Tuesday, October 13, 2015

மாநிலக் கல்லூரி மாணவர்கள் மீது காவல்துறை தடியடி! வைகோ கண்டனம்!

சென்னை மாநிலக் கல்லூரியில் மாணவர் பேரவைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று கல்லூரி மாணவர்கள் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர். மாநிலக் கல்லூரியில் 95 ஆண்டு காலமாக ஜனநாயக முறைப்படி மாணவர் பேரவைத் தேர்தல் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு தேர்தலின் போது மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டதைக் காரணம் காட்டி, இந்த ஆண்டு தேர்தலை நடத்துவது இல்லை என்று கல்லூரி நிர்வாகம் முடிவு செய்துவிட்டது. எனவே நேற்றுக் காலை மெரினா கடற்கரை கண்ணகி சிலை அருகே மாணவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி அமைதியான முறையில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் காவல்துறை பேச்சு வார்த்தை நடத்தாமல், திடீரென்று தடியடி நடத்தி விரட்டி உள்ளது. ஆகÞட் மாதத் தொடக்கத்தில் மதுக் கடையை அகற்றக்கோரி போராட்டத்தில் இறங்கிய பச்சைப்பன் கல்லூரி மாணவர்கள் மீது இரத்தம் சொட்டச் சொட்ட தடியடி நடத்திய காவல்துறை, மாநிலக் கல்லூரி மாணவர்கள் மீது தற்போது தாக்குதல் நடத்தியிருக்கிறது. ஜெயலலிதா அரசு தமிழக மாணவர்களை அச்சுறுத்தி வைப்பதற்காகவே இதுபோன்ற தாக்குதலை ஏவி வருகிறது. ஜெயலலிதா அரசின் இந்த அணுகுமுறைக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவிப்பதுடன், கைது செய்யப்பட்ட மாநிலக் கல்லூரி மாணவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என வைகோ தெரிவித்துள்ளார்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment