Monday, May 15, 2017

சிறை சென்றது ஏன்? வைகோ கடிதம்-4, மக்கள் ஆட்சிக்கு மகுடமே பொது வாக்கெடுப்பு! பாகம்-6!

ஈழத்தின் நியாயம்:-

நான் உலகத்தின் மனசாட்சியின் கதவுகளைத் தட்டுகின்றேன். எங்கள் இனம் அழிக்கப்படுகின்றபோது, எங்கள் இனம் கரு அறுக்கப்படுகின்றபோது, எங்கள் குழந்தைகள் கொல்லப்பட்டதற்குப்பிறகு, இலட்சக்கணக்கானவர்கள் பட்டினி போட்டுக் கொல்லப்பட்டதற்குப் பிறகு, மருத்துவமனைகள் மீது குண்டுகளை வீசிக் கொல்லப்பட்டதற்குப் பிறகு, மருந்துகள் இன்றிச் செத்ததற்குப்பிறகு, ஏழு வல்லரசுகளின் ஆயுத உதவிகளைக் கொண்டு, எவராலும் வெல்ல முடியாத விடுதலைப்புலிகளின் படையைப் போரில் பின்னடையச் செய்வதற்கு ஒரு வல்லரசாகிய இந்தியா ஆயுதம் கொடுத்து உதவியதற்குப் பிறகு, தமிழர் தாயகத்தில் சிங்களவன் குடியேற்றம் நடக்கின்ற போது, எங்கள் கோவில்களில் அவன் சிங்கள பௌத்த விகாரைகளைக் கட்டுகின்றபோது, எங்கள் பெயர்களை அழிக்கின்றபோது, எங்கள் கல்லறைகளை இடித்து விட்டு, சிங்களப் படை முகாம்களை அமைக்கின்றபோது, எங்கள் மொழியை அழித்து விட்டு, அவன் மொழியில் எழுதுகிறபோது, இனி எப்படிச் சேர்ந்து வாழ முடியும்?

எங்கள் பாட்டனுக்குப் பாட்டனுக்குப் பாட்டனுக்குப் பாட்டன், வேலும் வாளும் தாங்கி, மரக்கலங்களில் சென்று வாழ்ந்த அந்தக் காலத்துக்குப் பிறகு, தமிழனின் வீரத்தை நிலை நாட்டியவர்களின் வழித் தோன்றல்களாகிய நாங்கள் முழங்குகிறோம் தனி ஈழமே தீர்வு என்று.

இன்றைக்கு அகிலத்தின் குரல் கேட்கின்றபோது, 2 இலட்சத்து 52 ஆயிரம் மக்கள் தொகையைக் கொண்ட நியூ கேலடோனியா என்ற ஒரு பசிபிக் பெருங்கடல் தீவு ஒன்று, பிரெஞ்சு ஆதிக்கத்துக்கு உள்ளே இன்றைக்கும் இருக்கின்றது. அங்கே பொது வாக்கெடுப்பு நடக்கப் போகின்றது. ஐ.நா. அறிவித்து இருக்கின்றது. 2019 க்குள், அவர்கள் சுதந்திர நாடாக இருப்பதற்காகப் பொது வாக் கெடுப்பு நடக்கப் போகின்றது.

அடுத்து போகெய்ன்வில்லா என்று ஒரு சிறு நாடு. பூக்களைத் தூவுகின்ற மரத்தின் பெயர். அது, பபுவா நியூ கினியா (Papuva New Guinea) ஆதிக்கத்துக்குள் இருக்கின்றது. மொத்த மக்கள் தொகை 1 இலட்சத்து 50 ஆயிரம் பேர். அங்கே பொது வாக்கெடுப்பு நடக்கப்போகின்றது.

1975 இல், தந்தை செல்வா அவர்கள்,

‘எங்களுக்கு இங்கே உரிமைகள் மறுக்கப்படுகின்றன; எனவே, எங்கள் மக்கள் இனி உங்களோடு சேர்ந்து இருக்க முடியாது; எங்களை நசுக்குகின்றீர்கள்; நாங்கள் ரோமானிய அடிமைகள் அல்ல; நாங்கள் சுதந்திரமாக வாழ விரும்புகிறோம்; அதற்காக, நான் எனது நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பை விட்டு விலகுகிறேன். சிங்களவர்களுக்கு நான் சவால் விடுகின்றேன்: அதே காங்கேசன்துறை தொகுதியில் நடைபெறும் இடைத் தேர்தலில் நான் மீண்டும் போட்டி இடுவேன். சுதந்திரத் தமிழ் ஈழ தேசம் என்பதையே என் மூல முழக்கமாக வைத்துப் போட்டி இடுகிறேன். மக்கள் அதை ஏற்றுக் கொள்வதாக இருந்தால் எனக்கு வாக்கு அளிக்கட்டும். இல்லை, என் கருத்து தவறு என்றால், மக்கள் என்னைத் தோற்கடிக்கட்டும்’ என்றார்.

ஆனால், இரண்டு ஆண்டுகள் அங்கே தேர்தலை நடத்தாமல் தள்ளிப்போட்டது சிங்கள அரசு. கடைசியில், வேறு வழி இன்றித் தேர்தலை நடத்தியது. 78 விழுக்காடு மக்கள், தந்தை செல்வாவை ஆதரித்து வாக்கு அளித்தனர். ‘சுதந்திரத் தமிழ் ஈழக் கோரிக்கையை மக்கள் ஏற்றுக்கொண்டு விட்டார்கள்’ என்று அவர் அறிவித்தார். நாடாளுமன்றம் சென்றார். 14 நாடாளுமன்ற உறுப்பினர்களோடு, சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கான அறிவிப்பை வெளியிட்டு விட்டு, நாடாளுமன்றத்தை விட்டு வெளியே வந்தார்.

வட்டுக்கோட்டை பிரகடனம்:-

அனைத்துத் தமிழ் அமைப்புகளின் கூட்டத்தை 1976 இல் வட்டுக்கோட்டையில் பண்ணாகம் என்ற இடத்தில் கூட்டினார். மே 14 ஆம் நாள். அங்கே ஒரு தீர்மானத்தை நிறை வேற்றினார். அதுதான், புகழ் பெற்ற வட்டுக்கோட்டை பிரகடனம் ஆகும்.

அந்தத் தீர்மானத்தைத் தொடங்கிய முதல் சொல்லில் இருந்து கடைசிச் சொல் வரை, ஒரு நிறுத்தற்குறி கூடக் கிடையாது; ஒரு முற்றுப்புள்ளி கிடையாது. தமிழர்கள் எவ்வளவு கூர்த்த மதி படைத்தவர்கள், அறிவு ஆற்றல் நிறைந்தவர்கள் என்பதை அந்தத் தீர்மானம் எடுத்துக் காட்டும். அற்புதமாக வடித்து இருக்கின்றார்கள். சுதந்திரமான இறையாண்மை உள்ள, மதச்சார்பு அற்ற, தமிழ் ஈழ சமதர்மக் குடியரசு; அதுவே எங்கள் இலக்கு என்று பிரகடனம் செய்து இருக்கின்றார்கள்.

இனி, இளைஞர்கள் முன்னெடுத்துச் செல்லட்டும் என்று அறிவித்தார் தந்தை செல்வா.

ஈழத்தில் பொது வாக்கெடுப்பு முடிந்து விட்டது:-

இதற்குப்பிறகு, 77 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடக்கின்றது. தந்தை செல்வா வழிகாட்டிய பாதையில், சுதந்திரத் தமிழ் ஈழம் என்ற கொள்கையை முன்வைத்துத் தமிழர் கூட்டணி தேர்தலைச் சந்தித்தது. 19 இடங்களில் போட்டியிட்டு, 18 இடங்களில் வெற்றி பெற்றனர். 90 விழுக்காடு தமிழ் மக்கள் இந்தக் கூட்டணியை ஆதரித்து வாக்கு அளித்தார்கள். இதுதான், பொது வாக்கெடுப்பு.

காஷ்மீரில் மூன்று சட்டமன்றத் தேர்தல்கள் வழியாக நாங்கள் நடத்தி விட்டோம்; அதுதான் பொது வாக்கெடுப்பு, என்று இந்தியப் பிரதிநிதி முகமது கரீம் சாக்ளா, ஐ.நா. சபையில் சொன்னார் அல்லவா? தேர்தலே பொது வாக்கெடுப்புதான் என்றார் அல்லவா? அதுபோல, 1977 ஆம் ஆண்டு, இலங்கை நாடாளுமன்றத் தேர்தலே ஒரு பொது வாக்கெடுப்புதான். 95 விழுக்காடு தமிழ் மக்கள், நாங்கள் ஒரு சுதந்திர நாட்டை அமைத்து வாழ விரும்புகிறோம் என்பதைப் பதிவு செய்ததே, ஒரு பொது வாக்கெடுப்புதான்.

அடுத்து, 1983 ஆம் ஆண்டு, அங்கே உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற்றன. இந்தத் தேர்தலில் தமிழ் மக்கள் பங்கு ஏற்க வேண்டாம் என்று, விடுதலைப்புலிகள் கோரிக்கை விடுத்தனர். 99 விழுக்காடு தமிழ் மக்கள் வாக்கு அளிக்க வில்லை. அதுவும் ஒரு பொது வாக்கெடுப்புதான்.

84 இல் (2004) இல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் தலைமையை ஏற்றுக் கொண்டோம் என்று அறிவித்த தமிழர் கட்சிகள், 23 தொகுதிகளில் போட்டியிட்டு, 22 இடங்களில் வெற்றி பெற்றன. 95 விழுக்காடு தமிழ் மக்கள் ஆதரித்தனர். அதுவும் பொது வாக்கெடுப்புதான்.

2005 ஆம் ஆண்டு, குடியரசுத் தலைவர் தேர்தல். இந்தத் தேர்தலில் வாக்கு அளிக்க வேண்டாம் என்று விடுதலைப் புலிகள் கேட்டுக் கொண்டனர். 95 விழுக்காடு தமிழ் மக்கள் வாக்கு அளிக்கவில்லை. இராணுவ அடக்குமுறையால், 1.23 விழுக்காடு மக்கள் யாழ்ப்பாணத்தில் வாக்கு அளிக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர். அதுவும் பொது வாக்கெடுப்புதான்.

இத்தனை பொது வாக்கெடுப்புகள் நடத்தப்பட்டுவிட்டன. இன்றைக்கு, தமிழர் பகுதிகளில் சிங்களர்களைக் கொண்டு வந்து குடி அமர்த்துகின்றார்கள். மானத்தோடு சுதந்திரமாக வாழ்வதற்காகத் தான் தமிழர்கள் ஆயுதம் ஏந்தினார்கள், இரத்தம் சிந்தினார்கள். எனவே, தமிழ் ஈழம் அமைப்பதற்காகப் பொது வாக்கெடுப்பு நடத்துங்கள் என்று ஐ.நா. வின் கதவுகளைத் தட்டுகின்றோம்.

யாராவது, ஈழத்தில் போர் முடிந்து விட்டது என்றோ, தமிழ் ஈழக்கோரிக்கை ஒடுங்கி விட்டது என்றோ நினைத்தால், அவர்கள் வரலாறைச் சரியாகப் புரிந்து கொள்ளாதவர்கள். ஈழத்தமிழர்கள் செய்த உயிர்த்தியாகம், சிந்திய செங்குருதி அவர்களது கோரிக்கையை வெற்றி பெறச் செய்யும்.

தமிழகம்தான் காரணம்:-

ஈழத்தில் இவ்வளவு துயரங்களுக்கும் யார் காரணம் தெரியுமா? இந்தத் தமிழகம்தான் காரணம். மேற்கு நாடுகளைச் சேர்ந்தவர்களோடு பேசுகின்றபோது, அவர்கள் என்னிடம் கேட்கின்ற கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை; வெட்கித் தலைகுனிய வைக்கின்றன. உலகத்தில் மனித உரிமைகள் அழிக்கப்பட்டால், எல்லா இன மக்களும் சேர்ந்து அவர்களை ஆதரிக்கின்றார்களே, நீங்கள் ஏழு கோடிப் பேர் தமிழ்நாட்டில் வாழுகின்றீர்களே? இன அடிப்படையில், இரத்த உறவுகள் கொண்டவர்கள்தானே? நீங்கள் ஏழு கோடிப் பேர் இங்கே இருந்தும், அங்கே இவ்வளவு படுகொலைகள் எப்படி நடக்க முடிந்தது? அவர்களைப் பாதுகாக்க வேண்டியது நீங்கள்தானே? என்று அவர்கள் கேட்கின்றார்கள்.

ஒருவேளை, இந்த ஏழு கோடிப் பேர் இல்லை என்றால், அவர்களுக்கு உலகத்தின் பல நாடுகளின் ஆதரவு கிடைத்து, தமிழ் ஈழம் என்றோ மலர்ந்து இருக்கும். இந்த ஏழு கோடிப் பேர் வாழுகின்ற இந்தியாவைக் கடந்து, அனைத்து உலக நாடுகள் இந்தப் பிரச்சினையில் தலையிடாது; நீங்கள் ஏழு கோடிப் பேர் இந்தியாவில் இருப்பதால், உங்களுக்கு இல்லாத அக்கறை நமக்கு எதற்கு என்ற எண்ணத்தை, இந்தியா ஏற்படுத்துகின்றது.

இலங்கையில் இருக்கக்கூடிய தமிழர்கள் பிரச்சினைகளை, நாங்கள் பேசித் தீர்த்துக் கொள்வோம். நாங்கள் சிங்கள அரசுக்கு ஆலோசனைகளைச் சொல்லுவோம். நாங்கள் இதுவரை எப்படித் தமிழர்களைக் கொல்லுவது என்று ஆலோசனைகள் கொடுத்து, திட்டங்களை வகுத்துக் கொடுத்து, தளபதிகளை அனுப்பி, படைகளை அனுப்பி, தளவாடங்கள் கொடுத்து நாங்கள் கொன்றோம். இனி என்ன செய்வது? என்று நாங்கள் பார்த்துக் கொள்வோம். நீங்கள் ஏன் மூக்கை நீட்டுகின்றீர்கள்? என்று சொல்லுவதற்காகத்தான் என்று கொடியவன் ராஜபக்சேயை, புத்த கயாவுக்கும், திருப்பதிக்கும் அழைத்துக் கொண்டு வந்தார்கள்.

எதற்காக அழைத்து வருகின்றார்கள்?

இராஜபக்சேயை அழைத்து வந்தது நியாயம் தானா? சாஞ்சி அறப்போர்க் களத்தின்போது, இலட்சக்கணக்கான எங்கள் தமிழ் மக்களைக் கொன்றவனை, இங்கே அழைத்து வருவது நியாயம் தானா? என்று, வட இந்தியச் செய்தியாளர்கள், தொலைக்காட்சி ஊடகங்களின் வாயிலாக நான் கேட்டேன்.

கொலைகாரனை புத்த கயாவுக்கு அழைத்து வருகின்றீர்களே, அவன் காலடிபட்டால், புத்தரின் எலும்புகள் கூட நடுங்குமே? தமிழர்களின் குருதி படிந்த கரங்களோடு வருகின்றானே? அவனை அழைத்து வருவது நியாயம்தானா? கேள்வி கேட்பார் இல்லையா? நாங்கள் அநாதைகளா? நாங்கள் இந்தியக் குடிமக்கள்தானா? 500 க்கும் மேற்பட்ட எங்கள் தமிழக மீனவர்களைக் கொன்று விட்டானே, நாங்கள் இந்தியக் குடிமக்கள்தானா?

2000 இந்துக் கோவில்களை உடைத்து நொறுக்கியவன், திருகோணமலை சிவன் கோவில் தேரை, அழகாக வடித்த தச்சர்களின் மணிக்கரங்களை வெட்டிக் கொன்றவன், முருகன் கோவிலுக்குப் பக்கத்தில் பௌத்த விகாரைகளை எழுப்புகிறவன், துர்க்கை, காளி கோவில்களை உடைத்தானே, திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் அவனுக்கு என்ன வேலை?அவனை இங்கே அழைத்து வருவது நியாயம் தானா? எதற்காக அழைத்து வந்தார்கள்?

தொடருகிறது...

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment