Friday, April 8, 2016

முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்திய பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு வைகோ பாராட்டு!

சட்டமன்றத் தேர்தலில் அளித்த வாக்குறுதியின் படி பீகார் மாநிலத்தை முழுமையான மது இல்லா மாநிலமாகவும், மது போதையற்ற மாநிலமாகவும் மாற்றி அறிவித்துள்ள முதல்வர் நிதிஷ்குமார் அவர்களுக்கு இதயம் கனிந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஏப்ரல் 1 முதல் பீகார் மாநிலத்தில் பகுதி அளவு மதுவிலக்கையும், 05.4.2016 முதல் முழுமையான மதுவிலக்கையும் அறிவித்து விடுதிகள், பார்கள், கிளப்புகள் என எங்கும் மது அருந்தவும், விற்கவும் தடை விதித்து, அதற்கான உரிமங்களையும் இரத்து செய்துள்ள பீகார் மாநில அரசின் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்டு, தற்போதைய தடையால் தேங்கி உள்ள 36 ஆயிரம் லிட்டர் வெளிநாட்டு மதுவகைகளை அழிக்கப்போவதாகவும், அந்த மாநில அரசு துணிச்சலாக முடிவெடுத்துள்ளது.

உள்நாட்டு மது வகைகள் மட்டுமின்றி, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட மது வகைகளுக்கும் முழுமையான தடை விதித்துள்ள அரசின் முடிவை அம்மாநில பெண்கள் குழந்தைகள் என பலரும் மகிழ்ச்சியுடன் வரவேற்று முதலமைச்சருக்கு கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து நன்றி தெரிவித்து வருகிறார்கள்.

முழுமையான மதுவிலக்கு என்பது சாத்தியம் இல்லை என்று தமிழ்நாட்டில் உள்ள சில கட்சிகள் பிதற்றித் திரிவதற்கு சரியான பதிலடி கொடுக்கும் வகையில் முழுமையான மதுவிலக்கினை நடைமுறைப்படுத்தி சமுதாயத்தின் அடித்தட்டு மக்கள் உடல்நலத்துடனும் வளமாகவும் வாழ வகை செய்து உண்மையான மக்கள் நலன் பேணும் அரசு தம்முடைய அரசு என்பதை பிரகடனப்படுத்தியுள்ள மாண்புமிகு முதல்வர் நிதிஷ்குமார் அவர்களுக்கு மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பிலும், மதுவிலக்குப் போராளிகளின் சார்பிலும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இது குறித்து பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அவர்களுக்கு கீழ்க்கண்டவாறு வாழ்த்துக் கடிதம் அனுப்பி இருக்கிறேன்.

நீங்கள் ஆட்சி புரியும் பீகார் மாநிலத்தில் மது அருந்துவதைத் தடுக்க முழு மதுவிலக்கை அமுல்படுத்தியதற்கு எல்லையற்ற மகிழ்ச்சியோடு என் பாராட்டுகளைத் தெரிவிக்கிறேன். இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் மதுக்கொடுமையால் அழிந்து கொண்டிருக்கும் வேளையில், சரியான நேரத்தில் நீங்கள் துணிச்சலான முடிவை எடுத்துள்ளீர்கள். மதுவுக்கு எதிரான போர் இன்றைய காலத்திற்கு மிகவும் தேவையாகும். மதுவை எதிர்த்து கடந்த பதினைந்து ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நான் சிலுவைப் போர் நடத்தி வருகிறேன்.

மே மாதம் நடைபெற இருக்கிற சட்டமன்றத் தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் - மக்கள் நலக் கூட்டணி வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். அத்தகைய அரசு அமைந்ததும் மதுவிலக்குப் பிரச்சினையில் உங்கள் பாதையை தமிழ்நாடு பின்பற்றும். பீகார் மாநில அரசு உங்களுடைய ஆற்றல் மிக்கத் தலைமையில் மேலும் பல மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்ற வாழ்த்துகிறேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’ 
சென்னை - 8 
08.04.2016


Respected Nitish Ji
Vanakkam.

With immense pleasure I convey my greetings for introduction of prohibition against liquor consumption in the state of Bihar. As a Chief Minister your Govt took this bold decision at the right time when thousands of families are ruined due to liqur consumption in India. War against liquor consumption is the need of the hour.

In Tamil Nadu I have launched a crusade for the past 15 years. I am fully confident that DMDK - PWF alliance will win the assembly elections in the month of May and form a coalition Government so that we will follow the path you have shown.

Let the State of Bihar get many more welfare measumes under your steward ship.

With warm regards.
Yours sincerely,
(Vaiko)


ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment