Thursday, May 13, 2021

கொரொனா தடுப்பு பணிகள் பற்றி அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா முன்வைத்த கருத்துகள்!

கொரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், இன்று, தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், சட்டமன்ற உறுப்பினர்கள் கு.சின்னப்பா, மு.பூமிநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.

அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா முன்வைத்த கருத்துகள்:
மாண்புமிகு முதல்வர் அவர்களே, அனைத்துக் கட்சித் தலைவர்களே, வணக்கம்.
இந்த அரசு நெருக்கடியான காலகட்டத்தில் பொறுப்பு ஏற்று இருக்கின்றது. உலகம் முழுமையும் இதுவரை 35 இலட்சம் பேரைப் பலிகொண்ட, கொரோனா பெருந்தொற்றுத் தாக்குதலில் இருந்து, மக்களைக் காப்பதே முழுமுதற் கடமை என, முதல்வர் அவர்கள் அறிவித்தார். அதற்கு ஏற்ப, தீவிரமான களப்பணிகளை முடுக்கி விட்டு இருக்கின்றார். அமைச்சர்கள் சுற்றிச்சுழன்று பணியாற்றி வருகின்றார்கள்.
கொரோனா மருத்துவப் பணிகளுக்காக, தாராளமாக நன்கொடை அளியுங்கள் என மாண்புமிகு முதல்வர் அவர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், கழகத்தின் சார்பில் பத்து இலட்சம் ரூபாய் நிதி தருவதாக அறிவித்தார்.
அதற்கான காசோலையை, நேற்று, தலைமைச் செயலகத்தில், தமிழக அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன் (நிதித்துறை) அவர்களிடம் நேரில் வழங்கினோம்.
கொரோனா தடுப்பிற்காக, சில கருத்துகளை முன்வைக்கின்றோம்.
1. கொரோனா தடுப்பு மருந்து போடுவது குறித்து, பொதுமக்களிடம் போதிய விழிப்பு உணர்வு இல்லை; ஆர்வம் இல்லை. மாறாக, தடுப்பு ஊசிகள் குறித்த தவறான கருத்துகளையும் பரப்பி விட்டார்கள். அதனால், சுணக்கம் நிலவியது.
கடந்த ஆண்டு, கொரோனா தாக்குதலின் தொடக்க காலத்தில், இத்தாலி, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில், நாள்தோறும் ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இறந்தார்கள்.
ஆனால் இப்போது, இங்கிலாந்து, ~பிரான்ஸ், இஸ்ரேல் ஆகிய நாடுகள், கொரோனாவை முழுமையாகக் கட்டுப்படுத்தி விட்டன. அங்கே பள்ளிகள் இயங்கத் தொடங்கி விட்டன. கடைத்தெருக்கள், வணிக நிறுவனங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டன. ஐரோப்பிய நாடுகளுக்கு உள்ளேயே சுற்றுலா தொடங்கி விட்டது.
இத்தகைய மாற்றத்திற்குக் காரணம், தடுப்பு ஊசிகள்தான்.
இரண்டு முறை தடுப்பு ஊசி போட்டுக் கொண்டவர்கள், வாய் மூக்கு மூடி அணியத் தேவை இல்லை என்று, அமெரிக்க அரசு அறிவித்து விட்டது.
எனவே, மேற்கண்ட நாடுகளைப்போல், தமிழ்நாட்டிலும் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும். தடுப்பு ஊசி ஒன்றே அதற்கு வழி என்பதை, தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்த வேண்டும். பெருமளவில் விளம்பரங்கள் செய்ய வேண்டும்.
2. தடுப்பு ஊசிகள் குறித்து, சமூக வலைதளங்களில் தவறான கருத்துகளைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மக்களை அச்சம் கொள்ளச் செய்கின்ற காணொளிகளைத் தடை செய்ய வேண்டும். சமூக வலைதளப் பதிவுகளைக் கண்காணிக்க ஒரு குழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
3. தடுப்பு மருந்துக்கு, இணைய வழி முன்பதிவு என்பது, ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு ஒரு தடையாக இருக்கின்றது. முன்பதிவு செய்யத் தெரியாமல் பலர் போடாமல் இருக்கின்றார்கள். ஒவ்வொரு பகுதியிலும் தடுப்பு மருந்து எங்கே போடுகின்றார்கள், எல்லோரும் வந்து போட்டுக் கொள்ளலாம், எந்தத் தடையும் இல்லை என்பதையும் விளம்பரப்படுத்த வேண்டும்,
4. ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்க, 142 இடங்களில் ஆக்சிஜன் ஆக்கும் மையங்களை அரசு அமைத்து வருகின்றது. 15 ஆம் தேதி முதல் கூடுதல் ஆக்சிஜன் கிடைக்கும் என, மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்து இருக்கின்றது. இத்தகைய போர்க்கால நடவடிக்கையை வரவேற்றுப் பாராட்டுகின்றோம்.
4. ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருந்துகள் போதிய அளவில் கிடைப்பது இல்லை. அது உயிர் காக்கும் மருந்து அல்ல, மிகவும் தேவைப்பட்டால் அன்றி, மருத்துவர்கள் அதைப் பரிந்துரை செய்ய வேண்டாம் என்று கூறியதை, மக்கள் நல்வாழ்வுத் துறை பலமுறை செய்தியாக வெளியிட்டு இருக்கின்றது. இருப்பினும் அந்த மருந்துக்காக மக்கள் அலைகின்றார்கள்.
இந்தியாவில் பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்கள், அயல்நாடுகளில் இருந்து மருந்துகள், ஆக்சிஜன் கருவிகள், வெண்டிலேட்டர்கள் உள்ளிட்ட கருவிகளை நேரடியாக இறக்குமதி செய்ய, அறிவிக்கை வெளியிட்டு இருக்கின்றார்கள். அதுபோல, தமிழக அரசும் கொள்முதல் செய்வதை வரவேற்கின்றோம்.
5. தனியார் மருத்துவமனைகளில் மருத்துவம் பெறுவோருக்கும், அரசு காப்பு ஈட்டுக் கட்டணம் செலுத்தும் என்ற அறிவிப்பை வரவேற்கின்றோம்.
கொரோனா சோதனைகளை அரசு இலவசமாகச் செய்கின்றது. ஆனால், தனியார் மருத்துவமனைகள் அதற்காக 1500 முதல் 2000 ரூபாய் வரை வாங்குகின்றார்கள். தனியார் மருத்துவமனைகளில் உள்நோயாளியாகச் சேர்க்கப்பட்டவர்களிடம், ஒரு நாளைக்கு ஒரு இலட்சம், இரண்டு இலட்சம் மற்றும் அதற்கு மேலும் கட்டணக் கொள்ளை நடக்கின்றது.
எனவே, கொரோனா மருத்துவம் என்ற பெயரில், தனியார் மருத்துவமனைகள் கட்டணக் கொள்கை நடத்துவதைக் கடுமையாகக் கண்காணித்து, கட்டுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு கு.சின்னப்பா பேசினார்.
தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
13.05.2021

No comments:

Post a Comment