Saturday, April 21, 2018

காவிரியில் துரோகம் இழைக்கும் வஞ்சகர் கூட்டம் நடுங்க மனிதச் சங்கிலியில் கரம் கோர்ப்போம்-வைகோ அழைப்பு!

காவிரி நதிநீர் உரிமை மீட்புப் போராட்டத்தில் ஒட்டுமொத்தத் தமிழகமும் பொங்கி எழுந்திருக்கிறது. இந்திய வரலாற்றில் வேறெந்தப் பிரதமரும், எந்த மாநிலத்திலும் சந்திக்காத எதிர்ப்பை ஏப்ரல் 12 ஆம் தேதி தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்த பிரதமர் நரேந்திர மோடி எதிர்கொண்டார். தமிழர் இல்லம் தோறும் கருப்புக் கொடிகள் பறந்தன. தலைநகர் சென்னையில் திரும்பிய பக்கம் எல்லாம் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்; “பிரதமர் மோடியே திரும்பிச் செல்லுங்கள்” என்று இளைஞர் பட்டாளம் எழுப்பிய இடிமுழக்கம் டெல்லி செங்கோட்டை வரை எதிரொலித்தது. காவிரியில் நமது உரிமை நிலைநாட்டப்படும் வரையில் ஓயாத கடல் அலைகளென தமிழகத்தில் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

ஏப்ரல் 16 ஆம் தேதி திமுக செயல் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான அன்புச் சகோதரர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஏப்ரல் 23 ஆம் தேதி தமிழகம் முழுவதும் மனிதச் சங்கிலி அறப்போராட்டத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.

எனவே திமுக மற்றும் தோழமைக் கட்சிகளுடன் இணைந்து மறுமலர்ச்சி திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் ஏப்ரல் 23 திங்கள்கிழமை மாலை 4 மணி முதல் 5 மணி வரை மனிதச் சங்கிலி அறப்போராட்டத்தை தமிழ்நாடு முழுவதும் மிகுந்த எழுச்சியுடன் வெற்றிகரமாக நடத்துவதற்கு கடமை ஆற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ்நாட்டின் உயிர் ஆதாரமான காவிரியில் துரோகம் இழைக்கும் வஞ்சகர் கூட்டம் நடுங்க, உரிமைப் போராட்டக் களத்தில் ஒட்டுமொத்தத் தமிழினமும் ஒருசேர அணி திரண்டது என்பதை நிருபிக்க வீதிக்கு வாருங்கள் தமிழர்களே! என்று அழைக்கிறேன். தமிழக விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள், அரசு அலுவலர்கள், தொழிலாளர்கள், வர்த்தக பெருமக்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் ஏப்ரல் 23 இல் நடைபெறும் மனிதச் சங்கிலியில் கைகோர்த்து அறப்போராட்டத்தை வெற்றி அடையச் செய்யுமாறு வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் இன்று 21-04-2018 தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment