Friday, March 20, 2020

எரிகாற்றுகளின் பயன்பாடு, குழாய்கள் வழியாக நகர்ப்புறங்களில் வீடுகளுக்கு வழங்குதல் குறித்து வைகோ கேள்விகள், அமைச்சர் விளக்கம்!

கேள்வி எண் 2838
கீழ்காணும் கேள்விகளுக்கு, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிகாற்றுத் துறை அமைச்சர் விளக்கம் அளிப்பாரா?
(அ) இயற்கை எரிகாற்றுகளின் பயன்பாட்டை உயர்த்துவதற்கு, அரசு திட்டம் வகுத்து இருக்கின்றதா?
(ஆ) அவ்வாறு இருப்பின், அதுகுறித்த தகவல்கள்.
(இ) இந்தியாவில் எத்தனை நகரங்களில், குழாய்கள் வழியாக வீடுகளுக்குத் தரப்படுகின்றது?
அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம்
அ, ஆ ஆகிய கேள்விகளுக்கு விளக்கம்!
இயற்கைச் சூழலைக் கெடுக்காத படிம எரிகாற்றுகள், நாட்டின் எரிபொருள் தேவையில் பெரும்பங்கு வகிக்கின்றன. அவற்றின் பயன்பாட்டைப் பெருக்குவதற்காக, அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கின்றது. உள்நாட்டில் கூடுதலாகப் பெறுவது, எரிகாற்றுத் தொகுப்புகளை உருவாக்குவது, அயல்நாடுகளில் இருந்து நீர்ம எரிகாற்றுகளை இறக்கும் தளங்களில் இருந்தே, குழாய்கள் வழியாக வீடுகளுக்குக் கொண்டு செல்வதற்கான கட்டமைப்புகளை ஆக்குவது போன்ற பணிகள் நடைபெறுகின்றன. இந்தப் பணிகளுக்காக, அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூபாய் இரண்டு இலட்சம் கோடி செலவிடப்படுவதற்கான திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.
இ, ஈ ஆகிய கேள்விகளுக்கு விளக்கம்:
2006 ஆம் ஆண்டு, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிகாற்று ஒழுங்குமுறைச்சட்டத்தின்படி, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிகாற்று ஒழுங்குமுறை ஆணையம் (Petroleum, Natural Gas Regulatory Borad-NPNGFB), நகரங்களில் பொது வழங்கலுக்கான கட்டமைப்புகளை ஆக்குவதற்கும் (City Gas Distribution -CGS), நாடு முழுமையும் எரிகாற்றுக் குழாய்களை ஒருங்கிணைப்பதற்குமான பணிகளைச் செய்து வருகின்றது. இயற்கை எரிகாற்று கிடைக்கின்ற புதிய இடங்களைக் கண்டு அறிந்து, அவற்றை வெளிக்கொணர்வதற்கான பணிகளை மேற்கொள்கின்றது.
இதுவரையிலும், 27 மாநிலங்கள், மற்றும் நடுவண் அரசின் நேரடி ஆட்சிப்பகுதிகளில் 230 நிலப்பகுதிகளில் உள்ள 400 மாவட்டங்களுக்கான, நகரங்களுக்கான வழங்கலுக்காக, 10 முறை ஏலச்சுற்றுகள் நடத்தப்பட்டு இருக்கின்றன என்ற தகவலை மதிமுக தலமை நிலையம் தாயகம் இன்று 20-03-2020 தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment