Monday, August 7, 2017

பெட்ரோல் டீசலுக்கு ஜி.எஸ்.டி. வரி இல்லாததால் மதிப்புக் கூட்டு வரியை தமிழக அரசு குறைக்க வேண்டும்-வைகோ அறிக்கை!

பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் மாற்றி அமைத்துக்கொள்ள கடந்த ஜூன் 16 ஆம் தேதி முதல் எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலைகள் நிர்ணயிக்கப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் கூறுகின்றன. ஆனால் கச்சா எண்ணெய் விலை இறங்கும் போது பெட்ரோல், டீசல் விலையில் 0.50 காசுகள், 0.60 காசுகள் என்று குறைக்கப்படுகின்றன.

கச்சா எண்ணெய் விலை உயரும்போதோ, பெட்ரோல், டீசல் விலை 2 ரூபாய் அல்லது 3 ரூபாய் உயர்த்தப்பட்டு வருகின்றது. பன்னாட்டுச் சந்தையில் தற்போது கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 55 டாலராக இருந்தாலும், அதற்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுவது இல்லை. எண்ணெய் நிறுவனங்கள் நுழைவு வரி , சுத்திகரிப்புச் செலவு, இறக்குமதி செலவு, உற்பத்திக்கு ஆகும் கலால் வரி மற்றும் போக்குவரத்துச் செலவு, எண்ணெய் நிறுவனங்களின் லாபம் இவற்றை எல்லாம் சேர்த்து பெட்ரோல், டீசல் விலையை அதிகரிக்கின்றன. இதனால் பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்தாலும், அதன் பலன் பொதுமக்களுக்கு போய்ச் சேருவது இல்லை. இன்றைய விலை நிலவரப்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 15 காசுகள் உயர்ந்து ரூ. 69.03 காசுகள் எனவும், டீசல் விலை லிட்டருக்கு 8 காசுகள் உயர்த்தப்படடு, ரூ.59.59 காசுகள் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு மார்ச் மாதம் பெட்ரோல் மீதான வாட் வரியை 27 விழுக்காட்டிலிருந்து, 34 விழுக்காடாகவும், டீசல் மீதான வாட் வரியை 21.4 விழுக்காடு என்பதிலிருந்து 25 விழுக்காடாகவும் உயர்த்தியது. ஜூலை மாதம் முதல் ஜி.எஸ்.டி. வரி வருவதால், பெட்ரோல், டீசலுக்கு விதிக்கப்படும் வரிகளில் இழப்பை சரிகட்டுவதற்கு வாட் வரிகளை தமிழக அரசு அதிகரித்தது. ஆனால் தற்போது பெட்ரோல், டீசலுக்கு ஜி.எஸ்.டி வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருப்பதால், தமிழக அரசு பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியைக் குறைக்க வேண்டும். அப்போதுதான் பெட்ரோல், டீசல் விலை உயர்வின் மூலம் மக்கள் மீது விழும் சுமை ஓரளவிற்கு குறையும்.

நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுவதால், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, பெட்ரோல், டீசல் மீது ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படாததால், அவற்றின் மீதான மதிப்புக்கூட்டு வரியை தமிழக அரசு உடனடியாக குறைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment