Monday, May 17, 2021

துளசி ஐயா வாண்டையார் மறைவு! வைகோ MP இரங்கல்!

பெருமதிப்பிற்கு உரிய பெருந்தகை துளசி ஐயா வாண்டையார் அவர்கள், இயற்கை எய்திய செய்தி அறிந்து, அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

தஞ்சைத் தரணியில், காங்கிரஸ் பேரியக்கத்தைத் தொடங்கித் தோள்கொடுத்து வளர்த்த முன்னோடிகளுள் ஒருவரான ஐயா அவர்கள், பெருந்தலைவர் காமராசர் அவர்களுக்கு நெருக்கமானவர். காந்தியின் தொண்டர்.
நாடாளுமன்ற உறுப்பினராகப் பொறுப்பு வகித்தபோது, ஒருநாள் கூடத் தவறாமல், நாடாளுமன்றம் சென்று, நூற்றுக்கு நூறு வருகையைப் பதிவு செய்தவர்.
எந்த ஒரு செயலை எடுத்துக் கொண்டாலும், நேர்மையாகவும், தனித்தன்மையோடும் செய்து முத்திரை பதித்தவர். பெருநிலக்கிழார் என்றபோதிலும், எளிய வாழ்க்கை வாழ்ந்தவர்.
ஏழை,எளிய மக்களின் நலனில் அக்கறை கொண்டு உழைத்தார்.
பூண்டி புஷ்பம் கல்லூரி மாணவர் சேர்க்கையில், நன்கொடை எதுவும் வாங்கக்கூடாது என விதி வகுத்தார். தமது வருவாயின் பெரும்பகுதியை, அக்கல்லூரியின் வளர்ச்சிக்காகச் செலவிட்டார். பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றினார்.
பெருந்தமிழ் அறிஞரான ஐயா அவர்கள், எண்ணற்ற ஆய்வு நூல்களை, தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதி இருக்கின்றார். அவருடன் இலக்கிய நிகழ்வுகளில் பங்கேற்று, அவரது திறன் ஆய்வு உரையைக் கேட்டு வியந்து இருக்கின்றேன். அவரது இல்லத்திற்குச் சென்று அவருடன் உணவு அருந்தி இருக்கின்றேன்.
என் மீது பற்றும் பாசமும் கொண்டு இருந்தார். என்னுடைய தம்பி மகன் திருமணத்தை ஐயா நடத்தி வைக்க வேண்டும் என்று நான் கேட்டபோது மறுக்காமல், கலிங்கப்பட்டிக்கு வந்து, தலைமை ஏற்று நடத்தி வைத்துச் சிறப்பித்தார்.
94 வயதான அவர், நூறாண்டு கடந்து வாழ்வார் என்று கருதி இருந்தேன். அவரது மறைவு, ஆற்ற இயலாதது. பழம்பெரும் தலைவர்களை,அண்மைக்காலமாக இழந்து கொண்டே வருகின்ற அதிர்ச்சியை, தாங்குவது அல்லாமல், வேறு வழி இன்றி, தவிக்கின்றது தமிழ்நாடு. அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், அவரால் பயன் பெற்றவர்களுக்கும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்,ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
17.05.2021

No comments:

Post a Comment