Saturday, April 21, 2018

நீதியரசர் ராஜேந்திர சச்சார் மறைவு-வைகோ இரங்கல்!

டில்லி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தவர் நீதியரசர் ராஜேந்திர சச்சார். இவர் நாட்டின் விடுதலைக்காகப் போராடி, காங்கிரஸ் கட்சியில் அரும்பணி ஆற்றி, பஞ்சாப் முதலமைச்சராக இருந்த பீம்சேன் சச்சார் அவர்களின் புதல்வர் ஆவார்.

நெருக்கடி நிலை காலத்தில் பீம்சேன் சச்சார் காங்கிரசை விட்டு விலகி, லோகநாயக ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்களின் முழு புரட்சிப் போராட்டத்தில் பங்கேற்கவும் செய்தார்.

பயங்கரவாத தடுப்புச் சட்டம் என்ற பெயரால் மனித உரிமைகளை நசுக்கிய பொடா சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, ராஜேந்திர சச்சார் அவர்களே வாதங்களை முன்வைத்தார்.

ஈழத் தமிழர்களுக்கு நீதி வழங்க, கொலைகார ராஜபக்சே அரசின் ஈழத்தமிழ் இனப்படுகொலையைக் கண்டித்து 2010 இல் டப்ளின் விசாரணை மன்றத்தில் இந்தியாவின் சார்பில் நீதிபதியாகப் பணியாற்றினார்.

ஈழத்தமிழர்களின் இனப்படுகொலை குறித்து நான் தயாரித்த ‘ஈழத்தில் இனக்கொலை; இதயத்தில் இரத்தம்’ என்ற ஆங்கிலக் குறுந்தட்டையும், ஆங்கில நூலையும் என் வேண்டுகோளை ஏற்று தலைநகர் புது டில்லியில் வெளியிட்டுச் சிறப்புச் செய்தார்.

வங்கத்துச் சிங்கம் நேதாஜி சுபாஸ்சந்திர போஸ் அவர்கள் 1945 ஆகஸ்டு 18 இல் தைபே விமான நிலையத்தில் உயிர் இழக்கவில்லை; அதன்பின் அவர் எங்கு சென்றார்? அவரைப் பற்றிய முழு உண்மையையும் நாட்டு மக்கள் அறிந்துகொள்ள அனைத்து ஆவணங்களையும் மத்திய அரசு வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தலைநகர் டில்லியில் தமிழ்ச் சங்கக் கட்டடத்தில் நான் நடத்திய கூட்டத்தில் நீதிபதி ராஜேந்திர சச்சார் அவர்கள் பங்கேற்று உரையாற்றினார்கள்.

டில்லியில் உள்ள அன்னாரது இல்லத்துக்கு நான் செல்லும்போதெல்லாம் என்னை அன்புடன் வரவேற்று, நமது தமிழர்களின் உணவாகிய இட்டலி, சாம்பார் வடையை எனக்கு பரிமாறச் செய்வார். அந்த மாமனிதர் மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

அவரது மறைவினால் துயரத்தில் வாடும் அன்னாரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், அவரை மிகவும் நேசிக்கும் அனைவருக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவிக்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது இரங்கல் அறிக்கையில் இன்று 21-04-2018 தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment