு இடம்கூட இதர பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கீடு செய்யாமல், மத்திய பா.ஜ.க. அரசு சமூக நீதியைச் சவக் குழியில் தள்ளி விட்டது.

இந்நிலையில்தான் மருத்துவப் படிப்புகளில் மாநிலங்கள் மத்தியத் தொகுப்புக்கு வழங்கும் இடங்களில் பிற்படுததப்பட்டோருக்கு மத்திய அரசு அளிக்கும் 27 விழுக்காடு இடஒதுக்கீடு மற்றும் தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 50 விழுக்காடு ஓ.பி.சி. இட ஒதுக்கீட்டை நடப்பு ஆண்டிலேயே செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்த வழக்கு விசாரணையில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்துள்ள மனுவில், மருத்துவம் மற்றும் மருத்துவ மேற்படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் 27 விழுக்காடு மற்றும் தமிழகத்தில் பின்பற்றப்படும் 50 விழுக்காடு இட ஒதுக்கீடு 2020 -21 நடப்புக் கல்வி ஆண்டில் வழங்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவப் படிப்புக்கான இடஒதுக்கீடு தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்ற்த்தில் நிலுவையில் இருப்பதால், நடப்பு ஆண்டில் ஓ.பி.சி. இடஒதுக்கீடு வழங்க முடியாது என்று காரணம் கூறி உள்ள பா.ஜ.க. அரசு, நடப்பு ஆண்டில் வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் 1417 காலிப் பணியிடங்களை நிரப்பும்போது, பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும்  சட்டத்திற்கு எதிராகவும் பல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இருந்தபோதிலும் 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவதற்கு முனைந்து, முன்கூட்டியே அறிவிப்பாணை வெளியிட்டு இருக்கிறது.

அகில இந்தியத் தொகுப்புக்கு மாநில அரசுகளால் வழங்கப்படும் மருத்துவக் கல்வி இடங்களில், ஓ.பி.சி. மாணவர்களுக்கு சட்ட ரீதியாகக் கிடைக்க வேண்டிய இடஒதுக்கீடு மறுக்கப்படுவது அநீதியாகும். பா.ஜ.க. அரசின் செயல்பாடு கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.

எனவே நடப்பு ஆண்டிலேயே மத்திய தொகுப்புக்கு அளிக்கப்படும் மருத்துவ இடங்களில், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு உரிய இடஒதுக்கீட்டை வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
15.10.2020

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ஆணவப் போக்கு! வைகோ கடும் கண்டனம்!

தமிழ்நாடு முதல் அமைச்சர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தியில் கடிதம் எழுதி இருக்கின்றார்.

இது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் கொடுமை; இந்தி வெறி ஆணவத்தின் உச்சகட்டம். சகித்துக் கொள்ள முடியாது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.

அண்மைக்காலமாக தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, நடுவண் அமைச்சர்கள்  இந்தியில்தான் கடிதங்கள் எழுதி வருகின்றார்கள். தங்களுடைய முகநூல், ட்விட்டர் போன்ற வலைதளப் பக்கங்களிலும், இந்தியில் மட்டுமே எழுதி வருகின்றார்கள். இந்தப் போக்கு தமிழுக்கு மட்டும் அல்ல, அனைத்து இந்திய மொழிகளுக்கும் எதிரானது. எங்கள் ஆட்சி, இந்திக்காரர்களுக்கு மட்டும்தான் என்பதைக் காட்டுகின்றது. 

எவ்வளவுதான் எடுத்துச் சொன்னாலும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்; தமிழர்களின் உணர்வுகளை மதிக்க மாட்டோம்; நாங்கள் சொல்வதைத்தான் தமிழர்கள் கேட்க வேண்டும்; நாங்கள் எழுதுவதைத்தான் தமிழர்கள் படிக்க வேண்டும் என்கின்ற இந்தி ஆதிக்க வெறி மனப்பான்மை, இந்தியாவைக் கூறுபோட்டு விடும் என்பதை, பாஜக ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

எனக்கு இந்தி தெரியாது; எனவே, உங்கள் கடிதத்தை ஆங்கிலத்தில் எழுதி அனுப்புங்கள் என்று கூறி, அந்தக் கடிதத்தை, எடப்பாடி பழனிச்சாமி, அமித் ஷாவுக்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

இல்லையேல், இனி அவர் அனைத்துக் கடிதங்களையும் இந்தியில்தான் எழுதி அனுப்புவார். அதைத் தடுத்து நிறுத்த வேண்டியது, தமிழக முதல் அமைச்சரின் கடமை.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
14.10.2020