Wednesday, May 26, 2021

விருதுநகர் மாவட்டக் கழக அவைத் தலைவர் தமிழய்யா நாராயணசாமி மறைவு. வைகோ இரங்கல்!

விருதுநகர் மாவட்டக் கழக அவைத் தலைவர் தமிழய்யா நாராயணசாமி மறைந்தார் என்ற செய்தி கேட்ட வேளையில், இப்படித் துன்பங்கள் அடுக்கடுக்காக வருகின்றனவே என்று துடித்துப் போனேன்.

படிக்கின்ற காலத்திலேயே திராவிட முன்னேற்றக் கழகத்தில் தீவிர பற்றுக் கொண்டவர். தமிழ் ஆசிரியராகப் பணி ஆற்றியதால், ‘தமிழ் ஐயா’ என்றுதான் அவரை அழைப்பார்கள். கடந்த 27 ஆண்டுகளாக விருதுநகர் மாவட்டக் கழகத்திற்குத் தூணாகத் திகழ்ந்தார். கடந்த 15 ஆண்டுகளாக மாவட்டக் கழக அவைத் தலைவர் பொறுப்பு வகித்தார்.  

மாவட்ட இலக்கிய அணிச் செயலாளராகப் பணி ஆற்றினார். சில நூல்களையும் எழுதி வெளியிட்டு இருக்கின்றார். சாத்தூரில் வசித்து வந்தார்.

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் மிகவும் உடல்நலம் குறைந்தபோது, கோவை கே.ஜி. மருத்துவமனையில் சேர்த்து,  நலம் பெற ஏற்பாடு செய்தேன்.  ஆனால் இப்போது கொரோனா எனும் மரணக் கழுகு அவரைக் கொத்திக்கொண்டுப் போய்விட்டது.

அவரது மறைவு கழகத்திற்கு மிகப்பெரிய இழப்பு ஆகும். தயவு தாட்சன்யம் இல்லாமல் நியாயத்தை எடுத்து உரைப்பார். யாருக்கு யார் ஆறுதல் சொல்ல முடியும்? வாழ்க்கை நிலையானது அல்ல என்ற வள்ளுவரின் திருக்குறளை எண்ணி, மனதைத் தேற்றிக்கொள்ள வேண்டியதுதான்.

அவரை இழந்து கண்ணீரில் தவிக்கும் அவரது பிள்ளைகளுக்கும், குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
26.05.2021

No comments:

Post a Comment