Saturday, May 29, 2021

டி.எம். காளியண்ணன்; அனந்த கிருஷ்ணன் மறைவு. வைகோ இரங்கல்!

கொங்குச் சீமையின் மங்கா மணிவிளக்காகத் திகழ்ந்த பெரியவர், திரு காளியண்ணன் அவர்கள் மறைவுச் செய்தி அறிந்து வருந்துகின்றேன். 

காந்தி அடிகளின் அழைப்பை ஏற்று, விடுதலைப் போராட்டக் களத்தில் தன்னை ஒப்படைத்துக் கொண்டார். இந்திய அரசு அமைப்புச் சட்டத்தின் வரைவு நாடாளுமன்ற உறுப்பினராக இடம் பெற்றதுடன், மக்கள் அவையிலும், சட்டமன்றங்களிலும் தம்முடைய முத்திரையைப் பதித்தார். அவரது எளிய வாழ்க்கை, அடுத்த தலைமுறையினருக்கு வழிகாட்டும் பாடம் ஆகும். 

அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் அவர்களும் இயற்கை எய்தி விட்டார். அவருக்கு வயது 92. 

பொறிஇயல் கல்வித்துறையில், ஏழை, எளிய, சாமானிய மக்களின் சகாப்தத்தைத் தொடங்கி வைத்தவர் ஆவார். அவர் கொண்டு, ஒற்றைச் சாளர முறைச் சேர்க்கை, (Single Window System) என்பது, கல்வியின் தரத்திற்கும், மாணவர்களின் திறத்திற்கும், ஒரு அருமையான வடிகாலாக அமைந்தது. கடந்த 40 ஆண்டுகளாக, தமிழக மாணவர்கள், பொறிஇயல் கல்வியை மிகப்பரவலாகக் கற்று, இன்று உலகம் முழுமையும் கோலோச்சுகின்றனர்; அதுவும் அடித்தட்டு மக்கள், இந்தத் துறையில் பெற்று இருக்கின்ற வளர்ச்சி மிகப்பெரிது என்றால், அந்தப் பெருமையில் திரு அனந்தகிருஷ்ணன் அவர்களுக்கும் ஒரு பங்கு உண்டு. கணினியிலும், இணையதளங்களிலும் தமிழ் மொழியின் பயன்பாட்டுக்கு, அடித்தளம் அமைத்தார். கல்வித்துறையின் உட்கட்டமைப்பை ஒழுங்குற அமைத்துத் தந்த அவரது கல்வித்தொண்டு, தமிழ்நாட்டு வரலாற்றில் என்றைக்கும் நினைவு கூரப்படும்.

தமிழ்ச் சமூகத்தின் முன்னோடிகளுள் ஒருவர், 101 ஆண்டுகள் நிறைவாழ்வு வாழ்ந்த பெரியவர் காளியண்ணன், பெருந்தகை அனந்தகிருஷ்ணன் ஆகியோரின் மறைவுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.  

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
29.05.2021

No comments:

Post a Comment