Friday, February 26, 2016

கலிங்கப்பட்டியில் இணையதள அணி கலந்துரையாடல், வைகோ முக்கிய தொடக்க உரை!

26-02-2016 அன்று கலிங்கபட்டியில், தலைவர் வைகோ அவர்கள், தனது இல்லத்தில், இணையதள அணி கலந்துரையாடலுக்கு முன்னதாக, இணையதள அணி தோழர்களோடு பேசினார். அவர் கூறியதாவது.

மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். இந்த வீடு 1923 என் பாட்டனார் அ.கோபால்சாமி, அவர் கட்டிய வீடு. அதில் எந்த மாற்றமும் செய்யவில்லை. நாங்கள் பாதுகாத்து வந்திருக்கிறோம். வீடு கட்டிய ஆறு மாதத்தில் 42 வயதில் இறந்து விட்டார். இந்த வீட்டையும் இரண்டு கோவில்களையும் கட்டினார். பெருமாள் கோவில். ஈஸ்வரன் கோவில். அந்த கோவில்களுக்கு இப்ப கூட சென்று வந்தேன். திரும்ப அந்த கோவில்களை கட்டினோம். இப்ப கூட அங்கே பிராமணர்கள் இருக்கிறார்கள். ஏன் சொல்கிறேன் என்றால். நான் பகுத்தறிவு இயக்கம்தான், மக்கள் வழிபடுவது, முஸ்லீம்கள் இருக்காங்க, அவங்க வழிபடுவது தர்கா மசூதி. கிறித்துவர்கள் இருக்காங்க அவங்க சர்ச். மற்ற எங்க ஊரில வடக்கத்தியம்மன் கோவில் இருக்கு. அதுக்கு இப்ப நாங்கதான் அன்னதானம் செய்து கொடுத்தோம். பிள்ளையார் கோவிலுக்கு கோபுரம் கட்ட ஊரில் எல்லாம் வசூல் செய்தார்கள். அதற்கு நாங்கள் 12 லட்சம் ரூபாய் கொடுத்தொம். அதனால இந்த ஊரில் எல்லா சாதி மக்களும். எல்லா சமூக மக்களும் இருக்காங்க. எல்லோரும் ஒற்றுமையாக இருக்காங்க. இந்த வீட்லதான் நான் பிறந்தேன். 1960 வரை இங்கு கரண்ட் கிடையாது. அரிக்கேன் லைட் வெளிச்சம்தான். நான் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் போது அரிக்கேன் லைட் வைச்சி விடியற்காலை 3 மணிக்கு எழுந்து படிப்பேன். எங்க அம்மா அந்த நேரத்திலும் எனக்கு டீ வைச்சு கொடுப்பாங்க. எங்க அப்பாகிட்டே சரியா 3 மணிக்கு எழுந்திருக்கணும்னு சொல்லிட்டு படுப்பேன். சரியா 3 மணிக்கு எழுப்புவாங்க. ஒரு அரை மணி நேரம் கூட தாமதமாக எழுப்பியது கிடையாது. கட்டுப்பாடான குடும்பம். வீட்டை விட்டு எங்கும் நான் போக முடியாது. பிள்ளைகளோடு விளையாட போக முடியாது. இங்க இருந்து ஸ்கூலுக்கு போனா சிறுக்கு சொம்பில வென்னீர் கொண்டுகிட்டு ஒரு ஆளு வரணும். அதுல தான் தண்ணி குடிக்கணும். கீழ வீட்டு பையன்னு யாரும் தண்ணி கூட கொடுக்க மாட்டங்க. கீழ வீட்டு முதலாளிண்ணு ஒரு பேரு. அப்படி ஒரு ஜெயிலுக்குள்ள இருந்த மாதிரியான கட்டுப்பாடு. எஸ்.எஸ்.எல்.சி வரை. இன்றைக்கு அதுக்கு நேர் மாறான வாழ்க்கை ஒரு 40-45 வருடங்களாக. 1960 களில் கரண்ட் வந்த பிறகு நான் படிக்கிற முறையை மாற்றினேன். 6, 6-30 க்கு சாப்பிட்டு விட்டு படுத்துவிடுவேன். 11 மணிக்கு எழுந்து விடியும் வரை படிப்பேன். இது காலேஜ் வரைக்கும் அப்படித்தான். விடிய விடிய படிப்பேன்.

காலேஜில் 7-30 க்கு மெஸ். சாப்பிட்டு வந்து படுத்துவிடுவேன். பிற்கு 11 மணிக்கு எழுந்து விடுவேன். சில பேர் பாயை போட்டு படுத்து இருபாங்க. என்னடா இவன் இப்பவே தூங்குறான்னு நினைப்பாங்க. அவங்க காலையில எழுந்திருக்கிறப்பேயும் தூங்கிகிட்டு இருப்பேன். ஏன்னா 5, 5.30 க்கு படுத்துருப்பேன் என்றார்.

பரீட்சைன்னு 7-30 மணிக்கு மேல படிக்க மாட்டேன். 10 மணிக்கு பரிட்சைன்னா அப்படியே மத்தவங்ககிட்டே எல்லாம் போய் என்னா படிச்சிருக்கீங்கன்னு கேட்பேன். விடிய விடிய படிச்சுட்டு வந்து இப்ப எங்களை கெடுக்குறதுக்கு வந்திட்டியா அப்படின்னு கேட்பாங்க அது ஒரு காலம்.

நான் ஈழத்துக்கு போய் தப்பி வரும்போது தாக்குதல் நடக்கும் போது என்னை காப்பாற்றுவதற்காக உடன் வந்த புலிகளும் இந்த வீட்டுக்கு வந்தாங்க. அவங்களுக்கும் வைத்தியம் செய்து பெரும்பாலும் சுகமாகி போனார்கள். ஒரு 19 பேரு மட்டும் கை, கால், கண் இல்லாமல் இருந்தாங்க. இரண்டு கை கிடையாது. முழங்காலுக்கு மேல இரண்டு கால்களும் கிடையாது. அவங்கள நம்ம தம்பி எல்லாம் தூக்கி வளத்திருக்காங்க. இங்க ஒரு வருடம் இருந்தார்கள். 37 புலிகளுக்கு சாப்பாடு எல்லாம் இங்கேதான். விடுதலை புலிகளுக்காக நான் இழந்தது பொருளாதாரத்தில அதிகம். அவங்கள ஒரு காசு செலவழிக்க விட்டதில்ல. எந்த வெளி நாட்டுக்கும் அவங்ககிட்டே டிக்கட்க்கு காசு வாங்கிட்டு போனதில்ல. அதனால, புலிகள அஞ்சி நிமிசம் பாத்துகிட்டு தலைவர போட்டோ கூட எடுக்கல, அதுக்கு பிறகு இப்ப செட் பண்ணி போட்டோ எடுத்த மாதிரி செட் பண்ணி போட்டோ எடுக்கல. எனக்கு தெரியும். 10 நிமிசம் இருந்தாங்க ..இப்ப போட்டோ செட் பண்ணி, அவரு எனக்கு பயிற்சி கொடுத்தாருன்னு சொல்றாங்க. எனக்கு பயிற்சி கொடுத்தாரு. ஏகே 47 சுட, பிஸ்டல் சுட, துப்பாக்கி சுடுறத்துக்கு. எனக்கு பயிற்சி கொடுத்தாரு. முக்கிய தளபதி பால்ராஜ் எழுதியது இந்த வார சங்கொலியில வரப்போகுது. அவர்தான் பெரிய வெற்றிகளை பெற்று கொடுத்தவர். யானையிறவு போர் வெற்றிக்கெல்லாம் அவரைத்தான் எனக்கு பாதுகாப்புக்கு அனுப்பினார்கள். பால்ராஜ் வாழ்க்கை வரலாற்றுல இடம் பெற்ற முக்கிய நிகழ்வுகள் குறித்து எடுத்து எனக்கு இயக்குனர் கவுதமன் அனுப்பினார். இந்த வார சங்கொலியில போடச் சொல்லி இருக்கிறேன். அந்த அனுபவங்கள். நான் வந்து எங்க அம்மாவை கூப்பிட்டு அம்மா நான் வெளி நாட்டுக்கு போறேன். அப்படின்னு காலில விழுந்து கும்பிட்டுட்டு போனேன். நான் எங்க அம்மா காலில் விழுந்தா. எனக்கு சூடம் கொழுத்தி நெத்தியில திரு நீறு பூசுவாங்க. அவங்க நம்பிக்கை. அன்னைக்கு என்னாச்சுன்னா. சூடத்தை கொளுத்தனவுடனே அணைஞ்சி போச்சு. ஒரு மாதிரி கவலைபட்டாங்க. என்ன வெளி நாட்டுக்கு போறெங்கிர. ஒண்ணுமில்லம்மா. சூடம் அணைஞ்சா நல்லதுண்ணு சொல்லுவாங்கன்னுட்டேன். நான் எங்க போறேன்னு சொல்லல. யார்கிட்டேயும் சொல்லல. எங்க வீட்ல துணைவியார்கிட்டேயும் சொல்லல. திரும்பி உயிருடன் வர முடியுமான்ற சந்தேகத்திலதான் போனேன்...அதனால தான் போறதுக்கு முத நாள் பட்டு சேலை, புள்ளைகளுக்கு பட்டு சட்டை எல்லாம் வாங்கி கொடுத்துட்டு, நான் லண்டன், பிரான்சுக்கு போறேன்னு பொய் சொல்லிட்டு போனேன். 37 புலிகள் இங்க ஒரு வருடம் இருந்தாங்க. பிறகு ரவி என்ன பண்ணினாருன்னா. திருநெல்வேலியில ஒரு வீடு பிடிச்சு, என் தாய் மாமானார், அவருக்கு கல்யாணம் ஆகல, அவரு இன்னொரு குடும்பம். அதுக்குள்ளே வச்சிருந்தாங்க. அங்கதான் இருந்தாங்க அஞ்சி மாசம். அப்ப ராஜிவ்காந்தி படுகொலை. அந்த படுகொலைக்கு முன்னாடி வரைக்கும் தம்பி ரவி வீட்டுல இருந்தாங்க. படுகொலைக்கு பிறகுதான் வேறொரு வீட்டுக்கு கொண்டு போய் வச்சோம். கலைஞருக்கு இது தெரியும். வீட்ல இருந்த புலிகள் எல்லாம் என்னாச்சு. அனுப்பிச்சாச்சான்னு கேட்டாங்க. இல்ல வேறோர் வீட்ல தங்க வச்சிருக்கிறோம்னு சொன்னேன். 5 மாசம் கழிச்சி, திராவிட கழக வழக்கறிஞர் துரைசாமி அண்ணே வந்து, விடுதலை புலிகளை நீங்க எங்கேயாவது வச்சிருக்கீங்களாண்ணு கேட்டாங்க. ஆமாண்ணே என்றேன். உடனே அந்த இடத்தை விட்டு காலி பண்ணி அனுப்புங்க. இன்னும் ரெண்டு நாளைக்குள்ளே ரெய்டு பண்ண போறாங்க. இண்டெலிஜென்சுக்கு தகவல் கொடுத்திருக்காங்க யாரோ அப்படின்னார். இந்த தகவல் யார் கொடுத்தாருன்னு தெரியல. அண்ணன் கலைஞரோட கைங்கரியமாக கூட இருக்கலாம். ஏண்ணா. அரசியல்ல என்னை ஒழிக்கணும்னுதானே நினெச்சாரு. அதோடு நான் முடிஞ்சிடுவேன்ல. நான் உடனே போய் பார்த்த போது. எல்லோரும் சயனைடு குப்பி வைச்சிருந்தாங்க. கொடுக்க மாட்டேன்னுட்டாங்க 19 பேரும். நான் பிறகு சொன்னேன். இப்ப பிரபாகரன் சொன்னா கேட்பீங்களா இல்லையா. இப்ப அவரு இங்க இல்ல. இதே இடத்தில இப்ப அவரு இங்க இருந்தா. கொடுக்கச் சொல்லுவாரா இல்லையா. நீங்க என் வீட்ல சயனைடு குப்பியை கடிச்சி செத்து போனா. எத்த்னை தலைமுறைக்கு இன்னாரு வீட்ல இத்தனை பேரு செத்து போனாங்கண்ணு வரும். இதுக்காகவா உங்களை நான் ஒன்றரை வருசம் வச்சிருந்தேன்னேன். கொடுத்திட்டாங்க சயனைடு குப்பியை. பிறகு ரவியை வந்து கைது பண்ணினாங்க. ரவி வந்து மனசாட்சி படி வைச்சேன். தப்பேதும் கிடையாது. சட்டபடி என்ன செய்யணுமோ செஞ்சிக்கோங்கண்ணு சொல்லிட்டாரு. பிறகு கைது பண்ணி மெட்ராசுக்கு கொண்டு போனாங்க. ஒரு வருசம் தடாவில ஜெயில்ல இருந்தாங்க. எதுக்கு சொல்றேன்னா, அவன நான் எம்பி பதவிக்கு நிறுத்தல, கட்சில எந்த பதவிக்கும் கொடுக்கல. அவரு கட்சில உறுப்பினர். அவ்வளவுதான். அவர் என்னை விட தியாகம் பண்ணிருக்கார். கையில விலங்கு போட்டு வச்சாங்க. விலங்கு போட்டு கொண்டு போனாங்க. என்னை விட நல்லா சர்வீஸ் பண்ணுவார். ஜனங்களுக்கு நல்லா சர்வீஸ் பண்ணுவா. ஆஸ்பத்திரி, அது, இதுன்னு எதாவது சர்வீஸ் பண்ணிக்கிட்டிருப்பார். அவரை நான் நிறுத்தலயே, குடும்பத்து அரசியல நான் பண்ணலயே, இந்த தகுதியோடு நாம் மட்டும்தான் தமிழ்நாட்டு அரசியல இருக்கிறோம்.

அப்படி ஒரு பாதுகாப்பான வீடு.1954 ல காமராஜர் முதல் அமைச்சர் ஆனவுடன் இந்த வீட்டுக்கு வந்து உட்கார்ந்து, எல்லாம் பாய் போட்டு சாப்பிட்டாங்க. மாடிலதான் தங்கி ரெஸ்ட் எடுத்தாங்க. காளிமுத்து பக்கத்து ஊருதானே, வருசா வருசம் பட்டிமன்றத்துக்கு வந்திடுவாரு. சாலமன் பாப்பையா நம்ம ஊருக்கு இரண்டு வருசம் வந்திருக்காரு. மதுரை வளவன் ற பேருல பேசுவார். 

பட்டிமன்றம் இப்ப திரும்ப நடத்துறோம். இதெல்லாம் இந்த வீட்டினுடைய அனுபவங்கள். பொடாவுல நான் இருக்கும் போது, இந்த ஊர்க்காரங்க பொங்கல் எல்லாம் கொண்டாடல. நான் வந்தப்ப பெரிய வரவேற்பெல்லாம் கொடுத்தாங்க. பல்லாயிரக்கணக்கில வந்திருந்தாங்க. அது மாதிரியான ஒரு இடம். அதனால, நீங்க எல்லாம் இந்த வீட்டுக்கு வந்ததில ரொம்ப மகிழ்ச்சி. நான் அவசரமா போக வேண்டி இருந்தாலும். நான் உங்களை எல்லாம் சந்திச்சி வாழ்த்தனும்னு நெனச்சேன். சமூக வலைதளங்களில் நாம எவ்வளவோ நல்லா செய்தா கூட, எங்கிட்டே பொதுவா என்ன சொல்றாங்க, அதிமுக அளவு, திமுக அளவு, இன்னும் ஒரு கட்சிகள் அளவு, இன்னும் நீங்க இடம் பெறலன்னு சொல்றாங்க, நான் கூட இல்லியே, நம்ம தம்பிங்க நல்லத்தானே செய்றாங்கண்ணேன். முயற்சி பண்ணலாம். அந்த அளவுக்கு வரலண்ணு சொல்றாங்க. அப்புறம் இன்னொண்ணு. நம்ம இணையதள பதிவுகள்ல, கட்சி தலைமை எடுக்கிற கருத்துக்கு மாறுபட்ட ஒரு பதிவு யாரும் செய்ய விரும்பாதீங்க. அதாவது, இப்ப ஒரு யுத்த களத்துக்கு போறோம். இளம் பிள்ளைகளாகிய உங்களுக்கு நான் செய்றது தப்பா. முதல்ல உங்களுக்கு தெரியும். ஆனா, நம்ம சந்துருவுக்கு நான் சொந்த செலவில வீடு கட்டி கொடுத்திருக்கிறேன். ஆதி திராவிடர் தெருவுல, இங்க சாதி வித்தியாசம் எல்லாம் கிடையாது. சந்துரு எங்க ஊரு ஆதிதிராவிடர் வீட்டு பிள்ளை. அவர்தான் வீட்டுக்குள்ளே இருக்கிறார். வீட்டுக்குள்ளே எல்லா இடத்துக்கும் அவர்தான் வருவார். அன்னைக்கு எல்லாம் மாவட்ட செயலாளரையும் இங்க வைத்து பேசினேன். திமுகவுடன் ஏன் போக கூடாது என்பதற்கு விளக்கம் சொன்னேன். நான் சொன்னது சில பேருக்கு கசப்பா இருக்கலாம். இந்த கட்சியை அழிக்கிற நோக்கத்துல கலைஞர் செய்யுறாரு. அவர் மகன் செய்யுறாரு என்று சொன்னேன். அது போல, நான் எடுக்கிற முடிவுகள், சில முடிவுகள் நான் தேர்தல்ல போட்டி போடுறதில்ல என்ற போது எல்லாரும் கூட கட்சி இனிமே எப்படி நடக்கும். நடத்த முடியாதுன்னாங்க. அந்த முடிவின் விளைவாகத்தான் நமக்கு மரியாதை வந்திச்சு. அதுக்கு முன்பு நம் மீது சொல்லப்பட்ட களங்கம். பணம் வாங்கிகிட்டு கூட்டு வச்சோம்ன்ற களங்கம் நீங்கிச்சி. நாம போட்டி இடலேன்னு முடிவு எடுத்த போது. து போல இப்ப கூட இறுதி வெற்றிக்கு நாம் சில முடிவுகள் எடுக்கணும். ராஜ தந்திரத்தை கையாளனும். மாவோ, அத்தனை ஆயிரம் மைல்கள் நடந்து சியாந்தேசேக்கூட ஒப்பந்தம் போட்டுகிட்டாரு. ரெட் ஆர்மியை கலைச்சிட்டு ஊருக்கு போகச் சொன்னாரு. இவ்வளவு பாடுபட்டு செஞ்சேனையை கலைத்து பெரிய கேடு பண்ணி துரோகம் செஞ்சிட்டாருன்னு அவரை எல்லாரும் குறை சொன்னாங்க. ஒரு கட்டத்துக்கு பிறகு செஞ்சேனையை திரும்ப திரட்டி சியாந்தேசையை அடித்து விரட்டி பீகிங் கை கைப்பற்றினார். அது போல இப்போ எடுக்கிற முடிவுகள் எதுவும் நல்ல நோக்கத்தோடு. இப்போ நாம வெற்றி பெறணும்னா, இரண்டு ராட்சச சக்திகளை எதிர்த்து போராடும் போது, நான் ரொம்ப இரவு பகலா யோசிச்சி யோசிச்சித்தான் ஒவ்வொரு ஸ்டெப்பா எடுத்து வைக்கிறேன்.

நான்கு பேர் நாங்க உறுதியா இருக்கிறோம். தொடர்ந்து நாங்க உறுதியா இருப்போம். தேர்தலுக்கு பிறகும் இருப்போம். நாங்க ஒரு நிரந்தர கூட்டமைப்பா வச்சிருக்கிறோம். இளைஞர்களிடம் கொண்டு போய் சேர்க்கிற பொறுப்பு இணையதளத்தில இருக்கிற உங்ககிட்டேதான் இருக்கு. நம்மகிட்டே பண வசதி இல்லைன்னாலும், உங்களை போன்ற உறுதி வாய்ந்த இளைஞர்கள், கொள்கை பற்றுள்ள இளைஞர்கள், சும்மா, கூலிக்கு புடிச்சிட்டு வந்து, திமுகவில செய்யுற மாதிரி இளைஞர்கள் அல்ல. லட்சியத்தில், ஈழத்தில், ஈழ விடுதலையில், சமூக மாற்றத்தில் அக்கரையுள்ள தம்பிகள் நீங்கள். அதனால உங்க எல்லாருக்கும் என்னோட பாரட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறேன். நீங்க எல்லாரும் இவ்வளவு தொலைவு வந்து உங்க கூட்டத்தை நடத்துறீங்க. நல்ல முடிவுகள் எடுத்து அதை செயல்படுத்துகிற உறுதியோடு சென்று வாருங்கள். வணக்கம் என வைகோ இயல்பாக பேசினார்.


பின்னர், கலந்துரையாடல் கூட்டம் கலிங்கப்பட்டியில் ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகமது அலி அவர்கள் தலைமையில் நெல்லை மாவட்ட புறநகர் பொறுப்பாளர் அண்ணன் தி.மு.ராசேந்திரன் அவர்கள் துவக்கி வைத்து நடைபெற்றது. 

மாவட்ட செயலாளர் தி.மு.ராசேந்திரன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். அப்போது பேசிய அவர் 4 கோடி செலவழித்து திமுக அதிமுக செய்த விளம்பர யுக்தியை 4ரூபா செலவுல உடைத்தெறிந்த பெருமை மதிமுக இணையதளத்திற்கு உண்டு என்றார். 

யாரும் சிந்திக்க முடியாத வகையில் மதிமுக இணையதள தோழர்கள் பணியாற்றுகிறார்கள். எதிரிகள் சம்பளத்திற்கு பணியாற்றுகிறார்கள். நாம் உணர்வோடு பதிவிடுகிறோம். ஒருங்கிணைந்து பணியாற்றி உங்களுக்குள்ள குறைகளை களைந்து பதிவிடுங்கள் என பேசினார். 

2016 தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்க போவது இணையதளம்தான். 25 வயதிற்குட்பட்ட ஒரு கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள். அதில் 50 சதவீதம் மாற்றத்தை விரும்புகிறார்கள் எனவும் தி.மு.ராசேந்திரன் உரையாற்றினார். 

எவ்வளவோ நம்முடைய செலவுகளுக்கு மத்தியில் நம் சங்கொலிக்கு சந்தா கட்டுங்கள் என மாதம் இரு சங்கொலி சந்தா கட்டும் பரம்புகோட்டை அயோத்திராமர் சங்கொலி வாங்க அறிவுறுத்தினார். 

26-02-2016 வெள்ளிக்கிழமை கலிங்கபட்டியில் நடந்த தென் மாவட்ட மதிமுக இணையதள அணி நண்பர்களுக்கான கலந்துரையாடலின் போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

1. வைகோ முகநூல் பக்கத்தை அங்கீகரிக்கப்பட்ட பக்கமாக (verified) மாற்ற கழகப் பொதுச் செயலாளர் அவர்களுக்கு வேண்டுகோள் வைத்து அதற்கான அனுமதி பெறப்பட வேண்டும் என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது. மற்றக் கட்சி தலைவர்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் பங்கேற்கும் இந்த வேளையில் கழகப் பொதுச் செயலாளர் அவர்களும் சமூக வலைத்தளங்களில் இணையும்படி (முகநூல் மற்றும் டிவிட்டர்) வேண்டுகோள் வைத்து இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

2. இணையதளத் தோழர்கள் அனைவரும் அவரவர் பகுதிகளில் உள்ள கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற இக்கூட்டம் தீர்மானிக்கிறது. தேர்தல் நிதி வசூல் குறித்தும் அவரவர் பகுதிகளில் உள்ள கழகத்தினருடன் இணைந்து பணிகளில் ஈடுபடலாம் என்றும் தீர்மானிக்கிறது.


3. இணையதளத் தோழர்கள் அனைவரும் நடக்க இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி வெற்றிக்காக தீவிரமாக பாடுபடுவது எனவும் இயன்ற தொகுதிகளில் நம் தோழர்களுடன் ஒன்றிணைந்த தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவது எனவும் தீர்மானிக்கிறது.


4. பம்பரம் தொலைக்காட்சி வளர்ச்சிக்காகவும், மக்கள் நலக் கூட்டணி இணையதளம் பக்க வளர்ச்சிக்காகவும் ஒத்துழைப்பு நல்குவதோடு அவரவர் பகுதிகளில் நடக்கும் கழக மற்றும் கூட்டணியின் செய்திகளை முன் கூட்டியும் நிகழ்வுகளை உடனுக்குடன் ஒலி, ஒளிக்காட்சிகளாக அனுப்பி வைக்கவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது. அதற்கான ஈமெயில் மற்றும் விவரங்களை அக்குழுவினர் தெரியப்படுத்தவும் வேண்டுகோள் வைக்கப்படுகிறது.

கலந்துரையாடலில் கலந்து கொண்ட ஒட்டுமொத்த உறுப்பினர்களின் கைத்தட்டலுடன் இத்தீர்மானங்கள் நிறைவேற்று ஏற்றுக் கொள்ளப்பட்டன. 

இணையதள அணி தோழர்கள் அனைவரும் தீர்மானங்களுக்கு செயல்வடிவம் கொடுக்க ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment