Tuesday, September 20, 2016

காவிரி மேற்பார்வைக் குழு 2.6 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உத்தரவிட்டது தமிழகத்திற்கு அநீதியாகும். வைகோ அறிக்கை!

காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக, உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 5 அன்று பிறப்பித்த உத்தரவில் தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி நீரை பத்து நாட்களுக்கு கர்நாடகா திறந்துவிட வேண்டும என்று தெரிவித்து இருந்தது.

செப்டம்பர் 10 ஆம் தேதி கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “கர்நாடக அணைகளில் போதிய தண்ணீர் இல்லாததால், உச்ச நீதிமன்ற உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். கர்நாடகாவில் வன்முறை வெடித்துள்ளதால் இரு மாநிலங்களுக்கு இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே, மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும்” என்று கோரியது. கர்நாடகம் தாக்கல் செய்த மனு செப்டம்பர் 12 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மாண்பமை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யூ.யூ.லலித் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடக மாநிலம் சார்பில் வழக்காடி வரும் மூத்த வழக்கறிஞர் ~பாலி எஸ்.நாரிமன், தமிழத்திற்கு தண்ணீர் திறப்பதை நிறுத்த உத்தரவிட வேண்டும் என்றார். தமிழகம் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

ஆனால், இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் உச்ச நீதிமன்ற உத்தரவை கர்நாடக அரசும், மக்களும் மதித்து நடக்க வேண்டும. போராட்டம் நடத்துவதைக் காரணம் காட்டி, காவிரி நீரை நிறுத்த உத்தரவிட முடியாது. உச்ச நீதிமன்ற உத்தரவை எதிர்த்து கர்நாடக அரசு இடைக்கால மனு தாக்கல் செய்திருப்பதை ஏற்க முடியாது என்று மனுவை தள்ளுபடி செய்துவிட்டு, செப்டம்பர் 20 ஆம் தேதி வரை நாள்தோறும் வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீரை தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இந்நிலையில், செப்டம்பர் 12 ஆம் தேதி, டெல்லியில் நடந்த காவிரி மேற்பார்வைக்குழுக் கூட்டத்தில் தமிழகம் தாக்கல் செய்த மனுவில், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் கர்நாடக அரசு 134 டி.எம்.சி. நீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும். தற்போதைய உச்ச நீதிமன்ற உத்தரவுபடி 13 டி.எம்.சி. நீரை திறந்துவிட்டாலும், சம்பா சாகுபடிக்கு போதுமானதாக இருக்காது. எனவே, காவிரியில் தற்காலிகமாக 64 டி.எம்.சி. நீரை திறந்துவிட உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டது.

செப்டம்பர் 19 ஆம் தேதி மத்திய நீர்வளத்துறைச் செயலாளர் சசிசேகர் தலைமையில் டெல்லியில் கூடிய காவிரி மேற்பார்வைக்குழு, தமிழகத்தின் கோரிக்கையான 64 டி.எம்.சி. நீரை திறக்க வேண்டும் என்பதை அலட்சியப்படுத்திவிட்டு, கர்நாடக மாநிலம் காவிரியில் வெறும் 2.6 டி.எம்.சி. நீரை திறந்துவிடுமாறு அறிவுறுத்தி இருப்பது அநீதியானது. கர்நாடக அணைகளில் உள்ள நீர் இருப்பு உண்மை நிலவரத்தை, காவிரி மேற்பார்வைக்குழுவால் கண்காணிப்பதற்கு எந்த அதிகாரமும் இல்லை. கர்நாடகா கொடுத்த புள்ளிவிவரங்களையே காவிரி மேற்பார்வைக் குழு ஏற்றுக்கொண்டுள்ளது. செப்டம்பர் 21 ஆம் தேதியிலிருந்து 30 ஆம் தேதி வரை காவிரியில் வினாடிக்கு மூன்றாயிரம் கன அடி நீரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது ஏற்கத்தக்கது அல்ல.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி வழங்க வேண்டிய 192 டி.எம்.சி. நீரில், ஆகஸ்ட் மாதம் 50 டி.எம்.சி.யும், செப்டம்பர் மாதம் 40 டி.எம்.சி.யும் காவிரியில் கர்நாடகா திறந்துவிட வேண்டும். உச்ச நீதிமன்றம் வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீரை, சுமார் 10.4 டி.எம்.சி. திறந்தவிட உத்தரவிட்டுள்ள நிலையில், காவிரி மேற்பார்வைக்குழு வெறும் 2.6 டி.எம்.சி நீரை அளிக்கக் கூறுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல இருக்கிறது.

2013 மே 10 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு வஞ்சமாக தெரிவித்ததை ஏற்று, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை இடைக்கால ஏற்பாடாக காவிரி மேற்பார்வைக்குழுவை அமைக்க உச்ச நீதிமன்றம் ஆலோசனை வழங்கியது. காவிரி மேற்பார்வைக்குழு என்பது, அதிகாரம் ஏதுமற்ற சட்டபூர்வ அங்கீகாரம் இல்லாத ‘பல் இல்லாத’ ஒரு அமைப்பு ஆகும்.

காவிரி நீர் பங்கீடு குறித்து சட்டபூர்வ அங்கீகாரம் உள்ள காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறைக் குழுவை காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி அமைப்பது மட்டும்தான் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட வழிவகுக்கும். எனவே, தமிழக முதல்வர் அனைத்துக் கட்சி மற்றும் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டத்தைக் கூட்டி, பிரதமரை நேரில் சந்தித்து, காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறைக் குழுவை உடனடியாக அமைத்திட அழுத்தம் கொடுக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment