Friday, March 20, 2020

கொரோனா: மருத்துவக் கருவிகளுக்கான முன்னேற்பாடுகள் செய்க! வைகோ கோரிக்கை!

மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அவர்களுக்கு இன்று அளித்து உள்ள கோரிக்கை விண்ணப்பம்:-
“கொவிட் 19 நோய்த்தொற்று பரவியதால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள இத்தாலி, ஈரான், ஸ்பெயின் ஆகிய நாடுகளில், உயிர் காக்கும் காற்றோட்டக் கருவி (வென்டிலேட்டர்) மற்றும் அடிப்படைத் தேவையான மருத்துவக் கருவிகளுக்குக் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
அதேபோலப் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா, பிரித்தானிய முடியரசு ஒன்றியம் ஆகிய நாடுகள், மருத்துவக் கருவிகளை ஆக்குகின்ற, மருத்துவ வசதிகளை வழங்குகின்ற நிறுவனங்களுடன் பேசி, தங்களுக்கு வேண்டிய கருவிகளை உடனே பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.
எனவே, நமது நாட்டில், இலட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டால், அத்தகைய சூழ்நிலையை எதிர்கொள்ள, மக்களுக்கு உரிய மருத்துவம் கிடைத்திட, போதுமான கருவிகள் இருக்கின்றனவா என்பது குறித்து, அரசு உடனே ஆய்வு செய்ய வேண்டும்.
குறுகிய காலத்திற்குள், மருத்துவக் கருவிகளை, எங்கிருந்து பெற முடியும் என்பதற்கான வாய்ப்புகளையும் உற்று நோக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.”
வைகோ அவர்கள் இவ்வாறு அந்த விண்ணப்பத்தில் தெரிவித்து இருக்கிறார் என மதிமுக தலைமை நிலையம் 20-03-2020 வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment