Monday, May 15, 2017

சிறை சென்றது ஏன்? வைகோ கடிதம்-4, மக்கள் ஆட்சிக்கு மகுடமே பொது வாக்கெடுப்பு! பாகம்-3!

தேசிய இனத்தின் அடையாளம்:-

இந்தத் தத்துவத்தின் அடிப்படையில்தான், காலப்போக்கில், தங்களுக்குத் தாங்களே அரசுகளை அமைத்துக் கொள்வதற்கு, ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் உரிமை உண்டு என்ற கோட்பாடு தோன்றியது.

ஒரு தேசிய இனம் என்பது என்ன?

வாழும் நிலம், பேசுகின்ற மொழி, பின்பற்று கின்ற பழக்க வழக்கங்கள், பண்பாடு, கடைப் பிடிக்கும் நாகரிகம், அதனால் ஏற்பட்ட குருதி உறவுகள், அவர்கள் அமைத்துக் கொண்ட அரசுகள், அந்தப் பகுதி மக்கள் ஒரு தேசிய இன மக்களாக அடையாளம் காணப்பட்டனர்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், மாமேதை லெனின் அவர்கள், 1914 ஆம் ஆண்டு, தன்னாட்சி உரிமையை, சுய நிர்ணய உரிமையைப் பற்றிக் குறிப் பிட்டார்.

இந்தப் புவியில் வாழக்கூடிய பல்வேறு தேசிய இன மக்கள், தங்களுக்கான அரசுகளை அமைத்துக் கொண்டு, புதிய புதிய நாடுகள் நாளும் இந்த உலகப் பூந்தோட்டத்தில் மலர்ந்துகொண்டே இருக்கின்றன.

அந்த அடிப்படையில்தான் லெனின் சொன்னார்: “மக்கள் தங்களுக்குத் தாங்களே ஒரு அரசை அமைத்துக் கொள்வதுதான், சுய நிர்ணய உரிமை.”

இந்தத் திட்டவட்டமான கருத்தைத் தம் வாழ்நாள் நெடுகிலும் அவர் சமரசம் செய்து கொள்ளாமல் வலியுறுத்தி வந்தார். அதற்கு எதிர்ப்புகள் எழுந்தன. கருத்து மறுப்பு உரைகள் வந்தன. இது 2017. 114 ஆண்டுகளுக்கு முன்பு லெனின் கூறியது, இன்று அந்தச் சோவியத்து மண்ணிலேயே நிறைவேறிவிட்டது. தொலைநோக்கோடு அவர் அந்தக் கருத்தைச் சொன்னார்.

1918 ஆம் ஆண்டு, அமெரிக்க நாட்டின் குடியரசுத் தலைவர் உட்ரோ வில்சன், பிப்ரவரி 11 ஆம் நாள், அவர் இன்னும் திட்டவட்டமாகச் சொன்னார்:

‘‘People are governed only by their consent.

மக்கள், தங்கள் விருப்பப்படிதான் அவர்களுடைய ஆட்சியை அமைத்துக் கொள்ளுகின்றார்கள்.

That is the right of self-determination. அதுதான் தன்னாட்சி உரிமை

It is not mere a a phrase;. இது வெறும் சொற்றொடர் அல்ல;

It is a compulsory imperative. இது, கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய ஒன்று’ என்று உட்ரோ வில்சன் அறிவித்தார்.

அடுத்து, League of Nations; உலக நாடுகள் மன்றம் வருகின்றது.

அடுத்து, ஐக்கிய நாடுகள் சபை அமை கின்றது. 1945 இல், இதைப்பற்றிய விவாதம் எழுகின்றது.

தன்னாட்சி உரிமை Their fundamental right to decide their own destiny ஒவ்வொரு தேசிய இன மக்களும், அவர் களது தலைவிதியை நிர்ணயித்துக் கொள்ளுதல்.

1948 ஆம் ஆண்டு, (Human Rights Declaration) செய்யப்பட்டது. அந்தப் பிரகடனத்தின் 15 ஆவது பிரிவு: All the people shall have the right of self-determination என்று குறிப்பிடுகின்றது. அனைத்து மக்களும் சுய நிர்ணய உரிமைக்கான உரிமை பெற வேண்டும்.

அதற்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்னால், 1941 இல், இரண்டாம் உலகப் பெரும் போர் நடைபெற்றுக் கொண்டு இருந்த பொழுது, அதில் அமெரிக்கா நேரடியாகத் தலையிடாத காலத்தில், எந்த பிரித்தானிய அரசின் ஆளுமையை உடைத்துக் கொண்டு அமெரிக்கா வெளியேறியதோ, சுய நிர்ணய உரிமையை ~பிலடெல் பியாவில் பிரகடனம் செய்ததோ, அதனுடைய குடியரசுத் தலைவர் ~பிராங்க்ளின் டி ரூஸ்வெல்டும், பிரித்தானியப் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் அவர்களும், திட்டவட்டமாக அவர்கள் அறிவித்த அட்லாண்டிக் பிரகடனத்தில் (Atlantic Charter) மூன்றாவது பிரகடனம் தன்னாட்சி உரிமை (Right of self-determination). அதை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றனர்.

1941 இல் லெனின் இறந்துவிட்டார்.

ஐ.நா. மன்றத்தில் பொதுச்சபை தீர்மானம், 1514 ஆம் எண் தீர்மானம், தன்னாட்சி உரிமையைப் பிரகடனம் செய்கின்ற தீர்மானம்.

அதே தீர்மானம், 1966 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் நாள், 2200 ஆவது தீர்மானமாக முன்வைக்கப்பட்டது. ‘International Covenant on Civil and Political Rights.’

அதுபோலத்தான், சமூக, பொருளாதார அரசியல் உரிமைகளின் அனைத்து உலக ஒப்பந்தமாக, ‘International Covenant on Cultural Social Economic Rights.’ கலாச்சார, பொருளாதார, சமூக உரிமைகளாக, அறிவிக்கப்பட்ட ஒப்பந்தம். 1976 ஆம் ஆண்டு, மே மாதம் நடைமுறைப் படுத்தப்பட்டது.

அப்போது, அதில் பங்கு ஏற்றுக்கொண்ட நாடுகள் 167. இந்தியாவும், இலங்கையும் பங்கு ஏற்றன. ஆனால், அவற்றுள் 76 நாடுகள் மட்டுமே, அதில் கையெழுத்து இட்டன. அதில்தான், சுய நிர்ணய உரிமை பிரகடனம் செய்யப்பட்டது. எனவே, ஐ.நா. மன்றத்தின் அனைத்து உலக ஒப்பந்தத்தின்படி, அனைத்து மக்களுக்கும் தன்னாட்சி உரிமை உண்டு. ‘All the People have the right of self-determination.’

இந்த ஒப்பந்தத்தில், இந்தியாவும், இலங்கையும் கையொப்பம் இடவில்லை.

இந்த உரிமைகளை, தங்கள் சட்டப் புத்தகத்திலேயே கொண்டு வர எந்தெந்த நாடுகள் முன்வந்தன?

“மாகாளி கடைக்கண் வைத்தாள்; ஆகா வென்று எழுந்தது பார் யுகப்புரட்சி” என்றானே கவிஞன் பாரதி, அந்த போல்ஷ்விக் புரட்சி எழுந்ததற்குப் பிறகு, 1918 ஆம் ஆண்டு, சோவியத் ஒன்றியத் தின் அரசியல் சட்டம் வகுக்கப்பட்டது. அதில், சோவியத் கூட்டு ஆட்சிக் குடியரசு, (Union of Soviet Socialist Republics) மொத்தம் 90 பிரிவுகள். அதில், 49 ஆவது பிரிவாக, Every State have the right to secede... பிரிந்து செல்லக்கூடிய உரிமை, ஒவ்வொரு மாநிலத்துக்கும் உண்டு.

இதற்கு ஏறத்தாழ 18 ஆண்டுகள் கழித்து, சோவியத் ஒன்றியத்தின் அரசியல் சட்டம் மறு வரையறை செய்யப்பட்டது. சில பிரிவுகள் நீக்கப்பட்டன. அப்படி, 1936 ஆம் ஆண்டு மறு வரையறை செய்யப்பட்ட புதிய அரசியல் சட்டத்தில், முந்தைய 49 ஆவது பிரிவு, இப்போது 17 ஆவது பிரிவாக இடம் பெற்றது. ஒவ்வொரு மாநிலமும் பிரிந்து செல்லக் கூடிய உரிமையை மீண்டும் உறுதிப்படுத்தியது.

லெனின் மறைவுக்குப் பிறகு, அவருடைய இறுதிச் சடங்கில் பங்கு ஏற்க வேண்டிய லியன் ட்ராட்ஸ்கி விளாடிவாஸ்டாக்கில் இருக்கின்றான். ‘நீ வருவதற்குள் இறுதிச் சடங்குகள் முடிந்து விடும்’ என்று தகவல் வருகின்றது. அவர் வெளிநாட்டு அமைச்சர். அவர் வருகையைத் திட்டமிட்டுத் தவிர்த்தார் ஸ்டாலின். ஆனால், இறுதிச் சடங்குகள் பின்னரே நடைபெற்றன. நிலைமைகள் மாறின. ஜோசப் ஸ்டாலின், சோவியத் ஒன்றியத்தின் அதிபர் ஆனார். சோவியத் ஒன்றியத்துக்கு உள்ளே, ஜார்ஜியாவும், உக்ரைனும் ஒடுக்கப்பட்டன. அந்த மாநிலங்களுடைய உரிமைகள் நசுக்கப்பட்டன.

இதயக் கதவுகளைத் தட்டுகிறேன்:-

எதிர்காலத்தில், இளைய தலைமுறையினர் என்றாவது ஒருநாள், மாணவர் சமுதாயம், இந்த இனத்தினுடைய குரலை அவர்கள் பரிசீலிக்கின்ற வேளையில், அடியேனின் கருத்தையும் அவர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்பதற்காக, அந்த உணர்வோடுதான் நான் எழுதிக்கொண்டு இருக்கின்றேன். அரசியல் எல்லைகளை எல்லாம் கடந்து, குமுறிக் கொண்டு இருக்கின்ற என்னுடைய இருதயத்தின் வேதனைகளை, என் நெஞ்சில் எழுகின்ற சில துயர ஓலங்களைப் பதிவு செய்கின்றேன்.

நமக்கு அருகிலே இருக்கின்றது பரந்து பட்ட நிலப்பரப்பைக் கொண்டு இருக்கின்ற செஞ்சீனம். இன்றைக்கு உலகச் சந்தையில் அனைவரையும் வீழ்த்தி முதல் இடத்துக்கு வரத் துடித்துக்கொண்டு இருக்கின்றது. அங்கே, எண்ணற்ற மொழி பேசுகின்ற மக்கள் வாழ்கின்றனர். எண்ணற்ற தேசிய இனங்கள் உள்ளன. அவை குவிந்து கிடந்த காரணத்தால், பாட்டாளித் தோழர்களை மாவோ ஒன்றாக அணி திரட்டிக் கொண்டு இருந்த காலத்தில், ஆயுதம் ஏந்திக் கொண்டு இருந்த நாள்களில், நடந்தே மக்களைச் சந்தித்துக்கொண்டு இருந்த வேளைகளில், கம்யூனிஸ்ட் கட்சி வலுப்பெற்றுக் கொண்டு இருந்த காலத்தில், அவரது தலைக்கு விலை வைக்கப்பட்டு இருந்த காலத்தில், கோமிண்டாங் கட்சி அரசின் கை ஓங்கி இருந்த காலத்தில், செஞ்சீனத்துக்காக அரசியல் சட்டத்தைக் கம்யூனிஸ்டுகள் வகுக்கின்ற வேளையில், “நாங்கள் அமைக்கின்ற அரசில், எந்த ஒரு இனமும், எந்த ஒரு மாநிலமும் பிரிந்து செல்லக்கூடிய உரிமையைக் கொடுப்போம்” என்று 1931 ஆம் ஆண்டு வரையறுத்து வெளியிட்டார்கள்.

மாவோவின் செம்படை வெற்றி பெற்று, 1949 இல், பீகிங் அரச மாளிகையில், செங்கொடியை உயர்த்தியது.

1982 ஆம் ஆண்டு, அதே சீன தேசம், அரசியல் சட்டத்தை மறு வரையறை செய்து, எந்த ஒரு மாநிலமும் எந்த ஒரு இனமும் பிரிந்து செல்லலாம் என்ற அந்தச் சட்டத்தை, அடியோடு நீக்கியது. இனி அதுபற்றிப் பேசவே கூடாது என்றது.

இதோ பக்கத்தில் இருக்கின்றது மியான்மர் (பர்மா). அங்கே ஆங் சான் கொல்லப்பட்டதற்குப் பிறகு, படைத் தலைவர்களின் பிடிக்குள் நாடு சிக்கியது. ஆங் சானின் அருமை மகள் சூகீ, இருபது ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுக்கிடந்தார். அந்த பர்மாவில், 1947 இல் அமைக்கப்பட்ட அரசியல் சட்டத்தில், பர்மாவில் உள்ள எந்த மாநிலமும் தனியாகப் பிரிந்து செல்லுகின்ற உரிமை உண்டு என்று வகுத்தார்கள். ஆனால், 1974 இல், அந்த உரிமையை எவரும் கடைப்பிடிக்க அனுமதிக்காத பர்மிய இராணுவ ஆட்சி, அரசியல் சட்டத்தில் இருந்து அந்தப் பிரிவை அகற்றியது.

தேசத்துரோகக் குற்றச்சாட்டு:-

ஒரு நாட்டின் ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் எதிராக எவரும் பேசினால், அது தேசத்துரோகம் என்று அவர்கள் மீது நடவடிக்கை பாயும் நிலையில், இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 124 ஏ பிரிவு என்கிற ஆயுதம் பாயும் என்ற நிலையில், தேசத் துரோகக் குற்றச் சாட்டுக்கு ஆளாக நேரிடும் என்ற நிலையில், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்துக்கு அருகிலே இருக்கக்கூடிய, கல்விக்கும் இசைக்கும் பெருந்தொண்டு புரிந்த அண்ணாமலை அரசர் குடும்பத்தினர் அமைத்துத் தந்து இருக்கக்கூடிய அண்ணாமலை மன்றத்தில், ஈழத்தில் நடப்பது என்ன? என்று, பேசியதற்காக, என் மீது தேசத்துரோகக் குற்றச்சாட்டு பதிவு செய்து, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர்.

நான் கூண்டில் நிறுத்தப்பட்டேன். ஆனால், நான் கூறிய கருத்தை மறுக்கவில்லை. அப்படி நான் பேசவில்லை என்றோ, நான் பேசிய கருத்து தவறுதான் என்றோ, அதை நான் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன் என்றோ கூறவே இல்லை. அனைத்தையும் ஒப்புக் கொண்டேன்.

இப்போது, குற்றம் சாட்டுகிறேன் என்ற இந்த வழக்கிலும் என் உரையில் எதையும் நான் மறுக்கப் போவது இல்லை.

இந்த 124 ஏ பிரிவு எப்போது வந்தது?

1806 ஆம் ஆண்டு உதித்தது. மெக்காலே தயாரித்துக் கொடுத்து, 1870 வரையிலே நடைமுறையில் இருந்த சட்டத்தில், இந்தத் தேசத்துரோகம், ‘sedition’ என்ற பிரிவு கிடையாது. பின்னர்தான் பிரித்தானிய அரசு 124 ஏ பிரிவை இணைத்தது.

அதற்குப் பிறகுதான், நாட்டுக்குத் துரோகம், தேசத்துரோகம் என்ற பிரிவு வருகின்றது.

வங்கக் கடல் அலைகளில் எங்கள் கரிகாலன் கலம் செலுத்தினான்; எங்கள் ராஜராஜன், புலிக்கொடி பறந்த கடற்படையை, கீழை நாடுகளுக்கு எல்லாம் கொண்டு சென்று வெற்றிக்கொடி நாட்டினான். பல தீவுகளை வென்றான். அங்கெல்லாம் எங்கள் கொடி, புலிக் கொடியாகப் பறந்தது. அந்த அலை கடலில், தமிழர்களின் நாவாய்கள், கிரேக்கத்துக்கும், ரோமாபுரிக்கும், எகிப்து, மெசபடோமியாவுக்கும் சென்று வந்த பண்டைய நாள்களை நினைவூட்டுகின்ற வகையில், அலைகடலை அடக்கி ஆள்வது பிரித்தானியம் ‘Britannia rules the waves; Britons never shall be slaves’ என்றதற்கு அறைகூவல் விடுகின்ற வகையில், இந்தியத் துணைக் கண்டத்தில், கரிகாலன் வழிவந்த நான் கலம் செலுத்துகிறேன் என்றார் ஒட்டப்பிடாரத்து வீர சிதம்பரம்.

அவருக்கு மரக்கலம் வாங்கிக் கொடுக்க, மும்பை நகரத்தில் உதவியாக இருந்து, அந்தக் கப்பல் அங்கிருந்து பயணிப்பதற்கு வழிவகுத்துக் கொடுத்தாரே லோகமான்ய பால கங்காதர திலகர், ‘சுயராஜ்யம் எனது பிறப்பு உரிமை’ என்று முழங்கினாரே, அவர் மீது, இந்த 124 ஏ பிரிவு பாய்ந்தது.

திலகருக்காக வாதாடிய ஜின்னா:-

திலகர் ஒரு தலைசிறந்த வழக்குரைஞர். அவருக்காக வாதாடியவர் முகமது அலி ஜின்னா. அந்த வழக்கில் திலகர் தண்டிக்கப்பட்டார். அதை எதிர்த்து மேல் முறையீடு செய்தார். லண்டன் பிரிவியு கவுன்சிலுக்குப் போனார். அங்கும் தண்டிக்கப்பட்டார். பர்மாவின் மாண்டலே சிறையில், ஆறு ஆண்டுகள் இருந்தார். அங்கேதான் இரண்டரை ஆண்டுகள் நேதாஜியும் இருந்தார். ஆறு ஆண்டுகள் அங்கே சித்திரவதை அனுபவித்து இருக்கின்றார் திலகர். அவர் எழுதிய ஒரு நூல்தான் ‘கீதா ரகசியம்.’ அது, அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், அந்த மாண்டலே சிறையில் பட்ட துன்பங்களைப் பற்றி இன்னொரு நூலில், அங்கே ஏற்பட்ட துன்பங்களை அவர் விவரித்து இருப்பதைப் படித்தால், நம் இருதயத்தில் குருதி கொட்டும். அதை நான் உணர்ந்து இருக்கின்றேன். அவர் மீது பாய்ந்தது இந்த 124 ஏ பிரிவு.

ஆனால், நாட்டைத் துண்டாட விரும்புகிறார்கள் என்றோ, இறையாண்மைக்கு ஆபத்து வருகிறது என்றோ, அந்த அடிப்படையில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவில்லை. இதுதான் முக்கியம். இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கும் ஊறு விளைவிப்பது குற்றம் என்று சட்டப்படி அந்த நிலை எடுக்கப்பட வில்லை.

இந்தக் கட்டத்தில், 1950 ஆம் ஆண்டு, இந்திய அரசியல் சட்டம் அரங்கேறுகிறது. அதற்கான முன்வரைவிலே (Drafts), அடிப்படை உரிமைகள் 13 (2) என்ற பிரிவில், பொது அமைதி (Public order), அதற்குக் குந்தகம் விளைவித்தால், அது பேச்சு உரிமையைக் கட்டுப்படுத்தாது; அது பேச்சு உரிமை என்ற எல்லைக்குள் வராது என்ற காலம்.

மார்ச் மாதம். ரமேஷ் தாப்பர் என்பவர், மும்பையில் இருந்து நடத்துகின்ற ஒரு ஆங்கில ஏடு கிராஸ்ரோட்ஸ் (Crossroads). குறுக்குச்சாலை

எப்பக்கம் செல்வது? எந்தத் திசையில் செல்வது? என்று தெரியாமல், திக்குத் தெரியாமல் ஒரு இடத்தில் நின்று கொண்டு திகைத்து நிற்பதைத்தான் ஆங்கிலத்தில் ‘we are at crossroads’ என்பார்கள். அது ஒரு நாற்சந்தி.

அந்தத் தலைப்பில் ஒரு வார ஏடு வந்து கொண்டு இருந்தது. அப்போது, சென்னை மாகாண பொது அமைதி ஒழுங்கு பாதுகாப்பு என்ற சட்டத்தின் படி, (Madras Public Order Maintenance Act) இந்த ஏடு, சென்னை மாகாணத்துக்கு உள்ளே வரக்கூடாது என்று தடை செய்யப்பட்டது. ஆம், சென்னைதான் இதற்கு அடிப்படை.

அதே காலகட்டத்தில், டெல்லியில், பூரே பூஷண் என்பவருடைய பத்திரிகை, கிழக்குப் பஞ்சாப் சட்டத்தின் அடிப்படையில், டெல்லிக்கு உள்ளே நுழையக் கூடாது என்று தடை செய்யப்பட்டது.

சென்னை மாகாணத்தின் இந்தச் சட்டம், எழுத்து உரிமைக்குத் தடை விதிப்பதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு வந்தது. தலைமை நீதிபதி கன்னா, புகழ் பெற்ற நீதிபதி பதஞ்சலி சாஸ்திரி, புகழ் மிக்க நீதிபதிகள் பசல் அலி, மகாஜன், முகர்ஜி உள்ளிட்ட ஐந்து நீதிபதிகள் அமர்விலே விசாரிக்கப் படுகின்றது.

பதஞ்சலி சாஸ்திரி எழுதுகிறார். அந்தக் கருத்தைத்தான், தலைமை நீதிபதி உட்பட பசல் அலி தவிர மற்றவர்கள் அனைவருமே ஏற்கின்றார்கள். அதன்படி,

“கருத்துகளைச் சொல்லுவதற்கு உரிமை உண்டு; பொது அமைதி என்று கூறி, கருத்துச் சொல்லுவதைக் கட்டுப்படுத்த முடியாது. ஏனென்றால் அரசு அமைப்புச் சட்டத்தை வகுக்கின்ற பொழுது, அதை உருவாக்கிக் கொடுத்த மாமேதை பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர், அவர் உட்பட எவரும், வரைவில் இருந்த 13 (2) பிரிவை ஏற்கவில்லை. பொது அமைதி என்பது இங்கே கிடையாது. இந்தப் பொது அமைதிக்கு, ஒழுங்குக்கு ஆபத்து நேரும் என்று கருதி, பேச்சு உரிமையை, கருத்து உரிமையைத் தடுக்க முடியாது. எனவே, இது அடிப்படை உரிமைகளின் (Fundamental Rights) கீழ் வரவில்லை” என்று அவர்கள் அறிவித்ததன் விளைவாக, சென்னை மாகாணத்தின் பத்திரிகைத் தடைச்சட்டம் செல்லாது என்று அவர்கள் தீர்ப்பு வழங்கி விட்டார்கள்.

ஆனால், நீதிபதி பசல் அலி மட்டும் அதற்கு மாறாக, பொது அமைதிக்கு ஒழுங்குக்கு ஊறுநேர்ந்தால், அது அடிப்படை உரிமை என்று அனுமதிக்கக் கூடாது; இது நாட்டுக்கு ஆபத்தை உண்டாக்கக்கூடியது என்று தீர்ப்பு எழுதினார்.

1951 இல் முதலாவது அரசியல் சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது. அதில் 19 ஆவது பிரிவு, அடிப்படை உரிமை; பேச்சு உரிமை, கருத்து உரிமை. அதன் 2 ஆவது உட்பிரிவில், பொது அமைதிக்கு ஊறு நேர்ந்தால், சட்டப்படி அது குற்றமாகத்தான் கருதப்படும் என்ற விதத்தில், முதலாவது அரசியல் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தார்கள்.

நாட்கள் சென்றன. ‘திராவிட நாடு’ என்ற தனிநாடு கோரிக்கை வலுத்தது. காரணம், அன்றைய சென்னை மாகாணத்துக்கு உள்ளே, கர்நாடகத்தின் பகுதிகள் இருந்தன; ஆந்திரத்தின் பகுதிகள் இருந்தன; கேரளத்தின் பகுதிகள் இருந்தன. உலகத்தின் தொன்மைத் தமிழ் மொழியின் உதிரத்தில் இருந்துதான், இந்த மொழிகள் உதித்து எழுந்தன. மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை கூறியது மட்டும் அல்ல, மேற்கு நாடுகளின் அறிஞர்கள் மேற்கொண்ட ஆய்வுகளின்படி அது நிறுவப்பட்டது.

அந்த அடிப்படையில் தந்தை பெரியார் எழுப்பிய குரல், ‘தமிழ்நாடு தமிழருக்கே; தனித்தமிழ்நாடு’ என்ற குரலை, 1937 இல் வைத்து இருந்தாலும், இந்தத் திராவிட நாடு என்ற தனிநாட்டுக் கோரிக்கையை பின்னர் அவர்கள் வைத்த காலகட்டத்தில், இந்தக் குரலை எப்படி அடக்குவது என்று கருதிய தில்லி அரசு, 1961 ஆம் ஆண்டு, இந்தியக் குற்றச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது (Criminal Act Amemendment).

அதன்படி, தனிநாடு கோரிக்கையைத் தடுப்பதற்கு, பொது அமைதிக்கு ஒழுங்குக்குக் கேடு நேருகின்ற கருத்தைத் தடுப்பதற்கு, மாநிலங்கள் சட்டம் இயற்றிக் கொள்ளலாம் என்று கொண்டு வந்தார்கள். அத்தோடு அவர்கள் திருப்தி அடையவில்லை. 1963 பிறந்தது. அரசியல் சட்டத்துக்கு 6 ஆவது திருத்தத்தைக் கொண்டு வந்தார்கள். இதில், அடிப்படை உரிமைகள் பிரிவான 19 ஆவது பிரிவின், 2,3,4 ஆகிய உட்பிரிவுகளில், Sovereignty and integrity என்ற சொற்களைச் சேர்த்தார்கள்.

தொடருகிறது...

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment