Friday, June 30, 2017

ஜெயசங்கர் இல்ல மண விழாவில் வைகோ வாழ்த்து!


மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில் நடந்த திருமணத்தில் வைகோ தனது துணைவியார் ரேணுகாதேவியுடன் கலந்துகொண்டார்.

இந்த திருமணத்தில் மதிமுக முன்னணி நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொன்டனர்,

அலங்காரங்கள், வருகிற மதிமுக மாநாட்டிற்கு ஒத்திகை பார்ப்பது போல இருப்பதாக வைகோ அவர்களே தெரிவித்தார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

Wednesday, June 28, 2017

நீதி வென்றது. தி.மு.க. மேல்முறையீடு தள்ளுபடி-வைகோ அறிக்கை!

பேரறிஞர் அண்ணா அவர்களின் ஒப்புதலோடு 1958 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘கோவை மாவட்ட திராவிடப் பஞ்சாலைத் தொழிலாளர் முன்னேற்ற சங்கம், 1959 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டது. மாவட்டச் சங்கத்தின் முதல் தேர்தல் 1.5.1960 அன்று பல்லடத்தில் நடைபெற்றது. தலைவராக திரு கோவை செழியன், பொதுச்செயலாளராக திருப்பூர் சு.துரைசாமி, பொருளாளராக திரு காட்டூர் கோபால் ஆகியோரும், மற்ற நிர்வாகிகளும் தேர்ந்து எடுக்கப்பட்டனர். அன்று முதல் இன்றுவரையிலும், தொடர்ந்து அதன் பொதுச்செயலாளராக திரு சு.துரைசாமி அவர்கள் செயலாற்றிக் கொண்டு இருக்கின்றார். மாவட்டப் பிரிவினைக்குப் பிறகு, சங்கத்தின் பெயர் ‘கோவை பெரியார் மாவட்ட திராவிடப் பஞ்சாலைத் தொழிலாளர் முன்னேற்றச் சங்கம்’ என மாற்றப்பட்டது. 1993 முதல் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொழிலாளர் அமைப்பான, மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியுடன் (MLF) இணைந்து செயல்பட்டு வருகின்றது.

தி.மு.கழகத்தைச் சேர்ந்தவர்கள், 1993 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி கோவை இராமசாமி கவுண்டர்-பூவாத்தாள் திருமண மண்டபத்தில் ஒரு கூட்டத்தைக் கூட்டி, திரு சு.துரைசாமி அவர்களையும், அவருடன் இருந்தவர்களையும் சங்கத்தை விட்டு நீக்கிவிட்டதாக பத்திரிகைகளில் அறிவித்தனர்.

சங்கத்தின் சட்ட விதிகளின்படி, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் தேர்தல் நடத்தப்பட வேண்டும். 12.5.1992 ஆம் ஆண்டு மே மாதம் தேர்தல் நடத்தப்பட்டதால், அடுத்த தேர்தல் 1994 ஆம் ஆண்டுதான் நடைபெற வேண்டும். தொழிற்சங்கச் சட்டத்துக்கு எதிராக அவர்கள் நடந்ததால், திரு சு.துரைசாமி தலைமையில் இயங்கும் சங்கம்தான் உண்மையானது என நாம் ஓர் வழக்கை, கோவை மூன்றாவது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தோம்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி திருமதி எஸ்.கோமதி ஜெயம் அவர்கள், 10.1.2000 அன்று, ‘திரு சு.துரைசாமி அவர்கள் தலைமையில் இயங்கும் சங்கம்தான் சட்டப்படியான சங்கம் என்று தீர்ப்பு வழங்கியதோடு, திரு சு.பார்த்தசாரதி அவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்தும் தீர்ப்பு வழங்கினார்.

கோவை மூன்றாவது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, திரு சு.பார்த்தசாரதி அவர்கள், முதல் கோவை கூடுதல் மாவட்ட நீதிபதி செல்வி கே.பி.கே.வாசுகி அவர்கள் முன்பு ஓர் வழக்கைத் தாக்கல் செய்தார். மேற்படி வழக்கை விசாரித்த நீதிபதி அவர்களும், 8.4.2002 ஆம் தேதி மேற்படி வழக்கைத் தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கினார்.

மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, திரு சு.பார்த்தசாரதி அவர்கள் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து மேற்படி வழக்கு உயர்நீதிமன்றத்தில் எஸ்.ஏ.நம்பர் 1992/2003 மற்றும் எஸ்.ஏ.நம்பர் 1993/2003 எண்ணிட்டு நிலுவையில் இருந்தது.

மேற்படி வழக்கில் பார்த்தசாரதி தரப்பினருக்கு வெற்றி கிடைக்காது என்பதைத் திடமாக உணர்ந்ததால், குறுக்கு வழியில் சங்கத்தைக் கைப்பற்றத் திட்டமிட்டு, மேற்படி சங்கத்தில் எழுத்தராகப் பணியாற்றி வந்த திரு. டி.தாஸ் திரு. வி.பாண்டி ஆகியோருடன் ரகசியமாகக் கூட்டு சேர்ந்து திட்டம் தீட்டி, அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தினர்.

மேற்படி சங்கத்தின் தேர்தல் 2.12.2008 ஆம் தேதி நடைபெற்றது. அடுத்த தேர்தல் 2010 டிசம்பர் மாதம் நடைபெற வேண்டும் என்ற நிலையில், கோவை பெரியார் மாவட்ட தி.ப.தொ.மு.சங்கத்தின் தலைவர் திரு மு.தியாகராசன் அவர்கள், 27.3.2010 அன்று மாலை 5.30 மணிவரை சங்கத்தின் அலுவல்களை முடித்துக் கொண்டு, அலுவலர்களாக இருந்த திரு தாஸ், திரு பாண்டி ஆகியோரிடம் பேசிவிட்டு மறுநாள் வருவதாக கூறிச் சென்றுவிட்டார்.

இந்நிலையில் ஏற்கனவே வகுத்த சதித்திட்டத்தின்படி, திரு தாஸ் திரு பாண்டி ஆகியோர், சங்கத்தில் இருந்து திரு தியாகராஜன் அவர்கள் வெளியே சென்றுவிட்டார் என்று திரு பார்த்தசாரதி அவர்களுக்குத் தகவல் தெரிவித்து அடியாட்களுடன் வரச்சொல்லி, சங்கக் கட்டடத்துக்கு உள்ளே அமர்ந்து கொண்டனர்.

வீடு திரும்பிக் கொண்டு இருந்த திரு தியாகராஜன் அவர்கள், இந்தச் செய்தியை அறிந்தவுடன் சுமார் 6 மணி அளவில் சங்கக் கட்டடத்துக்கு உள்ளே செல்ல முயன்றபோது, காவல்துறையினர் அவரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.

இந்தச் செய்திகளை அறிந்த சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு சு.துரைசாமி அவர்கள், திருப்பூரில் இருந்து புறப்பட்டு, சுமார் 7.15 மணிக்கு சங்கக் கட்டடம் அருகே வந்து சேர்ந்தார். செய்தி அறிந்து ஏற்கனவே அங்கு இருந்த ம.தி.மு.க தோழர்கள் நூறு பேருடன் உள்ளே செல்ல முயன்றபோது காவல்துறையினர் அவரையும் உள்ளே அனுமதிக்காமல் தடுத்து விட்டனர்.

வழக்கிற்காக சங்கத்தின் பொதுச்செயலாளரான திரு சு.துரைசாமி அவர்களுடைய கையெழுத்தையே பொய்யாகப் போட்டு, தேர்தல் சுற்றறிக்கை அனுப்பியதைப் போலவும், 24.3.2010 அன்று ஒரு தேர்தல் நடந்தது போலவும், திட்டமிட்டுச் சதிசெய்ததுடன், 25.3.2010 அன்று சங்கத்திற்கு எந்தவகையிலும் தொடர்பு இல்லாத திரு இராமசாமி என்பவர் ஓர் புகார் கொடுப்பதைப் போலவும், அதற்கு அத்தாட்சியாக காவல்துறை வழங்கிய இரசீதைப் பயன்படுத்தியும், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணத்தில், சங்கத்தின் சட்டவிதிகளைக் கூடத் தாக்கல் செய்யாமல், நீதிமன்றங்களில் நடந்த வழக்குகளையும் அதன்பேரில் வழங்கப்பட்ட தீர்ப்புகளையும் மறைத்தும், அதனைத் தொடர்ந்து உயர்நீதி மன்றத்தில் மேற்குறிப்பிட்ட எண்ணுள்ள வழக்கு நிலுவையில் உள்ளதையும் மறைத்துச் செயல்பட்டனர்.

24.3.2010 ஆம் தேதி தேர்ந்து எடுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகின்ற திரு தாஸ், திரு பாண்டி திரு பார்த்தசாரதி உட்பட, ஒருவர்கூட சங்க சட்ட விதிகளின்படி தேர்தலில் பங்கெடுப்பதற்குத் தகுதி இல்லாதவர்கள் ஆவார்கள். சங்க சட்டவிதி 4 இன்படி, ஒருவர் சங்கத்தில் கௌரவ உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளப்பட்ட 6 மாதத்திற்குப் பின்னரே தேர்தலில் பங்கு பெறமுடியும்.

திரு தாஸ், திரு பாண்டி இருவரும் சங்கத்தின் ஊதியம் பெற்று வந்த பணியாளர்களேதவிர, நிர்வாகிகள் அல்ல. திரு சு.பார்த்தசாரதி அவர்கள், மேற்படி வழக்குகளில் எதிர்வாதியாக இருந்து நீதிமன்றத்தில் எதிரான தீர்ப்புகளைப் பெற்றவர்.

கோவை முதலாவது சார்பு நீதிமன்றத்தில் பொய்யான ஆவணங்களையே தாக்கல் செய்து, அதன் பேரில் சங்கத்தின் முழு அதிகாரம் பெற்ற தி.மு.க.வினருக்கு, ம.தி.மு.க.வினர் இடையூறு செய்யக்கூடாது என்பதைப்போல் ஒருதலைபட்சமான உத்தரவைப் பெற்றனர்.

எதிர்த்தரப்பு வழக்கறிஞர், நமது சங்கத்துக்கு அனுப்பிய கடிதம் 29.3.2010 அன்று கிடைக்கப் பெற்றபோதுதான் இந்த மோசடியான சதித்திட்ட விவரம் திரு சு.துரைசாமி அவர்களுக்குத் தெரிய வந்தது. காவல்துறையினர் புகார் மீது கோவை கோட்ட ஆட்சியர் அவர்கள், 16.4.2010 ஆம் தேதி இப் பிரச்சனை தொடர்பாக விசாரணை நடத்த இருப்பதாக நோட்டீஸ் கொடுத்தார்.

தி.மு.க.வினரின் அராஜக அத்துமீறிய நடவடிக்கைகளைக் கண்டித்து, கோவையில் பஞ்சாலைகளில் இயங்கிவரும் மத்திய தொழிற்சங்கங்களான ஐ.என்.டி.யூ.சி., ஹெச்.எம்.எஸ்., ஏ.ஐ.டி.யூ.சி., ஏ.டி.பி., சி.ஐ.டி.யூ., பி.எம்.எஸ். ஆகிய அனைத்துச் சங்கங்களும் உண்மை நிலைமைகளை விளக்கி அறிக்கை கொடுத்தனர்.

இந்த நிலையில், அன்றைய துணை முதல்வரும், இன்றைய தி.மு.க. செயல் தலைவருமான திரு மு.க. ஸ்டாலின் அவர்கள், ஏப்ரல் 2 ஆம் தேதி கோவைக்கு வந்தார்.

திருப்பூர் துரைசாமி அவர்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று கோவை செசன்ஸ் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைக் காவல்துறை செயல்படுத்தவில்லை. இது தொடர்பாக, அன்றைய கோவை மாநகரக் காவல்துறை ஆணையாளரைச் சந்தித்துக் கேட்டபோது, ‘உங்கள் பக்கம்தான் நியாயம் இருக்கின்றது; ஆனாலும் அரசாங்கத்தின் மேலிட உத்தரவு, அதை மீறி நான் என்ன செய்ய முடியும்?’ என்று கைவிரித்து விட்டார். அத்துடன், 27.3.2010 ஆம் தேதி பூட்டப்பட்ட சங்கத்தின் சாவியை, 2.4.2010 ஆம் தேதி இரவு 8 மணிக்குத் தி.மு.க.வினரிடம் காவல்துறையினர் கொடுத்து விட்டனர்.

அத்துடன், கோவை செசன்ஸ் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்துச் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்குத் தொடுத்தனர்.

அந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று அளித்துள்ள தீர்ப்பில், தி.மு.க.வினர் தொடுத்த மேல் முறையீட்டு வழக்கைத் தள்ளுபடி செய்து விட்டது; மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியின் இணைப்பான கோவை பெரியார் மாவட்ட திராவிட பஞ்சாலைத் தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகளான, திருப்பூர் துரைசாமி மற்றும் நிர்வாகிகளிடம் கட்டடத்தை ஒப்படைக்க வேண்டும் என்று கோவை செசன்ஸ் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்துள்ளது.

இந்த வழக்கு கிட்டத்தட்ட ஏழு ஆண்டுக்காலமாகத் தொடர்ந்து நடைபெற்று இன்று தீர்ப்பு வெளியாகி இருக்கின்றது. எத்தனைச் சூழ்ச்சிகள், சூதுகள் செய்தாலும், இறுதியில் அறம் வெல்லும்; நீதி வெல்லும் என்ற கோட்பாடு நிலை நிறுத்தப்பட்டு விட்டது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது 26-08-2017 அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

இலட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரமான பட்டாசுத் தொழிலுக்கு ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும்-வைகோ வேண்டுகோள்!

மத்திய அரசு நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையை நடைமுறைப்படுத்த பொருட்கள் மற்றும் சேவை வரி எனப்படும் ஜி.எஸ்.டி. ஜூலை 1 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பு குறித்து முடிவு செய்ய மாநில நிதி அமைச்சர்கள், மத்திய நிதித்துறை அமைச்சக பிரதிநிதிகள் கொண்ட ஜி.எஸ்.டி. கவுன்சில் மத்திய நிதித்துறை அமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் இதுவரை 18 முறை கூடி விவாதித்து உள்ளது. இதில் ஜி.எஸ்.டி வரி விதிப்புக்கான பொருட்கள் மற்றும் வரி விகிதங்கள் குறித்து மாநிலங்களின் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. அவற்றில் சிலவற்றை மட்டுமே ஜி.எஸ்.டி. கவுன்சிலில் மத்திய அரசு ஏற்றுக் கொண்டது.

இதுவரையில் வரி இல்லாத பொருட்கள் மீதும் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளதை மாநில அரசுகள் சுட்டிக் காட்டி இருக்கின்றன. தற்போது பருத்தி, பருத்தி நூல் இழை மற்றும் துணி வகைகளுக்கு சில மாநிலங்களில் மட்டும் 2 முதல் 4 விழுக்காடு மதிப்புக்கூட்டு வரி விதிக்கப்படுகிறது. இந்நிலையில், ஜி.எஸ்.டி.யில் பருத்தி நூல் மற்றும் துணி விற்பனை செய்பவர்களுக்கு 5 விழுக்காடு, பாவு எடுத்து ஒப்பந்த முறையில் வேலை செய்பவர்களுக்கு 18 விழுக்காடு வரி விதிக்கப்பட உள்ளது. இதனால் ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் பாதிக்கப்படும் நிலைமை உருவாகி உள்ளதால், தமிழகத்தில் கரூர், ஈரோடு, சங்கரன்கோவில் உள்ளிட்ட இடங்களில் ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் இந்த வரியை நீக்கக் கோரி வேலை நிறுத்தம் செய்துள்ளன. மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் கருவிகளுக்கு இதுவரை வரி விதிக்கப்படவில்லை. ஆனால், ஜி.எஸ்.டி.யில் 5 முதல் 10 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆடம்பரப் பொருட்கள் பட்டியலில் பட்டாசும் சேர்க்கப்பட்டு, அவற்றுக்கு 28 விழுக்காடு ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் பட்டாசு உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்த இடத்தை இந்தியா பெற்றுள்ளது. இந்தியா முழுவதும் சுமார் 1200 பட்டாசு ஆலைகள் உள்ளன. இதில் 51 ஆலைகள் மட்டுமே கலால் வரி, மாநில வரி செலுத்துகின்றன. மீதமுள்ள 1150 ஆலைகள் 14.5 விழுக்காடு மாநில வரி மட்டுமே கட்டுகின்றன என்றும், கலால் வரி கிடையாது என்றும் தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் கூறி உள்ளது.

இந்நிலையில் பட்டாசுக்கு மத்திய கலால் வரி 12.5 விழுக்காடு, மாநில வரி 14.5 விழுக்காடு, சேவை வரியைச் சேர்த்தே ஜி.எஸ்.டி. 28 விழுக்காடு விதிக்கப்படுவதாக ஜி.எஸ்.டி. வரி நிர்ணயிக்கும் குழு கூறுவது ஏற்கத்தக்கது அல்ல. பட்டாசு அடக்க விலையில் 30 விழுக்காடு மட்டுமே மூலப்பொருள் மற்றும் சேவைகளின் பங்கு என்பதால் உள்ளீட்டு வரி வரவு 4 விழுக்காடு மட்டுமே கிடைக்கும் என்றும், மின்சாரம், இயந்திரம் எதுவும் இல்லாமல் மனிதர்களால் மேற்கொள்ளப்படும் தொழில் என்பதால் தீப்பெட்டிக்கு 5 விழுக்காடு வரி விதிக்கப்பட்டிருக்கிறது. இதைப் போல பட்டாசுக்கும் 5 விழுக்காடு ஜி.எஸ்.டி விதிக்கப்பட வேண்டும் என்று பட்டாசு உற்பத்தியாளர் சங்கம் வைத்துள்ள கோரிக்கை நியாயமானதாகும்.

பட்டாசு உற்பத்தியில் ஏற்றுமதி மட்டுமின்றி, தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான சிவகாசி, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகள் 5 லட்சம் பேருக்கு பட்டாசு தொழில் வாழ்வாதாரமாகவும் இருக்கின்றது. தற்போது சீனப் பட்டாசுகளின் வருகையால் பட்டாசுத் தொழில் பல நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றது. இந்நிலையில், ஜி.எஸ்.டி. வரி 28 விழுக்காடு விதிக்கப்பட்டால் குறைந்த விலையில் சீனத் தயாரிப்புப் பட்டாசுகள் தடையை மீறியும் வந்து குவியும் நிலை ஏற்பட்டுவிடும். இதனால் இங்குள்ள பட்டாசு ஆலைகள் மற்றும் அவற்றுக்கான துணைத் தொழிலகங்கள் மூடப்பட்டு, இலட்சக்கணக்கானோர் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே மத்திய அரசு பட்டாசு மீதான ஜி.எஸ்.டி. வரியை 28 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாக குறைக்க ஆவன செய்ய வேண்டும்.

ஜூன் 30 ஆம் தேதி நடைபெற உள்ள ஜி.எஸ்.டி. கவுன்சிலின் இறுதிக் கூட்டத்தில் தமிழக அரசு இக்கோரிக்கைகளை வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது 28-06-2017 அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

Sunday, June 25, 2017

ரமலான் வாழ்த்து-வைகோ!

நன்மை தீமைகளைப் பிரித்து அறிந்து, நேர்வழி காட்டக்கூடிய திருக்குர்ஆன் அருளப்பட்ட ரமலான் மாதம், மாற்றம் தருகின்ற மாதம்; உள்ளங்களில் உண்மை ஒளி படர்ந்திடும் மாதம்.

இந்தத் திங்களில்தான் இஸ்லாத்திற்கு மகுடங்களைச் சூட்டிய வெற்றிகள் தேடி வந்து கிடைத்தன. இஸ்லாம் என்ற தத்துவத்தின் அடிப்படையை எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அசைக்க முடியாத ஒரு மார்க்கமாக நிறுவிய பத்ருப் போர்க்கள வெற்றி; மக்கா யுத்த களத்தின் வெற்றி, மங்கோலிய டார்ட்டாரியர்களை இஸ்லாமியர்கள் வெற்றி கொண்டது, சிலுவைப் போர்களில் இஸ்லாமியர்களுக்குக் கிடைத்த வெற்றி, ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற மிகப்பெரிய போர்க்களத்தின் வெற்றி எல்லாமே இந்த ரமலான் மாதத்தில்தான்.

இஸ்லாமியப் பெருமக்களுக்கு விதிக்கப்பட்ட புனிதமான ஐம்பெருங் கடமைகளில் நிகரற்ற கடமை, தவிர்க்க இயலாத கடமை ரமலான் நோன்புதான் என்று திருக்குர் ஆன் அழுத்தந் திருத்தமாகச் சொல்லுகின்றது.

புனித ரமலான் மாதத்தின் முப்பது நாட்களிலும் பொழுது புலரும் வேளையில் இருந்து அந்தி சாயும் நேரம் வரை பசி பொறுத்து உணவு உண்ணாமல், தாகத்தைத் தாங்கி தண்ணீர் அருந்தாமல் புலன்களை இச்சைகளைக் கட்டுப்படுத்தி நோன்பு தவம் இருத்தலை நிறைவு செய்கின்ற வகையில் ரமலான் பெருநாள் அமைகின்றது.

காய்ந்த குடல்கள், காலியான வயிறுகள், பசியின் அகோரத்தைப் புரிய வைக்கின்ற ரமலான் மாதம் தருகின்ற படிப்பினை, வறியோர்க்கு உதவிக் கரம் நீட்டுங்கள் என்பதாகும். அதன்படி, ஏழை, எளிய மக்களுக்கு ஜக்காத் என்னும் நன்கொடைகளை வாரி வழங்கி, ஈதுப் பெருநாளில் ஈத்துவக்கும் மகிழ்ச்சியில் திளைக்கின்ற இஸ்லாமியப் பெருமக்களுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது வாழ்த்து செய்தியில் 25-06-2017 அன்று தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய முயற்சிக்க வேண்டும்! தமிழக அரசுக்கு வைகோ கோரிக்கை!

பூவிருந்தவல்லி தடா சிறப்பு நீதிமன்றம் 1998 ஜனவரி 28 இல், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. உச்சநீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீடு காரணமாக மே 11, 1999 இல் முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன் ஆகிய 4 பேருக்கு மட்டும் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டு, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 3 பேரின் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. மற்ற 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

1999 அக்டோபர் 8 இல் நளினி உள்ளிட்ட நான்கு பேர் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

உச்சநீதிமன்றம் மீண்டும் தூக்கு தண்டனையை உறுதி செய்ததால் நளினி, பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய நால்வரும் தமிழக ஆளுநருக்கு கருணை மனுக்களை அனுப்பினர். இதன் மீது முடிவெடுத்த அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் தலைமையிலான அமைச்சரவை ஏப்ரல் 19, 2000 இல் “நளினியின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும். மற்ற மூவரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட வேண்டும்” என்று தமிழக ஆளுநருக்கு பரிந்துரை செய்தது. இதனையடுத்து ஏப்ரல் 25, 2000 இல் நளினியின் மரண தண்டனையை மட்டும் ஆயுள் தண்டனையாக குறைத்த தமிழக ஆளுநர் பாத்திமா பீவி, பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் கருணை மனுக்களை நிராகரித்தார்.

இவர்கள் மூவரும் ஏப்ரல் 26, 2000 இல் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்களை அனுப்பினர். பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவரின் கருணை மனுக்கள் 11 ஆண்டுகள், 4 மாத கால தாமதத்துக்குப் பின்னர் நிராகரிக்கப்பட் டு, செப்டம்பர் 9, 2011 இல் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

மூன்று தமிழர்களின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழகம் கொந்தளித்த நேரத்தில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் 2011 ஆகஸ்டு 29 ஆம் தேதி சட்டமன்றத்தில், “தமிழக முதல்வராக இருக்கும் தனக்குக் கருணை வழங்கும் அதிகாரம் இல்லை. அதற்குக் காரணம் குடியரசுத் தலைவரால் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட பிறகு சம்பந்தப்பட்டவர்களுக்கு கருணை அளிக்கும் அதிகாரம் மாநில ஆளுநருக்கு இல்லை” என்று 1991 மார்ச் 5 இல் மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு எழுதியுள்ள கடிதத்தை மேற்கோள் காட்டினார்.

அந்தச் சூழலில் எனது வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும், தலைசிறந்த வழக்குரைஞருமான ராம்ஜெத்மலானி அவர்கள் சென்னைக்கு வருகை தந்து, 2011, ஆகஸ்டு 30 இல் உயர்நீதிமன்றத்தில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை இரத்து செய்ய வேண்டும் என்று வாதாடினார். ராம்ஜெத்மலானி அவர்களின் சட்ட நிபுணத்துவம் வாய்ந்த வாதம்தான் நீதியரசர்கள் நாகப்பன், சத்தியநாராயணன் அடங்கிய அமர்வு மூவரின் தூக்குத் தண்டனைக்கு இடைக்காலத் தடை வழங்கக் காரணம் ஆயிற்று. அதே நாளான 2011 ஆகஸ்டு 30 இல் தமிழக முதல்வர் ஜெயலலிதா, “மூவரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும்” என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே பல்வேறு சட்டப் போராட்டங்களுக்குப் பின்னர் 2014, பிப்ரவரி 18 இல் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, மரணக் கொட்டடியில் பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவரும் 15 ஆண்டுகள் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டு சித்ரவதையை அனுபவித்தனர். கடந்த 26 ஆண்டுகளாக நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், இரவிச்சந்திரன் , ஜெயக்குமார் ஆகிய 7 பேரும் சிறைத் தண்டனையை அனுபவித்து உள்ளனர்.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா அவர்கள் பிப்ரவரி 19, 2014 இல் சட்டமன்றத்தில், உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் வழங்கியதை ஏற்று 7 பேரையும் விடுதலை செய்வதற்கு தமிழக அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக அறிவித்தார்.

இந்நிலையில்தான், உடல் நலன் சீர்கெட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு பேரறிவாளன் தனக்கு பரோல் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார். பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேருக்கும் மனிதாபிமானத்துடன் தமிழக அரசு உடனடியாக பரோல் ஆணை வழங்குவதோடு, 7 பேரையும் விடுதலை செய்வதற்குத் தேவையான முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது 25-06-2017 அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

Saturday, June 24, 2017

நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் அதிர்ச்சி அளிக்கின்றன! நீட் விலக்குக் கோரிய சட்ட முன்வடிவுக்கு, குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற அரசு நடவடிக்கை தேவை-வைகோ அறிக்கை!

மருத்துவப் படிப்புகளுக்கு நடத்தப்பட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் தமிழ்நாட்டில் தேர்வு எழுதிய 83,359 மாணவர்களில் வெறும் 38.83 விழுக்காடு பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளது அதிர்ச்சி தருகிறது. நீட் தேர்வு தர வரிசையில் முதல் 25 பேரில் ஒரு மாணவர்கூட தமிழகத்தைச் சேர்ந்தவர் இல்லை என்பது வேதனை அளிக்கிறது.

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு ‘நீட்’ தேர்வு நடத்தப்பட்டதால், தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநில அரசின் பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு நீட் தேர்வு கடினமாக இருந்தது. கடந்த கல்வி ஆண்டில், பனிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதிய 11 லட்சம் பேரில், 88 ஆயிரத்த்து 881 பேர் மட்டுமே நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். அதில் தேர்வு எழுதிய 83,359 பேரில் வெறும் 32,368 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது ஏமாற்றம் அளிக்கிறது.

மத்தியப் பாடத்திட்டத்தின் கீழ் தொடர்பு இல்லாத கேள்வித்தாளை தமிழக மாணவர்கள் எதிர்கொள்ள முடியாமல் திணறிவிட்டனர். பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் 1100 மதிப்பெண் பெற்ற மாணவர்கள்கூட நீட் தேர்வில் 110 மதிப்பெண்களைத் தொட முடியவில்லை. தமிழக மாணவர்களின் மருத்துக் கல்வி கனவுகளை நீட் தேர்வு முடிவுகள் தகர்த்துவிட்டன. மருத்துவப் படிப்புக்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்துவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்காமல் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்துவிட்டது.

தற்போது தமிழக அரசு, நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களில் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 விழுக்காடு ஒதுக்கீடு செய்யப்படும் என்று அரசாணை வெளியிட்டு இருப்பது வரவேற்கத்தக்கது ஆகும். மருத்துவ மாணவர்கள் சேர்க்கையால் மேலும் சட்டச் சிக்கல் எழாமல், தமிழ்நாட்டில் கிராமப்புற ஏழை, பிற்படுத்தப்பட்ட, தலித் மாணவர்கள், மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் பாதிக்கப்படாதவாறு தமிழக அரசு விழிப்புடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு விலக்கு அளிக்கக் கோரும் சட்ட முன்வடிவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற தமிழக அரசு உடனடியாக முயற்சிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது 24-06-2017 அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

Friday, June 23, 2017

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தீர்மானங்கள்!

மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தீர்மானங்கள்!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள், உயர்நிலைக்குழு, ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள் கூட்டம் இன்று 23.06.2017 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு சென்னை, தலைமை நிலையம், தாயகத்தில் கழக அவைத்தலைவர் திரு.
திருப்பூர் சு. துரைசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
தீர்மானம் எண். 1
பேரறிஞர் அண்ணா 109 ஆவது பிறந்த நாள் விழா மாநாட்டை செப்டம்பர் 15, 2017 அன்று தஞ்சாவூரில் மிகவும் சிறப்பாக நடத்துவது என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

தீர்மானம் எண். 2
கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தமிழ்நாடு முழுவதும் மறுமலர்ச்சி தி.மு.க., மாவட்டச் செயல்வீரர்கள் கூட்டங்களில் பங்கேற்க சுற்றுப் பயணம் விரைவில் தொடங்குவது என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் எண். 3
மலேசிய நாட்டின் பினாங்கு மாநிலத் துணை முதலமைச்சர் பேராசிரியர் இராமசாமி அவர்களின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஜூன் 10, 2017 இல் நடைபெற இருந்த நிலையில், கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் அந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஜூன் 8 ஆம் தேதி இரவு விமானத்தில் சென்னையில் இருந்து புறப்பட்டு, 9 ஆம் தேதி மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூர் சென்று அடைந்தார்.
மலேசிய அரசின் குடிவரவுப் பிரிவு அதிகாரிகள் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள்
மலேசியாவுக்குள் நுழைய அனுமதிக்க முடியாது என்று மறுத்து விட்டனர். இந்தியாவின்
கடவுச் சீட்டு வைத்து இருந்த வைகோ அவர்களை, ‘நீங்கள் இலங்கைத் தமிழரா?’ என்றும், ‘விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவரா?’ என்றும் மலேசிய அதிகாரிகள் வினவி உள்ளனர். மேலும் பொதுச்செயலாளர் வைகோ அவர்களால் மலேசியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து என்றும்
அபாண்டமாகக் குற்றஞ் சாட்டினர்.
சென்னையில் உள்ள மலேசியத் தூதரகத்தில் முறைப்படி விண்ணப்பித்து விசா பெற்றுக்கொண்டு, கோலாலம்பூர் சென்றடைந்த பொதுச்செயலாளர் வைகோ அவர்களை மலேசியாவுக்குள் அனுமதிக்காமல் 16 மணி நேரம், கைதியைப் போல் காவலில் வைத்து இருந்த மலேசிய அரசின் செயல் கடும் கண்டனத்திற்கு உரியது.

இந்தியாவின் நாடாளுமன்றத்தில் 24 ஆண்டுகள் மிகச் சிறப்பாகச் செயல்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரான அவருக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து இந்திய அரசு மலேசியாவுக்குக் கண்டனம் தெரிவித்து இருக்க வேண்டும். இந்தியக் குடிமகன் ஒருவருக்கு அயல்நாட்டில், பன்னாட்டுச் சட்ட விதிகளை மீறி அனுமதி மறுக்கப்பட்டதும்,
விமான நிலையத்தில் காவலில் வைத்து
இருந்ததைப் போல நடத்தியது குறித்தும் ஏற்றுக் கொள்ளத்தக்கதா? என்பதை இந்திய அரசு தெரிவிக்க வேண்டும். 
மலேசியாவில் நடந்த நிகழ்வுகளை விளக்கி பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் ஜூன் 12 ஆம் தேதி கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கின்றார். இந்திய அரசு உரிய முறையில் மலேசிய அரசிடம் கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.

கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களை மலேசியாவுக்குள் அனுமதிக்காமல் தடுத்துத் திருப்பி அனுப்பிய மலேசிய அரசுக்குக் கண்டனம் தெரிவித்து வைகோ அவர்களுக்கு ஆதரவு நல்கிய அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும் மறுமலர்ச்சி தி.மு.க. நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.
தீர்மானம் எண். 4
நாடு முழுவதும் விவசாயிகளின் துயரம் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம்

இருக்கின்றது. தமிழ்நாட்டில் வரலாறு காணாத வறட்சியால் வேளாண்மைத் தொழில் கடும்
நெருக்கடிகளுக்கு உள்ளாகி இருக்கின்றது. பருவ மழை பொய்த்ததாலும், காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடக மாநிலம்
மறுத்து தமிழகத்தை வஞ்சித்ததாலும், தமிழக
விவசாயிகள் நம்பிக்கை இழந்துவிட்டனர். கடன் சுமை நெருக்கியதாலும், சாகுபடி செய்த பயிர்கள் கருகியதாலும் தமிழ்நாட்டில் இருநூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் போராடி வருகின்றனர். தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள கடனை மட்டும் தள்ளுபடி செய்துள்ளது.

மத்திய நிதித்துறை அமைச்சர் அருண்ஜெட்லி, வங்கிக் கடன் தள்ளுபடி செய்வதற்கு மத்திய அரசு நிதி உதவி அளிக்காது என்றும், மாநில அரசுகளே நிதி ஆதாரத்தைத் திரட்டிக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
வறட்சி மாநிலமாக அறிவிக்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு வறட்சி நிவாரண நிதி 39595 கோடி ரூபாய் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்குக் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், மத்திய அரசு தேசிய பேரிடர் உதவி நிதியில் இருந்து ரூ.1748.28 கோடி மட்டுமே தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்தது.

வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவது போல விவசாயிகளின் வங்கிக் கடனைத் தள்ளுபடி
செய்வதற்கு மத்திய அரசு உதவிட முடியாது என்று கைவிரித்து இருப்பது வேதனை
அளிக்கின்றது.

மாநில அரசுகளின் நிதிச் சுமையை மத்திய அரசும் பகிர்ந்துகொண்டு, தமிழக விவசாயிகள் பெற்றுள்ள வங்கிக் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.
தீர்மானம் எண். 5
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடன் தள்ளுபடி தொடர்பாக தமிழக அரசு ஜூன் 28, 2016 இல் ஒரு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதில் மார்ச் 31, 2016 வரையில் நிலுவையில் உள்ள கூட்டுறவு வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்வதாகவும், ஐந்து ஏக்கர் வரை விவசாய நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு மட்டுமே இந்தச் சலுகை பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசின் இந்த அரசு ஆணையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் ஏப்ரல் 4, 2017 இல் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பு வழங்கி இருக்கின்றது.
மாண்பமை நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் ஆகியோர் அளித்துள்ள தீர்ப்பில், “ஐந்து ஏக்கருக்குக் குறையாமல் விவசாய நிலம் வைத்து இருப்போருக்கு மட்டும் கடன் தள்ளுபடி சலுகை வழங்கியது என்பது இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரான செயல் ஆகும். தமிழக அரசு கடந்த ஆண்டு ஜூன் 28 ஆம் தேதி பிறப்பித்த அரசு ஆணையில், அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க் கடன் தள்ளுபடி சலுகை வழங்கப்படும் என்கிற வகையில், அந்த அரசு ஆணையை மாற்றி அமைக்க வேண்டும்; இந்த உத்தரவை மூன்று மாதங்களுக்குள் தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை திரும்பப் பெறவேண்டும்.

தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசு ஆணையின்படி 16 லட்சத்து 94 ஆயிரத்து 145 விவசாயிகள் பெற்றுள்ள கூட்டுறவு வங்கிகளின் கடன் தொகை 5780 கோடி ரூபாய் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றது. சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவை ஏற்று மேலும் 3 இலட்சத்து 926 விவசாயிகளின் 980 கோடி ரூபாய் கூட்டுறவு வங்கி பயிர்க் கடனைத் தள்ளுபடி செய்யத் தமிழக அரசு, உரிய அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.
தீர்மானம் எண். 6
நிலத்தடி நீரை உறிஞ்சி, சுற்றுச் சூழலைச் சீர்கேடு அடையச் செய்யும் சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்காக செப்டம்பர் 9, 2015 இல் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் ரிட் மனு தாக்கல் செய்தார்.
பல அமர்வுகளில் இந்த வழக்கின் விசாரணை நடந்த பின்னர், பிப்ரவரி 27, 2017 இல் மாண்பமை நீதிபதிகள் செல்வம், கலையரசன் ஆகியோர் அடங்கிய அமர்வு சீமைக் கருவேல
மரங்களை அகற்றத் தமிழக அரசு சட்டம் கொண்டுவர வேண்டும் என்றும், அவற்றை முழுமையாக அகற்றுவதற்கு தேவையான நிதியை ஒதுக்க வேண்டும் என்றும் தீர்ப்பு அளித்தது.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழங்கிய தீர்ப்புக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், மே 11, 2017 இல் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதிகள் எம்.சுந்தர், எம்.எஸ்.ரமேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு, தமிழகத்தில் சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்கு இடைக்காலத் தடை விதித்தது.

தமிழ்நாடு வனத்துறை தலைமைப் பாதுகாவலர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள நிபுணர்
குழு, சீமைக் கருவேல மரம் குறித்து அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் என்று தமிழக அரசின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் எதிர்கால நலனைக் ருத்தில்கொண்டு, வறட்சியின் பிடியில் சிக்கி இருக்கின்ற தமிழ்நாட்டின் நீராதாரத்தைப் பாதுகாக்க சீமைக் கருவேல மரம் அகற்றுவதற்கு உயர்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தடையை நீக்கத் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்; சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அளித்த தீர்ப்பின்படி சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்குத் தனிச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.
தீர்மானம் எண். 7
இந்தியா முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பு முறையை நடைமுறைப்படுத்த பொருட்கள் மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) மத்திய அரசு ஜூலை முதல் தேதியில் இருந்து கொண்டுவரப்படும் என்று அறிவித்துள்ளது.
தற்போதுள்ள உற்பத்தி வரி, சேவை
வரி, விற்பனை வரி, மதிப்புக் கூட்டு வரி உள்ளிட்ட பல்வேறு வகையான வரி இனங்களை நீக்கி விட்டு, ஜி.எஸ்.டி. எனப்படும் பொருட்கள் மற்றும் சேவை வரியை நடைமுறைப்படுத்துவதில் மத்திய அரசு முனைப்பாக இருக்கின்றது. 
தற்போதுள்ள வரி செலுத்தும் முறையில் இருந்து ஜி.எஸ்.டி. வரிக்கு உடனடியாக மாறுவதற்கு உரிய தொழில்நுட்பக் கட்டமைப்புகளை உருவாக்கிக் கொண்டு இதை நடைமுறைப்படுத்தலாம்; அதற்கு உரிய கால அவகாசம் தேவை’ என்று இந்திய வர்த்தக கூட்டமைப்பு ‘அசோசம்’ மற்றும் வணிகர் சங்கங்கள் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.

ஆனால், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, திட்டமிட்டவாறு ஜூலை 1 ஆம் தேதி முதல் ஜி.எஸ்.டி. நடைமுறைக்கு வந்தே தீரும் என்று அறிவித்துள்ளார்.
கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் நடைமுறையில் இருந்து வரி செலுத்தும் முறை மாற்றப்படும்போது, மாநில அரசுகளின் கருத்துகளை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் இதுவரையில் வரி இல்லாத பொருட்கள் மீதும் வரி விதிக்கப்படுகின்றது. தற்போது பருத்தி, பருத்தி நூல் இழை மற்றும் துணி வகைகளுக்கு வரி கிடையாது. ஒரு சில மாநில அரசுகள் மட்டும் 2 முதல் 4 விழுக்காடு மதிப்புக் கூட்டு வரி
விதிக்கின்றன. ஜி.எஸ்.டி.யில் பருத்தி நூல் மற்றும் துணி விற்பனை செய்பவர்களுக்கு 5 விழுக்காடும், பாவு எடுத்து ஒப்பந்த முறையில் வேலை செய்பவர்களுக்கு 18 விழுக்காடும் வரி விதிக்கப்பட உள்ளது. இதனால் ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் பாதிக்கப்படும் நிலைமை உருவாகி உள்ளது. தமிழ்நாட்டில் கரூர், ஈரோடு மற்றும் சங்கரன்கோவிலில் ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் வேலை நிறுத்தம் செய்துள்ளன.

மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் கருவிகளுக்கு இதுவரை வரி விதிக்கப்படவில்லை. ஜி.எஸ்.டி.யில் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும்
மூன்று சக்கர வண்டி, அவர்களைக்
கொண்டு செல்ல உதவும் கருவிகளுக்கு 5
விழுக்காடு வரி அறிவிக்கப்பட்டுள்ளது. பார்வையற்றோர் பயன்படுத்தும் ப்ரெய்ல்
பேப்பர், ப்ரெய்ல் கடிகாரங்கள்
மற்றும் காது கேளாதோர் பயன்படுத்தும் கருவிகளுக்கு 12 விழுக்காடு வரி விதிக்கப்படுகிறது. 
இந்த வரிகளை நீக்க வேண்டும் என்று மாற்றுத் திறனாளிகள் போராடி வருகின்றனர்.

மேலும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்கப்பட்டுள்ளன. 
ஜூன் 11 ஆம் தேதி டில்லியில் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் 133 பொருட்கள் மீதான வரியை மாற்றக் கோரிய நிலையில், 66 பொருட்களுக்கு மட்டுமே ஜி.எஸ்.டி. வரி மாற்றி அமைக்கப்பட்டது. ஜூன் 18 ஆம் தேதி நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் 17 ஆவது கூட்டத்தில், பல்வேறு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விகிதங்கள் மாற்றி அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

அவசர கதியில் ஜி.எஸ்.டி.யை நடைமுறைப்படுத்த முனையாமல் மாநில அரசுகள், தொழில் வர்த்தக சங்க கூட்டமைப்பு மற்றும் வணிகர் சங்கங்கள் போன்ற அமைப்புகளுடன் கலந்து பேசிச் செயல்படுத்த வேண்டும் என்று இக்கூட்டம் மத்திய
-மாநில அரசுகளைக் கேட்டுக் கொள்கின்றது.

தீர்மானம் எண். 8
காவிரி பாசனப் படுகையைப் பாலைவனம் ஆக்கும் வகையில் மத்திய அரசு மீத்தேன்,
ஹைட்ரோ கார்பன் மற்றும் ஷேல் எரிவாயு
போன்ற திட்டங்களை செயல்படுத்தியாக வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது. தமிழக
மக்களின் எதிர்ப்பை அலட்சியப்படுத்திவிட்டு புதுக்கோட்டை, மாவட்டம் -நெடுவாசல் உள்ளிட்ட 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்திட கடந்த மார்ச் 26, 2017 இல் மத்திய
அரசு 22 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டுள்ளது. 
தமிழகத்தில் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு ஜெம் லெபரட்டரீஸ் நிறுவனத்திற்கு பணி ஒப்பந்தம் அளிக்கப்பட்டு இருக்கின்றது. ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு பல நிறுவனங்களுடன் மத்திய அரசு போட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தமிழக அரசு எதிர்க்கவில்லை என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார். மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழக மக்களிடம் திட்டம் குறித்து விரிவாக எடுத்துக்கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தைச் செயல்படுத்துவோம் என்று தெரிவித்து இருக்கின்றார். எனவே, தமிழக அரசு, மத்திய அரசின் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் மற்றும் பாறைப் படிம எரிவாயுத் திட்டங்களுக்கு உறுதியான எதிர்ப்பை தெரிவிப்பதுடன், எக்காரணம் கொண்டும் இவற்றுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.

தீர்மானம் எண். 9
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் இருபுறங்களிலும் 500 மீட்டர் தூரத்தில் இருக்கும் மதுக்கடைகளை மார்ச் 31, 2017 தேதிக்குள் மூட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடுமையான உத்தரவு பிறப்பித்தது. இதனால் தமிழ்நாட்டில் இயங்கி வரும் 5672 டாஸ்மாக் மதுக்கடைகளில் 3321 மதுக்கடைகளை மூடிவிட வேண்டிய நிலைமை தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
அந்தக் கடைகளை வேறு இடங்களில் திறப்பதற்கு தமிழக அரசு மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. திருப்பூரில் சாமளாபுரம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் நூற்றுக்கணக்கான இடங்களில் புதிதாக டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படுவதை எதிர்த்துப் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் மதுக்கடைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களைக் காவல்துறையினர் கண்மூடித் தனமாக தாக்கி போராட்டத்தை கைவிடுவதற்கு அச்சுறுத்தும் நடவடிக்கைகள் கடும் கண்டனத்திற்கு உரியதாகும். 
டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராகத் தமிழகத்தில் மக்கள் வெகுண்டெழுந்து இருப்பதால், தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.

தீர்மானம் எண். 10
மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கவில்லை.
இந்நிலையில், மே 7, 2017 இல் இந்தியா முழுவதும் பத்து மொழிகளில் ‘நீட்’ தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்
(சி.பி.எஸ்.இ.) நடத்தியது. ஆனால், நாடு
முழுவதும் ஒரே நுழைவுத் தேர்வு என்று கூறிவிட்டு வெவ்வேறு மாநில மொழிகளில்
வெவ்வேறு வினாத்தாள்கள் வழங்கப்பட்டன. குஜராத்தி, மொழியில் எளிமையாக இருந்ததாகவும், வங்க மொழி வினாத் தாள் கடினமாக இருந்ததாகவும் மேற்கு வங்க கல்வி அமைச்சர் புகார் கூறினார். தமிழகத்தில் ஆங்கில மொழி வினாத்தாள் கடினமாக இருந்ததாக புகார்கள் எழுந்தன.

நீட் தேர்வு எழுதும் மையங்களில் சோதனை என்ற பெயரில் மாணவ -மாணவியர்களை சி.பி.எஸ்.இ., தேர்வு நடத்தும் அலுவலர்கள் நடத்திய முறை கடும் கண்டனத்துக்கு ஆளானது. நீட் தேர்வு முடிவுகளை வெளியிட எதிர்ப்புத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டதால் முடிவுகளும் வெளியிடப்பட்டு விட்டன.
தமிழக அரசின் மருத்துவக் கல்லூரிகளில் தமிழக மாணவர்கள் படிக்கும் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக வீழ்ச்சி அடைந்து வருகின்றது. இதற்குக் காரணம், இளங்கலை மருத்துவ இடங்களில் 15 விழுக்காடு, முதுநிலை மருத்துவ இடங்களில் 50 விழுக்காடு அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்பட்டு வருகின்றது. ஆனால், நாம் வழங்கும் இடங்களின் அளவுக்கு அகில இந்திய தொகுப்பில் இடங்களைப் பெறுவது இல்லை.
மேலும் நமது உயர் சிறப்பு மருத்துவ இடங்கள் அனைத்திலும் வடநாட்டினர் கணிசமான இடத்தைப் பிடித்து விடுகின்றார்கள். மற்ற மாநிலங்களைப் போல் தமிழ்நாட்டின் டி.எம்., எம்.சிஎச். இடங்களை அகில இந்திய அளவில் பகிரங்கப் போட்டிக்கு விட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டதன் விளைவு இது. எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற நிறுவனங்களில் இளநிலை மருத்துவக் கல்வி பயின்றவர்களுக்கு முதுநிலை மருத்துவப் படிப்பில் நிறுவன ஒதுக்கீடு வழங்கப்பட்டு இருக்கின்றது. இதை உச்சநீதிமன்றமும் ஆதரிக்கின்றது. ஆனால் தமிழக அரசின் உயர் சிறப்பு மருத்துவ இடங்களில் தமிழகத்தின் ஒட்டுமொத்த உரிமையையும் பறிக்கின்றது.

எனவே, தமிழக அரசின் மருத்துக் கல்லூரிகளில் உள்ள இளநிலை, முதுநிலை, உயர் சிறப்பு
மருத்துவ இடங்கள் அனைத்தும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கே கிடைக்கும் வகையில்
ஆந்திரா, தெலுங்கானா மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களைப் போன்று தமிழக அரசும் சட்டம் கொண்டு வர வேண்டும்.

தமிழ்நாட்டில் மருத்துவ உயர்கல்வி படிப்புக்கு அரசு மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு வழங்கும் முறையை இருபது ஆண்டுகளாகத் தமிழக அரசு பின்பற்றி வந்தது. இதனை சென்னை உயர் நீதிமன்றம் இரத்து செய்து, அகில இந்திய மருத்துவக் கவுன்சில் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டது.
இதனால் தமிழ்நாட்டில் கிராமப்புற மற்றும் மலைவாழ் மக்களுக்கு மருத்துவச் சேவை
புரியும் இளநிலை மருத்துவர்கள், மருத்துவ
உயர்கல்வி படிப்புக்குச் செல்லும் வாய்ப்பு பறிபோய் உள்ளது.

இத்தீர்ப்பை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், நீட் தேர்வு நடத்துவதில் உறுதியாக இருந்த உச்சநீதிமன்றம், தமிழ்நாட்டில் மருத்துவ உயர் படிப்புகளுக்கு அரசு மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கும் முறையை ஏற்றுக் கொள்ளுமா என்ற ஐயப்பாடு உள்ளது. எனவே, தமிழக அரசு, அரசு மருத்தவர்களுக்கு மருத்துவ மேற்படிப்பில் 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் வகையில்
மத்திய அரசு உடனடியாக ஒரு அவசர சட்டம் பிறப்பிக்க தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்
என்று இக்கூட்டம் கேட்டுக் கொள்கின்றது.
தீர்மானம் எண். 11 மிருகவதைத் தடுப்புச் சட்டம் 1960-இன்கீழ் கால்நடைகளை இறைச்சிக்காக விற்பது வாங்குவது போன்றவற்றிற்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து, ‘மிருகவதைத் தடுப்பு (கால்நடை சந்தை ஒழுங்குமுறை) விதிகள், 2017’ என்ற பெயரில் அறிவிக்கை ஒன்றை மத்திய அரசு வெளியிட்டு இருக்கின்றது. இதன்படி காளைகள், பசு மாடுகள், எருமை மாடுகள், கன்றுடன் கூடிய பசு மாடு, கன்று மற்றும் ஒட்டகம் போன்ற கால்நடைகள்,

சந்தைகளில் இறைச்சிக்காக வாங்கவோ,
விற்கவோ கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது.

வேளாண்மைத் தொழில் நாளுக்கு நாள் நலிவு அடைந்து வரும் நிலையில், விவசாயிகள் கால்நடைகளைப் பராமரிக்க முடியாமல் சந்தையில் விற்பனை செய்ய முற்பட்டால், மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டம் கடும் நிபந்தனைகளை விதிக்கிறது.
நடைமுறைக்கு ஒவ்வாத சட்டத் திருத்தங்களின் மூலம் மாட்டு இறைச்சிக்குத் தடை விதிக்க
மத்திய பா.ஜ.க. அரசு கடந்த மூன்று ஆண்டுகளாகவே பல விதங்களில் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

கடந்த மூன்று ஆண்டுகளாக நாடு முழுவதும் பசு மாட்டு இறைச்சி வைத்து இருந்ததாக இந்துத்துவ மதவெறிக் கூட்டம் தலித் மற்றும் இஸ்லாமிய மக்கள் மீது நூற்றுக்கணக்கான தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
இந்நிலையில் கால்நடைகளை இறைச்சிக்காக விற்கக் கூடாது என்றும், கோவில்களில் பலியிடக் கூடாது என்றும் பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள சட்ட விதிகள் கடும் கண்டனத்துக்கு உரியதாகும். 
மக்களின் வழிபாட்டு உரிமைகளைப் பறிப்பதும், உணவுப் பழக்க வழக்கங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிப்பதும் நாட்டின் பன்முகத் தன்மையைச் சீர்குலைத்து விடும். சகிப்பு இன்மையால் இந்தியாவின் மத, சமூக நல்லிணக்கம் பேராபத்தில் சிக்கி விடும். எனவே, மத்திய அரசு கொண்டு வந்துள்ள “மிருகவதை தடுப்பு (கால்நடை சந்தை ஒழுங்குமுறை) விதிகள் 2017” அறிவிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.

தீர்மானம் எண். 12
கடந்த 2001-ஆம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராகப் பொறுப்பு வகித்த காலத்தில், தமிழ்நாட்டில் எண்ணுhர் காமராஜர் துறைமுகம், இந்தியாவின் முதன்மை மற்றும் தனித்துவம் பெற்ற துணைத் துறைமுகமாக உருவாக்கப்பட்டது. இங்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அனல் மின்நிலையங்களுங்களுக்குத் தேவையான நிலக்கரியை இறக்குமதி செய்திட இரு முனையங்கள் அமைக்கப்பட்டன. மேலும் கடல்சார் திரவ முனையம், மோட்டார் வாகன ஏற்றுமதி முனையம், பெட்டக முனையம் மற்றும் பல சரக்கு முனையம் போன்றவை காமராஜர் துறைமுகத்தில் அமைக்கப்பட்டு சிறப்பாக இயங்கி வருகின்றன. மேலும் பல்வேறு முனையங்கள் அமைப்பதற்கான திட்டங்களும் செயற்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் மோட்டார் வாகனத் தொழிலில் தமிழகம் முன்னணியில் இருப்பதற்கும், இங்குள்ள மோட்டார் வாகனப் பெரு நிறுவனங்களின்
வளர்ச்சிக்கும் எண்ணுhர் காமராஜர்
துறைமுகம் முக்கியப் பங்கு வகித்து வருகின்றது. அடிப்படைக் கட்டமைப்புகளுடன் காமராஜர்
துறைமுகம் இந்திய கப்பல் போக்குவரத்துத் துறையின்கீழ் வளர்ச்சி பெற்று வருகின்றது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் காமராஜர் துறைமுகம் ஈவுத்தொகை, சேவை வரி, கட்டுமானப் பணியாளர் தீர்வை, வருமான வரி போன்றவற்றின் மூலம் மத்திய அரசுக்கு ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தி இருக்கின்றது. நூறு நிரந்தரப் பணியாளர்களும், 15 ஆயிரம் ஒப்பந்தப் பணியாளர்களும் காமராஜர் துறைமுகத்தின் வளர்ச்சிக்காகக் கடினமாக உழைக்கின்றனர். இந்நிலையில் மத்திய அரசு காமராஜர் துறைமுகத்தின் மூலதனப் பங்குகளைத் தனியாருக்கு விற்பனை செய்யும் முயற்சியில் இறங்கி உள்ளது.

தமிழகத்தின் தொழில்துறை மேம்பாட்டிற்கும், மின்சார வாரியத்திற்குத் தேவையான நிலக்கரி கையாளும் வகையிலும் சிறப்பாக இயங்கி வரும் எண்ணுhர் காமராஜர் துறைமுகத்தைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.
தீர்மானம் எண். 13
மாநிலங்களுக்கு இடையிலான அனைத்து நதிநீர்ப் பிரச்சினைகளுக்கும் விரைந்து தீர்வு காண ஒரே நிரந்தர நடுவர் மன்றம் அமைப்பதற்கான சட்ட முன்வடிவு ஒன்றை, மார்ச்சு 14, 2017 இல் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். “மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர்ப் பிரச்சினை (திருத்தம்) 2017” என்ற இந்த சட்ட முன்வடிவு மாநில அரசுகளின் கருத்தறியாமல் தாக்கல் செய்யப்பட்டு இருக்கின்றது.தமிழகம் கர்நாடகம் இடையிலான காவிரிப் பிரச்சினையில் தீர்வு காண காவிரி நடுவர் மன்றம் 1990-இல் அமைக்கப்பட்டது. அதுபோன்று கிருஷ்ணா நதி, ரவி, பியாஸ், மகதாயி உள்ளிட்ட நதிநீர் பிரச்சினைகளுக்காக தனித்தனி நடுவர் மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.
தற்போதுள்ள மொத்தம் எட்டு தீர்ப்பு ஆயங்களில் மூன்று தீர்ப்பு ஆயங்கள் மட்டும்
தீர்ப்பு அளித்து மாநிலங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன.
இந்நிலையில் மத்திய அரசு அனைத்து நதிநீர்ப் பிரச்சினைகளையும் ஒரு குடையின்கீழ் கொண்டு வந்து, ஒரே நிரந்தர தீர்ப்பாயம் அமைக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளது.

மத்திய அரசின் ஒரே நிரந்தரத் தீர்ப்பு ஆயம் அமைக்கும் முடிவினால் காவிரி
நடுவர் மன்றம் வழங்கி உள்ள தீர்ப்பு கேள்விக்குறி ஆகி உள்ளது. முதன்முதலில் 1970-இல் காவிரி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று தமிழகம் வைத்த கோரிக்கையை 20 ஆண்டு காலம் கழித்து 1990-இல்தான், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த கடுமையான உத்தரவையடுத்து மத்திய அரசு ஏற்றது. 
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு 17 ஆண்டுகள் கழித்து, 2017 பிப்ரவரி 5-இல்தான் வழங்கப்பட்டது. நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பைச் செயல்படுத்தும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகிய இரு அமைப்புகளை மத்திய அரசு உருவாக்கி இருக்க வேண்டும். உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும்கூட, மத்திய பா.ஜ.க. அரசு, மேற்கண்ட அமைப்புகளை அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் தமிழ்நாடு காவிரியில் உரிய நீரைப் பெற முடியாமல் காவிரிப் படுகை
மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் கருகின.

இந்நிலையில் மத்திய அரசு, நதிநீர்ப் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்ப்பு ஆயம் அமைக்கும் திட்டத்தால் தமிழகம், நடுவர் மன்றத் தீர்ப்பின்படி காவிரியில் தமது உரிமையை நிலைநாட்ட முடியாமல் போகும் நிலை ஏற்படும். எனவே, தமிழ்நாட்டை வஞ்சிக்கும் வகையில் நதிநீர் பிரச்சினைகளுக்கு ஒரே நிரந்தரத் தீர்ப்புஆயம் அமைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.
தீர்மானம் எண். 14
வட தமிழ்நாட்டின் முக்கிய நீராதாரமான பாலாறு, கர்நாடக மாநிலம் நந்திதுர்கம் மலையில் உற்பத்தியாகி அங்கு 90 கி.மீ. பாய்கின்றது.
ஆந்திர மாநிலத்தில் 33 கி.மீ. தூரம் பாய்ந்து வேலூர் மாவட்டம் வாணியம்பாடி புல்லூரில் தமிழ்நாட்டிற்குள் நுழைகின்றது. ஆந்திராவில் பாலாறு பாயும் 33 கி.மீ. தூரத்தில் அம்மாநில அரசு ஏற்கனவே 22 தடுப்பு அணைகளைக் கட்டி உள்ளது. ஏற்கனவே, பாலாற்றின் குறுக்கே 5 அடி உயரம் கட்டி இருந்த தடுப்பு அணைகளை 12 அடியாக உயர்த்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து
தமிழக எல்லையில் பாலாற்றின் குறுக்கே மூன்று தடுப்பு அணைகள் அமைக்கும் பணியில்
ஆந்திர அரசு தீவிரமாக உள்ளது. கங்குந்தி, பொகிலிரேவு மற்றும் கணேசபுரம்-கங்குந்தி இடையிலும் புதிய தடுப்பு அணைகள்
கட்ட ஏற்பாடு செய்துள்ளது. இதனால் பாலாற்றில் நீர்வரத்து அறவே நின்று விடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை,
திருவள்ளூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில்
விளைநிலங்கள் பாதிக்கப்படுவதோடு, குடிநீர்
ஆதாரமும் பறிபோகும் நிலை உருவாகி உள்ளது.
பாலாற்றின் குறுக்கே தடுப்பு அணையின் உயரத்தை அதிகரிக்கக் கூடாது என்று தமிழக அரசு கடந்த ஆண்டு ஜூலையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது.

இந்நிலையில் ஆந்திர மாநில நீர்பாசனத் துறையின் சார்பில் கொசஸ்தலை ஆற்றின் துணை நதியான குசா ஆற்றின் குறுக்கே
சித்தூர் மாவட்டத்தில் நிலவாயல், கர்வெட்
நகர் மண்டல் ஆகிய இடங்களில் தடுப்பணைகளைக் கட்டி வருகின்றது.

பாலாறு மற்றும் கொசஸ்தலை ஆறுகளின் குறுக்கே ஆந்திர மாநில அரசு தடுப்பு அணைகள் கட்டும் திட்டத்தை மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என்று இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் கேரள மாநில அரசு பவானி ஆறு, அமராவதி மற்றும் பாம்பாற்றின் குறுக்கே அணைகள்
கட்ட முயற்சிப்பதையும் மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என்று இக்கூட்டம்
வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண். 15
மே பதினேழு இயக்கம், தமிழர் விடியல் கட்சி உள்ளிட்ட தமிழ் இயக்கங்கள் சென்னை மெரினா கடற்கரையில் மே 21-ஆம் தேதி அன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்த காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டது. காவல்துறை தடையை மீறி நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்த முயன்ற மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சி முதன்மை ஒருங்கிணைப்பாளர் டைசன் மற்றும் இளமாறன், அருண்குமார் ஆகியோர் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்த முயன்றதற்காக திருமுருகன் காந்தி உள்ளிட்டோரை தமிழக அரசு கைது செய்தது அநீதியாகும். அதுமட்டும்அன்றி, திருமுருகன் காந்தி உள்ளிட்ட நான்கு பேரின் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தைத் தமிழக அரசு ஏவி இருப்பது ஜனநாயகத்தின் ஆனி வேரையே அறுக்கும் செயல் ஆகும். அரசியல் சட்டம் வழங்கி உள்ள அடிப்படைக் கருத்துரிமையைப் பறிக்கும் வகையில் மிசா, பொடா மற்றும் தடா சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. தமிழக அரசு கருத்து உரிமையை நசுக்கும் முயற்சியில் இறங்கி உள்ளதை ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டோர் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டத்தைத்
திரும்பப் பெற வேண்டும்; அவர்கள்
மீது போடப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்து உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று
இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.

தீர்மானம் எண். 16
கடந்த 2012-ஆம் ஆண்டில் தமிழக அரசு, தமிழ்நாடு முழுவதும் உள்ள நடுநிலைப் பள்ளி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 16,549 பகுதிநேர ஆசிரியர்களைப் பணி அமர்த்தியது. வாரத்திற்கு மூன்றரை நாட்கள், மாதத்திற்கு 12 நாட்கள் பணிபுரிய மாத ஊதியமாக ரூ. 5,000 நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் 2014-இல் ஊதியத்தில் ரூ. 2000 உயர்த்தி ரூ. 7,000 ஆக வழங்கப்பட்டது. பகுதி நேர ஆசிரியர்கள் தங்களைப் பள்ளிக் கல்வித்துறைக்கு மாற்றி பணி நிரந்தரம் செய்யக் கோரி போராடி வருகின்றார்கள்.
தமிழக அரசு மனிதாபிமான முறையில் பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கையைக் கனிவுடன்
ஏற்று, அவர்களின் கோரிக்கையை
நிறைவேற்ற வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.

தீர்மானம் எண். 17
மரபு அணு மாற்றுப் பயிர்களுக்கு எழுந்துள்ள கடுமையான எதிர்ப்புகளை அலட்சியப்படுத்திவிட்டு, மரபு அணு மாற்று கடுகு பயிர் சாகுபடி செய்வதற்கு மே 11, 2017-இல் மரபு அணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு அனுமதி அளித்து மத்திய சுற்றுச்சூழல் துறைக்குப் பரிந்துரை அனுப்பி உள்ளது. இதனைத் தொடர்ந்து மரபு அணு மாற்று கடுகு சாகுபடிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
மரபு அணு மாற்றுப் பயிர்களால் உண்டாகும் கேடுகள், மனித உடலுக்கு ஏற்படும் தீங்குகள் பற்றி விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை. மரபு அணு மாற்றுப் பயிர்களை உருவாக்கும் தனியார் பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சந்தையாக இந்தியாவை மாற்றுவது மட்டும் அன்றி, இந்தியாவின் மரபுவகை மண்ணுக்கு ஏற்ற உணவுப் பயிர்கள் உற்பத்தியை அழிக்கும் வகையில் மரபு அணு மாற்றுக் கடுகு சாகுபடிக்கு
அனுமதி அளிக்கப்பட்டு இருக்கின்றது. 
2010-ஆம் ஆண்டு மரபு அணு மாற்று கத்திரிக்காய் உற்பத்திக்கு ஆய்வு நடத்த காங்கிரஸ் கூட்டணி அரசு அனுமதி வழங்கியபோது கடும் எதிர்ப்புத் தெரிவித்த பாரதிய ஜனதா கட்சி, தற்போது ஆட்சிக்கு வந்த பின்னர் உணவுப் பொருட்களில் முதல்முறையாக மரபு அணு மாற்று கடுகு சாகுபடிக்கு அனுமதி அளித்து இருப்பது கண்டனத்திற்கு உரியது. மரபு அணு மாற்று கடுகு உள்ளிட்ட எந்த மரபு அணு உணவுப் பொருட்கள் உற்பத்திக்கும் மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்று இக்கூட்டம் வலியுறுத்துகின்றது என மதிமுக தலைமை நிலையமான தாயகம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஓமன் மதிமுக இணையதள அணி