Tuesday, January 24, 2017

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு பேரிடர் விழையும் வகையில், பவானி ஆற்றில் அணைகட்ட முனையும் கேரள அரசின் அநீதியைத் தடுக்க ஜனவரி 27 இல் கோவை மாநகரில் மதிமுக ரயில் மறியல் - வைகோ அறிவிப்பு!

வரலாறு காணாத வறட்சியின் பிடியில் தமிழகம் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்ற அவலம் சூழ்ந்த நிலையில் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாட்டு, ராசிமணலில் அணைகளைக் கட்ட முனைந்துள்ளதால், காவிரி டெல்டாப் பிரதேசம் பாலைவனமாகும் ஆபத்து நம் தலைக்கு மேல் கத்தியாகத் தொங்குகிறது.

தமிழகத்தின் மாநகரம், நகரங்கள், கிராமங்கள் எங்கும் குடிதண்ணீர்ப் பிரச்சினை மக்களை வாட்டத் தொடங்கிவிட்ட இந்நேரத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களின் அன்றாட வாழ்க்கைக்கே கேடு நேரும் விதத்தில் கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே தேக்குவட்டை என்ற இடத்திலும், மஞ்சக் கண்டி என்ற இடத்திலும் தடுப்பு அணைகளைக் கட்டும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

மேலும் பாடவயல், சீரக் கடவு, சாவடியூர், சாலையூர் ஆகிய இடங்களிலும் அணைகட்டப் போவதாக அறிகிறோம்.

கடந்த 2003 ஆம் ஆண்டு பவானி ஆற்றின் குறுக்கே முக்காலி என்ற இடத்தில் தடுப்பு அணை கட்ட கேரள அரசு முயன்றபோது தமிழக மக்களின் போராட்டத்தாலும் மத்திய அரசின் சுற்றுச் சூழல் அனுமதி கிடைக்காததாலும் அந்த முயற்சியை கேரள அரசு கைவிட்டது.

இதன் பிறகு ‘அட்டப்பாடி பள்ளத்தாக்கு நீர்ப்பாசனத் திட்டம்’ என்ற பெயரில் சிறுவாணி நதியின் குறுக்கே பெரிய அணையைக் கட்டி அதன் மூலம் ஆண்டுக்கு 4.5 டி.எம்.சி. தண்ணீர் எடுக்கும் திட்டத்தை 2012 ஆம் ஆண்டு கேரள அரசு தொடங்கியது.

2016-இல் அத்திட்டத்திற்கான சுற்றுச் சூழல் ஆய்வு அனுமதியையும் மத்திய அரசிடமிருந்து கேரள அரசு பெற்றது. தமிழக அரசு கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால், மத்திய அரசு சுற்றுச் சூழல் அனுமதியை திரும்பப் பெற்றது. அந்தத் திட்டம் தொடங்கப்படவில்லை. ஆனால், தற்போது பவானி ஆற்றின் குறுக்கே பல தடுப்பு அணைகளைக் கட்ட கேரள அரசு முற்பட்டுள்ளது.

தற்போது சிறுவாணி அணையில் தண்ணீர் எடுக்க முடியாத அளவுக்கு நீர்மட்டம் மிகவும் கீழே போய்விட்டது. அந்த அணையின் உள்பகுதியிலிருந்து பம்ப் மூலம் குடிநீர் பெறுவதற்கும் கேரள அரசு அனுமதிக்கவில்லை. இதனால் கோவை மாநகருக்கு சிறுவாணி தண்ணீர் வரவில்லை. பவானி தண்ணீர்தான் பில்லூர் திட்டத்தின் மூலம் கோவை மக்களின் குடிநீர்ப் பிரச்சினையை சமாளிக்க உதவுகிறது.

தற்போது பவானியின் குறுக்கே கட்டப்பட இருக்கும் புதிய தடுப்பு அணைகளால் அந்தப் பில்லூர் திட்டத்திற்கும் பெரும் பாதிப்பு ஏற்படும்.

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களின் அடிப்படைத் தேவையான குடிதண்ணீருக்கும் வாய்ப்பு இன்றிப் போகும் என்பதால், கேரள அரசு தடுப்பு அணைகள் கட்டும் திட்டத்தைக் கைவிட வேண்டும்.

மத்திய அரசு இதில் தலையிட்டு, கேரளத்தின் முயற்சியைத் தடுக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்துவதற்காக ஜனவரி 27-ஆம் நாள் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு கோவை மாநகரில் இரயில் மறியல் போராட்டம் கழகத்தின் ஆட்சிமன்றக்குழுச் செயலாளர் அ.கணேசமூர்த்தி அவர்கள் தலைமையில், கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார், திருப்பூர் மாவட்டச் செயலாளர் ஆர்.டி.மாரியப்பன், கோவை புறநகர் மாவட்டப் பொறுப்பாளர் குகன்மில் செந்தில், நீலகிரி மாவட்டச் செயலாளர் அட்டாரி நஞ்சன், இளைஞர் அணிச் செயலாளர் பொறியாளர் ஈஸ்வரன், அரசியல் ஆய்வு மைய உறுப்பினர் ஆடிட்டர் அர்ஜூன்ராஜ், தணிக்கைக்குழு உறுப்பினர் டி.டி.அரங்கசாமி, விவசாய அணிச் செயலாளர் ஆடுதுறை முருகன் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும்.

கழகத் தோழர்களும், விவசாயிகளும் அறவழியில் நடக்கும் இந்த இரயில் மறியல் போராட்டத்தில் பெருமளவில் பங்கேற்குமாறு வேண்டுகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment