Monday, May 3, 2021

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் வைகோ MP சந்திப்பு!

மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், இன்று அறிவாலயத்தில் தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களைச் சந்தித்து, மாபெரும் வெற்றிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

தொடர்ந்து அவருடன் உரையாடுகையில், ‘தேர்தல் பணிகள் காரணமாக, கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா தடுப்புப் பணிகள் முறையாக நடக்கவில்லை; முடங்கிப் போய்விட்டன’ என்ற தம் கவலையைத் தெரிவித்தார்.

அதற்கு ஸ்டாலின் அவர்கள், ‘கொரோனா தடுப்புப் பணிகளை முழுவேகத்தில் இயக்குவேன்; கொடிய கொரோனாவில் இருந்து தமிழக மக்களைக் காப்பாற்றுவதே என்னுடைய முதல் பணி; இதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு உழைப்பேன்’ என்றார்.

உங்கள் கருத்தை, ‘நான் செய்தியாளர்களிடம் சொல்லட்டுமா?’ என்று வைகோ கேட்டபோது, தாராளமாகச் சொல்லுங்கள் என்று, முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

தொடர்ந்து வைகோ அவர்கள் பேசும்போது,

‘திராவிட இயக்க வரலாற்றிலேயே மாபெரும் மகத்தான வெற்றியை ஈட்டி இருக்கின்றீர்கள். சமூக நீதியைக் காக்க, சமத்துவத்தைப் பாதுகாக்க, கூட்டு ஆட்சிக் கொள்கையைக் காக்க, மதச்சார்பு இன்மையைக் கடைப்பிடிக்க, ஒட்டுமொத்த இந்தியாவும் இனி உற்று நோக்குகின்ற இடம் சென்னையாகத்தான் இருக்கும்; தமிழ்நாடு முதல்வரின் தலைமையில்தான் இருக்கும் என்று கூறினார்.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8

No comments:

Post a Comment