Tuesday, May 16, 2017

சிறை சென்றது ஏன்? வைகோ கடிதம்-5, போர்க்களத்தில் பூத்த மனிதநேயம்! பாகிஸ்தான் நடத்திய மாபாதகம், பாகம்-2!

புறநானூற்று உணவு வகைகள்:-

பண்டைத் தமிழகத்து வளம், மருத நிலச் செழுமை, குறிஞ்சியில், முல்லையில் வேட்டையாடப்பட்ட விலங்குகள். நெய்தலில் கிடைத்த மீன்கள், ஆயமகளிர் தரும் தயிர்; அதில் கிடைக்கும் நெய், செந்நெல் அரிசி, வரகரிசி, தேன், பசும்பால் இவற்றையெல்லாம் விதவிதமாகச் சமைத்து விருந்து படைத்து உண்டு மகிழ்ந்த தமிழர்களின் வாழ்வுச் சிறப்பை எண்ணினால் ஏக்கப் பெருமூச்சே மேலிடுகிறது. புது நெல்லின் வெண் சோற்றுடன் வாளை மீனை வகையாகச் சமைத்து உண்கின்றனர். அயிரை மீன் குழம்பு வைத்து சோற்றுருண்டைகளைச் சுவைக்கின்றனர். முள்ளிப்பூ மாலை சூடிய பரதவ மகளிர் பனை நுங்கின் நீரும், கருப்பஞ்சாறும் இளநீருடன் கலந்து உண்டு, பின் கடல் நீரில் நீந்தி ஆடி மகிழ்வர். புன்செய் வரகு தானியத்தைப் பால் பெய்து சமைத்து, தேனுடன் கலந்து, கொழுத்த முயலின் சூடான இறைச்சியைச் சேர்த்து உண்பர். காட்டுவழி வேட்டையாடும் வேடன், மானின் தசையை வட்டிலிலே கொண்டு வந்து உழவர் வீட்டில் கொடுப்பான். ஆயமகளிர் பானையிலே தயிரைக் கொண்டு வந்து தருவர். வெண்ணிற அரிசி தரும் நெல்லைப் பெண்கள் கொண்டு வருவர். ஆயமகளுக்கும் வேட்டுவனுக்கும் நெல்லை முகந்து தருவர். அங்கு கூடும் விருந்தினருக்கும் படைவீரர்களுக்கும் அற்புதமான பிரியாணி தருகிறார்கள். நான் நண்பகல் 1 மணிக்கு எழுதுகிறேன். ‘சோறும் சாம்பாரும் ஒரு கூட்டும்’ காத்திருக்கின்றன. புறநானூற்று பாட்டைப் படிக்கும்போதே நாவில் எச்சில் ஊறுகிறது.

மெல்லிய அரிசியைப் பக்குவமாக பொங்கும்போதே இறைச்சித் துண்டுகளை அத்துடன் சேர்த்துப் பொங்குகின்றனர். அது எப்படி இருக்கிறது தெரியுமா? நமது மங்கல மங்கையர் மாலை தொடுக்கும்போது பூ மொட்டுக்களுக்கிடையே தளிர் இலைகளை ஆங்காங்கு வைத்து மாலையாகக் கட்டுவர். அதுபோல அரிசிச் சோற்றில் இறைச்சித் துண்டுகள் கலந்துள்ளன. 2000 ஆண்டுகளுக்கு முன்னால் நம் முன்னோர் நாகரிகத்தில் எவ்வளவு உயர்ந்துள்ளனர். பச்சை மாமிசத்தையும் பச்சைக் காய்கறிகளையும் உலகின் பல பாகங்களில் மக்கள் உண்டு வாழ்ந்தபோது எவ்வளவு உன்னதமான வாழ்வை தமிழர்கள் நடத்தியுள்ளனர் என்பதை எண்ணும்போதே எவ்வளவு பெருமையாக உள்ளது.

“புலராப் பச்சிலை இடையிடுபு தொடுத்த
மலரா மாலைப் பந்துகண் டன்ன
ஊன்சோற்ற மலை பான் கடும்பு அருத்தும்” - புறநானூறு 33

இவ்வளவு போதும். இனி நான் கூற வந்த பிரச்சினைக்கு வருவோம். யுத்தகளத்தில் படைக்கலன்கள் பாய்வதால் மரணமும் ஒரு தரப்புத் தோல்வியும், பிரிதொரு தரப்பு வெற்றியும் ஏற்படுவது உண்டு. நான் சமர்க்களங்களைப் பற்றி காவியங்களிலும், இதிகாசங்களிலும், வரலாற்று நூல்களிலும் மிகவும் விரும்பிப் படிப்பவன் மட்டும் அல்ல; அந்தக் களங்களிலேயே மானசீகமாக உலவுகின்றவன்.

செருக்களத்தில் கொல்லப்பட்ட பகைவனின் உடலைச் சிதைக்கும் கொடூரம் வரலாறு நெடுகிலும் நடந்தது உண்டு. ஆனால், மனிதநேயத்துடன் வீரத்துடன் பொருது வீழ்ந்த பகைவனின் நெஞ்சுரத்தை வியந்து அவனது உயிரற்ற சடலத்தை முறையாக கௌரவித்து அடக்கம் செய்விக்கும் மனிதநேயமும் உண்டு.

இலியட் காவியம்:-

மைசூர்ப்புலி என வரலாறு போற்றும் மாவீரன் திப்புசுல்தான் போர்க்களத்தில் கொல்லப்பட்ட ஆங்கிலேய வெள்ளைப் படையினருக்குக் கல்லறைகள் கட்டுவித்தான். என் மனம் கவர்ந்த வீர காவியமான கிரேக்கத்து ஹோமர் தீட்டிய ‘இலியட்’ இதுபோன்ற ஒரு அற்புதக் காட்சியைச் சித்தரிக்கிறது.

பழமையான நாகரிகங்களில் ஒன்றுதான் கிரேக்க நாகரிகம். கிரேக்க மகாகவிஞன் ஹோமரின் காலத்துக்கு முன்னதாகவே படிப்பறிவுள்ளவர்களாகக் கிரேக்கர்கள் வாழ்ந்தனர். அவர்களின் தெய்வ வழிபாடு இறை நம்பிக்கை அவர்களுக்குள் நிகழ்ந்த யுத்தங்களுள் மிகவும் போற்றப்படுவது டிராய் யுத்தம் (Trojan War). இது நிகழ்ந்த காலம் கி.மு. 1334 என்றும், ஹெரோடோடஸ் கருத்துப்படி கி.மு. 1250-ஆம் ஆண்டு என்றும் கூறப்படுகிறது. பகுத்தறிவுக்கு ஒவ்வாத தேவதைகள் பற்றிய செய்திகள் இருப்பினும் டிராய் யுத்தம் அவர்களின் வரலாற்று நிகழ்வாகவே கருதப்படுகிறது. ஆசியா மைனரின் வடமேற்கு முனையில் அமைந்து இருந்தது டிராய் நகரம். எதிரிகள் ஊடுருவ முடியாத பலத்த அரண்களைக் கொண்ட கோட்டை அரண்களின் உள் அமைப்புக்களிலிருந்து குறிதவறாமல் கூர்மையான பாணங்களை வில்லில் தொடுத்துத் தாக்கும் மிகுந்த தேர்ச்சி பெற்றவர்கள் டிராய் வீரர்கள் - டிரோஜன்கள். டிராய் மன்னனாக பிரியம் திகழ்ந்தான். அவனது புதல்வர்களில் பெருவீரன் ஹெக்டர். இளைய மகன் எழில்மிக்க பாரிஸ் என்பான். ஸ்பார்டா நகர நாட்டிற்கு விருந்தினர்களாக இளவரசர்கள் ஹெக்டரும் பாரிசும் செல்கின்றனர். ஸ்பார்டாவின் மன்னன் மெனியலாஸ். அவன் மனைவிதான் பேரழகி ஹெலன். மெனியலாசின் அண்ணன் அகமென்னான், மைகினாய் நாட்டு அரசன். மூர்க்கமானவன். கிரேக்க அரசர்களில் தானே தலைவன் என தம்பட்டம் அடிப்பவன். பேரழகி ஹெலன் மீது மையல் கொள்கிறான் பாரிஸ். அவளும் அவன் மீது காதல் கொள்கிறாள். இரகசியமாக ஹெலனைக் கொண்டுபோய் விடுகிறான் கடல் மார்க்கத்தில் டிராய் நகரத்துக்கு. ஹெக்டர் தடுத்தும் பாரிஸ் கேட்கவில்லை. ஹெலனை மீட்க வேண்டும் என அகமென்னன் கிரேக்க அரசர்களின் படைகளைத் திரட்டுகிறான். ஆயிரம் போர்க் கப்பல்கள் ‘டிராய்’ தீவு நகரை முற்றுகையிட்டு அழிக்கப் புறப்படுகின்றன.

It is the face that launched a thousand ships. ‘இந்த அழகு முகம்தானா ஆயிரம் போர்க் கப்பல்களை ஏவியது’ என்பர். இலியட் காவியம் 15603 வரிகளைக் கொண்ட கவிதைக் காவியம். 24 அத்தியாயங்களைக் கொண்டது.

இக்காவியத்தின் மையக் கதாநாயகன் ஈடில்லா பெருவீரன் அக்கிலஸ். அவனது வீரத்தாய் தெடிஸ் தன் மகன் குழந்தையாக இருந்தபோது ஸ்டிக்ஸ் ஜீவநதித் தண்ணீரில் அமிழ்த்தி எடுக்கிறாள். அந்த உயிர்த் தண்ணீர் அக்கிலஸ் உடல் மீது பட்ட இடங்களில் எந்த ஆயுதமும் உயிரைப் பறிக்காது. ஆனால் அக்கிலசின் ஒரு குதிங்கால் தாயின் கரத்தில் இருந்ததால் அமுதத் தண்ணீர் படவில்லை. அதுவே கடைசிப் போர்க்களத்தில் அக்கிலசின் குதிகாலில் அம்பு பாய்ந்து மடிந்ததற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

‘இலியட்’ காவியத்தின் 24 அத்தியாயங்களைப் படித்தேன். என்ன விசித்திரம் எனில் இதில் டிராய் மரக்குதிரை பற்றிய குறிப்பே இல்லை. ஹெக்டருக்கும் அக்கிலசுக்கும் நடக்கும் மெய்சிலிர்க்கச் செய்யும் துவந்த யுத்தம் - அதன் முடிவு - அத்துடன் இலியட் முற்றுப் பெறுகிறது. “அக்கிலஸ் மரணம் குறித்தும் டிராய் மரக் குதிரை பற்றியும்” ‘ஒடிஸ்ஸி’ (Odyssy) காவியத்தில்தான் குறிப்பிடப்படுகின்றன.

யுத்தகளத்திற்குச் செல்வோம். இந்தப் போரில் “அகமென்னனின்” ஆணவத் திமிரை எதிர்த்த அக்கிலஸ் பங்கேற்கவில்லை. பத்தாண்டுகள் டிராய் முற்றுகையும் போரும் நடக்கிறது. டிரோஜன்களின் கை ஓங்கியது. கிரேக்கர்களின் பெருவீரர்கள் ஹெக்டரால் வீழ்த்தப்பட்டனர். பெருவீரன் அஜாக்ஸ் உட்பட! அக்கிலசின் ஒன்றுவிட்ட தம்பி பெரிடோகிளஸ் பெரு வீரன். கிரேக்கர்கள் தோற்பதைச் சகிக்காத பெரிடோகிளஸ், “அக்கிலசின் தலைக்கவசத்தையும், மார்புக் கவசத்தையும் அணிந்து களம் புகுந்தபோது” அக்கிலஸ்தான் போரிடுகிறான் என எண்ணி ஹெக்டர் நேருக்கு நேர் வாள் வீசுகிறான். பெரிடோகிளஸ் கொல்லப்படுகிறான். இச்செய்தி அறிந்த கணத்தில் வெடிக்கும் எரிமலையானான் மாவீரன் அக்கிலஸ். தனது ரதத்தில் போர்க்களம் நுழைகிறான். டிராய் கோட்டை வாயிலில் துவந்த யுத்தம் நடக்கிறது ஹெக்டருக்கும் அக்கிலசுக்கும். ஹெக்டர் கொல்லப்பட்டான். அவனது கால்களில் கயிற்றைப் பிணைத்து தன் ரதத்தில் கட்டிக் கொண்டு டிராய் கோட்டையை சுற்றி வருகிறான். ஹெக்டர் சடலம் மண்ணில் இழுக்கப்பட்டுச் செல்கிறது. ட்ரோஜன்கள் தங்களுக்கு அழிவு சூழ்ந்து விட்டதை எண்ணிக் கதறுகின்றனர்.

1962 இல் நான் ‘Helen of Troy’ திரைப்படத்தை நெல்லை பார்வதி திரையரங்கில் பார்த்தேன். 2005 ஆம் ஆண்டில் ‘Troy’ திரைப்படத்தை சிகாகோ நகரத் திரையங்கில் பார்த்தேன். “பிராட்பிட்” இதில் அக்கிலசாக நடித்திருப்பார். அற்புதமான நடிப்பு கதாபாத்திரத்தை அப்படியே நம் கண்களில் நிறுத்தினார். “லாரன்ஸ் ஆப் அரேபியா” திரைப்படத்தில் கதாநாயகனாக அறுபதுகளில் நடித்து ஆஸ்கார் விருது பெற்ற நடிகர் பீட்டர் ஒடூல் - டிராய் மன்னன் ‘பிரியம்’ என்ற பாத்திரமாகவே மாறியிருப்பார். “காரணம் இல்லாமல் இலியட் காவியத்தை இங்கு நான் எழுதவில்லை. காரணத்தோடுதான் ‘இலியட்’ காவியத்தின் இறுதி அத்தியாயத்தின் நெஞ்சை உருக்கும் காட்சிக்கு உங்களை அழைத்துச் செல்கிறேன். ஹோமரின் வாசகங்களையே இங்கு தருகிறேன்.

“இடம்” மாவீரன் அக்கிலசின் பாசறை.:-

- இரண்டு முக்கிய மெய்க்காப்பாளர்கள் நிற்க அக்கிலஸ் அமர்ந்துள்ளான்.

- நெடிதுயர்ந்த உருவம் ஒன்று யாரும் கவனிக்காத விதத்தில் அக்கிலசின் முன்னால் நின்று அவனது முழங்கால்களைப் பற்றியவாறு அக்கிலசின் வலிமை வாய்ந்த கரங்களில் முத்தமிடுகிறது.

அக்கிலஸ் ஆச்சரியத்தின் உச்சத்தில் உற்று நோக்குகிறான்.
“டிராய் மன்னன் பிரியம் பேசுகிறான்”

கிரேக்கக் கடவுள்களைப் போன்ற தோன்றமுள்ள அக்கிலசே - உன் தந்தையை நான் அறிவேன். எனது வயதுதான் அவருக்கு இருக்கும். அவரது வீர மகனான நீ, போர்க்கள வெற்றி விருதுகளோடு வருவது கண்டு ஆனந்தக் களிப்படைவார். எனது தலைவிதியே தீமையாகிவிட்டது. எனக்கு 50 புதல்வர்கள். ஒரே தாய்க்கு பத்தொன்பது ஆண் பிள்ளைகள். மற்றப் பிள்ளைகள் பிற தாய்களுக்கு பிறந்தவர்கள். பலரும் களத்தில் கொல்லப்பட்டனர். என் புதல்வர்களில் வீராதி வீரனாக ஹெக்டர், தன் தாய்நாட்டைக் காக்க உன்னுடன் போர் புரிந்தான். சில நாட்களுக்கு முன் உன் வீரக் கரங்களால் கொல்லப்பட்டான்.

என் மகனின் உயிர் பறித்த அக்கரங்களை நான் முத்தமிடுகிறேன். அக்கிலசின் காலடியில் அமர்ந்தான் மன்னன் பிரியம். கதறி அழுதான். அது கண்ட அக்கிலஸ் தன் தந்தையை நினைத்தும், தம்பி பெரிடோ கிளசையும் நினைத்து அழுதான். இருவரின் விம்மலும், புலம்பலும் பாசறையில் ஒலித்தன. அக்கிலஸ் தன் கரங்களை நீட்டி பின்னர் அரவணைத்தவாறு, மன்னனின் நரைத்த தலையையும், நரைத்த தாடியையும் நோக்கி இரக்கம் நிறைந்த குரலில் “ஓ! எவ்வளவு பெரிய துரதிஷ்டசாலி நீங்கள். உங்கள் உள்ளத்தில் தாங்கொணாத துக்கம். உங்களின் புதல்வர்களைக் கொன்றவன் நான். இந்தப் பாசறைக்கு நீங்கள் வந்தது அசாதாரணமான செயல். இந்த ஆசனத்தில் அமருங்கள். உங்கள் இதயம் துணிச்சலில் இரும்பை நிகர்த்தது. துக்கத்தைத் தாங்கிக் கொள்ளுங்கள். உங்கள் துயரம் மறைந்த மகனைத் திரும்பக் கொண்டுவரப் போவதில்லை. உங்களைத் தவிர வேறு எவராயினும் இளைஞனாயினும் என் அரண்களுக்குள்ளே நுழைந்திருக்கவே முடியாது. உங்கள் நெஞ்சுறுதி வியப்பிற்குரியது.

மன்னன் பிரியம் தழுதழுத்தக் குரலில் சொல்கிறான். “பெரு வீரனே! என் மகனது சடலம் மண்ணில் கிடக்கிறது. ஹெக்டரின் சடலத்தை கேட்டு வந்துள்ளேன். அவனை உரிய மரியாதையோடு அடக்கம் செய்ய வேண்டும்.” அக்கிலஸ், “உங்கள் மகன் ஹெக்டரை உங்களிடம் ஒப்படைக்க முடிவு செய்துவிட்டேன். அவனது மரணத்துக்குப் பின் உணவருந்தியிருக்க மாட்டீர்கள். உறங்கியிருக்க மாட்டீர்கள்” எனக் கூறியபடி “இருவரும் சேர்ந்து உணவு அருந்தினர். மன்னன் பிரியம் ஓய்வெடுக்க படுக்கை வசதி செய்யப்பட்டது” ஹெக்டரின் சடலத்தை நன்கு நீராட்டி, தைலமிட்டு ஒரு ‘ரதத்தில்’ பாதுகாப்பாக வைக்க அக்கிலஸ் ஏற்பாடு செய்தான். “உங்கள் தீரமகன் இறுதிச் சடங்குகளுக்கு எத்தனை நாட்கள் வேண்டும். அதுவரை யுத்தத்தை நிறுத்துகிறேன் என்றான் அக்கிலஸ்.

மன்னர் பிரியம் - “என் வீரப் புதல்வனின் ஈமச்சடங்குக்காக குன்றுகளில் இருந்து மரங்களை ட்ரோஜன்கள் கொண்டு வருவார்கள். ஒன்பது நாள் துக்கம் கடைப்பிடிக்கப்பட்டு பத்தாம் நாள் தகனம் செய்வோம். பதினோறாம் நாள் கல்லறையில் வைப்போம்” என்றார். இந்தப் பதினோறு நாட்களும் போர் தொடுக்க மாட்டோம் என்றான் அக்கிலஸ். வைகறைப் பொழுதில் பாதுகாப்பாக மன்னர் பிரியத்தையும், ஹெக்டரின் சடலத்துடன் அனுப்பி வைத்தான். டிராய் மக்கள் கண்ணீர் சிந்திக் கதறினார்கள். ஈமச்சடங்களுக்காக ‘மரங்களை’ வெட்டிக் கொணர்ந்தனர். பத்தாம் நாள் மரங்கள் அடுக்கப்பட்ட சிதையின் மேல் மாவீரன் ஹெக்டரின் சடலம் வைக்கப்பட்டது. நெருப்பு மூட்டப்பட்டது. பதினோறாம் நாள் ‘தீயாற்றல்’ நடந்தது. ஹெக்டரின் எலும்புகள் சேகரிக்கப்பட்டன. ஒரு தங்கப்பேழையில் எலும்புகளும், ஈமச்சாம்பலும் வைக்கப்பட்டன. பதினோறாம் நாள் காலை கதிரவனின் கிரணங்கள் புறப்பட்ட வேளையில் ஏற்கனவே அமைக்கப்பட்ட புதைகுழியில் ஹெக்டரின் எலும்புகளும், ஈமச்சாம்பலும் அடங்கிய தங்கப்பேழை வைக்கப்பட்டது. கடினமான பாறைகளை அக்குழிமேல் நெருக்கமாக வைத்து மூடினார்கள்” பகைவர் படைகளை சூறையாடிய பெரு வீரன் அடக்கமானான்.

இலியட் காவியம் இத்துடன் முடிவு பெறுகிறது. பெறும் பகைவன் ஆனாலும் கொல்லப்பட்ட பின் சடலத்துக்கு இறுதி மரியாதை, ஈமச்சடங்கு நடத்தும் மனித நேயம் 3500 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்தது என்பதற்காகவே ‘ஹோமரின் இலியட்’டை உங்களிடம் வைத்தேன்.

கும்பகர்ணன் வதை படலம்:-

கவிச்சக்கரவர்த்தி கம்பனின் கவிதைகளில் மனம் பறிகொடுப்பவன் நான். அதை இதிகாசமாகவே பார்க்கிறேன். யுத்த காண்டத்தில் மயிர்க்கூச் செறியும் களக் காட்சிகள் ஏராளம். இந்திரசித்து வதை படலமும், இலங்கை வேந்தனின் இறுதி யுத்தமும், கும்பகர்ணன் வதை படலமும் என் நெஞ்சை விட்டு நீங்காதவை.

“நெறியில் உயர்ந்தவனும் ஈடு இணையற்ற பெரு வீரனுமாகிய கும்பகர்ணன் பாத்திரம் இக்காவியத்தில் என் மனதை முழுமையாக ஆக்கிரமிக்கும் பாத்திரம். போர்க்களம் வருகிறான் கும்பகர்ணன். அவனது ஒரு தோளில் இருந்து மறு தோளைப் பார்க்கவே பலகாலம் ஆகுமாம். இராமனது சைன்யத் தளகர்த்தர்கள் பலறும் கும்பர்கர்ணன் முன் தோற்று ஓடினர். அப்படித் தோற்று மூர்ச்சையடைந்த சுக்ரீவனைத் தூக்கிக் கொண்டு இலங்கைக்குள் கும்பகர்ணன் நுழையும் வேளையில் பெரும் போர் நிகழ்கிறது. மூர்ச்சை தெளிந்த சுக்ரீவன் கும்பகர்ணனின் மூக்கைக் கடித்துத் துண்டித்துவிட்டு நழுவித் தப்பிவிட்டான். தசரதன் மூத்த மகன் இராமனுக்கும் கும்பகர்ணனுக்கும் நேருக்கு நேர் யுத்தம். வீரம் கொந்தளிக்கும் போர். தனது முடிவு நெருங்கிவிட்டது என்பதை உணர்ந்தான் கும்பகர்ணன். இராமனிடம் வேண்டுகோள் வைக்கிறான். நான் மடியப்போகிறேன். ஆனால் “மூக்கில்லாத மூளியான முண்டம்” என தேவர்களும், முனிவர்களும் எள்ளி நகையாடுவர். ஏளனம் புரிவர் பலறும். எனவே உன் பாணத்தைச் செலுத்தி என் கழுத்தைத் துண்டித்து எனது நெடுந்தலையை கருங்கடலின் ஆழத்தில் உன் அம்பினால் செலுத்துவாய் என்றான் கும்பகர்ணன்.

“மூக்கிலா முகமென்று முனிவர்களும் அமரர்களும்
நோக்குவார் நோக்காமை, நுன் கணையால் என் கழுத்தை
நீக்குவாய்; நீக்கியபின், நெடுந்தலையைக் கருங்கடலுள்
போக்குவாய்”

என்றான் கும்பகர்ணன். அவ்விதமே இராமனும் தனது வாளியைச் செலுத்தி நெடுங்கடலுள் கும்பகர்ணன் தலை ஆழத்தில் புதையச் செய்தான். அது இதிகாசம்.

பாகிஸ்தான் ராணுவத்தின் காட்டுமிராண்டித்தனம்:-

இங்கே பாகிஸ்தான் ராணுவம் செய்தது கொடிய காட்டுமிராண்டித்தனம்.

“இந்திய ராணுவ வீரர்களை, கட்டுப்பாட்டு பிரதேச எல்லை கடந்து வந்து இயந்திரத் துப்பாக்கிகளால் சுட்டுக் கொன்று அவர்களின் தலைகளைத் துண்டித்தது மன்னிக்க இயலாத மாபாதகமாகும்.

உலகத் தொழிலாளர்களின் உரிமைக் கொண்டாட்ட தினமான மே 1 ஆம் நாளில் இந்தக் கோரச் செயலை பாகிஸ்தான் ராணுவம் நடத்தியுள்ளது. இது குறித்து இந்திய ராணுவ நடவடிக்கைகள் ஆணையர் நாயகம் லெப் ஜெனரல் ஏ.கே.பட் அவர்கள், (DGMO) பாகிஸ்தானில் அதே பொறுப்பில் உள்ள மேஜர் ஜெனரல் சசீர்சம்சட்டிடம் பலத்த கண்டனத்தைத் தெரிவித்தபோது தக்க ஆதாரமும், சாட்சியமும் இன்றி குற்றம் சாட்டக் கூடாது என்றதுடன், கட்டுப்பாட்டு எல்லை தாண்டி பாகிஸ்தான் ராணுவ முகாம்களை இந்தியா குறிவைத்தால் உரிய பதிலடி தரப்படும் என்றும் உறுமியிருக்கிறார்.

பாகிஸ்தான் நாடு உதயமான காலத்தில் இருந்து பல கட்டங்களில் ஜனநாயகம் பலியிடப்பட்டு ராணுவ சர்வாதிகாரம் அதிகார லகான்களை கைப்பற்றியது. ராணுவத் தளபதிகள், ஜெனரல் அயூப்கான், ஜெனரல் யாஹ்யா கான், ஜெனரல் ஜியாவுல்ஹக், ஜெனரல் பர்வீஸ் முசாரப் என ஜனநாயக அரசுகள் கவிழ்க்கப்பட்டு ராணுவ ஆட்சி கொடுங்கோலோச்சிய காலமே அதிகம். தற்போது கிடைக்கின்ற செய்திகள் கவலையளிக்கின்றன. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் ராணுவத்தினரை இழிவுபடுத்தி பேசியதாகவும், பொதுமக்களை ராணுவத்திற்கு எதிராக தூண்டி விட்டதாகவும் எதிர்க் கட்சியினர் சிலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

தற்போது பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமைத் தளபதி ஜெனரல் கைய்மர் ஜேவட் பஜ்வா ஒரு ஆபத்தான நபராக கவனத்துக்குரியவர் ஆகிறார். இதன் பின்புலத்தில் நடந்ததுதான் முக்கியமாகும்.

2017 ஏப்ரல் 26 ஆம் நாள் இந்தியாவின் தனியார்துறை ஜெட் விமானம் இஸ்லாமாபாத் விமான நிலையம் போய் இறங்கியது. காபூலில் இருந்து எந்த விசா கட்டுப்பாடுகள் இன்றி அங்கு போய்ச் சேர்ந்தவர் 40 கி.மீ தொலைவில் ஒரு அழகிய குன்றின் சரிவில் உள்ள மாளிகைக்கு போனார். அந்த இல்லம்தான் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீபின் இல்லம். அவரும் குரும்பத்தினரும் இந்த விருந்தினரை வரவேற்றனர். அவர்தான் தொழிலதிபர் சஜ்ஜன் ஜின்டால், பிரதமர் மோடியின் சமாதானத் தூதுவராகத்தான் நவாஸ் செரீப்பை சந்தித்தார். இந்த வருகை ராணுவத்தினருக்கோ, ராணுவ உளவுத்துறைக்கோ தெரிவிக்கப்படவில்லை. அதனால் ராணுவ உளவுத்துறை ஊடகங்களுக்கு செய்தியைக் கசியவிட்டது.

“பிரதமர் நவாஸ் செரீபில் மகள் மரியம் “ஜின்டால் நீண்ட காலமாக எங்கள் குடும்ப நண்பர். நட்பு நிமித்தமாக சந்தித்தார். இதில் அரசியல் இல்லை” என வலைதளங்களில் பதிவு செய்தார். ஆனால் பாகிஸ்தான் ராணுவத் தளபதி தனக்குத் தெரிந்துதான் நாட்டில் அணுவும் அசைய வேண்டும் என்று செயல்படுகிறார். இந்தியாவுக்கு எதிராக ராணுவத்தினரிடம் கத்தியைத் தீட்டுகிறார். ஏப்ரல் 30 ஆம் தேதி எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டிற்கு அருகில் தன் ராணுவத்தினரிடம் கடுமையாக பதிலடி கொடுங்கள் என உத்தரவிட்டுள்ளார்.

எல்லை நடவடிக்கைப்படை (BORDER ACTION TEAM - BAT) ஒன்று பாகிஸ்தான் ராணுவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதிரடிப் பயிற்சி பெற்றவர்களைக் கொண்ட சிறப்புப்படை. எல்லைப் புறங்களில் சில நேரங்களில் தீவிரவாதிகளுடன் சேர்ந்தும் இவர்கள் ஊடுருவதும் உண்டு. தற்போது பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் வழக்குகளிலும் சிக்கியுள்ளார்.

கவலை தரும் ஜம்மு காஷ்மீர் நிலைமை:-

எல்லைப்புறத்தில் வெறுப்பு நெருப்பை பாகிஸ்தான் ராணுவத் தலைமை விசிறிக் கொண்டிருக்கும் வேளையில், ஜம்மு காஷ்மீர் நிலைமை மிகுந்த கவலையைத் தருகிறது. பாகிஸ்தான், சவுதி அரேபியாவில் இருந்து இயக்கப்படும் தொலைக்காட்சிகளின் செய்திகளையே ஜம்மு காஷ்மீர் மாநிலத்தினர் அதிகம் காண்கின்றனர். இந்தியா மீதான வெறுப்புப் பிரச்சாரம் தீவிரமாக ஊடுருவுகிறது. இச்செய்தி ஊடகங்களில், இம் மே மாதம் 6 ஆம் தேதி சனிக்கிழமை ஆயுதந்தாங்கிய தீவிரவாதிகள், ஸ்ரீநகர் ஜம்மு நெடுஞ்சாலையில் நடத்திய தாக்குதலில் மூன்று பொதுமக்களும், ஒரு காவலரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். எல்லைக் காப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் தீவிரவாதியான பயஸ் அகமது என்ற சீத்தா கொல்லப்பட்டான். இவன் தலைக்கு ஏற்கனவே இரண்டு லட்சம் ரூபாய் விலை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தெற்கு காஷ்மீரத்தில் குல்காம் மாவட்டத்தில் கொய்மோ பகுதியில் தீவிரவாதி சீத்தாவின் சடலம் எடுத்துச் செல்லப்பட்டு இறுதிச் சடங்குகள் நடந்தபோது பூரண ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் நால்வர், இயந்திரத் துப்பாக்கிகளால் ஆகாயத்தை நோக்கி வேட்டுகளை எழுப்பி இறுதி மரியாதை செய்துள்ளனர் பகிரங்கமாக. இது அலட்சியப்படுத்தக் கூடியதல்ல.

வளைகுடா நாடுகளை மட்டுமல்ல அண்மையிலுள்ள ஐரோப்பிய நாடுகளுக்கும் பதட்டம் ஏற்படுத்தி வருகிற படு தீவிரமான அமைப்புதான் ISIS. ஈராக், சிரியா, இஸ்லாமிய அரசு குறுகிய காலத்திற்குள் தலிபான்களைவிட, அல் கொய்தாவைவிட பயங்கர வலிமை உள்ளவர்களாக ஆயுதம் பலம் கொண்டவர்களாக சிரியாவின் அதிபர் அல்பசார் ஆசாத் அரசை அகற்ற போர் தொடுத்து வருகின்றனர். உக்கிரமமான யுத்தம் நடைபெற்று வருகிறது. ருஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சிரிய அதிபர் ஆசாத்துக்கு முழு ஆதரவு தந்து வருகிறார். அமெரிக்கக் கொள்கையும் இதே நேர்கோட்டில் சென்று கொண்டிருந்தது. திடுக்கிடும் திருப்பம் நேர்ந்தது. வெள்ளை மாளிகையின் போக்கில் அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்ற நாளில் இருந்து அறிவுக்கு ஒவ்வாத அதிரடி அறிவிப்புகள், நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

வளைகுடா நாடுகளின் பரிதாபம்:-

வளைகுடா நாடுகளில் ஏமன் தேச நிலைமை மிகப் பரிதாபகரமானது. இரண்டு கோடியே எழுபது லட்சம் மக்கள் தொகையில் 90 லட்சம் மக்கள் பசி, பட்டினியால் மடியும் அவலம் அவர்களை வளைத்துள்ளது என்று ஐ.நா. அறிக்கை கூறுகிறது. 33 லட்சம் பேர், குறிப்பாக சிறுவயதினர் குழந்தைகள் நல்ல சத்துள்ள உணவு இன்றி வாடி வதங்குவதாகவும் கூறுகிறது. இஸ்லாமிய ஸ்டேட் ISIS பிடியில், அல்லது அல்கொய்தா பிடியில் ஏமன் சிக்கக் கூடும் என்று கருதி சவுதி அரேபியாவில் இருந்து அமெரிக்கா தாக்குதல் நடத்துகிறது. ஏமனில் இருப்பதாக சந்தேகித்து அல்கொய்தா முக்கியத் தலைவரைக் கொல்ல அதிபர் டிரம்ப் ஆணைப்படி நடத்தப்பட்ட குண்டுவீச்சில், அந்த நபர் சிக்கவில்லை. அந்நாட்டிலேயே இஸ்லாமிய அப்பாவி ஏமன் மக்கள் 30 பேர் கொல்லப்பட்டனர். 8 வயது சிறுமி உட்பட - சிரியாவில் நிலைமை விசித்திரமான அபாயம். சிரியாவில் ‘இஸ்லாமிய அரசை’ எதிர்த்து போராடும் குர்தியர்களுக்கு அமெரிக்கா ஆயுத உதவியும் செய்கிறது.

சிரியாவில் தீவிரவாதிகள் பிடியில் உள்ள இட்லிப் மாவட்டத்தில் கான் சேக் ஹவுன் நகரில் ஏப்ரல் 2 ஆம் நாள் சிரியா அரசுப் போர் விமானம் குண்டு வீசியதாகவும். ரசாயனக் குண்டுகள் என்றும், அந்த அழிவில் குழந்தைகள் உட்பட எழுபது பேர் கொல்லப்பட்டதாகவும் செய்தி வெளியாயிற்று. அழிவுக் காட்சிகள் தத்ரூபமாக தொலைக்காட்சி ஊடகங்களில் அதிர்ச்சியூட்டின. வெள்ளை மாளிகையில் தொலைக்காட்சியில் இச்சம்பவத்தைக் கண்ட அதிபர் டிரம்ப் மகள் இவென்கா பயந்து பதறியதாகவும், “தந்தையே இதற்கு நடவடிக்கை எடுங்கள்” என்று கூறியதாகவும், அடுத்த 48 மணி நேரத்தில் அமெரிக்க ஏவுகணைகள் பாய்ந்ததாகவும் செய்திகள் உலகை உலுக்கின. சிரிய அதிபர் ஆசாத், “எங்கள் போர் விமானம் தீவிரவாதிகள் இருந்த கட்டடத்தின் மீது குண்டு வீசியதாகவும், தீவிரவாதிகள் சேகரித்து வைத்திருந்த ரசாயனக் குண்டுகள் வெடித்ததாகவும், ஐ.நா. இது குறித்து விசாரணை நடத்தட்டும் என்றார். ருஷ்ய அதிபர் புடினும் அதனையே வலியுறுத்தினார்.

இதே வேகத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளை வேட்டையாடப் போடப்பட்ட உலகின் சக்தி வாய்ந்த குண்டு, “குண்டுகளுக்கு எல்லாம் தாய்” (Mother of Alla Bombs) என்று கொக்கரித்தார். ஆப்கன் அரசு இதனைக் கண்டனம் செய்துள்ளது. கத்தோலிக்க தலைமைப் பீடமான வாடிகனின் போப் ஆண்டவர் பிரான்சிஸ் “உயிர்களை அழிக்கும் குண்டுகளை” அன்பால் உயிர்விக்கும் அன்னை என்று அதிபர் விவரித்தது அக்கிரமம் என்றார்.

நீதி சாகாது:-

அப்பாவிகள் கொல்லப்பட்டால், சிறு பிள்ளைகள் சாக நேர்ந்தால் அதிர்ச்சியும், ஆத்திரமும் ஏற்படுவது இயற்கைதான். ஆனால் ஒன்றரை லட்சம் ஈழத்தமிழர்கள் இதே மே மாதத்தில்தானே எட்டு ஆண்டுகளுக்கு முன் சிங்கள இராணுவத்தால், விமானப்படையால் கொன்று குவிக்கப்பட்டார்களே, சின்னஞ்சிறு பிஞ்சுகள், குழந்தைகள் துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்டார்களே, உலக நாடுகளின் அதிபர்களுக்கு ஏன் அதிர்ச்சி ஏற்படவில்லை. மனம் பதறவில்லை. இப்படுகொலைக்குக் காரணம், இந்திய அரசுதான் என்று கூறினேன். கொலைகார ராஜபக்சே. “யுத்தத்தை இந்தியாவே நடத்தியது. அவர்களாகவே அனைத்து ஆயுதங்களும் தந்தனர்” என அண்மையில் கூறினான். இதைச் சொன்னதனால்தானே என் மீது திமுக அரசு தேசத் துரோகக் குற்றச்சாட்டுடன் வழக்குப் போட்டது.

2013 டிசம்பர் 12 இல் டில்லி பேருந்தில் ஒரு மருத்துக் கல்லூரி மாணவி நிர்பயா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஆறு கொடியவர்களால் கற்பு சூறையாடப்பட்டு, குரூரமான பாலியல் வன்முறையில் அந்த அபலைப் பெண் நாசமாக்கப்பட்டு, குற்றுயிரும் குலையுயிருமாக சாலையில் வீசி எறியப்பட்ட கொடுமை சிங்கப்பூருக்கு சிகிச்சைக்குக் கொண்டுசெல்லப்பட்டு உயிர் நீத்தார். சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டு உயிர் நீத்தான். குறித்த வழக்கில் மூன்று நீதிபதிகள், நீதியரசர் தீபக் மிஸ்ரா, நீதியரசி பானுமதி, நீதியரசர் அசோக்பூசன் கொடியோர் நால்வருக்கும் விசாரணை நீதிமன்றமும், உயர்நீதிமன்றமும், விதித்த மரண தண்டனையை உறுதிப்படுத்தி தீர்ப்பளித்தனர். அக்சய் குமார் சிங், வினய் சர்மா, முகேஷ், பவன் நால்வர்தான் இக்கொடுமை செய்ததற்காக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்கள். மொத்தம் ஆறு பேர் இக்கொடுமை புரிந்தோர்.

ஒருவன் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டான். ஒருவன் வயது காரணமாக சிறார் சிறையில் அடைக்கப்பட்டு வெளிவந்தான். நீதியரசி பானுமதி, அவர்கள் தனது தீர்ப்பில் நிர்பயாவுக்கு நேர்ந்த பாலியல் கொடுமையை மிகுந்த வேதனையுடன் பதிவு செய்துள்ளார். நிர்பயாவின் கர்ப்பகிரகமான தாய்மைக்கோவிலில் எத்தகைய கொடுமை நேர்ந்தது என்பதை அவர் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்!

என் மனதில் என்ன தோன்றியது தெரியுமா? ஈழத்து தமிழ்க்குல மகள் இசைப்பிரியாவை 16 சிங்கள ராணுவ மிருகங்கள் எப்படி கற்பழித்து நாசம் செய்து கொன்றனர் என்பதை சாட்சியமாகத் தந்த சேனல் 4 தொலைக்காட்சி, செய்தி வாசிப்பவர், சிங்கள ராணுவ மிருகங்கள் எப்படியெல்லாம் தாங்கள் கற்பழித்து நாசம் செய்தோம் என்று கூறியதை இங்கு வாசிக்க இயலவில்லை என்றார்.

நான் சில கொடூரக் காட்சிகளை இணையதள காட்சியாகப் பார்த்து இரத்தக் கண்ணீர் வடித்தேன். நெஞ்சம் நடுநடுங்கியது. ஈழத்தமிழ் இளைஞர்களும், இளம் பெண்களும் சித்திரவதை செய்யப்பட்டு நிர்வாணமாய் நிறுத்தப்பட்டுள்ளனர்.

கற்பழித்துக் கொல்லப்பட்ட ஈழத்தமிழ்ப் பெண்களின் சடலத்தின் கர்ப்பகிரத்தில் துப்பாக்கிகளை பேனட் கத்தியால் குரூர வெறியுடன் கெக்கலித்துக் கொண்டே சிங்கள மிருகமான சிப்பாய்கள் செய்த கொடுமையை, நான் காட்ட முயன்றபோது எனது நண்பர் முன்னாள் மத்திய அமைச்சர் யஸ்வந்த் சின்கா கண்களை மூடிக் கொண்டார்.

இந்தியாவின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதிகள் அகமதி அவர்கள், இலங்கையில் ஒரு ஆய்வுக்கு சென்றுவிட்டு, “சிங்கள அரசிடம் நீதி இல்லை” என்று அறிவித்துவிட்டுப் பாதியிலேயே திரும்பினார்.

உலகில் நீதியரசி பானுமதி அவர்கள் போன்ற மனித நேய நீதியரசர்கள் கவனத்துக்கு, ‘ஈழத்தமிழ் இனப்படுகொலையை சரியான சாட்சியங்களுடன் ஆவணங்களுடன் கொண்டு சென்றால் நீதி கிடைக்கும் நீதி சாகாது’ என்ற உறுதி பிறந்தது உள்ளத்தில்.

கணிப்பொறி இல்லாத காலத்தில், இணையதளம் இல்லாத காலத்தில் உலக நடப்புகளை தம்பிகளுக்கு தந்தார் அறிஞர் அண்ணா மடல்களாக. ஈழம் குறித்த நமது இலட்சியம் வெல்வதற்கும், நீதி கிடைப்பதற்கும், தேவையான எண்ணங்களை இளைய தலைமுறையினருக்கு ஊட்ட உலகச் செய்திகள் ஒன்றே பயன்படும் என்று எண்ணித்தான் அதனை மையப்புள்ளியாக வைத்து அகிலத்து செய்திகளை எழுதுகிறேன்.

பிரான்சு நாட்டு அதிபர் தேர்தல் குறித்தும், வடகொரிய அதிபரின் பயங்கரம் பற்றியும், தென்கொரியாவின் புதிய அதிபர் பற்றியும். சைப்ரஸ், துருக்கி பிரச்சனை பற்றியும் அடுத்து எழுதத் திட்டமிட்டுள்ளேன்.

நேர்காணலில் நான் சொல்லச் சொல்ல செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் கோ.நன்மாறன் இம்மடலை எழுதிக்கொண்டார்.

எழுச்சி சங்கொலிக்கும் உங்கள் பணிகள் வளரட்டும்!

பாசமுடன்,
வைகோ

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment