Sunday, March 13, 2016

வேளச்சேரியில் மாநாடு போல மாறிய தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம்!

வேளச்சேரியில் மக்கள் நலக் கூட்டணியின் 4 ஆம் கட்ட மாற்று அரசியல் எழுச்சி பொதுக் கூட்டம் இன்று 13-03-2016 மாலை நடந்தது

தலைவர்கள் வந்த பின்னர், மக்கள் நலக் கூட்டணித் தலைவர்களுக்கு வீரவாள் தந்து மரியாதை அளிக்கப்பட்டது.

பின்னர் பேசிய திருமாவளவன் அவர்கள், திமுகவும் வேண்டாம் அதிமுகவும் வேண்டாம் என நினைப்பவர்களுக்கு சரியான மாற்று மக்கள் நலக் கூட்டணி என பேசினார்.

தோழர் ஜி. இராமகிருஷ்ணன் அவர்கள் பேசும்போது, தமிழக அரசியல் வரலாற்றில் மக்கள் நலக் கூட்டணி ஒரு புதிய சகாப்தம். திமுக அதிமுக இருவரும் ஆட்சிக்கு வரக்கூடாது என நாங்கள் நினைப்பது போட்டிக்காகவோ, தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியாலோ அல்ல.

மாறாக மாறி மாறி ஆட்சி செய்து ஊழலில் திளைத்த இருவரும் மீண்டும் ஆட்சிக்கு வந்து தமிழ்நாட்டை பாழ்படுத்திவிடக்கூடாது. மக்கள் நலக் கூட்டணி ஆட்சியில் கொள்ளைக் கூடங்களாக உள்ள கல்விக்கூடங்களை, ஏழைகளும் கல்வி கற்கும் கல்விச் சாலைகளாக மாற்றுவோம்.

ஒரு லட்ச ரூபாய் கடனைத் திருப்பிச் செலுத்த தாமதமானதால் விவசாயி தாக்கப்பட்டதால் தற்கொலை செய்துகொண்டார். ஆனால் 9000 கோடி ரூபாயை ஏமாற்றிய மல்லையா சொகுசு வாழ்க்கை வாழ்கிறார். மக்கள் நலக் கூட்டணி ஆட்சியில் இந்த நிலை மாற்றப்படும் என வேளச்சேரி பொதுக்கூட்டத்தில் தோழர் ஜி. இராமகிருஷ்ணன் அவர்கள் பேசினார்.

இறுதி உரை நிகழ்த்திய மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ அவர்கள், எந்தக் கட்சியையும் சாராத தோழர் ஆசைத்தம்பி என்பவர் மக்கள் நலக் கூட்டணித் தலைவர்களுக்கு அனுப்பிய குறுஞ்செய்தியை வாசித்து பொதுமக்களுக்கு புத்துணர்வு ஊட்டினார் வைகோ.

வெள்ளமெனத் திரளும் மக்கள் கூட்டத்தை தொலைக்காட்சிகளில் பார்த்த பிறகாவது பத்திரிக்கைகள் பார்வை திரும்பட்டும். மதுவைக் கொண்டுவந்த, திராவிட இயக்கக் கொள்கைகளைக் குழிதோண்டிப் புதைத்த, ஊழலில் திளைத்த, குடும்ப அரசியலில் ஊறிய, அரசியலை ஆடம்பரக் களமாக்கிய கருணாநிதியை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது.

ஒரு பேச்சுக்குக்கூட மதுவிலக்கு கொண்டுவருவோம் என்று சொல்லாதவர் ஜெயலலிதா. காரணம் திமிர். பணம் கொடுத்து மீண்டும் ஜெயிக்கலாம் என்று எண்ணுகிறார். ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு நாசப் படுகுழிக்குச் சென்றுவிடும். கண்காணிப்புக் குழு அமையுங்கள். ஓட்டுக்குப் பணம் தர யாராவது முயன்றால் மக்கள் நலக் கூட்டணி இணையதளத்திற்குத் தகவல் கொடுங்கள் என பேசினார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment