Friday, January 8, 2016

வைகோவின் கைகளை வெட்டுவேன் என திமிராகப் பேசிய திமுக பிரமுகர் கைது!

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடந்த திமுக கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் திருமங்கலம் நகராட்சித் தலைவர் ராஜேந்திரன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் கைகளை வெட்டுவேன் என்று திமிராகப் பேசி தற்போது கைதாகி சிறைக்குப் போயுள்ளார். திருமங்கலத்தில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஜனவரி 2ம் தேதி திமுக கூட்டம் நடந்தது. அதில் திருமங்கலம் நகராட்சி முன்னாள் தலைவர் ராஜேந்திரன் என்பவரும் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் மிகவும் ஆவேசமாக மட்டுமல்லாமல் முதல்வர் ஜெயலலிதா குறித்தும், வைகோ குறித்தும் ஆபாசமாகவும் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. குறிப்பாக வைகோ குறித்து அவர் கொலை வெறியுடன் பேசினார். வைகோ பற்றி ராஜேந்திரன் பேசுகையில் திமுகவை விமர்சித்து தன்னை உயர்த்தி கொள்ளும் தலைவராக வைகோ இருந்து வருகிறார். பணத்திற்காக விலைபோகக்கூடிய வைகோ திமுகவை விமர்ச்சிப்பதற்கு தகுதியற்றவர். தொடர்ந்து திமுகவை வைகோ விமர்சித்தால், அவரது சொந்த ஊரான கலிங்கபட்டிக்கு திருமங்கலம் வழியாக அவர் வரும்போது அவரது கைகளை வெட்டுவோம் என்று மிரட்டல் விடுத்ததால் திமுகவினரே கூட அதிர்ந்து போனார்கள். இந்த நிலையில் ராஜேந்திரனின் ஆபாச மற்றும் ஆவேசப் பேச்சு குறித்து அதிமுகவைச் சேர்ந்த சவுந்தர் என்பவர் போலீஸில் புகார் கொடுத்தார். இதையடுத்து தமிழக அரசு மீது வெறுப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் பேசுதல், அரசியல் தலைவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், பெண்களை அவதூறாக பேசுதல் உட்பட 7 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்தனர். ராஜேந்திரனின் பேச்சு அடங்கிய வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களையும் கோர்ட்டில் போலீஸார் தாக்கல் செய்தனர். இதையடுத்து ராஜேந்திரனை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment