Friday, January 1, 2016

பத்திரிகையாளர்களை புத்தாண்டு விருந்துடன் வாழ்த்தினார் வைகோ!

புத்தாண்டு தினமான 01.01.2016 வெள்ளிக்கிழமை காலை 11.30 மணிக்கு கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் பத்திரிகையாளர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சி சென்னை, எழும்பூர், ஹோட்டல் இம்பீரியல் வளாகத்தில் உள்ள சிராஜ் மினி ஹாலில் நடைபெற்றது.

பத்திரிகையாளர்கள் வந்ததும் அவர்களை வரவேற்று புத்தாண்டு வாழ்த்து கூறி அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் புத்தாண்டு கையேட்டை பரிசளித்தார் தமிழின முதல்வர் வைகோ அவர்கள்.

தொடர்ந்து நடத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேட்டியளித்த வைகோ அவர்கள், ஊழல், மது இன்றைய தமிழகத்தின் தலையாய பிரச்சினைகள். உச்சநீதி மன்றத்தில் மூன்று மாதங்களுக்குள் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு வர இருக்கிறது. ஊழல் வழக்கில் தலைக்கு மேல் கத்தியாய் அதிமுகவுக்கு தொங்கி கொண்டிருக்கிறது. தேர்தலுக்கு முன்பே தீர்ப்பு வரலாம். குன்ஹா தீர்ப்பு இறுதியாகலாம்.

உடன்பிறவா சகோதரி தொடர்ந்து சொத்துக்குவிப்பில் ஈடுபடுகிறார். ஓட்டுநர் நடத்துனர் தேர்விலும் ஊழல் நடக்கிறது. மது ஒழிப்பில் மதிமுக தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. ஒரு லட்சம் மாணவ மாணவியர்கள் மாரத்தானில் பங்கு கொண்டார்கள். எங்கள் கட்சியில் இருந்து ஆட்களை இழுக்கும் வேலையில் ஈடுபடும் அளவிற்கு திமுக பலகீனமாகி விட்டதா. ஆரம்பத்திலிருந்தே எங்களை அழிக்க திமுக முயன்று வருகிறது.

தமிழகத்தில் கிரானைட் ஊழல் இன்று பெரிதாக பேசப்பட்டு வருகிறது. அதுபற்றி 2009 களிலேயே நான் அறிக்கை விடுத்திருக்கிறேன். ஊழலற்ற கூட்டணி ஆட்சிதான் மக்கள் நலக் கூட்டணியின் நோக்கம்.

பத்திரிக்கையாளர்கள் எங்கள் கூட்டணியை அங்கீகரிக்கிறார்கள். எங்களிடம் பணம் இல்லை. ஆனால் நம்பகத்தன்மை எங்களிடம் இருக்கிறது. இதய சுத்தியோடு ஒன்றிணைந்திருக்கிறோம். வெற்றி பெறுவோம் என்று நம்புகிறோம். ஊழல் சுயநலம் குடும்ப ஆதிக்கம் எதேச்சகாரமில்லாத ஆட்சியை தருவோம்.

முல்லை பெரியார் பிரச்னையில் திமுக பச்சை துரோகம் செய்தது. ஆந்திராவில் 20தமிழர் படுகொலையில் அதிமுக துரோகம் செய்தது. மதிமுக என்பது தொண்டர்களால் உருவான கட்சி. வேர்கள் அவர்கள். அவர்கள்தான் கட்சி. கிளையை வெட்டினால் அது மீண்டும் துளிர்க்கும்.

மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் அனைவரும் சரியான புரிதலுடன் இருக்கிறோம். நம்பிக்கையுடன் மக்களை அணுகுவோம். பாஜக இந்துத்துவாவை தூக்கி பிடிக்கிறது. மதசார்பற்ற தன்மைக்கு எதிராக இருப்பதால்தான் பீகாரில் தோல்வியை சந்தித்தது. காவிரி ஆணையத்தை அமைக்காமல் இன்று வரை பச்சைத் துரோகம் செய்கிறது பாஜக. ஜனவரி 3ஆம் தேதி மதிமுக, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை ஆதரித்து தடையை நீக்க போராட்டம் நடத்துகிறது.

முதல் அமைச்சர் பெயரை அறிவிப்பது மரபும் அல்ல. எங்கள் விருப்பமும் அவசியமும் அல்ல. நாங்கள் இதில் உறுதியாக இருக்கிறோம், தேர்தலுக்கு பின்பே முடிவெடுப்போம். ஈழத்தமிழர் விசயத்தில் சர்வபரி தியாகத்திற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். திமுக அதில் மாபெரும் துரோகம் செய்தது. எனக்கு பின்பும் இந்த கட்சி இயங்கும். சகாயம் ஒரு நேர்மையான அதிகாரி. அவர் மேல் மரியாதை வைத்திருக்கிறேன். அவரை விமர்சனம் செய்து தேவை இல்லாமல் அவரை இக்கட்டுக்கு விடமாட்டேன் என பேசினார் வைகோ அவர்கள்.

பின்னர் பத்திரிகையாளர்கள் சந்திப்பு கூட்டம் முடிய, பத்திரிகையாளர்களை விருந்து படைத்து உபசரித்தார். இந்த விருந்தை கழக முன்னணி நிர்வாகிகள் பத்திரிகையாளர்களுக்கு பரிமாறினார்கள். பின்னர் பத்திரிக்கையாளர்களோடு ஓர் பத்திரிக்கையாளராய் உணவருந்தினார் தலைவர் வைகோ அவர்கள்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment