Saturday, March 7, 2015

உலக மகளிர் நாளில் மகளிர் சமுதாயம் சூளுரை மேற்கொள்ள வேண்டும்! - வைகோ -

மனிதகுலத்தின் உயர்வுக்கும் பெருமைக்கும் கருவறையாகத் திகழ்வது பெண்ணினம்தான். பெண்மையை, தாய்மையைத் தமிழர்கள் சங்க காலத்தில் போற்றி வாழ்ந்ததால்தான் அரசர்களுக்கே அறம் உரைக்கும் துணிச்சலோடு கவிதைகள் புனையும் பெண்பாற் புலவர்களும் வாழ்ந்தனர். ஆனால் உலக வரலாற்றின் நெடுகிலும் பெண்கள் ஆணாதிக்கத்தால் அடிமைப்படுத்தப்பட்டு, துன்பங்களைத் தாங்கியே வாழ்ந்து வந்துள்ளனர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்துதான் அமெரிக்காவிலும், ஐரோப்பா கண்டத்திலும் பெண்கள் உரிமைப்போர் தொடுத்தனர். அரசியலில், சமூக இயலில் தொடர்ந்து போராடியே உரிமைகளைப் பெற்றனர். அரசுகளை இயக்கும் தலைமைப் பீடங்களையும் அலங்கரித்தனர். ஆனால், உரிமைகளுக்காகப் போராடிய பெண்களுக்கு இன்று ஏற்பட்டுள்ள அவலம் மிக மிகக் கொடூரமானது. அவர்களின் உயிருக்கும், கற்புக்கும், மானத்துக்கும், கண்ணியத்துக்கும் பேராபத்து சூழ்ந்துள்ளது.
தமிழகத்தில் மகளிருக்கு எதிராக நடைபெறும் பாலியல் துன்புறுத்தல், கற்பழிப்பு, உயிர்க்கொலை ஆகிய அனைத்துக் கொடுமைகளுக்கும் மது அரக்கனே முழு முதல் காரணமாகத் திகழ்கிறது. சமுதாயத்தின் அனைத்து அங்கங்களையும் சீரழிக்கும் மதுக் கொடுமையை அகற்றாமல் மகளிர் உரிமை, மகளிர் மாண்பு பற்றி முழங்குவது வெறும் ஏமாற்று வேலை ஆகும்.
தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டு, என்றைக்கு மதுக்கொடுமை அகற்றப்படுகிறதோ, அந்த நாள்தான் மகளிர் திருநாளாக உண்மையில் மலரும்.
தமிழ் ஈழத்தில் பல்லாயிரக்கணக்கான தாய்மார்களும், சகோதரிகளும் நடுங்க வைக்கும் பாலியல் வன்முறைக்கும், கற்பழிப்புக் கொலைக்கும் ஆளானார்களே! அதனை நடத்திய கொடியோரைக் குற்றக் கூண்டில் நிறுத்தி தண்டிப்பதற்கு அனைத்துலக மகளிர் சமுதாயம் உலக மகளிர் நாளில் சூளுரை மேற்கொள்ள வேண்டும்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment