Friday, February 17, 2017

நில வளம், நீர் வளத்தை அழிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிடுக! வைகோ வலியுறுத்தல்!

புதுக்கோட்டை மாவட்டம் - வடகாடு அருகே நெடுவாசல் உள்ளிட்ட 13 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான திட்ட ஆய்வுக்கு மத்திய அமைச்சரவை 15 ஆம் தேதி ஒப்புதல் அளித்துள்ளது.

ஹைட்ரோ கார்பன் என்பதும், மீத்தேன் எரிவாயு போன்றதே. மீத்தேன் வாயுக்களின் பொதுப் பெயரே ஹைட்ரோ கார்பன். காவிரி பாசன மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு 2010 ஆம் ஆண்டு மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு அனுமதி அளித்தது. 2011 இல் தமிழகத்தில் ஆட்சியில் இருந்த தி.மு.க. அரசு மீத்தேன் எரிவாயு எடுப்பதற்கு குஜராத்தைச் சேர்ந்த கிரேட் ஈஸ்டன் எனர்ஜி கார்பரேசன் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது.

பசுமை வளம் கொழிக்கும் சோழ மண்டல வயல்களில் வேதிக் கரைசல்களைச் செலுத்தி மீத்தேன் எரிவாயு எடுத்தால் நிலங்கள் முற்றிலும் பாழாகும்; நிலத்தடி நீர் நஞ்சு ஆகும்; சுற்றுச் சூழலும் நாசமாகும் என்பதால், விவசாய இயக்கங்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தன. மீத்தேன் எரிவாயுத் திட்டத்தின் ஆபத்தை எடுத்துரைத்து காவிரி டெல்டா மாவட்டங்களில் 2014 ஆம் ஆண்டு டிசம்பரில் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் ஊர் ஊராக விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை நான் மேற்கொண்டேன். தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் மீத்தேன் திட்டத்திற்கு எதிராக நடைபெற்ற வழக்கில் நானே வாதாடினேன். எனது வேண்டுகோளை ஏற்ற பசுமைத் தீர்ப்பாய நீதிபதிகள் மீத்தேன் திட்டத்தின் விளைவுகள் குறித்து ஆய்வு நடத்த நிபுணர் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று தமிழக அரக்கு உத்தரவிட்டனர். நிபுணர் குழுவின் பரிந்துரையின் பேரில் தமிழக அரசும் மீத்தேன் திட்டத்திற்கான அனுமதியை இரத்து செய்தது.

விவசாய சங்கங்கள், பொதுமக்களின் அறப்போராட்டங்கள் வெடித்ததாலும், மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகையிடப்பட்டதாலும் மீத்தேன் எரிவாயு திட்டத்தை நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. மேலும், மத்திய அரசின் பாறை படிம எரிவாயு (ஷேல் கேஸ்) திட்டத்தை எதிர்த்தும் பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் வழக்காடி வருகின்றோம்.

இந்நிலையில், மீத்தேன் திட்டத்தையே ஹைட்ரோ கார்பன் திட்டமாக செயல்படுத்தும் வகையில் ஆய்வுக்கான அனுமதியை மத்திய அரசு வழங்கி இருக்கின்றது. தமிழகத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் நில வளம், நிலத்தடி நீர் வளத்தை அழிக்கும் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எந்தத் திட்டத்iதையும் தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

எனவே, மத்திய அரசு புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் ஆய்வுக்கான உத்தரவை திரும்பப் பெறவேண்டும். தமிழக அரசு உடனடியாக தலையிட்டு மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை இரத்து செய்ய அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment