Thursday, May 25, 2017

சிறை சென்றது ஏன்? வைகோ கடிதம்-6! சுழலும் உலகில் நிகழும் திருப்பங்கள்! பாகம்-2!

வெறுப்பைக் கக்கும் செய்தியாளர்:-

பிறர் துக்கத்தில் பங்கெடுக்கும் மனித நேயம் கொண்டவன் நான். இரண்டு மாதங்கள் இருக்கலாம். நான் மதிக்கின்ற நாளேடு, தமிழிலும் வருகிறது. அதில் பொருள் பொதிந்த கட்டுரைகள் வரும். நான் விரும்பி வாசிப்பேன். ஏன் வைகோவைக் கட்டிக் கொண்டு அழுகிறார்கள் என்று அங்கலாய்ப்புடன் ஒருவர் எழுதியதையும் ரசித்தேன். திராவிட இயக்கம் குறித்தும், இன்று நாடெங்கும் ஓங்கி வரும் மதவாதம் குறித்தும், சமீபத்தில் அவர் எழுதிய கட்டுரைகள் அனைத்தும் சிறப்பானவை.

அந்த நாளேட்டில் ஒரு செய்தி. எழுத்தாளர் அசோகமித்திரன் மறைவுக்கு, அவர் சடலத்துக்கு மாலை வைக்க வராத அரசியல்வாதிகள் என்று சில பெரிய தலைவர்களின் பெயர்களை எல்லாம் குறிப்பிட்டு இருந்தார். அதில் எனக்குக் கொடுத்த அடைமொழிதான் பிரமாதம். சேக்ஸ்பியர் என்றும் பெர்னார்ட்ஷா என்றும் அடிவயிறு வலிக்கக் கத்துகின்ற வைகோவும் வரவில்லை என்று எழுதி, எனக்கு இல்லாத பெருமையைத் தந்துள்ளார். சேக்ஸ்பியரின் காவியங்கள் அனைத்தையும் கரைத்துக் குடித்தவன் அல்ல. பெர்னார்ட்ஷாவின் அனைத்து நூல்களையும் படித்த பெரும்புலவனும் கிடையாது. இருந்தாலும், என் மீது காரணம் இல்லாத ஒரு வெறுப்பு கசப்பு எரிச்சல் ஏளனம் இப்படிப்பட்ட மேதைகளுக்கு ஏனோ ஏற்பட்டு இருக்கின்றது. அசோகமித்திரன் மறைந்தபோது ரத்து செய்ய முடியாத நிகழ்ச்சிகளில் பயணத்தில் இருந்தேன். சென்னை வந்தவுடன் அசோகமித்திரன் அவர்கள் இல்லத்திற்குச் சென்று அவரது துணைவியாருடனும், புதல்வருடனும் இரண்டரை மணி நேரம் உரையாடிக் கொண்டு இருந்தேன் என்பதை நான் தம்பட்டம் அடிப்பது மலிவான வேலை. எழுத்தாளர் வல்லிக்கண்ணன் மறைந்தபோது எவருமே வரவில்லை. வைகோதான் வந்து மரியாதை செலுத்தினான் என்பது ஒரு சிலருக்குத் தெரியும். வார்த்தைச் சித்தர் வலம்புரி ஜான் மறைந்தபோது அந்த வீட்டில், அம்மாபெரும் சிந்தனையாளனின் உடலில் ஈக்கள் மொய்த்துக் கொண்டு இருந்தன. நண்பர் பத்திரிகையாளர் மை.பா. நாராயணனும், வலம்புரியாரின் நண்பர் கிருஷ்ணகுமார் மட்டுமே இருந்தனர். மகா கவிஞன் பாரதியாரின் இறுதி யாத்திரையில் 12 பேர், திருப்பூர் குமரனுக்கு அதுகூட இல்லை என்பதை நான் அறிவேன்.

ஆனால் 50 கார்களில் கழகத் தோழர்களைத் திரட்டி, வலம்புரி ஜான் அவர்களின் சடலத்தை மலர்களால் அலங்கரித்து, சாந்தோம் கத்தோலிக்கத் தேவாலயத்தில் இறுதி ஜெபங்கள் நடத்தி, ஆயிரம் பேர்களுடன் நடந்தே சென்று கல்லறைத் தோட்டத்தில் கண்ணீருடன் புதை குழியில் அடக்கம் செய்தோம். மலை உச்சியில் இருந்த ராஜாளிப் பறவை விண்ணுக்கே பறந்து விட்டது என இரங்கல் உரை ஆற்றினேன்.

இப்படிச் சில மேதாவிகள் தங்கள் பொச்சரிப்பைக் கொட்டினாலும், அந்த இதழின் ஆசிரியர் இவற்றையெல்லாம் கவனிப்பது நல்லது. அந்த மேதாவியாருக்குச் சொல்லுகிறேன். இந்த எளியோன், திருவாசகம் குறித்தும், சேக்கிழாரை, கம்பனை, சிலம்பை, திருக்குறளை, அகம் புறத்தை, எழுத்து எனும் கருவறையை, சொல்லாற்றலைக் குறித்தும் ஓரளவு பேசக்கூடியவன் என்பது நடுநிலையாளர்களுக்குத் தெரியும். வேண்டுமானால், பெருமக்களான சிலம்பொலி செல்லப்பனாரிடமும், கவிஞர் சிற்பி பாலசுப்பிர மணியம் அவர்களிடமும், அலைபேசியில் இது உண்மைதானா என்று கேட்டுத் தெரிந்து கொள்ளட்டும்.

நாகாலாந்து பிரச்சினை தரும் பாடம்:-

அறிஞர் அண்ணா அவர்கள் தம்பிக்கு எழுதிய கடிதங்களில், நாகர்கள் கிளர்ச்சி பற்றி எழுதி உள்ளார். நாங்கள் தனிநாடு கேட்கிறோம்; நாகர்களைப் பார்த்து அல்ல; அதற்கு முன்பு இருந்தே கேட்கிறோம் என்று நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் பேசினார்.

இந்தியத் துணைக்கண்டம் பல்வேறு தேசிய இனங்களைக் கொண்டு, பிரித்தானியர் வருகைக்குப் பின் அமைக்கப்பட்ட ஒரு நாடு என்ற வரலாற்று உண்மையைப் புதைத்துவிட முடியாது.

நாகர்கள் 37 ஆண்டுகள் ஆயுதப் போராட்டம் நடத்தினார்கள். இந்திய இராணுவத்தால் நசுக்க முடியவில்லை. நாகர்களின் தலைவர் பிஜோ வழி நடத்தினார். பின்னர் நாகாலாந்து இயக்கத்துடன் இந்திய அரசு 20 ஆண்டுகள் பேச்சு வார்த்தை நடத்தியது. நாகாலாந்து தேசிய கவுன்சில் என்னும் இயக்கம், இந்திய அரசுடன் 1975 இல் ஷில்லாங்கில் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டது.

அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளாமல் எதிர்த்து நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் என்ற இயக்கம் (National Social council of Nagaland - NSCN) 1980 இல் உதயமானது. எட்டு ஆண்டுகளுக்குப் பின் இந்த இயக்கம் இரண்டாகப் பிளவுபட்டது. ஐசக் முய்வா தலைமையிலான NSCN IM இயக்கமே வலுவாகக் கால் ஊன்றியது. கப்லாங் தலைமையிலான இயக்கம் வலு இழந்தது. முய்வாவுடன், வெளிநாட்டு நகரங்களில் இந்திய அரசு பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியது.

ஆனால் நாகர்கள் ஆயுதங்களைக் கீழே போடவில்லை. 1997 தொடக்கத்தில், இந்திய அரசுக்கும், நாகா தேசிய சோசலிஸ்ட் கவுன்சிலுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை, அன்றைய இந்தியப் பிரதமர் தேவே கவுடா அவர்களும், முய்வாவும் சுவிட்சர்லாந்து நாட்டின் சூரிச் நகரில் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

தற்போது, அலாவுதீனின் அற்புத விளக்குப் போல் ஓர் புதிய ஒப்பந்தத்தை இந்திய அரசு அறிவிக்க இருக்கின்றது. ஆமாம். நாகர்களுக்கும், அதாவது நாகாலாந்துக்கும் இந்தியாவுக்கும் ஒப்பந்தம்; பகிர்ந்து கொள்ளும் இறையாண்மையுடன். (Shared Sovereignty). அதாவது, இந்தியாவுடன் சமாதான சகவாழ்வாழ்வு. (Peaceful Co-existence). அதற்கு நாகர்களின் அமைப்பு இசைந்துள்ளது. நாகர்களுக்குப் புதுவாழ்வு பிறக்கின்றது.

2015 ஆகஸ்டில், இந்திய அரசு முய்வா அமைப்புடன், பிரதமர் மோடி முன்னிலையில் வரைவு ஒப்பந்தம் (Framework Agreement) செய்து கொண்டது.

பகிர்ந்து கொள்ளும் இறையாண்மை குறித்து முழுவிளக்கம் வெளியாகவில்லை. ஆனால், நாகர்களுக்குத் தனி நாடாளுமன்றம், தனித் தேசியக்கொடி, தனி நீதிமன்றம், தனியான அரசியல் சட்டம் அமைக்கப்படுமாம். நாகர்களின் இறையாண்மை ஒப்புக்கொள்ளப்பட்டு விட்டதாம். அவர்கள் தனித்தேசிய இனம். அவர்களின் தனித்துவமான பண்பாட்டையும், வரலாற்றையும் இந்தியா ஏற்றுக் கொண்டு விட்டதாம். பிரித்தானியர்களின் வருகைக்கு முன்பு நாகர்கள் தனிநாடாக வாழ்ந்தனர் என்றும், இந்தியாவுடன் அவர்கள் இணைந்ததாக எந்த ஒப்பந்தமும் கிடையாது என்றும், நாகர்களின் தரப்பு வாதத்தை இந்திய அரசு ஏற்றுக்கொண்டு விட்டது.

1947 க்குப் பின்னர், இந்திய அரசு நாகாலாந்து மீது படையெடுத்து, அவர்களின் சம்மதம் இன்றியே அதிகார எல்லைகளை வகுத்து அவர்களைப் பிரித்தது. இந்தியாவில் இருந்து இன அடிப்படையிலும், பண்பாட்டு அடிப்படையிலும் வேறுபட்டவர்கள் நாகர்கள் என்ற அவர்களின் நியாயமான வாதத்தை இந்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைமை உருவாகி விட்டது.

ஒப்பந்த விவரங்கள் முழுமையாக அறிவிக்கப்படும் வரை காத்திருப்போம்!

தேசிய இனங்கள் என்ற பன்முகத் தன்மையை இந்தியா ஏற்றுக் கொண்டு தான் தீர வேண்டும். இல்லையேல், சோவியத் ஒன்றியத்தில் நடந்ததுதான் எதிர்காலத்தில் இந்தியாவிலும் நடக்கும். நாகர்களின் கிளர்ச்சி குறித்துத் தொடர்ந்து பல கடிதங்களில் அறிஞர் அண்ணா அவர்கள் எழுதியதை எண்ணி இறும்பூது எய்துகிறேன்.

சீனாவின் வஞ்சகத் திட்டம்:-

இன்று திங்கட்கிழமை. மே 15. நேற்று நான் எழுதி முடிக்கையில் நடுநிசி தாண்டி விட்டது. காலைச் செய்தி ஏடுகளைப் பார்த்தேன். ஆங்கில இந்து நாளேட்டின் முதல் பக்கத்தில் வந்த செய்தி, எனக்கு ‘வரலாறு திரும்புகிறது’ என்ற சொற்றொடரை நினைவூட்டியது. சீனக்குடியரசின் அதிபர் ஜீ ஜின்பிங், ‘சமாதான சகவாழ்வு; அதுவே எங்கள் பஞ்சசீலக் கொள்கை’ எனப் பிரகடனம் செய்துள்ளார்.

இந்தக் குரல் 62 ஆண்டுகளுக்கு முன்பு 1955 இல் இந்தோனேசியாவின் பாண்டூங் நகரில் நடைபெற்ற மாநாட்டில் ஒலித்தது. அங்குதான் பஞ்ச சீலக் கொள்கையை, சீன இந்திய நட்புறவின் நேசக் குரலாக ஒலித்தார் இந்தியப் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள். ஆனால், சமாதான சகவாழ்வுக் கோட்பாட்டை ஆயிரம் அடிக்குக் கீழே குழிதோண்டிப் புதைத்து விட்டு, செஞ்சீனம் இந்தியா மீது 1962 அக்டோபரில் எல்லை தாண்டிப் படை எடுத்தது. ‘இந்தி சீனி பாய் பாய்’ என்ற முழக்கம் காற்றில் கரைந்தது. இதனால் மனம் உடைந்த பண்டித நேரு அவர்கள் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவே இல்லை. நேரு அவர்கள் நா தழுதழுக்க வானொலியில் ஆற்றிய உணர்ச்சிமிகு உரை, வேலூர் சிறையில் அடைபட்டு இருந்த அறிஞர் அண்ணா அவர்களை மிகவும் பாதித்தது.

இந்திய அரசுக்கு, யுத்த நடவடிக்கைகளுக்குத் தி.மு.கழகம் முழு ஆதரவு அளிக்கும் என்றார். புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அவர்கள் 75000 ரூபாய் (இன்றைய மதிப்பில் கோடியை நெருங்கும்) நிதியைத் தமிழக முதல்வர் காமராசரிடம் வழங்கினார்.

இன்று சீனத்தில் நடப்பது அநீதி. ஒரே மண்டலம் ஒரே பாதை - One Belt one Road என்ற சீனாவின் பன்னாட்டு வணிக வளர்ச்சி மாநாடு, 2017 மே 14 இல் தொடங்கியது. இரண்டு நாள்கள் நடைபெற்றது. இதன்படி, ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகளை ஒன்றாக இணைக்கும் வகையில், சாலை, ரயில், கடல்வழி வணிகப் போக்குவரத்துத் திட்டங்களைச் சீனா செயல்படுத்தத் தொடங்கி விட்டது. இலங்கையில் பெரும் ஆக்கிரமிப்பாக ஹம்பன் தோட்ட துறைமுகம், மியான்மரில் கியான்பியூ துறைமுகம், பாகிஸ்தானில் குவாதர் துறைமுகம், வங்கதேசத்தில் சொழையா துறைமுகம் மேம்பாடு, லண்டன் பெய்ஜிங் ரயில்பாதை எனப் பல திட்டங்களைச் சீனா மேற்கொள்வதற்காகச் செயலில் இறங்கிவிட்டது. 7,95,800 கோடியை சீனா தொடக்க முதலீடு செய்கின்றது.

பாகிஸ்தானின் குவாதர் துறைமுகத் திட்டத்திற்காகச் சீனாவில் இருந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீர் வழியாக நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு விட்டது. அருணாசலப் பிரதேசத்திலும் சீனா உரிமை கொண்டாடுகிறது. இதனால், இம்மாநாட்டை இந்தியா புறக்கணித்து விட்டது. ஆனால், ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் பங்கேற்றுள்ளார். சீனத்துடன் பல பிரச்சினைகளில் முரண் பட்டுவிட்ட ஜப்பானும், வியட்நாமும் பிரதிநிதிகளை அனுப்பி விட்டன. அமெரிக்க அரசு தொடக்கத்தில் புறக்கணிப்போம் என்று கூறிவிட்டு, இப்போது வெள்ளை மாளிகையின் ஆலோசகர் மேட் பொட்டிங்கர் தலைமையில் ஒரு குழுவை அனுப்பி உள்ளது. சார்க் நாடுகளில் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, நேபாளத்தின் துணைப் பிரதமர் கிருஷ்ண பகதூர் மகரா உள்ளிட்ட 29 நாடுகளின் தலைவர்கள், 101 நாடுகளைச் சேர்ந்த 1500 பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்று உள்ளனர்.

சீனாவும், பாகிஸ்தானும் சிந்து நதி மின்சாரத் திட்டத்தில் (Indus River Cascade-IRC) பிரச்சினைக்கு உரிய, இந்தியா உரிமை கொண்டாடும் பகுதிகளான கில்ஜிட் பல்டிஸ்தானில், செயல்படுத்த 50 பில்லியன் டாலர் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. இத்திட்டத்தின் மூலம் 40000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி ஆகுமாம். சீனாவின் ஆக்டோபஸ் கரங்கள் பலமாக, கண்டங் களின் எல்லைகளைக் கடந்து வளைக்க முயல்கின்றன. உலகத்தின் முதல் வல்லரசாகத் திட்டமிடுகின்றது.

இந்திரா காந்தி அம்மையாரின் தொலை நோக்கு, இந்தியாவின் தெற்கு எல்லையில் இந்திய பூகோள அரசியல் நலன்களைக் காப்பதாக இருந்தது. ஆனால், 1984 க்குப் பின்னர், இந்திய அரசின் வெளிவிவகாரக் கொள்கை, இலங்கையில் ஈழத்தமிழர்களின் உரிமைக் குரல்வளையை நெரிப்பதாக அமைந்ததால், சீனமும், பாகிஸ்தானும் அங்கே பலமாகக் கால் ஊன்றி விட்டதால், எத்தனை மோடி வியூகங்களும் நிலைமையைச் சீர்படுத்தாது. கிடைத்த மட்டும் ஆதாயம் என்று சிங்கள அரசு, இந்தியாவிடம் வகையாகப் பெற்றுக் கொள்கின்றது. ஆசியக் கண்ட அரசியலில், இந்தியா இன்று தனிமைப் படுத்தப் படுகின்றது. சீன அதிபர் ஜீ ஜின்பிங், உலக நாடுகளுடன் நட்பையும், ஒத்துழைப்பையும் வலுப்படுத்தவே இம்மாநாடு என்று முழங்கி விட்டார். இந்தச் சொற்களுக்குள் ஒளிந்திருக்கும் ரகசியத் திட்டங்களை வருங்காலம் வெளிப்படுத்தும்.

பிரெஞ்சு நாட்டில் புதிய புரட்சி:-

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் எனும் மணிவாசகங்களைத் தாரக மந்திரமாக உலகத்துக்குத் தந்த பிரெஞ்சு நாட்டில், வால்டேரும், ரூசோவும் உலகளாவிய சிந்தனைத் தத்துவங்களை வழங்கிய பிரெஞ்சு நாட்டில், 1778 ஜூலை 14 இல் பாஸ்டிலி சிறைச் சாலை தகர்க்கப்பட்டு, அகிலத்தை உலுக்கிய புரட்சி நடத்திய பிரெஞ்சு நாட்டில், புரட்சியின் குழந்தை என வருணிக்கப்பட்ட நெப்போலியன் போன பார்ட், சென்ற இடங்களில் எல்லாம் சமர்க்களங்களில் வாகை சூடி, ருஷ்யப் போரிலும் வாட்டர்லூ களத்திலும் தோற்றாலும், வரலாற்றில் வலுவாக, நெப்போலியன் சட்டம் என்பதைப் பதிவு செய்த பிரெஞ்சு நாட்டில், மோனாலிசா ஓவியம் புன்னகை புரியும் பிரான்சு நாட்டில், இப்போது நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில், உலகின் கவனத்தை ஈர்த்துவிட்ட இம்மானுவேல் மேக்ரன் வெற்றி பெற்றுக் குடியரசுத் தலைவராகப் பொறுப்பு ஏற்றுள்ளார். அவருக்கு வயது 39 தான். பிரெஞ்சு வரலாற்றில், 1848 இல் நடந்த இரண்டாம் புரட்சிக்குப் பின் அதிபராகப் பதவி ஏற்ற நெப்போலியன் சகோதரி மகன் லூயிஸ் நெப்போலியன் 40 ஆவது வயதில் பதவி ஏற்றார். அதே பிரான்சில், பதினான்காம் லூயி, தனது நான்காவது வயதில் அரசனாக அறிவிக்கப்பட்ட ஆச்சரியமும நிகழ்ந்தது.

2017 ஏப்ரல் 23 இல் முதல் சுற்று அதிபர் தேர்தல் நடந்தது. அந்நாட்டு அரசியல் சட்டப்படி, பதிவாகும் வாக்குகளில் 50 விழுக்காட்டுக்கு மேல் பெற்றால் தான் வெற்றி பெற்றதாக அறிவிப்பார்கள். இம்முதல் சுற்றில், சோசலிஸ்டுகளும், குடியரசுக் கட்சியும் 3,4 ஆம் இடங்களுக்குத் தள்ளப்பட்டு விட்டனர். கட்சி தொடங்கி ஓராண்டு மட்டுமே ஆன நிலையில், En Marche - ‘முன்னோக்கி’ என்ற புதிய கட்சியின் தலைவர் இம்மானுவேல் ஜீன் மைக்கேல் பிரெடரிக் மேக்ரன் முதல் இடம் பெற்றார். அதற்கு அடுத்த இடம், தேசிய முன்னணி வேட்பாளர் மெரின் லீ பென் அம்மையாருக்குக் கிடைத்தது. இரண்டாவது சுற்று வாக்குப்பதிவுக்கு முன்னரே, மேக்ரன் பெருவெற்றி பெறுவார் என்று கருத்துக்கணிப்புகள் கூறின.

மெரின் லீ பென் அம்மையாரின் தேசிய முன்னணி தீவிர வலதுசாரி இயக்கம் ஆகும். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரான்சு வெளியேற வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டது. மேக்ரன், வலதும் அல்ல, இடதும் அல்ல நடுநிலை சுதந்திரக் கொள்கை உடையவர். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரான்ஸ் வெளியேறக்கூடாது; அந்த ஒன்றியத்தை வலுப்படுத்த வேண்டும்; அகதிகளாகத் தஞ்சம் கேட்டு வருவோரை அரவணைக்க வேண்டும்; இஸ்லாம் உள்ளிட்ட அனைத்து மதங்களையும் அரவணைக்கும் மதச்சார்பு அற்ற நிலை வேண்டும் என்றார். இந்தத் தேர்தலில் இஸ்லாமியர்கள் மேக்ரனை ஆதரித்து உள்ளனர். அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா அவர்களும், ஜெர்மானிய அதிபர் ஆங்கெலா மெர்கல் அம்மையாரும் மேக்ரனை ஆதரித்தார்கள்.

இந்த இளைஞரிடம் ஒரு ஈர்ப்பு இருக்கின்றது தோற்றத்தில். எழிலும் வனப்பும் பளிச்சிடுகின்றது. ஆற்றும் உரையும் கவர்கிறது. இவர் 1977 டிசம்பர் 21 ஆம் நாள் பிறந்தார். இவரது தந்தையும், தாயும் மருத்துவர்கள். தந்தை பெயர் பிராங்கோயிஸ். மருத்துவர். தாயார் பெயர் ஜீன் மைக்கேல் மேக்ரன் பிகார்டி. பல்கலைக் கழகத்தில் நரம்பியல் பேராசிரியை. மத உணர்வு இல்லாத பெற்றோர் ஆயினும், மேக்ரன் தனது 12 ஆம் வயதில் தானே ரோமன் கத்தோலிக் கராக ஞானஸ்நானம் பெற்றார். பள்ளிக் கூடம் சென்றார். அங்கே 15 ஆவது வயதில் மன்மதன் மலர்க்கணைகள் அவர் மீது பாய்ந்தன. அவரது ஆசிரியை பிரிஜிட்டி ஆஜியர் மீது காதல். அவர், நமது இளம் பிள்ளையை விட 24 வயது மூத்தவர். அவருக்கு வயது 39. ஏற்கனவே மூன்று பிள்ளைகளுக்குத் தாய். அவர்களுள் செபாஸ்டியனும், லாரன்சும் மேக்ரனை விட வயதில் மூத்தவர்கள். மூன்றாமவன் திபேன், மேக்ரனை விட ஏழு வயது இளையவன்.

இந்தப் பொருந்தாக் காதலை அறிந்த மேக்ரனி பெற்றோர், இதிலிருந்து மேக்ரனை விடுவிக்க, பள்ளி இறுதி வகுப்புப் படிக்க பாரீஸ் பட்டணத்திற்கு அனுப்பி வைத்தனர். காதல் கண்டங்களையும் தாவக்கூடியது அல்லவா? அதற்கு நகர எல்லைகள் ஒரு பொருட்டா என்ன? பட்டப்படிப்பு முடிந்தது. மேக்ரன் தன் ஆசிரியையுடன் குடும்பம் நடத்தினார். 2007 ஆம் ஆண்டில் அதிகாரபூர்வமாகத் திருமணம் செய்து கொண்டனர்.

2006 ஆம் ஆண்டில் அவர் சோசலிஸ்ட் கட்சியில் உறுப்பினராகச் சேர்ந்தார். 2009 வரை அக்கட்சியில் நீடித்தார். பிரான் கோயிஸ் ஹொல்லாண்டே அரசில் 2012 இல் துணைப்பொதுச்செயலாளர் ஆனார். 2014 இல் பொருளாதாரம், தொழில் அமைச்சர் ஆனார். 2016 இல் அமைச்சர் பதவியை விட்டு விலகினார். 2016 ஏப்ரல் 6 ஆம் தேதி தனது என் மார்ச் - முன்னேறு என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார். இந்தக் கட்சியின் முழுப்பெயர் பொது வாழ்வைப் புதுப்பிக்கும் சங்கம் (Association for the renewal of Public life) என்பதாகும்.

அதிபர் வெற்றிக்குப் பின் பிரெஞ்சுக் குடியரசே முன்னேறு எனப் புதிய பெயர் சூட்ட இருப்பதாகச் செய்தி.

மே 7 ஆம் நாள் நடைபெற்ற அதிபர் தேர்தலில், 65 விழுக்காடு வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் மேக்ரன். மே 14 ஆம் நாள் குடியரசுத் தலைவராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். 577 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய அசெம்பிளி தேர்தலில் இவரது கட்சி பெரும்பான்மை பெறுமா? அல்லது எதிர்க் கட்சிகள் பெரும்பான்மை பெறுமா என்பது கவனத்திற்குரியது.

பிரெஞ்சு நாட்டின் நாடாளுமன்றத் தேர்தல் ஜூன் மாதம் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதிபர் இம்மானுவேல் மேக்ரனின் ரிபப்ளிக் என்மார்ச் கட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்குமா? என்பது முக்கியமான கேள்வி. எனவே, மேக்ரன் ராஜதந்திரமாகக் காய்களை நகர்த்துகிறார். வலதுசாரிக் கட்சியான குடியரசுக் கட்சியைச் சேர்ந்த எட்வர்டு பிலிப் (46வயது) என்பவரை பிரெஞ்சுப் பிரதமராக நியமித்துள்ளார். எட்வர்டு பிலிப் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராகவும், லெஹாவர் நகர மேயராகவும் உள்ளார். நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் கட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்காவிட்டால், நாடாளுமன்றப் பெரும்பான்மையைப் பொறுத்துப் புதிய பிரதமர் அறிவிக்கப்படலாம். இதற்கு நடுவே, குடியரசுக் கட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. உரிய விளக்கம் தரும் வரையில் எட்வர்டு பிலிப் குடியரசுக் கட்சியில் இருந்து நீக்கப்பட மாட்டார் என்று அக்கட்சித் தலைவர் பெர்னார்ட் அக்கோயர் தெரிவித்துள்ளார்.

விந்தையான அரசியல்!

இதுவரை ஆட்சியில் இருந்த சோசலிஸ்ட் கட்சியின் பிரதமர் மேனுவல் வால்ஸ் ஜூன் மாதம் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மேக்ரனுக்கு ஆதரவு தருவதாக அறிவித்துள்ளார்.

தென்கொரியாவில் ஆட்சி மாற்றம்:-

இதே காலகட்டத்தில் தென்கொரிய நாட்டின் அதிபர் தேர்தலும் மிகுந்த முக்கியத்துவம் அனைத்துலக அரசியல் அரங்கில் பெறுகிறது. காரணம் வடகொரியாவின் அதிரடி அதிபர், அணு குண்டுகளை வீசி அமெரிக்காவைச் சாம்பல் ஆக்குவோம் என்று மிரட்டல் விடுக்கின்றார். தென்கொரியாவும், ஜப்பானும் அத்தகைய தாக்குதலுக்கு ஆளாகக் கூடும் என்ற பதட்டம் ஏற்பட்டு, கெடுபிடிப் போர்க்காலச் சூழ்நிலையைப் பிரதிபலிக்கின்றது.

தென்கொரியாவில் முதல்முறையாக ஜனநாயக முறையில் நடத்தப்பட்ட தேர்தலில் தேர்ந்து எடுக்கப்பட்ட பெண் அதிபர் பார்க் கியூன் ஹை, தனது நெருங்கிய தோழி சோய்சன்னுடன் சேர்ந்து ஊழலில் ஈடுபட்டதால், நாடெங்கும் அவருக்கு எதிராக இலட்சக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடத்தினர். அதிபர் தலைக்குற்றச்சாட்டுக்கு ஆளாகி, குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டு, மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார்.

அந்நாட்டு அரசியல் சட்டப்படி, பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிபரின் பதவிக் காலம் 2018 பிப்ரவரி என்றாலும், அறுபது நாட்களுக்குள் அதிபர் தேர்தல் நடத்தப்பட்டு, தேர்தலில் வெற்றி பெறும் புதிய அதிபர் பதவி ஏற்ற நாளில் இருந்து ஐந்து ஆண்டுகள் அப்பதவியில் நீடிப்பார்.

கடந்த பத்து ஆண்டுகள், கன்சர்வேடிவ் கட்சி தென் கொரியாவில் ஆட்சி நடத்தியது. இப்பழமைவாதக் கட்சி “வட கொரியாவுடன் கடும் மோதல் போக்கையே கடைப்பிடித்தது. தற்போது ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. புதிய அதிபர் மூன் ஜே இன் வெற்றி பெற்றவுடன், “வடகொரியாவுடன் நேச உறவைப் பேணும் போக்கை கடைப்பிடிக்கப் போவதாகக் கூறியதுடன், வடகொரியத் தலைநகர் பியாங்யாங்குக்கும் தான் சென்று வடகொரிய அதிபரையும் சந்திக்கத் தயார் என்றும் கூறினார். அதே நேரத்தில் வடகொரியாவின் அணு ஆயுதச் சோதனைகளின் அபாயம் குறித்தும் எச்சரிக்கையாக தென்கொரியா செயல்படும் என்றும் தெரிவித்தார்.”

கொரியப் போர்:-

இரண்டாம் உலகப் போரின்போது பேரழிவு ஏற்பட்டு உலகத்தின் பல நாடு களின் போர்வீரர்கள் லட்சோபலட்சம் பேர் கொல்லப்பட்டனர். பலியான பொது மக்களின் எண்ணிக்கை அதைவிட அதிகம். இந்தப் பின்னணியில் “கொரிய யுத்தம்” பலத்த கவலையைத் தரவில்லை. லட்சக்கணக்கானவர்கள் இருதரப்பிலும் கொல்லப்பட்டதும் வரலாற்றிலும், பாடப் புத்தகங்களிலும் உரிய முக்கியத்துவம் பெறவில்லை.

“கொரியாவை” மையப்படுத்தி அமெரிக்கா, ரஷ்யா ஆகிய இரு வல்லரசுகளின் அணுகுமுறை அமைந்தது. பெரும் யுத்தத்திற்கு அமெரிக்க அதிபர் ட்ருமன் தயாராக இல்லை. அதே மனநிலையில் தான் சோவியத் அதிபர் ஜோசப் ஸ்டாலினும் இருந்தார்.

கொரிய யுத்தத்தை விரிவாகப் படித்த போது வியப்பின் உச்சிக்கே சென்றேன். கொரியாவின் வரலாறு விசித்திரமானது. இந்த யுத்தத்தை வடகொரியர்கள் “தந்தையர் நாட்டின் விடுதலை யுத்தம்” என வர்ணிக்கின்றனர்.

சீனர்கள் “அமெரிக்க ஆக்கிரமிப்புத் தடுப்புக் கொரிய உதவி யுத்தம்” எனக் கூறுகின்றனர்.

அமெரிக்க அதிபர் ட்ருமன் “போலீஸ் நடவடிக்கை” என்று அலட்சியமாக உரைத்தார். உலகத்தார் பலர் “மறந்து போன யுத்தம்” என்கின்றனர்.

சீனப் பேரரசர்களின் ஆதிக்கத்தில் பல காலம் கொரியா ஆட்பட்டுக் கிடந்தது. 1894 -95 இல் மூண்ட சீன -ஜப்பான் போரில் ஜப்பான் சீனாவைத் தோற்கடித்தது. கொரியாவில் தன் ஆதிக்கக் கொடியை நாட்டியது. சரியாகப் பத்து ஆண்டுகளுக்குப்பின் 1904-1905 ரஷ்யாவுடன் ஜப்பான் தொடுத்த போரிலும் ஜப்பான் வெற்றி பெற்றது. வரலாற்றில் இது ஜப்பானின் சாதனை தான்.

சுதந்திரத் தாகம் கொண்ட கொரியர் சீன நாட்டுக்குச் சென்றனர். கொரியக் குடியரசு அரசைச் சீனத்தில் இருந்து 1919 இல் அமைத்து இயக்கினர். ஜப்பானியர்களை எதிர்த்து 1919 முதல் 1925 வரை கொரியக் கம்யூனிஸ்டுகள் கலகங்கள், ஆயுதக் கிளர்ச்சிகள் நடத்தினர். 1937 பிறந்தது. சீனாவை முழுமையாக ஆக்கிர மிக்க முயன்ற ஜப்பானியர்களை விரட்டியடிக்க, சீன அதிபர் சியாங்கே சேக் ராணுவத் தாக்குதல் தொடுத்தார்.

இதே காலகட்டத்தில்தான், கம்யூனிஸ்டுகளின் எழுச்சி நாயகன் மா சே துங்கின் தலைக்கு விலை வைக்கப்பட்டு, சியாங் அமைத்த மரண வளையத்தை உடைத்து வீரசாகசம் புரிந்த மாவோவின் நெடும் பயணமும் நடக்கின்றது.

எட்கார் ஆலன்போ எழுதிய “சீனாவில் ஒரு சிவப்பு நட்சத்திரம் (Red Star Over China)” நூல் மிக விறுவிறுப்பானது. என்னைக் கவர்ந்த நூல்களுள் ஒன்று.

1937 இல் ஜப்பானிய ஆக்கிரமிப்பு அரசு கொரிய மக்கள் கலாச்சாரம் பண்பாடு மொழி அனைத்தையும் நிர்மூலம் செய்ய அதிகார ஆளுநர் நாயகம் ஜெனரல் ஜெரோ மினாமியின் கொடிய அடக்குமுறை ஏவப்பட்டது. 2 கோடியே 35 இலட்சம் கொரிய மக்கள் தங்கள் மொழி, பண்பாடு, இலக்கியம் அனைத்தையும் துறந்து விட்டு, ஜப்பானிய மொழியைப் படிக்க வேண்டும் என்ற ஆதிக்கத்தைத் திணித்தது. இருபது இலட்சம் கொரியர்களில் பாதிப்பேர் ஜப்பான் ராணுவத்தில் கட்டாயமாகச் சேர்க்கப்பட்டனர். மீதமுள்ளோர் கொத்தடிமைத் தொழிலாளர்கள் ஆக்கப்பட்டனர்.

சீனாவின் சில பகுதிகளிலும் இன்றும் ஆக்கிரமித்து இருந்த ஜப்பானியர்களை விரட்டவும், கொரிய விடுதலைக்களம் அமைக்கவும் சீனாவின் தேசியப் புரட்சி ராணுவமும், கம்யூனிஸ்ட் மக்கள் விடுதலை ராணுவமும் களம் இறங்கின. 1941 லிருந்து 1945 வரை இது தொடர்ந்தது.

கொரியக் கம்யூனிஸ்டுகளுக்குத் தலைவரான கிம் இல் சுங், இன்றைய அதிபரின் தாத்தா ஆவார். இவரைப் பற்றிப் பின்னால் சொல்லுவோம்.
இரண்டாம் உலக யுத்தத்தின் போக்கு 1943 பிற்பகுதியில் நேச நாடுகளுக்கு ஆதரவாக மாறிய கால கட்டத்தில், 1943 நவம்பரில் கெய்ரோ மாநாட்டில் சியாங்கே சேக்கின் சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து “கொரியாவை விடுதலை பெற்ற சுதந்திர நாடாக்கத் தீர்மானித்ததன.”

1945 ஆகஸ்ட் 6 ஆம் தேதி ஜப்பான் மீது அமெரிக்கா அணுகுண்டடை வீசியது. சரியாக மூன்றாம் நாள் 1945 ஆகஸ்டு 9 ஆம் நாள் சோவியத் ரஷ்யா ஜப்பான் மீது யுத்தப் பிரகடனம் செய்தது. ஆகஸ்டு 15 இல் ஜப்பான் சரண் அடைந்தது. மறுநாள் ஆகஸ்டு 10 இல் கொரிய தீபகற்பத்தின் வடபகுதியை ரஷ்யாவின் செஞ்சேனை கைப்பற்றியது.

வாசிங்டனில் அமெரிக்க அரசு “கொரியத் தீபகற்பத்தை இரண்டாகப் பிரித்து -38ஆவது நடுநிலைக் கோட்டுக்கு வடக்குக் கொரியா ரஷ்யாவின் நிர்வாகத்திற்கும், தெற்குக் கொரியாவை அமெரிக்க நிர்வாகத்திற்கும் ஆட்படுத்த முடிவு செய்தன. ரஷ்ய அதிபர் ஜோசப் ஸ்டாலின் அதை ஏற்றுக்கொண்டார்.

1945 செப்டம்பர் 8ஆம் நாள் ஜப்பான் 38ஆவது நடுநிலைக் கோட்டுக்குத் தெற்கே கொரியாவில் அமெரிக்காவிடம் சரண் அடைந்தது. வலதுசாரி ஜனநாயக பிரதிநிதித்துவ கவுன்சில் தலைவராக சிங்மென் ரீ அமெரிக்காவில் பயிற்சி பெற்று அமெரிக்காவின் ஆதரவுடன் நிர்வாகத்தைக் கைப்பற்ற முனைந்தார். ஐ.நா. மேற்பார்வையில் கொரியாவில் தேர்தல் நடத்த அமெரிக்கா முன் வைத்த யோசனையை ரஷ்யாவும் கம்யூஸ்டுகளும் நிராகரித்த நிலை ஏற்பட்டது. ஆனால், 1948 மே பத்தாம் நாள் தென் கொரியாவின் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது.

1948 ஜூலை 20 ஆம் நாள் சிங்மன்ரீ தென் கொரியக் குடியரசின் அதிபராகத் தேர்ந்து எடுக்கப்பட்டார். கம்யூனிஸ்டுகளைக் கைது செய்தார். வாக்கு உரிமையைப் பறித்தார். பலர் வடகொரியா சென்றனர். மலைப்பகுதிகளில் இருந்து கொரில்லாத் தாகுதல் நடத்தினர்.

ஒரு சுவையான விசித்திரம் என்ன தெரியுமா?

1945 ஆகஸ்டு 15 இல் ஜப்பான் நேசநாடுகளிடம் சரண் அடைந்தது. அதனால்தான் தென்கிழக்கு ஆசியக் கடற்படைத் தலைவராக இருந்த மவுண்ட் பேட்டன் பிரபு “இந்தியாவின் சுதந்திர நாளாக 1947 ஆகஸ்டு 15 ஆம் தேதியை அறிவித்தார்.

கொரியக் குடியரசு அறிவிக்கப்பட்டதும் அதே ஆகஸ்டு 15, 1948.”

வடகொரியாவில் கிம் இல் சுங் தலைமை யில் கம்யூனிஸ்ட் அரசாங்கத்தை சோவியத் ரஷ்யா அமைத்தது.

1948 இல் சோவியத் ரஷ்யா தன் துருப்புகளை திரும்பப் பெற்றது. 1949 இல் அமெரிக்கா தன் படைகளைத் திரும்பப் பெற்றது.

1945 -1949 இந்தக் காலகட்டத்தில் சீனாவில், பலத்த உள்நாட்டுப் போர் மூண்டது. சியாங்கே சேக்கின் சீனக் குடியரசு ராணுவத்திற்கும் மாவோவின் சீன மக்கள் குடியரசு - சீன மக்கள் விடுதலை ராணுவத்திற்கும் போர் மூண்டது.

கண்மணிகளே,

முன்னர் ஒருமுறை குறிப்பிட்டேன். யுத்த களத்தில் விவேகமான வியூகம்தான் வெற்றி தரும் என்பதற்குச் சேர்மன் மாவோ சரியான எடுத்துக் காட்டு ஆவார். தனது செம்படையைத் திடீரென்று கலைத்து, வீரர்களை அவர்களது ஊர்களுக்கு அனுப் பினார். மாவோ விலைபோய் விட்டார்; சமரசம் செய்துகொண்டார்; மகத்தான தியாகத்தால் கட்டி எழுப்பப்பட்ட செஞ்சேனையை வீணாக்கிவிட்டார்; வரலாறு மன்னிக்காது என்று பழித்தனர்.

சரியான தருணத்தை எதிர்பார்த்துக் காத்து இருந்தார். செஞ்சேனை கதை முடிந்தது என்று கொக்கரிப்பில் சியாங்கே சேக் இருந்தபோது, உரிய வேளையில் மின்னல் வேகத்தில் செம்படையை மீண்டும் அணி திரட்டினார். அதே வேகத்தில் இடியெனத் தாக்கிற்று செஞ்சேனை. சியாங்கே சேக் கூலி ராணுவப் படை பின்வாங்கி ஓடியது. சியாங்கே சேக் தைவானுக்கு ஓடினான். அவன் அங்கிருந்து தன் சீனக் குடியரசை நடத்துவதாகக் கூறினான். அமெரிக்கா தூக்கிப் பிடித்தது. ஐ.நா.வின் பாதுகாப்புச் சபையில் சியாங் கே சேக்கின் ‘தைவான்’ சீன அரசாக உறுப்பினர் ஆக்கப்பட்டது.

1971 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் நாள்தான் தைவான் நீக்கப்பட்டு மாவோ தலைமையிலான ஜெஞ்சீன குடியரசு ஐ.நா. பொதுச்சபையில் உறுப்பினராகவும், பாதுகாப்பு சபையில் ஐந்து நிரந்தர உறுப்பினராகவும் இடம் பெற்றது,

1949 அக்டோபர் 1 இல் பீகிங் அரச மாளிகையில் கம்யூனிஸ்டுகள் செங்கொடி ஆட்சிக் கொடியாகப் பறந்தது. 1945 -49 க்குள் நடந்த யுத்தத்தில் சீனக் கம்யூனிஸ்டுகளுக்கு உதவியாக வட கொரியாவின் ஆயிரக்கணக்கான வீரர்கள் யுத்தத்தில் பங்கேற்றனர். சீன மக்கள் விடுதலை ராணுவத்துக்கு பக்கபலமாகப் போரிட்டார்கள். இதற்கு நன்றியாக 1949க்குப் பின் 70000 வட கொரிய வீரர்களுக்கு சகல போர்த் தளவாடங்களும் தந்து அனுப்பி வைத்தது செஞ்சீனா.

வடகொரிய அதிபர் கிம் இல் சுங், 1949 மார்ச் மாதம் மாஸ்கோவுக்குச் சென்று ரஷ்ய அதிபர் ஜோசப் ஸ்டாலினைச் சந்தித்துத் தென் கொரியா மீது படையெடுக்க ராணுவ உதவி நாடினார். போர் நிலையைக் கருதி ஸ்டாலின் படையெடுக்கச் சரியான தருணம் அல்ல என்று கருதினார். கேட்ட உதவியை உடனே வழங்கவும் இல்லை.

1949 செப்டம்பர் மாதம் சோவியத் ரஷ்யா தனது முதல் அணுகுண்டுச் சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. சீனாவுடன் ரஷ்யா கூட்டு உதவி ஒப்பந்தம் செய்து கொண்டது. 49 ஆம் ஆண்டிலும் 1950 தொடக்கத்திலும் வடகொரியாவுக்கு ராணுவ உதவியைத் தொடர்ந்து செய்தது.

1950 ஆம் ஆண்டில் ஜோசப் ஸ்டாலின், வடகொரிய அதிபர் கிம் இல் சுங்கிற்குச் செய்தி அனுப்பினார் தென்கொரியாவின் மீது படையெடுக்கலாம்; சீனாவின் மாவோ தேவையான ஆயுத உதவிகளைச் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன்.

வடகொரிய அதிபர் கிம் இல் சங் 1950 மே மாதம் மாவோவைச் சந்தித்தார். அந்நேரம் சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தில் 56 லட்சம் வீரர்களை வீடுகளுக்கு அனுப்பத் தொடங்கி இருந்த நேரம். அமெரிக்க அதிபர் ட்ரூமன் யோசித்தார். ஆனால், சோவியத் ரஷ்யாவின் உதவி சீனாவுக்கு இன்றியமையாததாக இருந்தது. “தென் கொரியாவின் மீது ராணுவத் தாக்குதல் நடத்தி மொத்தக் கொரியாவைத் தன் ஆளுகையின் கீழ் கொண்டுவர கிம் இல் சங் திட்டமிட்ட அதே நேரத்தில், தென்கொரியாவின் அதிபர் கிங்மன்ரீ வடகொரியாவைப் போரில் வீழ்த்தி மொத்தக் குடியரசின் அதிபராகக் கனவு கண்டு கொண்டு இருந்தார்.

1950 ஜூன் 25 ஞாயிற்றுக்கிழமை பொழுது புலரும்முன் வைகறைப் பொழுதில் வட கொரியாவின் மக்கள் இராணுவம் 38-ஆம் நடு எல்லைக்கோட்டைக் கடந்து நெடுகிலும் தென் கொரியா மீது பீரங்கித் தாக்குதலைத் தொடங்கியது. சரியான ஆயத்தத்துடன் முழு ஆயுத பலத்துடன் நடத்திய இத்தாக்குதலில் தேவையான தளவாடங்களும் ஆயத்தமும் இல்லாத தென்கொரியப் படை பலத்த அடி வாங்கியது; பின்வாங்கி ஓடியது. நான்காம் நாள் ஜூன் 28-இல் ‘சியோல்’ வட கொரியாவால் கைப்பற்றப்பட்டது.

அமெரிக்கா ‘கொரியப் போர்க்களத்தைப்’ பிரதானமாகத் தொடக்கத்தில் நினைக்கவில்லை. ஐரோப்பாக் கண்டத்தில் சோவியத் ரஷ்யாவின் ஆதிக்கம் பரவி விடும் என்ற எண்ணத்தில் படைகளை அப்பிராந்தியத்தில் குவிப்பதிலேயே தீவிரம் காட்டியது.

ஆனால், “சீனா வலுவாகக் கால் ஊன்றி கொரியா உள்ளிட்ட அண்டை நாடுகளை எல்லாம் கம்யூனிச நாடுகளாக்கிவிட்டால் ரஷ்யாவும் கரம் கோர்த்தால் பெரும் விபரீதம் முதலாளித்துவத்துக்கு நேரும்” என்ற அச்சத்தில் செயல்பாட்டைக் கொரியாவின் பக்கம் திருப்பியது. 1950 ஜூன் 25-இல் வட கொரியா இராணுவத் தாக்குதலைத் தொடுத்த அதே நாளில் ஐ.நா.வின் பாதுகாப்புக் கவுன்சில் கூடியது. வட கொரிய ஆக்கிரமிப்பைக் கண்டித்து தென் கொரிய குடியரசுக்கு ஆதரவாக ஐ.நா. படைகளை அனுப்ப தீர்மானித்தது.

இந்தக் கூட்டத்தில் சோவியத் ரஷ்யா கலந்து கொள்ளவில்லை. அமெரிக்கா முழு வேகத்தில் படைகளை அனுப்பியது. விமானத் தாக்குதலைத் தீவிரப்படுத்தியது. ருஷ்யப் போர் விமானிகள் சீன விமானங்களை இயக்கினர். அமெரிக்கா தனது ஏழாவது கடற்படைப் போர்க் கப்பல்களை பொம்மை அரசான சியாங்கே சேக்கின் தைவானைப் பாதுகாக்க அனுப்பி வைத்தது.

யுத்தத்தின் போக்கு இரு பக்கத்திலும் மாறி மாறி வெற்றி முகத்தைக் காட்டியது. செப்டம்பர் 29-இல் தென் கொரியா சிங்மன்ரீ அதிகாரத்துக்கு முழுமையாக வந்தது.

அமெரிக்கப் படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் மக் ஆர்தர், தன்னிச்சையாக முடிவு எடுத்தார். அதிபர் ட்ருமனை அலட்சியப்படுத்தினார். ‘வட கொரியா மீது அணுகுண்டு வீச வேண்டும்; சீனாவுக்குள்ளும் இராணுவம் நுழைந்து தாக்க வேண்டும்’ என்றார். அதனால் பொறுப்பில் இருந்து ஜெனரல் மக் ஆர்தர் நீக்கப்பட்டார்.

38-ஆம் எல்லைக் கோட்டைக் கடந்து ஐ.நா. படைகளின் உதவியுடன் அமெரிக்க இராணுவத்தின் பெரும் பங்களிப்புடன் யாலு நதியையும் கடந்து சீன எல்லை வரை தென் கொரிய ஆதரவுப் படைகள் வந்ததால் மாவோ தயாரானார். அக்டோபர் 20-இல் வட கொரியப் படையினர் 1,35,000 பேர் போர்க் கைதிகள் ஆயினர்.

1950 அக்டோபர் 1-ஆம் தேதி ஐ.நா. படைகள் 38-ஆவது கோட்டைத் தாண்டிய நாள்தான் செஞ்சீன மக்கள்குடியரசு ஓராண்டுக்கு முன்பு மலர்ந்த நாள்.

முழு அளவில் செஞ்சீனப் படைகளைக் களத்திற்கு அனுப்ப மாவோ தீர்மானித்தார். தலைமைத் தளபதி லின்பியாவோ உடல் நலம் காரணம் காட்டி மறுத்தார். தோழர் சூ என் லாயை செஞ்சேனைக்கு சீன மக்கள் இராணுவத்தின் தலைமை சேனாதிபதி ஆக்கினார்.

கருங்கடல் ஓய்வு மாளிகையில் இருந்த ஜோசப் ஸ்டாலினைச் சந்திக்க சூ என் லாய் அக்டோபர் 8-இல் மாஸ்கோ சென்று அக்டோபர் 10-இல் சந்தித்தபோது ஜோசப் ஸ்டாலினுடன் மாலடோவ், மாலங்கோவ், பெரியா இருந்தனர். ராணுவ உதவி தருவதாகக் கூறியதால் ரஷ்ய விமானப்படை உதவுவதற்கு மூன்றுமாத காலம் ஆகும் என்றார்.

அக்டோபர் 18 இல் சூ என் லாய் மாவோவை சந்தித்து நிலைமையை விளக்கினார். செஞ்சீன ராணுவத்தின் மூன்று பெரும் படைப்பிரிவினரும் (Divisions) 19 நாட்கள் 460 கிலோ மீட்டர் தூரத்தை கடந்தனர். பெரும்பாலும் இரவு வேளை தான் அவர்கள் வீரநடை.

1950 டிசம்பர் 16 இல் அமெரிக்க ஜனாதிபதி ட்ருமன் தேசிய நெருக்கடி நிலைப் பிரகடனம் செய்தார். கொரியா குறித்து 1978 செப்டம்பர் 14 வரை அது நீடித்ததுதான் வேடிக்கை. 1950 டிசம்பர் 17 இல் கொரிய மக்கள் ராணுவத் தலைமைப் பொறுப்பில் இருந்து கிம் இல் சங் கை செஞ்சீனம் நீக்கியது.

செஞ்சீனம் இயக்கிய ராணுவம் 1951 ஜனவரி 4 இல் சியோலை மீண்டும் கைப் பற்றியது.

ஆனால், வட கொரியாவின் நான்காம் கட்ட தாக்குதல் “கெட்டிஸ்பர்க் போர்க் களம் போல் அமைந்தது.” நாலாப் பக்கமும் சூழ்ந்த வடகொரிய செஞ்சீனப் படைகளை ஐ.நா. படைகள் முறியடித்தன. 1951 மார்ச் 14 இல் சியோலை திரும்ப மீட்டு தென்கொரியத் தலைநகர் ஆக்கின.

1953 ஜூலை 27 இல் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. நடுநிலை நாடுகள் போர் நிறுத்த ஆணையம் இந்தியாவின் ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் கே.எஸ்.திம்மையா தலைமையில் அமைக்கப்பட்டது. ஏற்கனவே 1952 இல் அமெரிக்காவின் புதிய அதிபராக ஜெனர் ஐசன்ஹோவர் தேர்ந்து எடுக்கப்பட்டு இருந்தார்.

நடந்த யுத்தத்தில் அமெரிக்க ராணுவத் தளபதி தலைமையில் ஐ.நா. சார்பில் பங்கேற்ற நாடுகள் அமெரிக்கா, இங்கி லாந்து, கனடா, துருக்கி, ஆஸ்திரேலியா, எதியோப்பியா, பிலிப்பைன்ஸ், நியூசி லாந்து, தாய்லாந்து, கிரேக்கம், பிரான்சு, கொலம்பியா, பெல்ஜியம், தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து, லக்சம்பர்க் ஆகும்.

வடகொரியாவுக்கு ஆதரவாக செஞ் சீனமும், சோவியத் ரஷ்யாவும் களம் இறங்கின.

இந்தக் கொரிய யுத்தத்தில் மேற்கத்திய நாடுகளால் தரும் புள்ளிவிவரப்படி வடகொரிய ஆதரவு ராணுவம், குறிப்பாக செஞ்சீன ராணுவத்தில் 4 இலட்சம் பேர் கொல்லப்பட்டனர். 4 இலட்சத்து 86000 பேர் காயமுற்றனர் என்றும், வடகொரிய மக்கள் ராணுவத்தினர் 2 இலட்சத்து 15000 பேர் கொல்லப்பட்டதாகவும், மூன்று லட்சத்து 3000 பேர் காயமுற்றனர் என்றும் சொல்லப்படுகின்றது. செஞ்சீனம் தங்கள் தரப்பில் ஒரு இலட்சத்துக்கு 14000 பேர் கொல்லப்பட்டதாகவும், 3 இலட்சத்து 40000 பேர் காயமுற்றதாகவும், 7600 பேர் காணாமல் போனதாகவும் தெரிவிக்கின்றது.

செஞ்சீனம் வடகொரியாவும் தரும் கணக்கின்படி அமெரிக்காவின் 3,90,000 துருப்புகளும், தென் கொரியாவின் தரப்பில் 6,60,000 சிப்பாய்களும், ஐ.நா. தரப்பு படையின் 29,000 பேர் போர்க் களத்தில் கொல்லப்பட்டதாகத் தெரிகின்றது.

மொத்தத்தில் 12 இலட்சம் பேர் இந்த யுத்தத்தில் கொல்லப்பட்டதாக அண்மைக்கால ஆய்வு கூறுகின்றது.

வடகொரியா விடுக்கும் அச்சுறுத்தல்:-

வடகொரியாவின் முதல் அதிபரான கிம் இல் சுங்குக்குப் பிறகு 15 ஆண்டுகள் வடகொரிய ஆட்சித்தலைவராக விளங்கிய கிங் ஜோங் இல் 2011 டிசம்பரில் இயற்கை எய்தினார். அவரது மூன்றாவது மகனான கிம் ஜோங் உன் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டார். டிசம்பர் 19 ஆம் நாள் வடகொரியாவின் தேசிய பாதுகாப்பு ஆணையக் குழுவின் தலைவராகப் பொறுப்பு ஏற்றார். இவர்தான் அடுத்த பெரும் தலைவர் என்று வடகொரியத் தொலைக்காட்சி அறிவித்தது.

அதிபர் கிம் ஜோங் உன் கொடூரமானவர். ஆட்சிப் பொறுப்பு ஏற்றதுமுதல், தனக்கு எதிரிகளாகக் கருதுபவர்களை ஈவு இரக்கம் அற்ற முறையில் கொன்று வருகின்றார். இவரது தந்தையின் உடன்பிறந்த சகோதரியின் கணவர்தான் வடகொரிய இராணுவத் தலைமைப் பொறுப்பில் இருந்து வந்தார். அவர் தன்னைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்ற முயன்றதாகக் குற்றம் சுமத்தி, பீரங்கியில் கட்டிச் சுட்டுப் பொசுக்கினார். மற்றொரு இராணுவத் தளபதியை, 120 வேட்டை நாய்கள் அடைக்கப்பட்டு இருந்த கூண்டுக்குள் தூக்கிப் போட்டு, அவரைச் சித்திரவதை செய்து சாகடித்தார்.

உலக நாடுகளின் எச்சரிக்கைகளைப் பொருட்படுத்தாமல், அணு ஆயுதங்கள் தயாரித்துள்ளார். 6000 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும் ஏவுகணைகளை அணு ஆயுதங்களைப் பொருத்தி, அமெரிக்காவைச் சாம்பல் மேடாக்கியே தீருவேன் என்கிறார். தென் கொரியாவையும், ஜப்பானையும் ஒழித்துக் கட்டுவேன் எனக் கொக்கரிக்கின்றார்.

இரண்டு நாட்களுக்கு முன் வடகொரிய ஏவிய ஏவுகணை ரஷ்யாவின் விளாடி வாஸ்டாக் நகருக்கு 97 கிலோ மீட்டர் தூரத்தில் வெடித்துள்ளது. தென்கொரியாவில் புதிதாகத் தேர்ந்து எடுக்கப்பட்ட அதிபர் மூன் ஜே இன் நேசக்கரம் நீட்டுகிறார். மோதல் போக்கைக் கைவிடுவோம் என்கிறார்.

ஆனால் வடகொரிய அதிபர் குரூர வெறி பிடித்த நபர் ஆவார். அவரது தந்தை கிம் ஜோங் இல்லின் மற்றொரு மனைவியின் மகனும், தனது அண்ணனுமான கிம் ஜோங் நாம் என்பவரை, மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் இரண்டு பெண்களை அனுப்பிக் கொலை செய்தார். அவர்கள் இருவரும் ஒரு பொடியைக் கிம் ஜோங் நாம் கையில் தடவிவிட்டு நொடிப் பொழுதில் அகன்றார்கள். அவர் பரிதாபமாக உயிர் இழந்தார்.

போதாக்குறைக்கு டோனால்டு டிரம்ப் நிதானம் இல்லாமல் திட்டித் தீர்க்கின்றார் அனைவரையும். அமெரிக்கக் கடற்படைக் கப்பல்களை பசிபிக் சமுத்திரத்தில் இருந்து வடகொரியாவின் மீது தாக்குதலுக்கு தயாராகக் கொண்டு போய் நிறுத்தி இருக்கின்றார்.

அணு ஆயுதங்கள் கோரவெறி பிடித்தோர் கைகளில் சிக்குமானால் அகிலம் அழிவின் பிடியில் தவிக்க நேரலாம். உலகின் பல பகுதிகளிலும் பதட்டம் - பல பகுதி களில் கோடிக்கணக்கான மக்கள் பட்டினி. அறிவியல் விந்தைகளைப் படைக்கின்றது. ஆனால், அழிவின் பிடியில் மனிதநேயம் தள்ளாடுகின்றது.

இம்மடலும் நீண்டுவிட்டது. இப்போது நடுநிசியாகிறது மே 15.

சிறை நேர்காணலில் நான் சொல்லச் சொல்ல வழக்கறிஞர் நன்மாறன் இம் மடலை எழுதிக் கொண்டார்.

எழுச்சி சங்கொலிக்கும் உங்கள் பணிகள் வளரட்டும்!

பாசமுடன்,
வைகோ
சங்கொலி, 26.05.2017

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment