Saturday, August 15, 2015

ஆரியர்களிடமிருந்து வித்தியாச படுத்தி காட்டவே திராவிடம் என்ற சொல் பயன்படுத்தப் பட்டது - பாரதிதாசனாரின் 125-ஆவது பிறந்தநாள் விழாவில் வைகோ பேச்சு!

பாவேந்தர் பாரதிதாசனாரின் 125-ஆவது பிறந்தநாள் விழா மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக இலக்கிய அணியின் 50-ஆவது நிகழ்ச்சி சென்னை, தியாகராயர் நகர், வடக்கு உஸ்மான் ரோடு-அபிபுல்லா சாலை சந்திப்பில் உள்ள தேவர் மண்டபத்தில் இன்று (15.08.2015 சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு தொடங்கியது. 

விழாவிற்கு வந்தவர்களை அண்ணன் அழகுசுந்தரம் மற்றும் சாத்தூர் கண்ணன் ஆகியோர் அன்புடன் வரவேற்றார்கள். நெய்வேலியில் தலைவருடன் பணி முடித்து பாவேந்தர் விழாவில் பட்டிமன்ற தலைமை பணியை பாங்குடன் நடத்த வருகை தந்தார் நெய்வேலி நெருப்பு அண்ணன் செந்திலதிபன் அவர்கள்.

இந்த பாவேந்தர் விழாவில் ஈழத்து உணர்வுகளை இசையால் எழுப்பும் அண்ணன் தேனிசை செல்லப்பா அவர்களின் புதல்வி தமிழ்க்கொடி நாகராஜன் அவர்களின் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. 

அபோது கழக முன்னனி தலைவர்கள் இலக்கிய உரையாற்ற தயார் நிலையில் இருந்தனர். பட்டிமன்றம் தொடங்கியது. 

இலக்கியத் தேன் பருகவும் உரையாற்றவும் தலைவர் வைகோ அவர்கள் வருகைபுரிந்தார். தலவர் வந்தவுடன் இன்னிசை கச்சேரி நடத்திய தேனிசை செல்லப்பா அவர்களின் குடும்பத்தினர் தமிழின முதல்வர் வைகோ அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து பெற்றனர்.

தமிழன் வீழ்ந்தான் என்ற தலைப்பில் திருப்பரங்குன்றத்து தென்றல் பொடா தியாக வேங்கை அண்ணன் அழகு சுந்தரம் பட்டிமன்ற உரை நிகழ்த்தினார். தொடர்ந்து மதிமுக மாணவர் அணி அமைப்பாளர் தி.மு.ராஜேந்திரன் அவர்களின் பட்டிமன்ற பேச்சு அனல் வீசியது. 

தமிழனின் மானத்தை் வேட்டியால் காத்த ஓவியர் வீர.சந்தானம் அவர்கள் பாரதிதாசன் விழாவிற்கு வருகை தந்தார்கள். திமு ராஜேந்திரனை தொடர்ந்து, எழுச்சி பெற்று வரும் மாணவர்களின் குரலை பிரதிபலித்து வரும் மாணவரணி மாநில துணை அமைப்பாளர் திரு.மணவை தமிழ் மாணிக்கம் அவர்கள் தமிழன் வீழ்த்தப் பட்டான் என முழங்கினார். அப்போது பேசிய அவர், புதிய புறநானூறு எழுதியவர் தலைவர் வைகோ அவர்களின் தாய் மாரியம்மாள் அவர்கள் என புகழாரம் சூட்டினார் மணவை தமிழ் மாணிக்கம். 

பேச்சு வரகவி திரு.மணிவேந்தன் அவர்கள் தமிழன் வீழ்ந்தான் அணி சார்பில் பேசினார். அப்போது ஈழத்து தமிழன் வீழ்த்தப் பட்டான், தமிழகத்து தமிழன் வீழ்ந்தான். ஈழத்தமிழன் புலி, நம் தமிழன் போலி என கவிஞர் மணிவேந்தன் அடுக்கு மொழியில் அடுக்கினார்.

பின்னர் பேசிய செந்திலதிபன் அவர்கள் உணர்வு உள்ளவனுக்குத்தான் வைகோ என்றால் யார் எனத் தெரியும் என லண்டனில் வசித்து வரும் ஓர் ஈழத் தமிழர் குரோம்பேட்டையில் இன்று மதிய உணவின் போது கூறியதாக கூறினார் என கூறி பட்டிமன்ற நிறைவு பேருரை நிகழ்த்தினார்கள். 

இறுதி தீர்ப்பில் ஐயா பெரியாரின் மறு தோன்றலாக இருக்கும் தலைவர் வைகோ அவர்கள் இருக்கும் வரை தமிழன் வீழ்த்தப்பட முடியாது. தமிழன் வீழ்ந்தாலும் வீழ்த்தப்பட்டாலும் அதை தலை நிமிர வைக்க மதிமுக தலைவர் வைகோ தலைமையில் இருக்கிறது. எனவே தமிழன் வீழ்த்தப்பட்டான் என்பதே தீர்ப்பு என அண்ணன் செந்திலதிபன் கூறினார்.

ஓவியர் சந்தானம் அவர்கள் பேசும்போது, தலைவரின் வைகோ அவர்களின் பேச்சை கேட்கவே இங்கு வந்தேன். தமிழின மீட்புக்கு அடையாளப்படுத்த பட வேண்டும் என்றால் அது மக்கள் தலைவர் வைகோ அவர்கள்தான் என கூறி உணர்ச்சியுட்டினார். 

50 ஆவது மதிமுக இலக்கிய அணி நிகழ்வை நடத்தும் அணித் தலைவர் கோமகன் கோட்டைசாமி அவர்களுக்கு 50000 ரூபாய் பொற்கிழி வழங்கப்பட்டது. 

இறுதியாக தமிழின முதல்வர் வைகோ அவர்களின் இலக்கிய தேன் பாயத் துவங்கியது. நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் இலக்கிய பேச்சுக்களில் பாவேந்தர் பாரதிதாசன் பாடல்களை பேசியே ஆரம்பிப்பார் என கூறி தலைவர் ஆரம்பித்தார். திராவிட இயக்கத்தை சுயநலத்திற்காக பயன்படுத்திய சிலரை வைத்து திராவிட இயக்கத்தை மதிப்பிடலாகாது. அவர்களை தாண்டியும் தியாகம் செய்தவர்கள் பலர். தமிழ் தேசியம் என்ற பெயரில் திராவிடத்தை பழிக்கின்ற நிலை வளர்ந்து வருகிறது. அவ்வாறு பேசுபவர்கள் முதலில் கண்ணாடி முன் நின்று தங்களை கேள்வி கேட்டு கொள்ளட்டும் என கேட்டுக்கொண்டார். 

ஆரியர்களிடமிருந்து வித்தியாச படுத்தி காட்டவே திராவிடம் என்ற சொல் பயன்படுத்தப் பட்டது. அண்டை மாநிலங்களை அண்டி பிழைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் யாரும் இங்கில்லை எனவும் சாடினார் தலைவர் வைகோ அவர்கள். 

பொடாக்கால சிறை வாசத்தை விவரிதுபேசிய தலைவர் வைகோ அவர்கள், ஒரு தலைவரிடத்தில் உள்ள உயர்வான குணங்களை மட்டுமே பாருங்கள். குறைகளை மட்டுமே சுட்டி காட்டுவதேன் என கேள்வி எழுப்பினார். மாயாவதிக்கு பெரியாரை பற்றி தெரிகிறது. இங்குள்ளவர்களுக்கு தெரியவில்லையே  என ஆதங்கபட்டார்.

நாங்கள் களத்தைதான் இழந்திருக்கிறோம். யுத்தத்தை இழக்கவில்லை. இது இன்றல்ல 1986 ல் 6000 திமுக தோழர்களுக்கு கடிதமாய் நான் எழுதியது. தமிழன் வீழ்ந்து விடவில்லை. சறுக்கல்கள் நேர்ந்திருக்கலாம். ஆனால் தமிழன் வீழவில்லை எனவும் தலைவர் வைகோ அவர்கள் முழங்கினார்கள்.

நேர் வகிடு எடுத்து கையில் பேப்பரோடு இருந்தால் அவர்கள் திமுக தோழர்கள். சைடு வகிடு எடுத்து உயரே சீவி இருந்தால் எம்.ஜி.ஆர் ரசிகர்கள். பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம் என தலைவர் வைகோ வேடிக்கையாக கூறினார்.

தலைவன் உயிருக்கு பயப்படாமல் களத்தில் நின்றால்தான் தொண்டன் போர்க்குணத்தோடு போராடுவான். வரலாறு படித்தால் அதன்படி நடக்க வேண்டும் என்று நடப்பவன் நான்.

கலிங்கபட்டி கலவரத்தில் இந்த மண்ணிலேயே நீங்கள் சுட்டு பட்டிருந்தால் அது இந்த மண்ணுக்கு கௌரவம் என தன் மகன் வையாபுரி அவர்கள் தன்னிடம் கூறியதாக அதிர்ச்சி தகவலை பகிர்ந்து கொண்டார். வீர திருமகனின் வீரமகனல்லவா வையாபுரி.

ஐந்து நிமிடம் இருந்து விட்டு போட்டோவே எடுக்காம நான்தான் பிரபாகரன் என்ற நிலை எல்லாம் எதற்கு... உண்மை நிலை 2,3 ஆண்டுகளில் வெளியிடுவேன். தமிழுக்காக யார் பாடுபடுகிறார்களோ அவர்கள்தான் உண்மையான தமிழர்கள் என தலைவர் வைகோ கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் தலைவர் வைகோ அவர்கள்.

செய்தி சேகரிப்பு: மதிமுக இணையதள நேரலை அம்மாபேட்டை கருணாகரன் அவர்கள் முகநூலிலிருந்து.

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment