Saturday, January 20, 2018

ஜனவரி 31 மக்கள் விழிப்புணர்வுப் பிரச்சாரம் நியூட்ரினோ எதிர்ப்பு இயக்கம் தீர்மானம்!

ஜனவரி 31 மக்கள் விழிப்புணர்வுப் பிரச்சாரம் நியூட்ரினோ எதிர்ப்பு இயக்கம் தீர்மானம்!

நியூட்ரினோ எதிர்ப்பு இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம், இன்று (20.1.2018) காலை 11 மணி அளவில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகமான தாயகத்தில், வைகோ தலைமையில் கூடியது. செயலாளர் லெனின் இராஜப்பா, தற்சார்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கி.வே.பொன்னையன், மே 17 இயக்கத்தின் சார்பில் திருமுருகன் காந்தி, பூவுலகு நண்பர்கள் அமைப்பின் சார்பில் வெற்றிச்செல்வன், மதிமுக தேனி மாவட்டச் செயலாளர் சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

தேனி மாவட்டம் தேவாரம் அருகில் உள்ள பொட்டிப்புரத்தில் அமைய இருந்த நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து, அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் பெரிய போராட்டங்களை நடத்தி வந்தனர். நியூட்ரினோ எதிர்ப்பு இயக்கத்தின் சார்பிலும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. சுற்றுச் சூழல் போராளி மேதா பட்கர், திட்டத்தின் பாதிப்புகளை விளக்கி பிரச்சாரப் பயணம் மேற்கொண்டார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்து, நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக இடைக்காலத் தடை பெற்றுள்ளார்.

தமிழகம் போராடிப் பெற்ற முல்லைப் பெரியாறு அணை உள்ளிட்ட 12 நீர் நிலைகளுக்கு அருகே இந்தத் திட்டத்தை அமைக்க முயற்சிக்கின்றார்கள். மேற்குத் தொடர்ச்சி மலைகளை, உலகப் பாரம்பரியச் சின்னங்களுள் ஒன்றாக ‘யுனெஸ்கோ’ நிறுவனம் அறிவித்து இருக்கின்றது. மாதவ் கhட்கில், கஸ்தூரி ரங்கன் குழுவினர், உத்தமபாளையம் வட்டத்தை, ‘பாதுகாக்கப்பட்ட பல்லுயிர் மண்டலம்’ என அறிவித்துள்ளது. அருகில், மதிகெட்டான் சோலை தேசியப் பூங்கா இருப்பதல், தேசிய வனவிலங்கு வாரியத்திடம் ஒப்புதல் பெற வேண்டும்.

இவ்வளவு சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில், பல்வேறு ஆய்வுகளை திட்ட முன்னெடுப்பாளர்கள் செய்து இருக்க வேண்டும்.

ஆனால், ஒரு சாதாரணக் கட்டடம் கட்டுவதற்கான அனுமதி போல, சுற்றுச்சூழல் அறிக்கைகள் எதுவும் இன்றி, அந்தப் பகுதி மக்களின் கருத்தைக் கேட்காமல், இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி இருக்கின்றனர்.

இதை எதிர்த்து, ‘பூவுலகு நண்பர்கள்’ அமைப்பின் சார்பில் தொடுத்த வழக்கில், அந்த அனுமதியை ரத்து செய்து, 2017 மார்ச் மாதம் 20 ஆம் தேதி தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் தென்னக அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது.

இந்த நிலையில், கடந்த மாதம் நடைபெற்ற அணுவிசைத் துறையின் ஆய்வுக்கூட்டத்தில், ‘நியூட்ரினோ திட்டத்தை நிறைவேற்றுவதற்காக, இந்திய அரசின் தலைமைச் செயலர் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்’ என, பிரதமர் கேட்டுக்கொண்டதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்திய அரசியல் அமைப்பு, மாநிலங்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளின்படி, ஒரு மாநிலத்தில் எத்தகைய திட்டங்களை அனுமதிக்கலாம் என முடிவு எடுப்பது, மாநில அரசின் உரிமை ஆகும். இதைக் கருத்தில் கொள்ளாமல், மத்திய அரசுத் துறைச் செயலாளர்களின் கூட்டம் நடைபெற்று, அவர்களாகவே முடிவு எடுத்துக் கொண்டு, தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றார்கள்.

தற்போது, நியூட்ரினோ திட்டத்தை, சிறப்புத் திட்டமாக (one of) பிரிவு, ‘B’ திட்டமாக அறிவித்து, எல்லாத் தடைகளையும் நீக்கி, சுற்றுச்சூழல் அனுமதி அளிக்க, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆயத்தமாக இருப்பதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.

இவ்வாறு செய்வது, சட்டத்திற்குப் புறம்பான செயல் ஆகும். சட்டத்தை மதித்துக் கடைப்பிடிக்க வேண்டிய மத்திய அரசே, சட்டத்தைக் காலில் போட்டு மிதிக்க முயற்சிக்கின்றது.

மக்களின் உணர்வுகளை மதித்து மத்திய அரசு நியூட்ரினோ திட்டத்தைக் கைவிட வலிறுயுத்தி, ஜனவரி 31 ஆம் நாள் புதன்கிழமை தேனி மாவட்டத்தில் மக்கள் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை மேற்கொள்வதென இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்படுகின்றது.

(வைகோ)
தலைவர்

(க.கா.இரா.லெனின் இராஜப்பா)
செயலாளர்

(கி.வே.பொன்னையன்)
தற்சார்பு விவசாயிகள் சங்கம்
(திருமுருகன் காந்தி)
மே 17 இயக்கம்

(வெற்றிச்செல்வன்)
பூவுலகின் நண்பர்கள்

(எஸ்.சந்திரன்)
மாவட்ட செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
தேனி மாவட்டம்

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment