Monday, May 15, 2017

சிறை சென்றது ஏன்? வைகோ கடிதம்-4, மக்கள் ஆட்சிக்கு மகுடமே பொது வாக்கெடுப்பு! பாகம்-5!

சிறை சென்றது ஏன்? வைகோ கடிதம்-4, மக்கள் ஆட்சிக்கு மகுடமே பொது வாக்கெடுப்பு! பாகம்-5!

தமிழனுக்கு ஒரு நாடு இல்லையே?

இந்தக் கட்டத்தில்தான், 1984 ஆம் ஆண்டு, அமெரிக்காவில் நியூ ஜெர்சியில் நடைபெற்ற ஈழத்தமிழர்கள் ஆதரவு மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்ற நான், ஐ.நா.மன்றத்தை முதன்முதலாகப் பார்த்தேன்.

நியூயார்க் நகரத்தில் அமைந்து இருக்கின்ற ஐ.நா. மன்றக் கட்டடத்தை முழுமையாகச் சுற்றிப் பார்த்தேன். அங்கே வரிசையாக அமைக்கப்பட்டு இருக்கின்ற கொடிக்கம்பங்களில், 171 நாடுகளின் கொடிகள் பறக்கின்றன. இந்தத் தரணியில், தமிழன் இல்லாத நாடு இல்லை. ஆனால், அன்றைக்கு 8 கோடி பேர்களாக இருந்த தமிழர்களுக்கு என்று, இந்த உலகில் ஒரு தனி நாடு இல்லை என்ற ஏக்கத்தை வெளிப்படுத்தி, நியூயார்க் நகரில் இருந்து டெட்ராய்ட் நகருக்குச் சென்ற நான் அங்கிருந்து, தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் 690 நண்பர்களுக்கு எழுதிய கடிதங்களை அவர்கள் இன்னமும் பாதுகாத்து வைத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

ஏக்கப் பெருமூச்சோடு, கவலை நிறைந்த கனத்த இதயத்தோடு, ஏக்க விழிகளோடு, இந்த ஐ.நா. மன்றக் கட்டடத்துக்கு முன்னால் நடக்கின்றபோது, இத்தனை நாடுகளின் கொடிகளை நான் பார்க்கின்றேன்; ஆனால், இந்த உலகத்துக்கே நாகரிகத்தை, பண்பாட்டை, அரசை, நெறியை, மானத்தைக் கற்றுக் கொடுத்த, உலக நாடுகளில் எல்லாம் வணிகம் செய்த, வீரத்தால் சிறந்த, இன்றைக்கு உலகத்தின் ஒரு பகுதியில் நாதி அற்றுச் செத்துக் கொண்டு இருக்கின்ற தமிழர்களுக்கு ஒரு தனி நாடு இல்லையே? என்று நான் கவலைப்பட்டேன்.

அடுத்து, 1990 ஜனவரி 1 முதல், 1999 டிசம்பர் 31 வரை. ஐ.நா. உறுப்பு நாடுகள், 204 ஆகி விட்டன. அங்கீகரிக்கப்பட்ட நாடுகளின் எண்ணிக்கை, 175 ஐத் தாண்டி விட்டது.

அடுத்து, புத்தாயிரம் பிறந்து விட்டது. 2000 மலர்ந்துவிட்டது. 2009 டிசம்பர் 31 வரையிலும், 213 நாடுகளுள், ஏறத்தாழ 193 நாடுகள் இறையாண்மை பெற்ற தனி நாடுகளாக அங்கீகரிக்கப்பட்டு விட்டன.

இரண்டு நாடுகளுக்கு வாக்கு அளிக்கும் உரிமை இல்லை. வந்து அமரலாம்; வாதங்களைப் பாக்கலாம். Observer Status. ஒன்று, பாலஸ்தீனம்; மற்றொன்று, வாடிகன் நகரம். இன்னமும், 11 நாடுகள், ஐ.நா. மன்றத்தில் சுதந்திர நாடுகளாக உரிமை பெறுவதற்கு முயற்சித்துக் கொண்டு இருக்கின்றன. வடக்கு சைப்ரஸ். துருக்கியின் பிடியில் இருந்து விடுபடத் துடிக்கின்றது. கொசோவாவின் விடுதலை இன்னமும் அங்கீகரிக்கப்படவில்லை.

சோமாலியா லாண்ட், தைவான், தெற்கு ஒசேட்டியா ஆகியவை அந்த வரிசையில் வருகின்றன. ஜார்ஜியாவில் இருந்து, சின்னஞ்சிறு பகுதியான தெற்கு ஒசேட்டியா, நாங்கள் சுதந்திரமாக வாழ வேண்டும்; தனி நாடாக ஆக வேண்டும் என்று போராடுகிறது. 2011 மக்கள்தொகைக் கணக்கின்படி, அங்கே மொத்த மக்கள் தொகையே, 55 ஆயிரம் பேர்கள்தாம். 1990 ஆம் ஆண்டிலேயே, இவர்கள் ஒரு பொது வாக்கெடுப்பை நடத்துகின்றார்கள்.

ஜார்ஜியா, ரஷ்யாவை விட்டு வெளியேறுகின்றது. அந்த ஜார்ஜியாவில் இருந்து இவர்கள் தனிநாடு ஆக வேண்டும் என்கிறார்கள். என்ன காரணம்? ‘நாங்கள் தனி இனம். எங்களுக்கு என்று தனி இன வரலாறு இருக்கின்றது. ஜார்ஜியாவின் ஆதிக்கத்தின்கீழ் இருக்க நாங்கள் விரும்பவில்லை’ என்கிறார்கள். அதற்காக ஆயுதப் புரட்சி நடத்தினார்கள். கவனிக்க வேண்டும்.

இந்தக் கட்டத்தில், ரஷ்யா, தெற்கு ஒசேட்டியாவுக்கு ஆதரவாக நிற்கின்றது. போர் நிறுத்தம் வருகின்றது. 92 இல் அவர்கள் வாக்கெடுப்பு நடத்துகின்றார்கள். அதை உலக நாடுகள் ஏற்கவில்லை. இப்போது, 2008 நவம்பர் 12 இல், அதே தெற்கு ஒசேட்டியாவில் ஒரு பொது வாக்கெடுப்பு நடந்தது. பார்வையாளர்களாக 34 பேர். ஜெர்மனி, ஆஸ்திரியா, போலந்து, ஸ்வீடன் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

95 விழுக்காடு வாக்காளர்கள் வாக்கு அளித்து, அவர்களுள் 99 விழுக் காட்டினர், தனிநாடாக ஆவதற்கு ஆதரவு அளித்தனர். இந்தப் பொது வாக்கெடுப்பை ரஷ்யா முதலில் ஏற்றுக் கொள்ளவில்லை. ஒன்றிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்றுக் கொண்டது.

வெனிசூலா ஏற்றுக்கொண்டது; நிகரகுவா ஏற்றுக் கொண்டது. நேட்டோ நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியமும் எதிர்க்கின்றன. பிரச்சினை அந்த அளவிலேயே இருக்கின்றது. இன்னமும், 11 நாடுகள், ஐ.நா. அங்கீகாரத்தைப் பெறக் காத்துக்கொண்டு இருக்கின்றன. 55000 மக்கள் தொகையைக் கொண்ட தெற்கு ஒசேட்டியாவும், அந்தப் பட்டியலில் இருக்கின்றது.

தோழர்களே, அயர்லாந்து நாட்டில் புரட்சி எழுந்தது. யேமன் டிவேலரா போரிட்டதும், நாடாளுமன்றத்துக்கு உள்ளே சென்றதும், இரண்டாவது முறை மன்னர் பெயரால் விசுவாசப்பிரமாணம் எடுத்துக் கொண்டதும், அவர்கள் உறுதி மொழி எடுத்துக் கொண்டதும், உடனே வெளியேறியது. பின்னர் அது தனி நாடாக மலர்ந்தது. அது ஒரு பக்கம்.

நம்பிக்கை கொள்வோம்:-

நான் இதையெல்லாம் எழுதுவதற்குக் காரணம் உண்டு. நம்பிக்கை இழக்கக் கூடாது. பிரபாகரன் ஆயுதம் ஏந்தியதைச் சிலர் விமர்சிக்கின்றார்களே, நான் சொல்லுகிறேன்; இத்தாலியின் பிடியில் இருந்து எத்தியோப்பியா விடுதலை பெற்றது. அதில் இருந்து ஆறு இலட்சம் மக்களை மட்டுமே கொண்ட எரித்ரியாவுக்கு, முதலில், சுயாட்சி அதிகாரம் தருகிறோம் என்று சொல்லி ஏமாற்றினார்கள். எரித்ரியாவில் ஆயுதப் போராட்டம்தான் நடைபெற்றது. எரித்ரியர்களை நசுக்குவதற்கு, சோவியத் ரஷ்யா, எத்தியோப்பியாவுக்கு ஆயுதம் கொடுத்தது. 1,20,000 எத்தியோப்பிய இராணுவத்தினர், எரித்ரிய விடுதலைப் படையை நசுக்க முயன்றார்கள். அதனால், எரித்ரிய விடுதலைப்படை பின்வாங்கியது. சில தோல்விகள் ஏற்பட்டன. ஆனால், 1984 ஆம் ஆண்டு அவர்கள் திரும்பத் தாக்கி, அசரியா என்ற இடத்தில், 40 விமானங்களைத் தவிடுபொடியாக ஆக்கினார்கள். அதைப்போலத்தான், கொழும்பு விமான நிலையத்தில் நின்றுகொண்டு இருந்த விமானங்களை, பிரபாகரனின் படை தாக்கி அழித்தது.

93 ஏப்ரலில் எரித்ரியாவில் பொது வாக்கெடுப்பு. தனி நாடாக அங்கீகரித்து விட்டது. உலகம் அதை ஏற்றுக் கொண்டது; ஐ.நா. இடம் அளித்தது.

இத்தனை நாடுகள் பிரிந்து இருக்கின்றதே, நான் கேட்கிறேன்; ஸ்லோ வேனியாவிலே பாலியல் கொடுமைகள் நடந்தனவா? குரேஷியாவில் இனப்படு கொலை நடந்ததா? மால்டோவாவில் இனப் படுகொலை நடந்ததா? நோர்வே, ஐஸ்லாந்துக்கு என்ன குறை? எதுவும் நடக்கவில்லையே? ‘நாங்கள் தனி இனம்; எனவே, நாங்கள் பிரிந்து போகிறோம்’ என்று போய்விட்டார்களே? புதிய புதிய நாடுகள் மலர்ந்து கொண்டே இருக்கின்றனவே?

அவற்றையெல்லாம் விட ஆயிரம் மடங்கு நியாயமான காரணங்கள் தமிழ் ஈழத்துக்கு இருக்கின்றன. இலட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப் பட்டார்களே?

கிழக்குத் தைமூரைப் பற்றிச் சொன்னேன். இந்தோனேசிய நாடு, முதலில் போர்ச்சுகல் நாட்டின் ஆதிக்கத்துக்கு உள்ளே இருந்தது. பின்னர் விடுதலை பெற்றது. இந்தோனேசியாவின் ஆயிரக்கணக்கான தீவுகளுக்கு உள்ளே ஒரு தீவுதான் கிழக்குத் தைமூர். அது தனிநாடாக விரும்பியது. இளைஞர்கள் ஆயுதம் தாங்கிப் போராடினார்கள். அப்போது, முன்பு இந்தோனேசியாவை ஆண்ட போர்ச் சுகல் சொன்னது; அவர்கள் கேட்பது நியாயம். உங்களோடு இருக்க அவர்கள் விரும்பவில்லை. அவர்கள் தனிநாடாக ஆகட்டும் என்று, இந்தோனேசியாவோடு, போர்ச்சுகல் ஒப்பந்தம் போடவில்லையா? அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் பொது வாக்கெடுப்பு நடந்தது; கிழக்குத் தைமூர் தனி நாடாக ஆனது.

இங்கிலாந்துதான் பொறுப்பு:-

இதைத்தான், 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் நாள், நான் நெஞ்சார நேசிக்கின்ற பிரபாகரன் பிறந்த நாளில், லண்டன் மாநகரில் நாடாளுமன்ற வளாகத்திற்குள் இருக்கின்ற ஒரு அரங்கத்தில், பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமர்ந்து இருந்த அந்தக் கூட்டத்தில் சொன்னேன்.

ஈழத்தமிழர்கள் ஒரு தனி தேசிய இனம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, தனி அரசு அமைத்து வாழ்ந்தவர்கள். அந்தத் தீவுக்கு ஒல்லாந்தர்கள் வருவதற்கு முன்பு, போர்த்துகீசியர்கள் வருவதற்கு முன்பு, நீங்கள் அங்கே கால் பதிப்பதற்கு முன்பு, அவர்கள் தனி அரசு அமைத்து ஆட்சி நடத்தி வந்தார்கள். ஆனால், நீங்கள், உங்கள் நிர்வாக வசதிக்காக, தமிழர்கள், சிங்களர்கள் என இரண்டு தனித்தனித் தேசிய இனங்களையும், உங்கள் அதிகார நுகத்தடிக்கு உள்ளே, ஒரே அமைப்பாகக் கொண்டு வந்து விட்டீர்கள்.

1948 ஆம் ஆண்டு, பிப்ரவரி 4 ஆம் நாள், இலங்கைத் தீவுக்கு விடுதலை அளித்து விட்டு வெளியேறினீர்கள். ஆனால், எங்கள் மக்களைக் காவு கொடுத்து விட்டீர்கள். சிங்களவனின் அடிமைப் பிடிக்கு உள்ளே சிக்க வைத்து விட்டீர்கள். அவன், எங்கள் தமிழர்களின் மொழி உரிமையை மறுத்தான். சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என்றான். இந்திய வழித்தோன்றல்களான பத்து இலட்சம் தமிழர்களின் குடி உரிமையைப் பறித்தான். அவர்கள் 100, 150 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலிருந்து சென்றவர்களின் வழித்தோன்றல்கள்.

ஆனால், அந்த மண்ணிலேயே பிறந்தவர்கள். தங்கள் இரத்தத்தை, வியர்வையைக் கொட்டி, இலங்கையை வளப்படுத்தியவர்கள். அவர்களுடைய குடி உரிமையைப் பறித்தார்கள். சம உரிமை என ஈழத் தமிழர்கள் நியாயம் கேட்டார்கள். இராணுவத்தைக் கொண்டு அவர்களை நசுக்கினார்கள். கோவில்கள், வழிபாட்டுத் தலங்களை இடித்தார்கள். தமிழர்களின் மொழியை ஒடுக்கினார்கள். சம உரிமை உள்ளவர்களாக ஈழத்தமிழர்கள் அங்கே வாழ முடியவில்லை. நீதி கேட்டவர்களுக்கு, இராணுவம் துப்பாக்கித் தோட்டாக்களையே பரிசாகக் கொடுத்தது. தமிழர்களின் குழந்தைகள் கொல்லப்பட்டனர். தமிழ்ப் பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்தார்கள். அவர்களையும் கொன்று குவித்தார்கள். இதற்கெல்லாம் காரணம் நீங்கள்தான் என்று, அவர்களிடமே சொன்னேன்.

மன்னிக்க வேண்டும் இப்படிச் சொல்லுவதற்காக, உங்களால்தான் ஏற்பட்டது இந்த நிலைமை. நீங்கள்தான் சிங்களவனிடம் ஈழத்தமிழர்களை அடிமைகளாக ஆக்கிவிட்டுப் போய்விட்டீர்கள்.

கிழக்குத் தைமூர் பிரச்சினையில் போர்ச்சுகல் நாட்டுக்குப் பொறுப்பு இருந்ததைப் போல, ஈழத்தமிழர்களைப் பொறுத்த மட்டில், உங்களுக்குப் பொறுப்பு இருக்கின்றது. எனவே, தமிழ் ஈழம் அமைவதற்கு, நீங்கள் ஏற்பாடு செய்யுங்கள். தமிழர்களின் தாயகப் பகுதிகளில் இருந்து சிங்களவர்களை வெளியேறச் சொல்லுங்கள் என்றேன்.

ஸ்காட்லாந்து பொது வாக்கெடுப்பு:-

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் நிறைவேறியது. கேட்டால், வியப்பு அடைவீர்கள். ஆம்; ஸ்காட்லாந்து, தனியாகப் பிரிந்து செல்லுவதற்கு, பொது வாக்கெடுப்பு நடத்துவதற்கு, பிரித்தானிய நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. 2014 இல் அந்தப் பொது வாக்கெடுப்பு நடந்தது.

மொத்தம் பதிவான வாக்குகள் 36,19,915

பிரிந்து செல்ல ஆதரவு - 16,17,989 - (44.70 விழுக்காடு)

பிரிந்து செல்ல எதிர்ப்பு - 20,01,926 (55.30 விழுக்காடு)

இத்தனைக்கும், ஸ்காட்லாந்து மக்கள் என்ன பிரித்தானியர்களால் அடிமைப் படுத்தப்பட்டு இருக்கின்றார்களா? அன்றைக்கு வில்லியம் வாலஸ் வாளை உருவிய காலம் வேறு. ராபர்ட் புரூஸ் படையெடுத்துத் தோல்வி கண்டு, சிலந்தி வலையின் மூலமாகப் பாடம் பெற்று, மீண்டும் படை திரட்டி, ஏழாவது முறை வென்று, ஸ்காட்லாந்து தனி அரசை நிறுவிய காலம் வேறு. ஆனால், இன்றைக்கு ஸ்காட்லாந்து மக்கள் தனி நாடாளுமன்றம் அமைத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

முடியரசு ஒன்றியம் (United Kingdom) என்ற அமைப்புக்கு உள்ளே, இங்கிலாந்து மக்களோடு சம உரிமை பெற்றவர்களாக வாழ்கின்றார்கள். அவர்களுக்கு எதற்குத் தனி நாடு?

தமிழர்களுக்கு ஏன் தனிநாடு வேண்டும்? என்று கேட்கின்ற நண்பர்களுக்குச் சொல்லுகின்றேன். ஸ்காட்லாந்து மக்களுக்கு எந்தத் துன்பமும் இல்லை. விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன் பட்டம் வென்ற ஆண்டி முர்ரே ஒரு ஸ்காட்லாந்துக்காரர். அவரது வெற்றியை இங்கிலாந்தும் கொண்டாடியதே!

நான் ஒரு முறை லண்டனில் இருந்து விமானத்தில் சென்று கொண்டு இருந்த போது, என் பக்கத்து இருக்கையில் அமர்ந்து இருந்தவரோடு பேசிக்கொண்டு இருந்தேன். ‘நீங்கள் பிரிட்டிஷ்காரரா?’ என்று கேட்டேன். அதைக் கேட்டவுடன், அவருக்கு எவ்வளவு கோபம் என்று நினைக்கின்றீர்கள்? நான் கேட்டு முடிப்பதற்கு உள்ளாகவே, கன்னத்தில் அடித்தாற் போல அவர் சொன்னார்: I am not a British. I am a Scottish. நான் ஒன்றும் இங்கிலாந்துக்காரன் இல்லை, நான் ஒரு ஸ்காட்லாந்துக்காரன் என்று. அதைக் கேட்டு நான் அதிர்ந்து விட்டேன்.

ஸ்காட்லாந்து பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகவில்லை; அவர்களுடைய குழந்தைகள் கொல்லப்படவில்லை. ஆனால், அவர்கள், தனிநாடாக பிரிந்துசெல்லப் பொது வாக்கெடுப்பு.

மீண்டும் ஒரு பொது வாக்கெடுப்பு ஸ்காட்லாந்தில் நடக்கும் என்று ஸ்காட்லாந்து தலைவர் நிக்கோலோ ஸ்டர்ஜியான் அறிவித்து விட்டார். இம்முறை ஸ்காட்லாந்து தனி நாடாகும்.

தொடருகிறது...

ஓமன்மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment