Thursday, August 13, 2015

ஐவர் படை இல்லாமல் இனி தமிழக அரசியல் இயங்காது-வைகோ சூழுரை!

மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து, மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கத்தின் சார்பில், இன்று ஆகஸ்ட் 13 ஆம் தேதியன்று மாலை ஐந்து மணி அளவில் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் மக்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்ட அறப்போர் நடைபெற்றது.

இதில் அனைத்து தலைவர்களும் உரையாற்றினர். அப்போது பேசிய அண்ணன் திருமாவளவன் அவர்கள், கலிங்கபட்டியில் என்னை கட்டுப்படுத்தினார் அண்ணன் வைகோ. அந்த உரிமை அவருக்கு இருக்கிறது என்று உணர்ச்சிபூர்வமாக பேசினார். மேலும் மதுவிலக்கு கொள்கையில் முடிவெடுக்க அரசு ஏன் தயங்குகிறது. சசிபெருமாள் போராட்டத்தை நாம் கையிலெடுக்கிறோம். அவரது மரணம் ஒவ்வொருவரையும் உலுக்கியது. தொடர்பு இல்லாத விசயங்களில் தொடர்பு படுத்தி தலைவர்களை கொச்சை படுத்த இந்த அரசு முயல்கிறது. பஞ்ச பாண்டவர்கள் என்பதற்கு பதிலாக பஞ்ச பூதங்கள் என்று மாற்றி கொள்வோம் என்று திருமாவளவன் பேசினார்.

மது அருந்தி ரத்த வாந்தி எடுத்து சாக கூடாது என போராடிய சசி பெருமாளை இந்த தமிழக அரசு ரத்த வாந்தி எடுக்க வைத்தது. இது அரசியலுக்காக இல்லை என இந்திய கம்யூனிஸ்டு தலைவர் முத்தரசன் பேசினார்.

மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து மமக  பொது செயலாளர் தமிமும் அன்சாரி உரையாற்றினார்.

மார்க்சிய கம்யூனிஸ்டு தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் அவர்கள் ஆற்றிய உரையில் முதல் அமைச்சர் மற்றும் அமைச்சர் பதவியிலிருந்து கொள்ளை அடிப்பதை விட உண்டியல் ஏந்துவது தவறல்ல. காவிக் கும்பல் தமிழகத்தில் காலூன்ற முடியாது என சாடினார்.

இறுதியாக மதிமுக பொதுச்செயலாளர், தமிழின முதல்வர் வைகோ சிறப்பு பேருரையாற்றினார். அப்போது பேசிய தலைவர் வைகோ அவர்கள் பெருந்திரளாக கூடியிருந்த மக்களை பார்த்து, இது உணர்ச்சிகரமான கூட்டம் என தலைவர் புகழாரம் சூட்டினார். "நான் எத்தனையோ முறை இந்த வள்ளுவர் கோட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இது போன்ற ஒரு உணர்ச்சிகரமான கூட்டத்தை இன்று தான் பார்க்கின்றேன். இது காசு கொடுத்தோ அல்லது குவார்ட்டர் ,கோழி பிரியாணி கொடுத்துக் கூட்டிய கூட்டம் அல்ல.

கலிங்கப்பட்டி ஒரு பெரிய யுத்தம் முடிந்தத்தற்குப் பிறகு சகோதரர் திருமாளவன் வந்தார். அப்பொழுது பேசிய நான் "தம்பி உடையான்,படைக்கு அஞ்சான் என்று பேசினேன். "வரலாற்றில் திருப்பங்கள் திடீரென்று தான் வரும். அப்படிப்பட்டது தான் சசிபெருமாள் மரணம்". சசிபெருமாள் உடலை அவர்கள் குடும்பத்தினர்தான் எங்களிடம் ஒப்படைத்தார்கள்.

காவல்துறையினரை எந்நாளும் மதிப்பவன் நான். என் கூட காவலுக்கு வரும் போலீசார் உணவருந்திய பின்பே நானும் உணவருந்துவேன் என கூறினார் தலைவர் வைகோ. கலிங்கபட்டியில் கலவரம் உருவாக காரணம் மேலிடம். என்னை கொல்ல முயற்சி என தொண்டர்களை தூண்டினேனாஎன வைகோ கேள்வி எழுப்பினார். மதுவிலக்கு போராட்டத்திற்கு ராயல்டி கேட்பவர்களுக்கு விளக்கம் தந்தார் தலைவர் வைகோ.

மது விற்பனை நேரத்தை குறைப்பதாகவும் கடைகளை கொஞ்சம் குறைப்பதாகவும் செய்திகள் வருகின்றன. இது ஆளுங்கட்சியினர் கொள்ளையடிக்க உதவும். முழு மதுவிலக்கே இலக்கு என தீர்க்கமாக தெரிவித்தார் தலைவர் வைகோ.

தமிழனை போல் ஒற்றுமை இல்லாத இனமே கிடையாது. ஒருத்தரை ஒருத்தர் போட்டு கொடுப்பது இங்கேதான் இருக்கிறது. இவருக்கு பேர் வந்திடுமோ அவருக்கு பேர் வந்திடுமோ என்ற எண்ணமும் இங்கேதான் இருக்கிறது எனும் உண்மையை உரக்க சொன்னார் தமிழின முதல்வர் வைகோ. இனி ஆங்கில தமிழ் செய்திகளில் இந்த கூட்டியக்க செய்திகள்தான் வந்து கொண்டிருக்கும்.

"இந்த ஐவர் படை இல்லாமல் இனி தமிழக அரசியல் இயங்காது" என சூழுரைத்தார் தலைவர் வைகோ. 

பின்னர் தலைவர்களும் தொண்டர்களும் இணைந்து அறப்போர் முழக்கங்களை எழுப்பினார்கள்.

இதில் மக்கள் நலன் காக்கும் கூட்டியக்கத்தின் தலைவர்களான, வைகோ - மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம். விடுதலை சிறுத்தைகள் – திருமாளவன். இடது கம்யூனிஸ்ட். - ஜி.இராமகிருஷ்ணன். வலது கம்யூனிஸ்ட். – முத்தரசன். மனித நேய மக்கள் கட்சி - தமிமுன் அன்சாரி ஆகியோர் முக்கிய உரையாற்றினர். மதிமுக முக்கிய அனைத்து முன்னணி நிர்வாகிகள், கழக கண்மணிகள் பொதுமக்கள், மற்றும் கூட்டியக்கத்தின் அனைத்து கழக தொண்டர்களும் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தை வெற்றியடைய செய்தனர்.

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி – ஓமன்

No comments:

Post a Comment