Saturday, March 12, 2016

மக்கள் நலக் கூட்டணி சார்பில் தேர்தல் பணிக்குழுக்கள் அமைத்து தீவிர வாக்கு சேகரிப்புப் பணிகள் தொடங்க, மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் வேண்டுகோள்!

தமிழ்நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற அரசியல் சக்தியாக மக்கள் நலக் கூட்டணி, சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்குத் தயாராகிவிட்டது. தமிழகத்தில் முதன் முதலில் அமைந்த மக்கள் நலக் கூட்டணி, வரலாற்றில் முதல் முறையாக குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தை மக்கள் மன்றத்தில் முன்வைத்து ஆதரவு கேட்டு வருகிறது.

தேர்தல் களத்தில் முதன் முதலில் மாற்று அரசியல் எழுச்சிப் பயண தேர்தல் பிரச்சாரத்தை மூன்று கட்டங்களாக நடத்தி, கோடிக்கணக்கான மக்களைச் சந்தித்ததும் மக்கள் நலக் கூட்டணிதான்.

பட்டி தொட்டி, பட்டினங்களிலிருந்து கண் விழிக்காத குக்கிராமங்கள் வரையில் மக்கள் நலக் கூட்டணி, மக்களின் பேராதரவைப் பெற்று வருகிறது. தமிழகத்தில் இரு துருவ அரசியலுக்கு முடிவு கட்டி, வீழ்ந்துபோன தமிழ்நாட்டை செப்பனிட்டு சீர்படுத்தும் ஆற்றலும் வலிமையும் மக்கள் நலக் கூட்டணிக்குத்தான் இருக்கின்றது என்பதை தமிழக மக்கள் அங்கீகரித்து விட்டார்கள்.

திசையெங்கும் திரண்டிருக்கின்ற மக்கள் சக்தியை, மக்கள் நலக் கூட்டணிக்கான வாக்குகளாக மாற்ற வேண்டிய மாபெரும் கடமை மக்கள் நலக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் இருக்கின்றது. எனவே, மார்ச் 15 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதிக்குள் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மக்கள் நலக் கூட்டணியில் உள்ள ம.தி.மு.க., சி.பி.ஐ.(எம்), சி.பி.ஐ., வி.சி.க. ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்களின் நாற்பது பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுக்களை அமைப்பது உடனடி பணியாகும். மார்ச் 21 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரையில் குறைந்தபட்ச பொது செயல் திட்ட துண்டறிக்கையை வீதிகள் தோறும் சென்று வீடு வீடாக மக்களிடம் வழங்கி, வாக்கு சேகரிக்கும் பணியை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும்.

மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் கலந்தாய்வு செய்து இந்தப் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறோம். தேர்தல் களத்தில் நாம் சந்திக்கப் போகிறவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை அறிவோம். மக்கள் சக்தி மட்டுமே நமக்கு அடிப்படையாக இருப்பதை உணர்ந்து, மக்கள் நலக் கூட்டணிக்கு வலு சேர்ப்பதற்கு முதல் கட்டமாக தேர்தல் பணிக்குழுக்கள் அமைத்து, குறைந்தபட்ச செயல்திட்ட துண்டறிக்கையை விநியோகம் செய்து, வீடு விடாகச் சென்று தீவிரமாக வாக்கு சேகரிக்கும் பணிகளை செவ்வனே நிறைவேற்றுமாறு மக்கள் நலக் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளையும், தொண்டர்களையும் கேட்டுக்கொள்கிறோம் என வைகோ, ஜி.இராமகிருஷ்ணன், இரா.முத்தரசன், தொல்.திருமாவளவன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment