Monday, March 23, 2015

தமிழனை புகழ்ந்த சிங்கப்பூரின் தந்தை மரணம்-கண்ணீர் அஞ்சலி!

இலங்கையின் தமிழீழ பகுதியில் இன்றும் நடந்து கொண்டிருப்பது அப்பட்டமான ஒரு இன அழிப்பு என்பதில் சந்தேகமே இல்லை என கூறி தமிழருக்கு உதவியாக இருந்த, சிங்கப்பூர் தேசத்தை நிறுவிய 91 வயதாகும் லீ குவான் யூ அவர்கள் மரணமடைந்தார். ஆங்கிலேயர்களிடம் இருந்து சிங்கப்பூர் விடுதலை பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்த இவர், மலேசியாவிடமிருந்து சிங்கப்பூர் பிரிந்து வருவதற்கும் நடவடிக்கை எடுத்தார்.

1990 ஆம் ஆண்டு வரையில் சுமார் 31 ஆண்டுகள் சிங்கப்பூரை ஆட்சி செய்த லீ குவான் யூ, நியுமோனியாவினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்நிலையில் சிங்கப்பூரின் தந்தை என போற்றப்படும் லீ குவான் யூ சிகிச்சை பலனின்றி அதிகாலை 3.18 மணிக்கு மரணம் அடைந்தார் என்று சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது உலகத்தமிழர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அவர் உயிரோடு இருந்த காலத்தில்தான் இலங்கையில் இனப்படுகொலை நடந்தேறியது. 

அப்போது மகிந்த ராஜபக்ச இலங்கையின் ஜனாதிபதியாக இருந்தான், அவனை, ராஜபக்சே ஒரு சிங்களத் தீவிரவாதி, அவரை திருத்தவே முடியாது. இதை நான் நன்றாக அறிவேன். அவரது மனதை மாற்றவோ, அவரைத் திருத்தவோ முடியாது. சிறிலங்கா இன்று மகிழ்ச்சியுடன் இல்லை.

தமிழர்களும், சிங்களவர்களும் இணைந்து வாழ்வதற்கான சாத்தியம் அங்கு இல்லை. இலங்கை ஒரே நாடாக இருக்கும் வரை மகிழ்ச்சியான நாடாக இருக்க முடியாது. இலங்கையில் தமிழர்களுக்காகப் போராடி வந்த விடுதலைப் புலிகள் வீழ்த்தப்பட்டு விட்டனர். இதன்மூலம் இலங்கை இனச்சிக்கலுக்குத் தீர்வு காணப்பட்டு விட்டது என்று இலங்கை அதிபர் ராஜபக்ச கூறி வருகிறார். இதை மற்றவர்களும் நம்ப வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். ஆனால், தமிழர்கள் அடங்கிப் போகமாட்டார்கள். சிங்களவர்களுக்குப் பயந்து ஓடிவிடவும் மாட்டார்கள். 

பெரும்பான்மையாக உள்ள சிங்களவர்கள், விடுதலைப் புலிகளை அழித்து விட்டனர் என்பது உண்மைதான். ஆனால், சிறுபான்மையினரான தமிழர்களை வெல்லும் தகுதியும், துணிச்சலும் அவர்களுக்கு நிச்சயம் இல்லை.

யாழ்ப்பாணத் தமிழர்களை அவர்களால் நிச்சயம் வெல்லவே முடியாது. அதனால்தான் அவர்களை நசுக்கி, ஒடுக்க முனைகிறார்கள். முன்பும் இப்படித்தான் செய்தார்கள். இதுதான் ஆயுதப் போராட்டமாக வெடித்தது. இப்போதும் அதையே செய்ய முனைகிறார்கள். ஆனால் ஒட்டுமொத்த தமிழ் இனத்தையும் அழித்துவிட முடியும் என்ற அவர்களின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது என்று நான் கருதுகிறேன். 

தமிழர்கள் மீண்டும் ஆயுதப் போராட்டத்தை தொடங்குவார்களா என்பதை என்னால் சொல்ல முடியாது. ஆனால் நிச்சயம் தமிழர்கள் பொறுமையோடு நீண்டகாலம் காத்திருக்க மாட்டார்கள் என்றே நான் கருதுகிறேன். அதற்கேற்றபடி தான் இலங்கை அரசு இப்போது நடந்து கொண்டிருக்கிறது. 

என்னைப் பொறுத்தவரை, சிங்களவர்களை விட தமிழர்களுக்குத் தான் அதிக மரியாதை தரப்பட வேண்டும். அதற்கு முற்றிலும் தகுதியானவர்கள் தமிழர்கள் தான் என லொஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த பேராசிரியர் ரொம் பிளேட் கேட்ட பேட்டிக்கு இவ்வாறு லீ குவான் யூ பதில்  கூறியிருந்தார். 

இப்படி தமிழர்களுக்கு துணிச்சலாக உதவி புரிந்தவரை, தமிழர்களாகிய நாம் இழந்து தவிக்கின்றோம். அன்னாரது ஆத்மா சாந்தியடைய தமிழர்களாகிய நாம் பிரார்த்தனை செய்ய கடமைப்பட்டுள்ளோம்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment