Saturday, June 24, 2017

நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் அதிர்ச்சி அளிக்கின்றன! நீட் விலக்குக் கோரிய சட்ட முன்வடிவுக்கு, குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற அரசு நடவடிக்கை தேவை-வைகோ அறிக்கை!

மருத்துவப் படிப்புகளுக்கு நடத்தப்பட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் தமிழ்நாட்டில் தேர்வு எழுதிய 83,359 மாணவர்களில் வெறும் 38.83 விழுக்காடு பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளது அதிர்ச்சி தருகிறது. நீட் தேர்வு தர வரிசையில் முதல் 25 பேரில் ஒரு மாணவர்கூட தமிழகத்தைச் சேர்ந்தவர் இல்லை என்பது வேதனை அளிக்கிறது.

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு ‘நீட்’ தேர்வு நடத்தப்பட்டதால், தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநில அரசின் பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு நீட் தேர்வு கடினமாக இருந்தது. கடந்த கல்வி ஆண்டில், பனிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதிய 11 லட்சம் பேரில், 88 ஆயிரத்த்து 881 பேர் மட்டுமே நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். அதில் தேர்வு எழுதிய 83,359 பேரில் வெறும் 32,368 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது ஏமாற்றம் அளிக்கிறது.

மத்தியப் பாடத்திட்டத்தின் கீழ் தொடர்பு இல்லாத கேள்வித்தாளை தமிழக மாணவர்கள் எதிர்கொள்ள முடியாமல் திணறிவிட்டனர். பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் 1100 மதிப்பெண் பெற்ற மாணவர்கள்கூட நீட் தேர்வில் 110 மதிப்பெண்களைத் தொட முடியவில்லை. தமிழக மாணவர்களின் மருத்துக் கல்வி கனவுகளை நீட் தேர்வு முடிவுகள் தகர்த்துவிட்டன. மருத்துவப் படிப்புக்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்துவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்காமல் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்துவிட்டது.

தற்போது தமிழக அரசு, நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களில் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 விழுக்காடு ஒதுக்கீடு செய்யப்படும் என்று அரசாணை வெளியிட்டு இருப்பது வரவேற்கத்தக்கது ஆகும். மருத்துவ மாணவர்கள் சேர்க்கையால் மேலும் சட்டச் சிக்கல் எழாமல், தமிழ்நாட்டில் கிராமப்புற ஏழை, பிற்படுத்தப்பட்ட, தலித் மாணவர்கள், மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் பாதிக்கப்படாதவாறு தமிழக அரசு விழிப்புடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு விலக்கு அளிக்கக் கோரும் சட்ட முன்வடிவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற தமிழக அரசு உடனடியாக முயற்சிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது 24-06-2017 அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment