Sunday, March 15, 2020

அயல்நாடுகளில் பணிபுரிகின்ற இந்தியத் தொழிலாளர்களைப் பாதுகாக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? வைகோ கேள்விகளுக்கு, அயல்உறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அளித்துள்ள விரிவான விளக்கம்!

கேள்வி எண் 206
கீழ்காணும் கேள்விகளுக்கு, அயல்உறவுத்துறை அமைச்சர் விளக்கம் தருவாரா?
(அ) அயல்நாடுகளில், குறிப்பாக வளைகுடா நாடுகளில் பணிபுரிகின்ற இந்தியத் தொழிலாளர்கள், பணி இடங்களில் துன்புறுத்தப்படுகின்றார்களா? தண்டிக்கப் படுகின்றார்களா?
(ஆ) அவ்வாறு இருந்தால், கடந்த மூன்று ஆண்டுகளில் இதுபோன்ற நிகழ்வுகள் குறித்து, அரசுக்குக் கிடைத்த தகவல்கள் என்ன?
(இ) அந்த நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள், இந்தியத் தொழிலாளர்களைப் பாதுகாப்பதில் தவறி இருப்பதற்குக் காரணம் என்ன?
(ஈ) வளைகுடா நாடுகளில் பணிபுரிகின்ற இந்தியத் தொழிலாளர்களை, சட்டத்திற்குப் புறம்பான வழிகளில் தொழிலாளர்களைத் துன்புறுத்துகின்றவர்களிடம் இருந்து பாதுகாக்க, அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன?
அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்.
மேற்கண்ட நான்கு கேள்விகளுக்கும் பொதுவான விளக்கமாக, ஒரு அட்டணை இணைப்பு தரப்பட்டுள்ளது.
1. பணி இடங்களில் துன்புறுத்தல்கள், சட்டமீறல்கள் குறித்து,
அயல்நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள், துணைத்தூதரகங்கள்,
இந்தியத் தொழிலாளர்களிடம் இருந்து தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளைப் பெற்று வருகின்றன.
மதிப்புக்குறைவாக நடத்துதல், பணி ஒப்பந்த மீறல்கள், பொருந்தாத பணிகளைச் செய்யும்படிக் கட்டாயப்படுத்துதல், பேசியபடி ஊதியம் தரமால் குறைத்துக் கொடுத்தல், தொழிலாளர்களுக்குப் போதிய பாதுகாப்பு வழங்காதது, மருத்துவ வசதிகள் இன்மை, பணி இடங்களில் இறந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு, உரிய இழப்பு ஈடு தராமல் இருப்பது போன்ற குறைபாடுகள் நிலவுகின்றன.
2. கடந்த மூன்று ஆண்டுகளில், வளைகுடா நாடுகளில் பணி ஆற்றுகின்ற இந்தியத் தொழிலாளர்களிடம் இருந்து பெறப்பட்ட குற்றச்சாட்டுகள்.
2017 2018 2019
1. பஹ்ரைன் 792 734 836
2. கட்டார் 3328 3244 2896
3. சௌதி அரேபியா 5076 8271 7973
4. ஓமன் 4144 3594 2984
5. குவைத் 4481 3287 5286
6. அமீரகம் 3756 2153 2888

3. இந்தியத் தூதரகங்கள், துணைத் தூதரகங்களில் ஒரு குற்றசாட்டு பதிவு ஆனவுடன், அவற்றைக் களைவதற்கான நடவடிக்கைகள் உடனே தொடங்கப்படுகின்றன. தேவைப்படுகின்ற இடங்களில், சட்டப் பிரச்சினைகளை எதிர்கொள்ள, அந்தந்த நாட்டு நீதிமன்றங்களையும் தூதரகம் நாடுகின்றது.
4. வளைகுடா நாடுகளில் பணிபுரிகின்ற தொழிலாளர்களை, அயல்நாட்டு நிறுவன உரிமையாளர்களிடம் இருந்து பாதுகாக்க, உழைப்புச் சுரண்டலைத் தடுக்க, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. அது தொடர்பான விழிப்பு உணர்வை ஏற்படுத்துதல், குறைகளைத் தீர்க்க நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
(அ) நாடு கடத்தப்படுகின்ற வேளைகளில், அந்தத் தொழிலாளர்கள் தங்களுக்கான உரிமைகளைப் பெறுவதற்கு, புறப்படுவதற்கு முன் நோக்கு நிலை பயிற்சி (Pre Departure Orientation Trainin PDOT) பயிற்சி அளிக்கப்படுகின்றது. ஊடகங்களின் வழியாக உள்ளூர் மொழிகளில் விழிப்பு உணர்வுப் பரப்பு உரைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
(ஆ) மேடட் (Mobile Application app for Desired Assistance During Travel- MADAD) என்ற அலைபேசி செயலி வழியாக, தொழிலாளர்கள் தங்கள் குறைகளைப் பதிவு செய்யலாம். அது தொடர்பாக, தூதரகம் மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளையும் அறிந்து கொள்ளலாம்.
(இ) தொழிலாளர்களின் உறவினர்களும் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யலாம். அதற்காக, Pravasi Bharatiya Sahayata Kendra -PBSK என்ற இணையப் பக்கம் உள்ளது. இதற்காக வகுக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி, இந்தக் குறைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைளை குடியேற்றச் சட்டப் பாதுகாப்பு அதிகாரிகள் (Jurisdictional Protectors of Emigrants-PoEs) மேற்கொள்கின்றனர்.
(ஈ) புதுதில்லியில் உள்ள மேற்கண்ட மையத்தில், 24 மணி நேரமும் இயங்குகின்ற, இந்திய மொழிகளில் விளக்கம் தருகின்றார்கள். வழிகாட்டுதல்களும், அயல்நாடுகளில் பணிபுரிகின்ற இந்தியத் தொழிலார்கள் தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளும் கையாளப்படுகின்றன. இத்தகைய மையங்கள், துபை, ஷார்ஜா, ரியாத், ஜெட்டா, கோலா லம்பூர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
அதேபோல, Kshetriya Pravasi Sahayata Kendra KPSK மையங்கள், கொச்சி, ஹைதராபாத், சென்னை, லக்னோ, புது தில்லியில் அமைக்கப்பட்டுள்ளன.
(உ) இந்தியத் தூதரகங்கள் தொழிலாளர்கள் பங்கேற்கின்ற, திறந்தவெளிக் கூட்டங்களை நடத்துகின்றன. அங்கே, தொழிலாளர்கள் தங்களுடைய குறைகள் குறித்துப் பேசலாம், கருத்துகளைத் தெரிவிக்கலாம். இந்தியத் தூதரகங்களில் 24 மணி நேரமும் இயங்குகின்ற இலவச அலைபேசி அழைப்பு வசதிகளும் உள்ளன.
(ஊ) மேற்கண்ட பணிகளுக்காக, இந்திய சமூக நல நிதி Indian Community Welfare Fund ஏற்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பினருக்கும் உதவுகின்ற வகையில், இந்த நிதிக்கான சட்டங்கள் திருத்தப்பட்டுள்ளன. மூன்று முதன்மையான குறிக்கோள்- இக்கட்டான நிலையில் உள்ள இந்தியர்களுக்கு உதவுதல், சமூகநலத் திட்டங்களைச் செயல்படுத்துதல், தூதரகப் பணிகளை விரிவுபடுத்துதல் ஆகியவற்றிற்காக, மேற்கண்ட நிதி செலவிடப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட பெண்கள், அவர்களுக்கான குறைகள் தீர்க்கப்படுகின்ற வரையிலும், அவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள மையங்களில் தங்கிக் கொள்ளலாம்.
(எ) வளைகுடா ஒருங்கிணைப்புக் குழு (Gulf Co-operation Council Countries) உள்ள ஆறு நாடுகளுடன், தொழிலாளர்கள் மற்றும் மனித ஆற்றல் ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு மற்றும் உடன்படிக்கைகள் (Labour and Manpower Cooperation MoUs/Agreements) செய்துகொள்ளப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தங்களின் வழியாக, தொழிலாளர்களின் குறைகளைப் பேசித் தீர்ப்பதற்கும், கூட்டுப் பணிக்குழு அமைத்து, குறிப்பிட்ட கால இடைவெளிகளில் கூடிப்பேசுவதற்குமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு, அமைச்சர் ஜெய்சங்கர் விரிவாக விளக்கம் அளித்து உள்ளார் என மதிமுக தலைமை நிலையம் தாயகம் 15-03-2020 வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment