Tuesday, March 3, 2015

பட்ஜெட்டில் 4.4 இலட்சம் கோடி ரூபாய் குறைப்பு-வைகோ கண்டனம்!

பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 60 விழுக்காடு சரிந்துவிட்ட நிலையில், மத்திய அரசு கடந்த 15 நாட்களில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 4 ரூபாயும், டீசல் விலையை லிட்டருக்கு 3.70 ரூபாயும் உயர்த்தி இருக்கிறது. பா.ஜ.க. அரசின் சாதனையாக பணவீக்க விகிதம் 5 விழுக்காடு அளவுதான் என்று நிதி அமைச்சர் கூறினார். ஆனால் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியும், சேவை வரி 12.36 விழுக்காடு என்பதை 14 விழுக்காடு என்று அதிகரித்தும், பட்ஜெட்டுக்குப் பிறகு விலைவாசி உயர்வுக்கு வழிவகுத்த, சாதாரண ஏழை, எளிய மக்களைப் பற்றிக் கவலைப்படாத மத்திய அரசுக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்.

மோடி அரசின் முழுமையான நிதிநிலை அறிக்கையை ஆராய்ந்தால், கடந்த ஆட்சியின் போது சமூக நலத்திட்டங்களுக்கும், விவசாயம் உள்ளிட்ட முக்கியத் துறைகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளதைக் காணலாம். கடந்த 2014-15 நிதி ஆண்டில் வேளாண்துறைக்கு 19,852 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. தற்போது 17,004 கோடி ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கி இருக்கிறார்கள். பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கான நிதி 12,107 கோடி ரூபாயிலிருந்து பாதியாகக் குறைக்கப்பட்டு, 6,244 கோடி ரூபாய் ஆகியிருக்கிறது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பட்ஜெட்டில் நீர் ஆதாரத் திட்டங்களுக்கு 6,009 கோடி ரூபாய் அளிக்கப்பட்டது. இதில் தற்போது சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய் குறைக்கப்பட்டிருக்கிறது. நில மேம்பாட்டிற்கான நிதி ஒதுக்கீடு 3,759 கோடி ரூபாயிலிருந்து 1,637 கோடி ரூபாய் என்று குறைந்துவிட்டது. மேலும் பல சமூக நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடும் வெட்டப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் திட்டங்களுக்கு 2014-15 இல் 18,600 கோடி ரூபாய் ஒதுக்கீடு இருந்தது. ஆனால், தற்போது 10,400 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது. தாழ்த்தப்பட்டோர் நலன் துணைத் திட்டங்களுக்கான நிதி 13 ஆயிரம் கோடி ரூபாயும், பழங்குடியினர் நலன் துணைத் திட்டங்களுக்கு 7 ஆயிரத்து 500 கோடி ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சியின் போது மதிய உணவுத் திட்டத்துக்கு 11,770 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்த பட்ஜெட்டில் சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. கல்வித்துறைக்கான ஒதுக்கீடு 68 ஆயிரத்து 968 கோடி ரூபாய் நிதி என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 3.8 விழுக்காடு மட்டுமே ஆகும்.
காங்கிரÞ கூட்டணி அரசு, சமூக நலத்திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்த நிதியிலிருந்து சுமார் 4.4 இலட்சம் கோடி ரூபாய் அளவுக்கு குறைத்துள்ள பா.ஜ.க. அரசு, பெரு நிறுவனங்களுக்கான வரிச்சலுகையை மட்டும் 5.49 இலட்சம் கோடி ரூபாயிலிருந்து 5.89 இலட்சம் கோடி ரூபாயாக உயர்த்தி இருக்கிறது. இதன் மூலம் மோடி அரசு பெரு நிறுவனங்களால், பெரு நிறுவனங்களுக்காக உருவாக்கப்பட்ட முதலாளித்துவ அரசு என்பதை இந்த நிதிநிலை அறிக்கை உணர்த்துகிறது.
மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment