Saturday, October 22, 2016

யாழ்ப்பாண மாணவர்கள் சுட்டுக்கொலைக்கு வைகோ கண்டனம்!

தமிழ் ஈழத்தில் யாழ்ப்பாண மாணவர்கள் இருவர் சிங்களக் காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி இதயத்தில் ஈட்டியைப் பாய்ச்சுகிறது!

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் பயின்று வந்த தமிழ் மாணவர்கள் பவுன்ராஜ் சுலக்சன், நடராசா கஜன் இருவரும் இருசக்கர வாகனத்தில் பயணித்தபோது, யாழ்ப்பாணச் சோதனைச் சாவடியில் சிங்களக் காவலர்கள் தடுத்து நிறுத்தி, அவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறார்கள்.

யாழ்ப்பாண மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை அறிந்த யாழ்ப்பாண தமிழ் மக்கள் நீதி கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதை அறிந்து, ஆறுதல் கூறவந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராஜாவை முற்றுகையிட்டு, நீங்கள் ஆதரிக்கும் சிங்கள சிறிசேனா அரசின் காவல்துறை தமிழ் மாணவர்களை சுட்டுக்கொன்று இருக்கிறது என்று மக்கள் கொந்தளித்துள்ளனர்.

ஈழத்தில் சிங்கள இனவெறி இன்னும் தணியவில்லை; தமிழ் மக்களின் இரத்தம் சிந்தப்படுகிறது என்பதற்கு இந்தக் கொடூரச் சம்பவம் எடுத்துக்காட்டாகும். சிங்கள சிறிபால சேனா அரசு உலகத்தை ஏமாற்ற அமைதி வேடம் போட்டுக்கொண்டே தமிழ் மக்களை சிங்கள இராணுவம் மற்றும் காவல்துறை மூலம் ஒடுக்கும் வகையில் அரச பயங்கரவாதத்தை ஏவிவிடுவது கடும் கண்டனத்துக்குரியதாகும்.

தமிழ் மாணவர்கள் படுகொலையைக் கண்டித்து நாளை (23.10.2016) யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் நடத்த இருக்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மறுமலர்ச்சி தி.மு.க. ஆதரவு தெரிவிக்கிறது. உலகெங்கும் வாழும் தமிழர்களும், ஈழத்தில் தமிழர்கள் மீதான அடக்குமுறையை எதிர்த்து குரல் கொடுத்து வருகின்றனர். இந்திய அரசு சிங்கள இனவாத அரசுக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment