Wednesday, July 4, 2018

மணப்பாறையில் ரயில் மறியல் செய்ய முயன்ற மதிமுகவினர் கைது!

மணப்பாறையில் வைகை, திருப்பதி, அந்த்யோதயா உள்பட அனைத்து இரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி ரயில் மறியல் செய்ய முயன்ற ம.தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர்.

தமிழகத்தின் மையப் பகுதியில் உள்ள திருச்சி மாவட்டத்தில் திருச்சிக்கு அடுத்த பெரிய நகரம் மணப்பாறை. இந்நகரில் இருந்து கல்வி - வேலை வாய்ப்புகளுக்காக சென்னை மற்றும் மதுரை உள்பட பெரு நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் இரயில் பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

மணப்பாறையைச் சுற்றிலும் ஏராளமான சிறு தொழில் முனைவோர் உள்ளனர். புத்தாநத்தம், துவரங்குறிச்சி உள்ளிட்ட ஊர்களில் இருந்து ஆயத்த ஆடைகள் தயாரித்து வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.

இதுதவிர மீனாட்சி நூற்பாலை, மாரீஸ் நூற்பாலை உள்ளிட்ட தனியார் தொழிற்சாலைகளும், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் இரண்டாம் அலகு தொழிற்சாலையும் மணப்பாறை அருகில் உள்ள மொண்டிப்பட்டியில் செயல்பட்டு வருகிறது.

இந்தத் தொழிற்சாலைகளில் ஏறத்தாழ மூவாயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

மணப்பாறை திருச்சியிலிருந்து 45 கி.மீ தூரத்திலும், திண்டுக்கல்லில் இருந்து 65 கி.மீ தூரத்திலும் உள்ளது. திருச்சி, திண்டுக்கல்லுக்கு இடைப்பட்ட 110 கி.மீக்கு இடையில் மணப்பாறை இரயில் நிலையம் மட்டுமே உள்ளது.

அகல இரயில் பாதை அமைக்கப்படுவதற்கு முன்பு மணப்பாறையில் அனைத்து ரயில்களும் நின்று சென்றன. அதனால்தான் மணப்பாறை இரயில் நிலைய ஸ்டாலில் விற்கப்பட்ட மணி ஐயர் தயாரித்து வழங்கிய மணப்பாறை முறுக்கு உலகப் புகழ் பெற்றது.

அந்தக் காலகட்டத்தில் மகாத்மா காந்தி மதுரை பயணம் மேற்கொண்டபோது, தியாகி முத்து வீராசாமி தலைமையில் மணப்பாறை பொதுமக்கள் வரவேற்பு நல்க, இரயிலில் இருந்து இறங்கி நடைமேடையில் நின்று அண்ணல் காந்தியார் பேசியதும், மொழிப்போர் காலத்தில் மணப்பாறை இரயில் நிலையத்தை மாணவர்கள் அதிகம் பயன்படுத்திய வரலாறும் காலக் கல்வெட்டாக நிலைத்து நிற்கின்றது.

இத்தகைய பெருமைகளுக்கு உரிய நகரான மணப்பாறையில் பொதுமக்களின் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகுதான் இண்டர்சிட்டி இரயில் மணப்பாறை ரயில் நிலையத்தில் நின்று செல்கிறது.

இதனிடையே, தற்போது பகல் நேரத்தில் சென்னை பயணம் மேற்கொள்ள வசதியாக உள்ள மதுரையிலிருந்து சென்னை செல்லும் வைகை துரித இரயில், வாரம் மூன்று முறை இயக்கப்படும் இராமேஸ்வரம்-திருப்பதி துரித இரயில், அண்மையில் தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு இயக்கப்பட்ட அந்த்யோதயா இரயில் உள்பட அனைத்து இரயில்களையும் மணப்பாறையில் நிறுத்திட வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகின்றது.

மேலும், திருச்சிக்குச் செல்லும் ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவர்கள், கட்டடத் தொழிலாளர்களின் நலன் கருதி திண்டுக்கல்லில் இருந்து திருச்சிக்கு மற்றுமொரு புதிய பயணிகள் இரயில் இயக்கப்பட வேண்டும்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி இன்று (புதன்கிழமை) மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாணவர் அணிச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் தலைமையில், மாநில விவசாய அணி துணைச் செயலாளர் ஆ.துரைராஜ், நகரப் பொறுப்புக் குழுத் தலைவர் எம்.கே.முத்துப்பாண்டி ஆகியோர் முன்னிலையில் திருச்சி புறநகர் மாவட்டக் கழகப் பொறுப்பாளர் டி.டி.சி.சேரன் உள்ளிட்டோர் உள்ளிட்ட திரளான ம.தி.மு.க.வினர் ஒன்றுகூடி பெரியார் சிலையிலிருந்து கோஷங்கள் எழுப்பியபடி ஊர்வலமாக வந்து நெல்லையிலிருந்து - மயிலாடுதுறை செல்லும் ரயில் மணப்பாறை ரயில் நிலையத்திற்கு வந்து நின்ற போது மறியல் செய்ய முயன்ற 20 பெண்கள் உள்பட 48 பேரை தடுத்தி நிறுத்தி மணப்பாறை போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே நெல்லையிலிருந்து...மயிலாடுதுறை செல்லும் பயணிகள் ரயிலை மதிமுக ஒன்றிய மாணவர் அணி நிர்வாகிகள் வேளாங்கண்ணி..பாஸ்கர்..தங்கவேல்..மகேந்திரன்..சரண்ராஜ் ஆகிய ஐவரும் மதிமுக கொடியுடன் மறித்து தனியாக கைது செய்யப்பட்டு மணப்பாறை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment