Monday, May 15, 2017

சிறை சென்றது ஏன்? வைகோ கடிதம்-4, மக்கள் ஆட்சிக்கு மகுடமே பொது வாக்கெடுப்பு! பாகம்-7!

கொலைகாரனே எழுதும் தீர்ப்பு:-

இன்றைக்கு ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் நாம் கேட்பது, சிங்கள அரசு அறிவித்த, பித்தலாட்ட மாய்மால எல்எல்ஆர்சி கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணையம் (Lessons Learned and Reconciliation Committee-LLRC) அது ஒரு அயோக்கியத்தனமான, வஞ்சகமான, உலகத்தை ஏமாற்றுகின்ற ஒரு ஆணையம். அவனைப் பற்றி, அவனே எழுதுவதா?

நான் இந்திய மக்களைக் குற்றம் சொல்லவில்லை. சோனியாகாந்தி தலைமையில் இயங்குகின்ற காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசுக்குத் தலைமை தாங்கியவர் மன்மோகன்சிங், அந்த அரசில் பங்கு வகித்த தி.மு.க., ஈழத்தமிழர்கள் படுகொலையில் குற்றவாளிகள். அங்கே நடந்தது, போர்க்குற்றம் அல்ல. திட்டமிட்ட இனப்படுகொலை. தமிழ் இனத்தை அழிக்க வேண்டும் என்றுதான், நமது அகநானூறு, புறநானூறு, சங்கத் தமிழ் நூல்களைக் கொண்ட, 98,000 நூல்களைக் கொண்ட யாழ்ப்பாணம் நூலகத்தை, 1981 இல் தீ வைத்து எரித்தான். வெலிக்கடைச் சிறையில், 58 தமிழர்களைக் கண்டதுண்டமாக வெட்டிப் போட்டான். குட்டிமணியின் கண்களைத் தோண்டி எடுத்துக் காலில் போட்டு நசுக்கினான். நம் குழந்தைகளை, கொதிக்கும் நெருப்பில் தாரில் தூக்கி வீசினான். 1958 ஆம் ஆண்டு முதல், அங்கே நடந்தவை சாட்சியங்கள்.

இலங்கையில் நடப்பது இனப்படுகொலை என்று, இந்திரா காந்தி அம்மையாரே சொன்னாரே?

எனவே, போர்க்குற்றம் என்று சில மேதாவிகள் குழப்புகின்றார்கள். இது முள்ளிவாய்க்காலில் மட்டும் நடந்தது அல்ல. இந்த இனப்படுகொலையை நடத்தியவனைக் கூண்டில் நிறுத்துவோம். எவனும் தப்ப முடியாது. சிரபெரெனிகாவில் ஆறு முஸ்லிம்களைக் கொன்றவன், 40 ஆண்டுகளுக்குப் பிறகு, கைது செய்யப்பட்டுக் கூண்டில் நிறுத்தப்பட்டான்; 55 ஆண்டுகள் அவனுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஹங்கேரியில் சாண்ட்ரா பிட்ரோ என்பவனுக்கு அப்போது 91 வயது. 1942 ஜனவரி 23 இல், ஆறு பேர்களைச் சுட்டுக் கொன்றான். அவனால் நடக்க முடியவில்லை. என்றாலும், குற்றக் கூண்டில் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப் பட்டான்.

அப்படியானால், எங்கள் தங்கை இசைப் பிரியாவை நாசம் செய்தார்களே, பாலியல் வன்கொடுமை செய்து கொன்றார்களே? அதை, ஐ.நா. அறிக்கையிலேயே குறிப்பிட்டு இருக்கின்றார்கள். எட்டுத் தமிழ் இளைஞர்களை அம்மணமாக்கி, கைகள், கண்களைக் கட்டி இழுத்து வந்து, உச்சந் தலையில் சுட்டுக் கொன்றார்களே, அது உண்மையான காட்சி, என்று தடயவியல் அறிஞர்களே உறுதிப்படுத்தி விட்டார்கள். இவை எல்லாம் அசைக்க முடியாத சாட்சியங்கள்.

அனைத்து உலகக் குற்றவாளிக் கூண்டிலே ராஜபக்சேயைக் கொண்டு வந்து நிறுத்துவோம். இந்தக் கோரிக்கையை, இளைஞர்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். குற்றவாளியைக் கூண்டில் நிறுத்தித் தண்டிப்பது ஒரு கோரிக்கை. இன்னொரு கோரிக்கை, சிங்களக் குடியேற்றங்களை அகற்ற வேண்டும்; சிங்களக் காவலர்கள், இராணுவம் அகற்றப்பட வேண்டும்; அவர்களால் பிடித்துச் செல்லப்பட்ட எங்கள் பாலகுமார் எங்கே? எங்கள் பேபி, இளங்குமரன் எங்கே? எங்கள் யோகி எங்கே? எங்கள் புதுவை இரத்தின துரை எங்கே? உயிரோடு இருக்கின்றார்களா? கொன்று விட்டீர்களா? இல்லை, அவர்களை எங்கேனும் அடைத்து வைத்து இருந்தால் விடுவிக்க வேண்டும்.

உலகத்தின் கதவுகளைத் தட்டுகின்றோம். அதற்காகத்தான், இத்தனை நாடுகளின் வரலாறை எழுதினேன். சிங்கள இராணுவம், காவல்துறை, தமிழர் தாயகத்தில் இருந்து வெளியேற்றிய பிறகு, அங்கே ஒரு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

2011 ஜூன் 1 ஆம் தேதி, பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நகரில், ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்றக் கட்டடத்தில் நான் உரை ஆற்றுகின்ற பொழுது, எனக்குப் பதினைந்து நிமிடங்கள் ஒதுக்கி இருந்தார்கள். நான், 18 நிமிடங்கள் பேசி இருக்கின்றேன். விடுதலைப்புலிகள் ஏதேனும் ஒரு சிங்களப் பெண்ணுக்குப் பாலியல் கொடுமைகள் செய்ததாக ஒரு குற்றச் சாட்டு உண்டா? அப்படி ஒரு குற்றச்சாட்டைச் சொன்னால், அப்படி ஒரு தவறு நடந்து இருந்தால், நான் ஈழத்தைப் பற்றிப் பேசுவதை விட்டுவிடுகிறேன் என்று சொன்னேன்.

சிங்கள இராணுவத்தையும், காவல் துறையையும் தமிழர் பகுதிகளில் இருந்து வெளியேற்ற வேண்டும். அனைத்து உலக நாடுகளின் பார்வையாளர்கள் முன்னிலையில், ஒரு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அந்த வாக்கெடுப்பில், உலகின் பல நாடுகளில் பரவிக்கிடக்கின்ற ஈழத்தமிழர்கள், அந்தந்த நாடுகளிலேயே அவர்கள் வாக்கு அளிக்க வேண்டும். இதற்கான, வழிமுறைகளை வகுக்க வேண்டும் என்று கோரினேன்.

அதே உணர்வோடுதான், நரேந்திர மோடி பதவி ஏற்பு விழாவுக்கு ராஜபக்சேயை அழைத்து வந்ததால், டில்லியில் நானும் என் சகாக்களும் கருப்புக் கொடி காடடிக் கைது செய்யப்பட்டோம்.

என் வாழ்க்கையில், ஒன்றிரண்டு காரியங்கள், என் மனதுக்கு நிறைவு தருகின்றது. உலக அரங்கில், இத்தகைய கோரிக்கையை முதன் முதலாக முன் வைத்தவன் அடியேன் என்ற தகுதியோடு புழல் மத்தியச் சிறையில் என் எண்ணங்கள் சிறகு விரிகின்றன. இந்தக் கோரிக்கை சரியானது என்று, ஈழத் தமிழர்கள் ஏற்றுக் கொண்டு உள்ளனர். அந்த இலக்கை நோக்கித்தான் செல்லுகின்றோம்.

முருகதாசன் உயில்:-

2009 பிப்ரவரி 12 ஆம் தேதி. முருகதாசன் என்ற 27 வயது இளைஞன், திருமணம் செய்து கொள்ளாமல், வாழ்க்கை இன்பங்களை நுகராமல், முத்துக்குமாரைப் போல், ஈழத் தமிழர்களுக்காக மடிந்த தியாகிகளைப் போல், லண்டனில் நல்ல சம்பளத்தில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தவன், அங்கிருந்து புறப்பட்டு, ஜெனீவாவுக்குச் சென்று, ஐ.நா. மன்றத்தின் கட்டடத்துக்கு எதிரே நின்றுகொண்டு,

‘என் தமிழ்ச் சமூகம் கடமை ஆற்றவில்லை, கைவிட்டுவிட்டது ஈழத்தமிழர்களை. என் உறவுகள் செத்துக் கிடக்கின்றார்கள். அங்கே இருந்து என் உறவுகள் தொலை பேசியில் சொல்லுகிறார்கள், பக்கத்தில் பிணங்கள் கிடக்கின்றன, எங்கும் பிண நாற்றம் வீசுகின்றது, தினமும் செத்து மடிந்து கொண்டு இருக்கின்றார்கள், இதற்குப் பிறகாவது இந்த உலகம் கண் விழிக்குமா? எங்கள் மக்களைக் காப்பாற்றுமா? இதற்காக, நான் தீக்குளித்து மடிகிறேன்’ என்று முருகதாசன் மரண சாசனத்தை எழுதி வைத்துவிட்டு, நான் கடமையைச் செய்கிறேன், தமிழ்ச்சமுதாயம் கடமையில் தவறி விட்டது என்று எழுதி வைத்து விட்டுப் போனான்.

அடுத்தது என்ன?

மனித உரிமைகள் கவுன்சிலில் 47 உறுப்பு நாடுகள் உள்ளன. நீங்கள் அதிர்ச்சி அடைவீர்கள், அங்கே 2009 ஆம் ஆண்டு, சிங்களவனுக்குப் பாராட்டுத் தீர்மானம் நிறைவேற்றினார்கள். முள்ளி வாய்க்காலில் இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்றவனுக்குப் பாராட்டுத் தீர்மானம். அதை நிறை வேற்றுவதற்கு வரிந்து கட்டிக் கொண்டு போராடியது, இந்தியா, கியூபா, சீனா. இப்பொழுதும், இந்தியா துரோகம் இழைக்கிறது.

முன்பு சிங்களவனுக்கு ஆதரவாக நடந்ததற்குப் பதிலாக, அவன் பரிந்துரைகளையாவது நிறைவேற்றட்டும் என்கிறார்கள். இதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. எங்கள் கோரிக்கை, இனக்கொலை செய்தது குறித்த விசாரணை நடக்க வேண்டும். மனித உரிமைகள் கவுன்சில் அந்த முடிவுக்கு வர வேண்டும். அது நடக்கின்ற காலம் வரும். அதற்கு, இளைஞர்களை அழைக்கின்றேன்.

இந்த மடல் இளைஞர் கூட்டத்துக்காக, மாணவச் செல்வங்களுக்காக. உங்கள் ஆயுதச்சாலையில் ஒரு அம்புறாத்தூளியில் இதை நீங்கள் ஒரு ஆயுதமாக ஆக்கிக் கொள்ளுவதற்காக. நம் பக்கம் நியாயம் இருக்கின்றது. நம் குரலில் சத்தியம் இருக்கிறது. நம் கோரிக்கையின் நீதியை, இனி உலகத்தில் எவரும் மறுக்க முடியாது. சுதந்திரத் தமிழ் ஈழம் என்று உணர்ச்சிவயப்பட்டுச் சொல்லவில்லை. சிங்களவனுக்கு அடிமையாக ஏன் வாழ வேண்டும்?

இன்றைக்கு நாம் கடமை தவறினாலும், நாளைய வருங்கால இளைஞர்கள், இந்தத் தமிழகத்தின் சின்னஞ்சிறு பிள்ளைகள் வளருகின்றபோது, மான உணர்ச்சி உள்ளவர்களாக, கடந்த காலத்தை மறக்காதவர்களாக, அவர்கள் நீதியை நிலைநாட்டுவார்கள்.

எத்தனைக் குழந்தைகள், எத்தனைத் தாய்மார்கள், எத்தனை உறவுகள்? அவர்கள் எழுப்பிய மரண ஓலம். காற்றோடு கலந்து, கடல் அலைகளைக் கடந்து, நம் நெஞ்சத்தைத் தாக்க வில்லையா? இளைய சமுதாயம் எண்ணிப் பார்க்கட்டும்.

சுய நிர்ணய உரிமையும், பொது வாக்கெடுப்பும், ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல. இத்தனை தேசங்கள் மலர்ந்து இருக்கின்றன என்று சொன்னேன். அந்தப் பட்டியலில், சுதந்திரத் தமிழ் ஈழம் ஒரு புதிய நாடாகப் பரிணமிக்கும் நாள் வரும். அந்த நாளையும் என் கண்களாலேயே பார்த்துவிட மனம் ஏங்குகிறது!

இந்தக் கடிதத்தை எழுதி முடித்து, அச்சுக்கு அனுப்ப இருந்தபோதுதான் அதிர்ச்சி தரும் செய்தி வந்தது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் கிருஷ்ணாகாட் பகுதியில், பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறித் தாக்குதல் நடத்தியது மட்டும் அல்லாமல், கொல்லப்பட்ட இரண்டு இந்திய வீரர்களின் தலையைத் துண்டித்துக் கோர வெறியாட்டம் நடத்தியது என்பதே அந்தச் செய்தி. யுத்தகளங்களில் கூட இதுபோன்ற குரூரத்துக்கு இடம் இல்லை. இந்திய அரசு தனது பலத்த கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. அடுத்த மடலில் இதுகுறித்து எழுதுகிறேன்.

எழுச்சி சங்கொலிக்கும் உங்கள் பணிகள் வளரட்டும்!
பாசமுடன்,
வைகோ

ஓமன் மதிமுக இணையதள அணி 

No comments:

Post a Comment