Wednesday, March 18, 2020

தமிழ்நாட்டில் புதிய ரயில்வே தடங்கள் அமைக்கும் பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? வைகோ, சண்முகம் ஆகியோரின் கேள்விகளுக்கு, அமைச்சர் பியுஸ் கோயல் விளக்கம்!

கீழ்காணும் கேள்விகளுக்கு, ரயில்வே அமைச்சர் விளக்கம் தருவாரா?
(அ) இந்தியா முழுமையும் புதிய தொடரித் தடங்கள் அமைப்பதற்கான பல திட்டங்கள், குறிப்பாகத் தமிழ்நாட்டில், கடந்த ஐந்து ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளனவா?
(ஆ) அவ்வாறு இருப்பின், திட்டவாரியான விவரங்களைத் தருக.
(இ) மேற்கண்ட திட்டங்களை நிறைவேற்றப் போதிய நிதி ஒதுக்கப்படுமா? எப்போது நிறைவு பெறும்?
ரயில்வே அமைச்சர் பியுஸ் கோயல் விளக்கம்
கேள்வி இ குறித்த விளக்க அறிக்கை, இந்த அவையின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
அ, ஆ ஆகிய கேள்விகளுக்கு விளக்கம்:
தற்போது, இந்தியா முழுமையும் 49,069 கிலோமீட்டர் தொலைவிற்கு புதிய தடங்கள் அமைக்கின்ற 498 திட்டங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அவை, திட்டம் வகுத்தல், நிதி ஒதுக்குதல், நிறைவேற்றுதல் எனப் பல்வேறு கட்டங்களில் உள்ளன. அவற்றுள், 8979 கிலோ மீட்டர் தொலைவிற்கான பணிகள், 2019 மார்ச் மாதம் நிறைவு பெற்று விட்டன.
ரயில்வே திட்டங்கள், மாநில வாரியாக அல்லாமல், கோட்ட வாரியாக நிறைவேற்றப்படுகின்றன. மேற்கண்ட 498 திட்டங்களுள் 22 திட்டங்கள், 2519 கிலோ மீட்டர் தொலைவிற்கு, ரூபாய் 21 ஆயிரத்து 579 கோடி செலவில் நிறைவேற்றப்படுகின்றன. 730 கிலோ மீட்டர் தொலைவிற்கான பணிகள் நிறைவு அடைந்துள்ளன. மற்றவை, பெரும்பகுதி அல்லது ஒரு பகுதி நிறைவேற்றப்பட்டுள்ளன.
மேற்கண்ட திட்டப் பணிகள் குறித்த முழுவிவரங்களும், இந்திய ரயில்வேயின் கீழ்காணும் இணையதளத்தில் விரிவாகத் தரப்பட்டுள்ளன.
(www.indianrailways.gov.in>Ministry of Railways>Railway Board>About Indian Railwas>RailwayBorad Directorates>Finance(Budget).
கேள்வி இ க்கான விளக்கம்:
புதிய தடங்கள் அமைத்தல், இரட்டைத் தடங்கள் மற்றும் அகன்ற வழிப் பாதையாக ஆக்குதல் ஆகிய திட்டங்களுக்கு, 2009-14 காலகட்டத்தில், ஓராண்டுக்கு ரூ.11,527 கோடி ஒதுக்கப்பட்டது. 2014-19 காலகட்டத்தில், ஓராண்டுக்கு 26,026 கோடி ஒதுக்கப்பட்டு இருக்கின்றது. இது, 126 விழுக்காடு உயர்வு ஆகும்.
மேற்கண்ட திட்டங்களுக்காக, 2019-20 ஆண்டுகளில் ரூ 38,803 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதான், இதுவரையிலும் ஆகக்கூடுதலான ஒதுக்கீடு ஆகும்.
தமிழ்நாட்டுத் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி விவரம்:
உள்கட்டமைப்புப் பணிகள், பாதுகாப்பு வசதிகளுக்காக, 2014-19 காலகட்டத்தில், ஆண்டுதோறும் சராசரியாக ரூ. 1979 கோடி ஒதுக்கப்பட்டது.
2019-20 ஆம் ஆண்டுக்கு, ரூ 2410 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. செலவினங்கள், ரூ 2812 கோடியாக இருக்கும்.
ரயில்வே திட்டப் பணிகளை நிறைவேற்றுவதற்குப் பல்வேறு காரணிகள் உள்ளன. நிலம் கையகப்படுத்துதல், காடுகள் பாதுகாப்புத்துறையிடம் இருந்து தடை இன்மைச் சான்று பெறுதல், புதிய வழித்தடங்களில் நிலத்திற்கு உள்ளேயும் வெளியேயும், ஏற்கனவே உள்ள வசதிகளை இடம் மாற்றுதல், சட்டப் பிரச்சினைகள் தொடர்பாக பல்வேறு துறைகளிடம் இசைவு பெறுதல், நிலச்சரிவு, பெருமழை, வெள்ளம், தொழிலாளர்கள் வேலை நிறுத்தம், நீதிமன்றங்களின் தடை ஆணைகள், ஒப்பந்ததாரர்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகள், பருவநிலை மாற்றங்களால் பணிப் பாதிப்பு போன்ற காரணிகளால், பணிகள் தடைபடுகின்றன.
எனவே, திட்டங்களை நிறைவேற்றி முடிப்பதற்கு, கால வரையறை எதுவும் தீர்மானிக்க இயலாது என தெரிவித்துள்ளதாக மதிமுக தலைமை நிலையம் தாயகம் 18-03-2020 வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment