Saturday, January 2, 2016

மதுரை மாநாட்டை வெற்றிபெறச்செய்திட ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழுக்களைக் கூட்டிடுவீர்! மக்கள்நலக் கூட்டணிக் கட்சியினருக்கு தலைவர்கள் வேண்டுகோள்!

தமிழ்நாட்டு மக்கள் அதிமுக ஆட்சியை அகற்றவேண்டும் என முடிவெடுத்துவிட்டனர் என்பது தெளிவாகத் தெரியத் தொடங்கிவிட்டது. அதுபோலவே திமுகவை மீண்டும் ஆட்சி அமைக்க அனுமதிக்கக்கூடாது என்பதிலும் அவர்கள் உறுதியாக உள்ளனர்.

தமிழ்நாட்டில் தூய்மையான ஆட்சியைக் கொடுக்கும் தகுதி மக்கள்நலக் கூட்டணிக்குத்தான் உள்ளது என்பது தமிழக மக்களின் எண்ணமாக இருக்கிறது. வெள்ள நிவாரணப் பணிகளின்போது அதைப் பார்க்க முடிந்தது. ஊடகங்களும் மக்கள் மனநிலையை இப்போது உணர்ந்து கொண்டுவிட்டன.

இந்நிலையில் மதுரையில் சனவரி 26 ஆம் நாள் நடக்கவிருக்கும் மக்கள் நலக்கூட்டணியின் திறந்தவெளி மாநாடு எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப்பின் ஏற்படப்போகும் ஆட்சி மாற்றத்துக்கு முன்னறிவிப்பாகத் திகழ உள்ளது. அம்மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர் சீதாராம் யெச்சூரி அவர்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சுதாகர் ரெட்டி அவர்களும், அக்கட்சியின் தேசிய செயலாளர் தோழர் டி.ராஜா அவர்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் சகோதரர் தொல்.திருமாவளவன் அவர்களும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வைகோவும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் ஜி.இராமகிருஷ்ணன் அவர்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் இரா.முத்தரசன் அவர்களும், மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் முன்னணியினரும் உரையாற்ற இருக்கிறோம்.

தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் திருப்புமுனைகளைத் தந்த மதுரை மாநகரமே வியக்கும் வண்ணம் அம்மாநாட்டில் மக்கள் நலக் கூட்டணியின் தொண்டர்கள் லட்சக் கணக்கில் கலந்துகொள்ளவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். அதற்கான ஏற்பாடுகளைத் திட்டமிடுவதற்காக மக்கள் நலக் கூட்டணியின் நான்கு கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளிட்ட மாவட்ட செயற்குழுக்களைக் கூட்டி விவாதித்து விளம்பரம், பங்கேற்பதற்கான பயணம் முதலான பணிகளைத் திட்டமிட்டு செயலாற்றும் வித்த்தில். தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் சனவரி 7 ஆம் தேதியிலிருந்து 9 ஆம் தேதிக்குள் ஏதேனும் ஒரு நாளில் வசதிக்கேற்ப இந்தக் கூட்டத்தை நடத்திடவேண்டுமாய் மக்கள்நலக் கூட்டணி நிர்வாகிகளை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

வைகோ, ஜி.இராமகிருஷ்ணன், இரா.முத்தரசன், தொல்.திருமாவளவன்

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment