Monday, April 13, 2015

தலைவர் வைகோவின் சித்திரைத் திருநாள் வாழ்த்து!

சித்திரை முதல் நாளை முதுவேனில் காலத்தின் தொடக்க நாளாக நெடுங்காலமாக தமிழ் மக்கள் கொண்டாடி வருகின்றனர். ஐப்பசி, கார்த்திகையில் மேகங்கள் பொழியும் மழையை எதிர்கொண்டு, தமிழர்கள் கொண்டாடும் ஆண்டின் முதல் நாளான தைத் திங்களில் பொங்கல் திருவிழா கண்டு அறுவடை நடத்தி, ஆவினங்களுக்கும், நிலத்துக்கும் நன்றி செலுத்தி மாசி, பங்குனியில் வசந்தத்தையும் இளவேனிலையும் வரவேற்று மகிழ்ந்து, சித்திரைத் திங்களில் கடற்கரை மணல் வெளியில், ஆற்றுப் படுகைகளில் தமிழர்கள் விழா எடுத்து வந்துள்ளனர்.
இளைய வயதினருக்கு இச்சித்திரை மாதம் தான் வசந்த விழா காலம் என இலக்கியம் கூறுகிறது. “சித்திரை சித்திரை திங்கள் சேர்ந்தன என்றும், இதுவே இந்திர விழா எடுக்கும் பருவம்” என்றும் சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் வர்ணிக்கின்றார்.
வெப்பம் மிகுந்துள்ள இக்காலத்தில், குளிர்ந்த நீரையும், பழங்களையும் வழங்கி கோடையின் தகிப்பைப் போக்குதல் தமிழர்களின் வழக்கமாகும்.
தமிழக வாழ்வாதாரங்களுக்கு, குறிப்பாக காவிரி நீர் உரிமைக்கு கேடு விளைவிக்க கர்நாடக அரசு முனைந்துள்ளது.
20 அப்பாவி தமிழர்கள் ஆந்திர அரசின் காவல்துறையால் படுகொலை செய்யப்பட்ட வேதனை தமிழ் இனத்தை சூழ்ந்துள்ள வேளையில், கொலைகாரர்கள் கூண்டில் நிறுத்தப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும். தமிழர்களுக்கு நீதி கிடைக்க மத்திய அரசும், தமிழக அரசும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ஏப்ரல் 14 ஆம் நாள்தான் இந்திய அரசியல் சட்டத்தை யாத்துத் தந்த மாமேதை பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள். ஆதலால், அப்பெருமகனார் கனவுகண்ட சமூக நீதி மலர உறுதிகொள்வோம்.
தாய்த் தமிழகத்திலும், தரணியெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு சித்திரை முதல்நாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
வைகோ, தாயகம்.

ஓமன் இணையதள அணி சார்பாகவும் சித்திரை திருநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment