Monday, May 24, 2021

ம.தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் துரை. பாலகிருஷ்ணன் மறைவு. வைகோ MP இரங்கல்!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர், ஆருயிர்ச் சகோதரர் துரை.பாலகிருஷ்ணன் அவர்கள், உடல் நலக் குறைவால் இயற்கை எய்திய செய்தி அறிந்து பேரிடியாய் என் தலையில் விழுந்தது. உடைந்து நொறுங்கிப் போனேன். 27 ஆண்டுகளாக, எந்த சபலத்திற்கும், சஞ்சலத்திற்கும் இடம் கொடுக்காமல், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை உயிருக்கும் மேலாக நேசித்துப் பணியாற்றி வந்தார்.

திராவிட இயக்க உணர்வாளர். இளைஞராகத் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து, ஒரத்தநாடு ஒன்றியச் செயலாளராகப் பொறுப்பு வகித்தார். துடிப்பான செயல்வீரர். அதனால்,  மக்களின் பேரன்பைப் பெற்று, ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவராக மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டார்; தஞ்சாவூர் மாவட்டக் கவுன்சில் உறுப்பினர், ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் என பல தேர்தல்களில், மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றவர். வடக்கூர் தலைவர் என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்டார்.

மறுமலர்ச்சி தி.மு.கழகம் தொடங்கிய நாள் முதல் தன்னை இணைத்துக் கொண்டார். எத்தனையோ சோதனைகளில், நெருக்கடியான காலகட்டங்களில் எனக்கு உறுதுணையாக பக்கபலமாக இருந்தார்.

கடந்த சில மாதங்களாவே உடல் நலக் குறைவுற்று சிகிச்சை பெற்று வந்தார். அவரது மறைவு, கழகத்திற்கு வந்துள்ள கண்ணீர்ச் சோதனை ஆகும். அவருடைய தொண்டுக்கும் அவர் ஆற்றிய பணிகளுக்காகவும் கட்சி கடமைப்பட்டு இருக்கின்றது. இந்தத் துயரத்தில் இருந்து நான் விடுபடுவதற்கு நீண்ட நாள்கள் ஆகும்.  சிரித்த முகத்தோடு, தொண்டர்களை அரவணைத்து அவர் ஆற்றி வந்த பணி மறக்க இயலாதது.

அவரது மறைவால் துயரத்தில் பரிதவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு என் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், மறுமலர்ச்சி தி.மு.கழகக் கொடிகளை, மூன்று நாள்கள் அரைக்கம்பத்தில் பறக்க விடுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
24.05.2021

No comments:

Post a Comment