Tuesday, July 24, 2018

இலங்கை அரசிடம் சலுகைகள் பெற்ற பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்! இலங்கை அரசுக்கு  கடுமையான தண்டனை பெற்றுத் தர உலகெங்கும் வாழும் தமிழர்கள் உலக நாடுகளை வலியுறுத்த வேண்டும்-வைகோ அறிக்கை!

ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணைகள் கொண்டுவரப்பட்ட போது அதில் இருந்து பிரித்தானியாவை பின்வாங்க வைக்கும் நோக்கில், இலங்கையின் அன்றைய மகிந்த அரசு, பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர்களை தம் வலையில் வீழ்த்தியது. அதில் மாட்டிக் கொண்டவர்களில் ஒருவர்தான் வட அயர்லாந்தைச் சேர்ந்த சனநாயக தொழிலாளர் கட்சியின் 50 வயது நிரம்பிய முக்கிய தலைவர் இயன் பேர்ஸ்லி.

இதற்காக இவர் குடும்பத்துடன் இரண்டு முறை இலங்கைக்கு உல்லாசப் பயணம் சென்றுள்ளார். முதல் முறை 2013 ஏப்ரலிலும், அதே ஆண்டு ஜூலை மாதம் இரண்டாவது முறையாகச் சென்றுள்ளார். முதல்தர விமான இருக்கைப் பயணம், ஐந்து நட்சத்திர விடுதிகளில் தங்க வைப்பது என இவர்களின் அனைத்துச் செலவுகளுக்கும் இலங்கை அரசே பொறுப்பேற்றுக் கொண்டது.

அச் செலவு பிரித்தானிய பவுண்ட்களில் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. இது இலங்கை பணத்தில் 1 கோடியே 4 லட்சத்தில் இருந்து 2 கோடியே 8 லட்சம் வரையாகும். இதற்கு பின்னரான காலப்பகுதியில் அதாவது 2013 நவம்பர் கடைசிப் பகுதியில் அன்றைய பிரித்தானியப் பிரதமர் டேவிட் கேமரன் இலங்கைக்குப் பயணம் செய்து, யாழ்ப்பாணம் சென்றதும், போர் குற்றங்கள் குறித்த விசாரணை நடைபெற வேண்டும் எனவும் இலங்கையில் வைத்து வலியுறுத்தினார். பின்னர் 2014 மார்ச்சில் ஜெனிவா கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்த போது மார்ச் 19ஆம் நாள் ஜெனிவா தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டாம் எனக் கேட்டு அன்றைய பிரதமர் டேவிட் கேமரனுக்கு பேர்ஸ்லி கடிதம் எழுதியுள்ளார்.

இயன் பேர்ஸ்லியின் இத்தகைய செயல்கள் குறித்து கடந்த வருடத்தின் இறுதிப் பகுதியில் பிரித்தானியப் பத்திரிகை டெய்லி ரெலிகிராப் ஆதாரப் பூர்வமாக வெளியிட்டது. தான் தவறு இழைக்கவில்லை எனவும், விசாரணைக்கு தயார் என்றும் பேர்ஸ்லி அறிவித்தார். இதன் தொடர்ச்சியாக நடைபெற்ற பாராளுமன்ற விசாரணைகளில் முடிவு 2018 ஜூலை 18இல் வெளியிடப்பட்டுள்ளது. இவர் குற்றவாளியாக கண்டறியப்பட்டு, அதிகபட்ச தண்டனையாக 30 பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளார்.

புதிய பாராளுமன்ற ஒழுக்ககோவை நடைமுறைகளின் படி 10 நாட்களுக்கு மேல் ஒருவர் பாராளுமன்ற அமர்வுகளில் இருந்து தள்ளி வைக்கப்பட்டால் இவரது தொகுதி வாக்காளர்களில் 10 சதவீதமானோர் இவரை திரும்பப் பெறவேண்டும் எனக்கோரி கையொப்பம் இட்டு ஒரு மனுவை கையளித்தால், பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழப்பதுடன், அந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும். இதற்கான பணிகளில் மற்ற கட்சிகள் இறங்கியுள்ளதால், இவர் பதவியை இழக்கும் நிலை உருவாகி உள்ளது.

இவர் மகிந்த அரசால் பணிக்கு அமர்த்தப்பட்டாலும், தற்போதை ரணில் அரசின் கையாளாகவும் செயல்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறியதும், வட அயர்லாந்து - இலங்கை வர்த்தக உடன்பாடுகள் குறித்து தான் இலங்கை தூதுவர் அமரி விஜயவர்தனாவுடள் பேசியதாக அவருடன் எடுத்த படத்துடன் செய்தி வெளியிட்டிருந்தார்.

தமது அரசிற்கு துரோகம் இழைக்கும் வகையில் அந்நிய அரசு ஒன்றிற்கு ஒடிக்கொடுக்கும்

இவரைப் போன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் பல நாடுகளில் உள்ளனர். இவ்வாறானவர்களுக்கான அச்சுறுத்தலாகவே இப்பிரித்தானிய ஒழுங்கு நடவடிக்கை அரங்கேறியிருக்கிறது. இது புலம்பெயர் தமிழர் கைக்கொள்ள வேண்டிய ஒரு பொறிமுறை என்பதை புலம்பெயர் தமிழினம் ஒரு பாடமாக கொள்ளுமா? என்பதை வரும் காலம் சொல்லும்...

மக்கள் போராட்டத்தில் பலமாக உள்ள நாட்டை அடையாளப்படுத்தி இப்படியான சிலரை தங்களுக்கு சார்பாக மாற்ற இலங்கை அரசாங்கம் பல வழிகளில் முயற்சி செய்து வருகின்றது.

இதை தமிழ் மக்கள் புரிந்துகொண்டு, மற்ற பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து, அவர்கள் மூலமாக  வெளிவிவகார அமைச்சகத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் .

வரும் மார்ச் மாதத்தில் இருந்து ஐ.நா. கட்டுப்பாட்டில் இருந்து இலங்கை அரசாங்கம் முற்றாக வெளியே போவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. அப்படி வெளியே போகும் பட்சத்தில் இலங்கையைக் கட்டுப்படுத்துவதற்கான  அனைத்துப் பிடிகளும்  தளர்ந்துவிடும்.

இலட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்களைக் கொன்ற இலங்கை அரசுக்கு  கடுமையான தண்டனை வழங்க, புலம்பெயர்வாழ் ஈழத் தமிழர்களும், உலகெங்கும் வாழும் தமிழர்களும் உலக நாடுகளை வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் இன்று 24-07-2018 தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment