Friday, March 13, 2020

உரங்களுக்கான அரசின் மானியக் கொள்கை என்ன? வைகோ கேள்வி, அமைச்சர் விளக்கம் கீழ்காணும் கேள்விகளுக்கு, உரத்துறை அமைச்சர் விளக்கம் தருவாரா?

கேள்வி எண்: 1804
(அ) விவசாயிகளுக்குத் தேவையான உரங்கள், மருந்துகள், தேவையான நேரங்களில், போதுமான அளவு கிடைக்க வழி செய்யப்பட்டு இருக்கின்றதா? மானியம் வழங்கப்படுகின்றதா?
(ஆ) அவ்வாறு இருப்பின், அதுகுறித்த தகவல்கள்;
(இ) கடந்த 6 மாதங்களில், உரத்தட்டுப்பாடு குறித்து, ஏதேனும் குறைகள் தெரிவிக்கப்பட்டு உள்ளனவா? அவ்வாறு இருப்பின், அதுகுறித்த தகவல்கள்:
(ஈ) ஊட்டச்சத்து உரங்களுக்கு மானியம் வழங்குகின்ற கொள்கையின்படி , (Nutrient Based Subsidy Policy) பாஸ்பேட், பொட்டாஷ், யூரியா போன்ற உரங்களுக்கு, எவ்வளவு மானியம் வழங்கப்பட்டு இருக்கின்றது?
(உ) ஏழை உழவர்கள் மற்றும் விளிம்பு நிலை விவசாயிகளுக்கு (Marginal farmers), மானிய விலை உரங்கள், போதிய அளவில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டு இருக்கின்றதா?
அமைச்சர் சதானந்த கவுடா அளித்துள்ள விளக்கம்
அ, ஆ மற்றும் உ ஆகிய கேள்விகளுக்கு விளக்கம்:
அரசு வகுத்துள்ள கட்டுப்பாட்டின்படி, சேர்ம உரங்கள் (யூரியா), 45 கிலோ எடையுள்ள ஒரு மூடை, 242 ரூபாய்க்குத் விற்கப்படுகின்றது. வரிகள், வேம்புப்பூச்சுக்கான (Neem coating) செலவுகள் தனி. இவற்றை, உழவர்களின் எல்லை வரை கொண்டு சேர்ப்பதற்கான செலவுக்கும், உர நிறுவனங்களின் நிகர சந்தை மதிப்பிற்கும் ஆன இடைவெளி, உர நிறுவனங்களுக்கும், இறக்குமதி செய்வோருக்கும் மானியமாக வழங்கப்படுகின்றது.
அதன்படி, அனைத்து விவசாயிகளுக்கும், மானிய விலையில் உரங்கள் கிடைக்கின்றன.
ஊட்டச்சத்து இடுபொருள்களுக்கு மானியம் வழங்குகின்ற கொள்கையின்படி, 1.4.2010 முதல், பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ், உரங்களுக்கும் மானியம் வழங்கப்படுகின்றது.
இக்கொள்கையின்படி, ஒரு குறிப்பிட்ட அளவு மானியம், ஆண்டுதோறும் தீர்மானிக்கின்றபடி, பாஸ்பேட், பொட்டாஷ் உரங்களின் இடுபொருள்களுக்கு ஏற்றவாறு வழங்கப்படுகின்றது.
உர நிறுவனங்கள், சந்தை நிலவரங்களுக்கு ஏற்ற வகையில் விற்பதை, அரசு கண்காணிக்கின்றது. அந்த உரங்களை வாங்குகின்ற ஏழை உழவர்களும், விளிம்புநிலை விவசாயிகளும், மானியத் திட்டத்தின்கீழ் பயன்பெறுகின்றனர்.
கட்டாயத் தேவைப் பொருட்கள் சட்டம் 1955 (Essential Commodities Act 1955), உரங்கள் கட்டுப்பாட்டு ஆணை 1985 (Notified Fertilizer Control Order), உரங்கள் நகர்வு கட்டுப்பாடு ஆணை (Fertilizer Movement Control Order 1973) அகியவற்றின்கீழ், உரங்கள் பட்டியல் இடப்பட்டுள்ளன.
உரங்கள் உரிய விலையில் விற்கப்படுவதைக் கண்காணிக்கவும், அரசு ஆணைகளை மீறுகின்றவர்களைத் தண்டிக்கவும், மேற்கண்ட சட்டங்கள் வழியாக, மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு இருக்கின்றது.
கேள்வி இ க்கான விளக்கம்: இல்லை
கேள்வி ஈ க்கான விளக்கம்: கடந்த மூன்று ஆண்டுகளில், பாஸ்பேட்,பொட்டாஷ் உரங்களுக்கு வழங்கப்பட்ட மானியம்:
யூரியா பாஸ்பேட் பொட்டாஷ்
1 2016-17 51,256.59 கோடி 18,842.87 கோடி
2. 2017-18 46953.70 கோடி 22,237.00 கோடி
3. 2018-19 49344.86 கோடி 24,080.35 கோடி

இவ்வாறு அமைச்சர் பதில் அளித்துள்ளார் என மதிமுக தலைமை நிலையம் தாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 13-03-2020 தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment