Sunday, March 22, 2020

நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? வைகோ கேள்விகள், அமைச்சர் விளக்கம்!

கேள்வி எண் 2503

கீழ்காணும் கேள்விகளுக்கு, நீர்வளத்துறை (Jal shakti) அமைச்சசர் விளக்கம் தருவாரா?

(அ) நிலத்தடி நீர்வளத்தை உயர்த்துவதற்காக வரையப்பட்ட, அடல் நிலத்தடி நீர்வளத்  (Atal Bhujal Yojana-ABY) திட்டத்தின் முதன்மைக் கூறுகள் என்ன?

(ஆ) இந்தத் திட்டத்தின்கீழ் மாநிலங்களில் செலவிடப்பட்ட தொகை எவ்வளவு?

(இ) இந்தத் திட்டத்தின் கீழ், கிராமப்புறங்களில் விவசாயம், பாசனம் மற்றும் வீடுகளின் தேவைகளுக்காக, கிராமங்கள் அளவிலான, பெண்களும் இடம் பெறுகின்ற குழுக்கள் அமைத்தல், நீர் செயல் திட்டம் Water Action Plan) வகுக்கப்படுமா?

(ஈ) புதிய தொழில் நுட்பங்கள், மாவட்டங்களில் ஆகக்கூடுதலான அளவில் நீர்ப் பயன்பாட்டு முறைகளை வகுப்பதற்கான திட்டங்கள் குறித்த விவரங்களைத் தருக.

நீர்வளத்துறை இணை அமைச்சர் ரத்தன் லால் கட்டாரியா அளித்துள்ள விளக்கம்

(அ) அடல் நிலத்தடி நீர்வளத் திட்டத்தில், சமூகப் பங்களிப்புடன் கூடிய, நிலையான நீர் மேலாண்மை நடுவண் திட்டங்களுக்கு, ரூ 6000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 50 க்கு 50 என்ற அளவில், இந்திய அரசும், உலக வங்கியும் பங்கு அளிக்கின்றன.

இந்தத் திட்டத்தில் இரண்டு முதன்மைக் கூறுகள் உள்ளன.

1.இந்தத் திட்டத்தில் பங்கேற்கின்ற மாநிலங்களில் உள்ள நீர்வள நிறுவனங்களை வலிமைப்படுத்துதல், கொள் அளவுத் திறன் உயர்த்துதல், நிலத்தடி நீர்வளத்தை சிறந்த முறையில் கையாள்வதற்கான திட்டங்கள்.

2. நிலத்தடி நீர்வளத்தைச் சிறந்த முறையில் கையாள்வதற்காக, நீண்ட காலத் திட்டங்களை வகுக்கின்ற அரசுகளுக்கு ஊக்கத் தொகை வழங்குதல்.

கேள்வி ஆ வுக்கான விளக்கம்:

வருகின்ற 2020 ஏப்ரல் முதல் நாளில் இருந்துதான் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வருகின்றது. எனவே, கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட தொகை குறித்த கேள்வி எழவில்லை.

(இ) அடல் நிலத்தடி நீர்வளத் திட்டத்தின் கீழ், சமூகப் பங்களிப்பை ஊக்குவிக்கின்ற, பெண்களும் இடம் பெறுகின்ற நீர் பயனாளிகள் சங்கம் (Water User Association) அமைத்து, நிலத்தடி நீர்வளத்தைக் கண்காணிக்கவும், நீர் இருப்பு குறித்த தரவுகளைப் பரப்பவும், நீர்ப் பங்கீட்டுத் திட்டங்களை வகுக்கவும், கிராம ஊராட்சிகள் அளவிலான நீர் பயன்பாட்டுத் திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தவும், நீர் பாதுகாப்புத் திட்டங்களை வரையவும், பன்னாட்டு மின்தொழில்நுட்ப ஆணையம் (Inetrnational Electrotechnical Commission-IEC) வகுத்துள்ள நிலத்தடி நீர்வள மேலாண்மைச் செயல்பாடுகளின் அடிப்படையில் இயங்கவும் வழி வகுக்கின்றது.

(ஈ) அடல் திட்டத்தின் கீழ், நிலத்தடி நீர்வளம் குறித்த தகவல்களைக் கணினிமயம் ஆக்குதல், நிலத்தடி நீர்வளம் குறித்த தரவுகளைத் தொடர்ந்து பராமரித்தல், களப்பணிகள் மற்றும் நிதி முன்னேற்றம் குறித்த தகவல்களுடன் விரிவான தகவல் மேலாண்மை அமைப்பு (Management Information System-MIS) உருவாக்குதல் ஆகிய பணிகளும் மேற்கொள்ளப்படும் என மதிமுக தலைமை நிலையம் தாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 21.03.2020 தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment